என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi perukku"

    • ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது.
    • ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    தமிழ் வருடங்கள் 60. தமிழ் மாதங்கள் 12. இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. பல மாதங்களுக்கு பழமொழிகளும் உண்டு. தை பிறந்தால் வழி பிறக்கும், புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று பல மொழிகள் உள்ளன. ஆடி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

    ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது. இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

    அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

    ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும்.

    ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும்.

    அதாவது, ஆடி மாதத்தில் தம்பதியர் ஒன்று சேர்ந்து குழந்தை உண்டானால் சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த சமயத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.

    எல்லாம் நன்மைக்கே என்று தம்பதிகள் பெருமூச்சு விடுவதும் இந்த ஆடி மாதம்தான். 

    • சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி.
    • ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும்.

    ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒருநாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது ஆடிப்பெருக்கில்...

    காவிரி நீர் அபிஷேகம்!

    நாமக்கல்லில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மோகனூர். இந்த தலத்தில் உள்ள சுவாமியின் திருநாமம் ஸ்ரீ அசலதீபேஸ்வரர். மூலவரின் சன்னதியில் எப்போதும், அசையாமல் ஒளிர்ந்தபடி இருக்குமாம் தீபம்; ஆகவே இந்தத் திருநாமம் ஈசனுக்கு!

    இந்தத் தலத்தின் சிறப்பு... சுவாமியை தரிசித்தபடி அப்படியே திரும்பினால், காவிரித்தாயை தரிசிக்கலாம். காவிரி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் தலம் இது என்பர்! எனவே காசிக்கு நிகரான திருத்தலம் எனப்போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு, காவிரி நீரால் அபிஷேகித்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

    சூரிய பூஜை காணும் முருகன்

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.

    காவிரித் தாயாருக்கு சீர்வரிசை!

    ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும். இதனைக் காண அரங்கன், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!

    ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரித் தாயாருக்கு மாலை, தாலிப்பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.

    காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாகக் கூடி, பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!

    • தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர்.
    • ஆன்மீகத்திலும் 18 என்ற எண் புனிதமானது.

    பயிர்கள் நன்றாக வளர்வதற்காக நீர்வளம் அருளும் காவிரித்தாயை முதன்மையாக கொண்ட ஆறுகள் அனைத்தையும் போற்றி வழிபடுவது 'ஆடிப்பெருக்கு'.

    ஆறுகள் ஓடுகின்ற எல்லா ஊர்களிலும், நகரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுகிறது. ஆனால், காவிரி ஆடிப்பெருக்கு சற்றுக்கூடுதலான சிறப்புடையது.

    திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு பெண்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

    ஆடிப்பெருக்கின்போது பராசக்தியை வழிபடுவதைப் போலவே காவிரித்தாயை வழிபடுகின்றனர்.

    தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர்.

    ஆன்மீகத்திலும் 18 என்ற எண் புனிதமானது. காவிரி படித்துறைகளில் 18 படிகளை அமைத்திருக்கின்றனர். ஆடி பதினெட்டாம் நாள், வெள்ளப்பெருக்கு அந்தப் பதினெட்டாம் படியைத் தழுவிச் செல்கிறபோது 'ஆடி பதினெட்டு' என்ற திருவிழாவைக் கொண்டாடுகின்றன.

    ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா பெண்களுக்கே சிறப்பாக உரியது. அன்று பெண்கள் காலைப் பொழுதில் கரைகளில் வந்து கூடிக் காவிரித்தாயை வழிபடுவார்கள். இதற்கென்றே படித்துறைகள் பல உள்ளன.

    அம்மன் வழிபாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி முதலியவற்றை வைத்து வழிபட்டு அவற்றை ஆற்றோடு செலுத்துவார்கள்.

    மாலை நேரம் தயிரன்னம், புளிசாதம், சர்க்கரை பொங்கல் வகைகளை சமைத்து காவிரித் தாய்க்குப் படைப்பார்கள். பின்னர் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக பொழுதை போக்குவார்கள்.

    சிறுவர்கள் சப்பரங்களையும், தேர்களையும் உருவாக்கி அவற்றில் அம்மன் படத்தை வைத்து வழிபடுவார்கள்.

    கன்னிப்பெண்கள், தமக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று நேர்ந்துகொண்டு காவிரித்தாயை வழிபடுவார்கள்.

    இதற்காக அம்மன் முன் படைத்த மஞ்சள் கயிறுகளை ஒருவரது கழுத்தில் மற்றொருவர் சூட்டுவது வழக்கம். மஞ்சள் கயிற்றைச் சகோதரர் கையில் கட்டுவார்கள். இது காப்புக்கயிறு.

    பிரார்த்தனை பலித்து, திருமணம் முடிந்த பின் புதுமணத் தம்பதிகள் காவிரித்தாயை நன்றியுடன் போற்றுவதுண்டு. சிலர் தாலி மஞ்சள் கயிறுகளை மாற்றிப்புது மஞ்சள் கயிறுகளை அணிவார்கள். பழைய மஞ்சள் கயிறுகளை அருகிலுள்ள மரங்களில் கட்டுவார்கள்.

    • ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் நீர்ப்பெருக்கெடுத்து வருதையே ஆடிப் பெருக்கு என ஆவலுடன் அழைக்ககின்றனர்.
    • மங்கலப் பெண்ணொருத்தி மஞ்சள் தடவிய நூல் கயிற்றை அங்கு வந்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொடுப்பாள்.

    காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளிலே ஆடிப் பெருக்கு என்னும் இவ்விழா சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தஞ்சை, திருச்சி மாவட்ட மக்களின் பங்கேற்பு இவ்விழாவில் மிகுதி. இவ்விழாவினைப் பற்றிய செய்திகள் பழைய நூற்கள் சிலவற்றிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சோழன் கரிகால் பெருவளத்தானின் மகளாகிய ஆதி மந்தியின் கணவனாகிய ஆட்டனத்தியைப் பிரிந்து பேதுற்றதும் இவ்வாடிப் பெருக்கு விழாவில் தான் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகின்றனர்.

    உழவிற்கு ஆதாரமாக இருப்பது நீர். அந்நீரினைப் போற்றிக்கொண்டாடுவதே இவ்விழா. ஆதலால் இவ் விழாவினை நீர் விழா என அழைப்பதிலும் தவறில்லை.

    ஒவ்வோராண்டும் ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவிரியாற்றில் இருகரை தழும்ப நீர் பெருக்கெடுத்து வரும். அதே போல் காவிரியாற்றின் கிளை ஆறுகளான வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு, கல்லணைக் கால்வாய் போன்றவற்றிலும் நீர் மிகுதியான அளவிற்குத் திறந்து விடப்படும். இங்ஙனம், ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் நீர்ப்பெருக்கெடுத்து வருதையே ஆடிப் பெருக்கு என ஆவலுடன் அழைக்ககின்றனர்.

    விழா முறை

    இவ்விழாவில், ஆண்களின் பங்கேற்பை விடப் பெண்களின் பங்கேற்ப மிகுதி. இவ்விழா, ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் வருவதை அனைவரும் அறிந்திருப்பதால் பெண்கள் பத்து நாட்களுக்கு முன்னதாகவே முளைப் பாலிகைக்கு ஏற்பாடு செய்வர். ஒன்பதுவகைத் தானியங்களையும் ஒரு தட்டிலோ தாம்பாளத்திலோ எருவுடன் தூவி நீர் தெளித்து மூடி வைத்து வளர்ப்பர். அது வெள்ளை வெளேர் என்று நீண்டு செழிப்புடன் வளர்ந்திருக்கும். இதற்குத் தான் முளைப்பாலிகை என்பது பெயர்.

    கன்னிப்பொங்கலன்று பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர்வலமாகச் சென்று கும்மி கொட்டுவதைப்போல இதற்கும் ஒன்று கூடி ஊர்வலமாக செல்வர். இதில் கன்னிப்பெண்களனறித்திருமணம் ஆனவர்களும் கலந்து கொள்வர். பெண்கள் தான் வளர்த்திருந்த முளைப்பாலிகையை ஒரு கையில் ஏந்தி வரிசையாக ஆற்றங்கரை நோக்கி அணிவகுத்துச் செல்லுங்காட்சி, கண் கொள்ளாக்காட்சியாகும்.

    செல்லும் போது நாற்சந்திகளிலும் மற்றும் குறிபிட்ட முக்கிய இடங்களிலும், வட்டமாக நின்ற கும்மியடித்துச் செல்வதும் உண்டு. இங்ஙமான இரண்டு மணிக்குப்புறப்பட்ட ஊர்வலம் ஆற்றகரையை அடைவதற்கு ஏறத்தாழ நான்கு அல்ல ஐந்து மணி ஆகும். அங்கே, சமதரையாக உள்ள ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச்சாணத்தால் மெழுகுவர் அவ்விடத்தில் சாணி உருண்டையாக உருவாக்கப்பட்ட பிள்ளையாரே வைப்பர்.

    பிள்ளையார் கிழக்கு நோக்கிய வண்ணம் இருக்கும். அதற்கு எதிரே தாம் கொண்டு சென்றிருக்கும் முளைப் பாலிகைத் தட்டுக்களை எல்லாம் வரிசையாக அடுக்கி வைப்பர். நாற்றங்கால் ஒன்று நடந்து வந்து அவ்விடத்தில் இளைப்பாறி இருப்பது போல் அக்காட்சி தோன்றும்.

    பின்னர்த்தாம் கொண்டு சென்றிருக்கும் பச்சரிசியை நீர் தெளித்துச் சர்க்கரையுடன் கலந்து வரிசையாக அடுக்குவர். அதன் பிறகு கற்பூரம் ஊதுவத்தி ஆகியவற்றைக் கொளுத்தி, சாம்பிராணி புகைப்பர் அனைத்துப்பெண்களும் பிள்ளையாரைப் பயபக்தியுடன் கீழே விழுந்து வணங்குவர். மங்கலப் பெண்ணொருத்தி மஞ்சள் தடவிய நூல் கயிற்றை அங்கு வந்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொடுப்பாள். வாங்கிக் கொள்ளும் சிலர் கழுத்தில் அணிந்து கொள்வார். சிலர் தம் கையன்றில் கட்டிக் கொள்வர்.

    இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களைப் நிகழ்த்துவர். ஒரு பெண் வெளியில் நின்று நல்ல இராகத்தோடு பாட, ஏனையோரும் அதனையே பாடி ஆடுவர். இது நீண்ட நேரம் நீடிக்கும். பின்னர்ப் பெண்கள் எல்லாம் தாம் கொண்டு வந்த முளைப்பாலிகைத் தட்டினை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்குவர். அப்படியே அதனைத் தண்ணீரில் பிய்த்து விடுவர். அத்துடன் காதோலை, கருகமணி போன்றவற்றையும் ஆற்றில் மிதக்க விடுவர். காதோலைசியைச் செய்விப்பர். இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் ஆற்றின் கரையிலேயே நடைபெறும்.

    சுவாமிமலையின் கண் ஓடும் காவிரியாற்றின் கரையில் ஒவ்வோர் ஆடிப்பெருக்கன்றும் ஏராளமான புத்தம் புதிய மணமக்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வருவதை இன்றும் காணலாம்.

    காவிரியாற்றில் நீர் பெருகுவதைப் போல இவர்களது வாழ்விலும் வளம் பெருகும் என்னும் நம்பிக்கையால் இந் நிகழ்ச்சியை ஆடிப்பெருக்கன்று வைத்துக் கொள்கின்றனர். இந்த ஆடிப்பெருக்கைச் சிலர் பதினெட்டாம் பெருக்கு எனவும் கூறி வருகின்றனர். இவர்கள் ஆடித்திங்களுக்குக் கொடுக்கும் மதிப்பினைவிடப்பதினெட்டாம் நாளுக்குக் கொடுக்கும் மதிப்பே அதிகம் எனத் தெரிகின்றது. ஏன் அந்தப் பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர் என்பது புதிராகவே உள்ளது.

    • ஆடி மாதத்தில் சூரியன், சந்திரனின் வீடாகிய கடகத்தில், சனியின் நட்சத்திரமாகிய பூசம் 4 ஆம் பாதத்தில் 15° தாண்டி சஞ்சரிக்க ஆடிப்பெருக்கு நிகழ்கின்றது.
    • ஆறுகளை தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

    தமிழ் வருடத்தின் 12 மாதங்களிலும் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான பண்டிகைகள் நட்சத்திரத்தின் அடிப்படையிலோ திதியின் அடிப்படையிலோ கொண்டாடப்படுகின்றது.

    நட்சத்திரம் மற்றும் திதி தவிர்த்து தமிழ் தேதியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழாக்கள் சித்திரை முதல் நாள், ஆடி 18 ம் பெருக்கு, தைப் பொங்கல் ஆகும். சித்திரை முதல் நாள், தை முதல் நாள் ஆகிய இவ்விரு நாட்களும் வழிபாட்டிற்கு உகந்த நாட்கள் ஆகும். ஆனால், ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாட்டிற்கு மட்டுமின்றி சுப காரியங்கள் செய்வதற்கும் உகந்த நாள் ஆகும்.

    ஆடி 18 ம் தேதியோடு மட்டும் தான் பெருக்கு என்ற வார்த்தை இணைகிறது. ஜோதிட ரீதியாக ஆராயும் போது இதற்கு பெரிய காரணங்கள் ஏதும் கூறிவிட முடியாது. ஆடி மாதத்தில் சூரியன், சந்திரனின் வீடாகிய கடகத்தில், சனியின் நட்சத்திரமாகிய பூசம் 4 ஆம் பாதத்தில் 15° தாண்டி சஞ்சரிக்க ஆடிப்பெருக்கு நிகழ்கின்றது.

    இயற்கை தனது இடையறாத பணியைச் செய்து விவசாயம் செழித்து மக்கள் வளமான வாழ்வு வாழ சூரியன், சந்திரன், சனி ஆகிய கிரகங்களின் பங்கு மிகவும் அவசியமாகும். தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க அக்காலத்தில் காவிரியின் பங்கு மிகவும் அத்தியாவசியமானதாகவே இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் காவிரி ஆறு ஆரம்பமாகும் இடத்தில் மழை செழித்து தமிழகத்தில் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடும் நாளாகவே இந்நாள் அமைந்துள்ளது. இது இயற்கை நமக்கு வழங்கும் கொடை ஆகும்.

    ஆறுகளை தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை ஆகும். எனவே நமது வளமான வாழ்க்கைக்கு கட்டியம் கூறும் விதமாக காவிரித் தாயானவள் பெருக்கெடுத்து ஆடியும் ஓடியும் வரும் நாளாகவே இந்நாள் அமைந்துள்ளது. இது இயற்கையின் அமைப்பு. இதற்கு வேறு எந்த கற்பனையான காரணங்களையும் கூறி விட முடியாது.

    இந்நாள் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் நாளாக நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். இந்நாளில் பூஜை புனஷ்காரங்களுடன் காவிரித்தாயைப் போற்றி வணங்கும் மரபை தொன்று தொட்டு ஏற்படுத்தி வந்துள்ளார்கள். இன்றும் தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. காவிரிக்கரையோரங்களில் வாழும் மக்கள் ஆடிப்பெருக்கை சீர் மிகும் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். இங்கு கூடும் மக்கள் தீபமேற்றி காவிரித்தாயைப் போற்றிப் பணிகின்றார்கள். பெண்கள் திருமாங்கல்ய சரடு அல்லது கயிற்றை பிரித்து மாற்றிக் கொள்கிறார்கள்.

    தமிழர்களாகிய அனைவரும் இந்நாளில் தங்கள் இல்லத்தை அலங்கரித்து பூஜை புனஷ்காரங்களுடன் இந்நாளை அனுஷ்டிக்கலாம். இந்நாளில் விவசாயம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆரம்பிக்கலாம். வீட்டிற்குத் தேவையான புதிய டீவி, ப்ரிட்ஜ், பீரோ போன்ற பொருள்கள் வாங்கலாம். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கலாம். சாப்பாட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கலாம். தங்கம் வாங்கலாம்.

    திருமணம் தவிர்த்து வாஸ்து பூஜை, கட்டிடம் கட்டும் வேலை ஆரம்பித்தல், கிரஹப் பிரவேசம், வேறு வீடு மாறுதல், திருமணம் பேசி முடித்தல், குழந்தைக்கு பெயர் சூட்டல், வளைகாப்பு போன்ற சுப காரியங்களையும் இந்நாளில் செய்யலாம். இதன் மூலம் தொடர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு காரியத்திலும் வெற்றியே உண்டாகும். இவ்வருடம்(2023)வரக்கூடிய ஆடிப் பெருக்கு கிழமை, நட்சத்திரம், திதி, யோகம் என அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளது.

    ஜோதிட கலாமணி

    கே. ராதா கிருஷ்ணன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது.
    • கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பவானிசாகர் அணை மேற்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையையொட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. அணை மேற்பகுதியில் உள்ள நீர்த்தேக்க பகுதியை பொதுமக்கள் பார்வையிட ஆண்டு தோறும் ஆடி 18 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட வருவது வழக்கம். பவானிசாகர் அணையை முழுவதுமாக நடந்தே பார்ப்பது ரம்மியமாக இருக்கும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது. மேலும் அணை மேற்பகுதியில் உள்ள தேன் கூட்டில் தேனீக்கள் அதிகளவில் உள்ளன. ஆகவே பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அணை மேல்பகுதியில் உள்ள நீர் தேக்கப்பகுதியை பொது மக்கள் பார்வையிட அனுமதி இல்லை. அதே சமயம் பவானிசாகர் அணை பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என்றனர்.

    இதேபோல் நேற்று பவானிசாகர் அணை மேற்பகுதியில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி அணை மேற்பகுதி வழியாக பூங்காவுக்குள் நுழைந்து வெளியே சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த யானை மீண்டும் நீர்த்தேக்க மேற்பகுதியில் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பவானிசாகர் அணை மேற்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு இந்த தடை அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நாளை ஆடி 18-ந்தேதியையொட்டி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • வார சந்தைக்கு இன்று அதிகாலை முதலே சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். வழக்கமாக இந்த சந்தையில் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகும்.

    அதன்படி, இன்று உளுந்தூர்பேட்டையில் வாரச்சந்தை நடைபெற்றது. வார சந்தைக்கு இன்று அதிகாலை முதலே காட்டுசெல்லூர், வடகுரும்பூர், கிளியூர், சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில் நாளை ஆடி 18-ந்தேதியையொட்டி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஆடு சந்தையில் விற்பனை களை கட்டியது. காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கினர்.

    இது தவிர சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆடுகளை வாங்க குவிந்தனர். இந்த சந்தையில் ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனையானது. காலை 10 மணி நிலவரப்படி ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    • நாளை ஆடிப்பெருக்கு என்பதால் பூக்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது.
    • வழக்கமாக தினசரி 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்து வரும். இன்று 25 வாகனங்களில் மட்டும் பூக்கள் வந்தது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக தினசரி 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்து வரும். இன்று 25 வாகனங்களில் மட்டும் பூக்கள் வந்தது.

    இந்த நிலையில் நாளை ஆடிப்பெருக்கு என்பதால் பூக்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டது.

    தற்போது சாமந்திப்பூவின் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அதன் விலையும் அதிகரித்து ரூ.180 வரை விற்பனை ஆகிறது.

    ஆடிப்பெருக்கையொட்டி பூ விற்பனை பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிகாலை முதலே மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்து பூ விற்பனை மந்தமாகவே நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை விபரம் (கிலோவில்)வருமாறு :-

    சாமந்தி-ரூ.120 முதல் ரூ.180 வரை

    மல்லி- ரூ.450

    ஐஸ் மல்லி- ரூ.350

    கனகாம்பரம்- ரூ.600

    முல்லை- ரூ.300

    ஜாதி- ரூ.300

    பன்னீர்ரோஸ்- ரூ.50 முதல் ரூ.80 வரை

    சாக்லேட் ரோஸ் - ரூ.100 முதல் ரூ.120 வரை

    அரளி - ரூ.200

    சம்பங்கி -ரூ.120

    சென்டு மல்லி - ரூ.50முதல் ரூ.60வரை

    • ஆற்றங்கரையில் மக்கள் கூடியும், கோயில்களில் வழிபாடு செய்தும் மகிழ்வார்கள்.
    • விதைத்தலுக்கு முன்னர் ஆனி மாதம் பெய்யும் மழை, பயிர் வளர்ச்சிக்கு ஏற்றது.

    உத்திராயண காலமான தை மாதம் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயண காலமான ஆடி மாதம் சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருப்பதை தமிழ் முன்னோர்கள் அறிந்திருந்தனர். வேளாண் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் ஆறுகள் பாயும் கரையோரப் பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைந்துள்ள படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் பெருகும் ஆற்று வெள்ளம் காரணமாக அந்த 18 படிகளும் மூழ்கிவிடும். அந்த புது வெள்ளத்தை வரவேற்று, விழாவாக கொண்டாடப்படும் தமிழர் பண்பாடு ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு நாள் ஆகும்.

    விதை, விதைத்து நாற்று நட்டுப் பயிர் வளர்க்கும் நாள்களின் அடிப்படையில் அமைந்த விழா ஆடிப்பெருக்கு. நிலத்தில் நாற்று நடப்படுவதற்கு முன்னர் நீரோட்டம் என்ற ஆற்றுப்பெருக்கு கணக்கிடப்படுகிறது. தென்மேற்குப் பருவக்காற்றினால் மழை பொழிந்து, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதுப்புனலை வரவேற்க ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்றாகத் திரண்டு நீராடி மகிழும் விழா ஆடிப்பெருக்கு நாள்.

    ஒகேனக்கல் முதல் காவிரிப்பூம்பட்டினம் வரை காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் பொதுமக்கள் ஆடி மாதம் பதினெட்டாம் நாளில் விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பயிர் செய்ய உற்ற துணையான நீரை வணங்கி, விதைக்க ஆரம்பிக்கும் ஆடிப்பெருக்கு விழா சங்க காலம் முதல் இந்த நாள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது. நீரை பயன்படுத்திப் பயிர் வளர்க்கும் வழிகளோடும், மழையையும் அதைப் பயன்படுத்துவதை நினைவுகூரும் நாளாகவும் ஆடிப்பெருக்கு அமைகிறது.

    அந்த நல்ல நாளில் நீர் நிலைகள், ஆறுகள் அருகே பொதுமக்கள் ஒன்றாக கூடி, தண்ணீரை வணங்கி, வயலில் விதைக்கும் பணிகளை ஆரம்பிப்பர். அதை கொண்டாடும் வகையில் கிராமப்புற சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்வார்கள்.

    ஆற்றங்கரையில் மக்கள் கூடியும், கோயில்களில் வழிபாடு செய்தும் மகிழ்வார்கள். பெண்கள் ஆற்றங்கரையில், சாணத்தால் மெழுகி கோலமிட்டு, படையலிட்டு செழிப்பான விளைச்சலைத் தருவதற்காக இயற்கையை போற்றும் விதமாக அகல் விளக்கேற்றி வாழை மட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டு வழிபடுவர். பின்னர் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த தேங்காய், தக்காளி, எலுமிச்சை, தயிர், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து உண்டு மகிழ்வர்.

    ஆடிப்பெருக்கு நாளில் இயற்கை மற்றும் கடவுளை வழிபடுவதன் மூலம், ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல, மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

    சூரியன் இயக்கம், காற்றின் போக்கு, நிலத்தின் பக்குவம் ஆகியவற்றிற்கேற்ப நீரைப் பயன்படுத்தி பயிர் வளர்க்கும் நமது வேளாண் பண்பாட்டில், விதைப்பு செய்யும் காலமாக ஆடி மாதம் அமைகிறது. நாற்று விட்டு, நடவுக்கு முன் ஆடி பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. நட்ட பயிர் வளர்வதற்கேற்ற நீர்வளம் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கிறது.

    விதைத்தலுக்கு முன்னர் ஆனி மாதம் பெய்யும் மழை, பயிர் வளர்ச்சிக்கு ஏற்றது. பயிர் மழையைத் தாங்கி நிற்கும் ஐப்பசி மழை, குளிரும் வெப்பமுமான சூழலில் பயிர் வளர்ச்சி, பின் தை மாதம் அறுவடை என பெய்யும் மழையை ஒட்டியே பயிர் வளர்க்கப்பட்டது.

    நீர் மேலாண்மை செய்ய சூரியன் இயக்கத்தை ஒட்டி ஆறு, குளங்கள் சீரமைக்கப்பட்டு, நீரின் அருமை அறிவுறுத்தப்படும் நாள் ஆடிப்பெருக்கு ஆகும். கடவுளையும், இயற்கை வழிபாட்டையும் இணைத்து மேற்கொள்ளப்படும் ஆடிப்பெருக்கு நாள், தற்சார்பு விவசாய வழிமுறைகளை வெளிப்படுத்தும் வகையில் காலம்காலமாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

    • ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி வருகிறார்கள்

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சங்கமேஸ்வரர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்த சிறப்பை பெற்ற கோவிலாகும்.

    அதேபோல் இந்த கோவிலுக்கு பின்பகுதி உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுது நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார ஸ்தலம் முக்கூடல் சங்கமம் சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இதனால் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    மேலும் இங்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கம். இங்கு அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பெருக்கு மற்றும் முக்கிய நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் பொதுமக்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவார்கள்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்ட த்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக திருமண தம்பதிகள் புனித நீராடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் திருமணமான புதுமண தம்பதிகள் ஏராளமானோர் கூடுதுறைக்கு அதிகாலை முதலே வந்த வண்ணம் உள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் ஆற்றில் புனித நீராடி தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். மேலும் பலர் புது தாலி மாற்றி கொண்டனர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் தீயணைப்புத்துறை சார்பில் ரப்பர் படகில் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் கோவில் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுதல் பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இதையொட்டி போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் பலர் வந்து திருமண தடை நீங்கவும், திருமணம் தடையின்றி நடக்கவும் பரிகார பூஜைகள் செய்தனர். இதேபோல் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தரிப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கையொட்டி இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். அதே போல் பக்தர்கள் பலர் காவிரி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

    இதே போல் ஆடிப்பெருக்கையொட்டி ஈரோட்டில் பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையல் போட்டு தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு படையலில் உணவு வைத்து அதில் இறந்தவர்களுக்கு பிடித்த உணவு மற்றும் தின்பண்டங்களை வைத்து படைத்து வழிபாடு நடத்தினர்.

    இதையடுத்து அவர்கள் படையலின் பகுதியை முன்னோர்களை நினைத்து காகத்துக்கு வைத்தனர். மற்றொரு பகுதியை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிட்டனர். முன்னதாக அவர்கள் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    • பள்ளியின் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் கலந்து கொண்டார்.
    • பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டன

    திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் ஆடிபெருக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கிட்ஸ் கிளப் பள்ளியின் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் கலந்து கொண்டார். மாணவர்கள் முளைப்பாரி வைத்து, கும்மிபாட்டு, கோலாட்டம், பட்டிமன்றம் போன்ற நிகழச்சிகளை நடத்தினர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • படையலுக்கு தீபாராதனையை காண்பித்த பின்னர் ஆற்றை நோக்கி காவிரி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் காண்பித்து வழிபட்டனர்.
    • மஞ்சள் கயிற்றை பூஜைக்கு பின் சுமங்கலி பெண்கள் மற்ற சுமங்கலி பெண்களின் கழுத்திலும், திருமணமாகாத இளம்பெண்களின் கழுத்திலும் கட்டி விட்டனர்.

    திருச்சி:

    திருச்சி, கரூர் மாவட்டங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இங்கு அதிகாலை முதல் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். காலையில் சற்று கூட்டம் குறைவாக காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல கூட்டம் அலைமோதியது.

    திருச்சி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மா மண்டபம் படித்துறையில் திரண்டிருந்தனர். வழக்கமாக ஆடிப்பெருக்கின்போது காவிரியில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும்.

    அதேபோன்று இன்றைய தினமும் 10 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இதனால் காவிரியில் பாய்ந்தோடிய தண்ணீரை கண்டு பூரிப்படைந்தனர். பின்னர் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராடி காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்தனர்.

    அதன் பின்னர் வாழை இலை விரித்து அதில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து, தேங்காய், பழம், வெல்லம், ஏலக்காய் கலந்த அரிசி, கரும்பு துண்டு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் ஆகியவற்றினை வைத்தும், மஞ்சள், குங்குமம், கருகமணி போன்ற மங்கல பொருட்களை வைத்தும் படையலிட்டனர்.

    பின்னர் வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் அந்தப் படையலுக்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். அப்போது வீட்டில் உள்ள இதர குடும்ப உறுப்பினர்கள் பயபக்தியுடன் விநாயகரை வழிபட்டனர்.

    படையலுக்கு தீபாராதனையை காண்பித்த பின்னர் ஆற்றை நோக்கி காவிரி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் காண்பித்து வழிபட்டனர்.

    இதில் மஞ்சள் கயிற்றை பூஜைக்கு பின் சுமங்கலி பெண்கள் மற்ற சுமங்கலி பெண்களின் கழுத்திலும், திருமணமாகாத இளம்பெண்களின் கழுத்திலும் கட்டி விட்டனர். குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களுக்கு கையில் மஞ்சள் கயிறு கட்டப்பட்டது. பின்னர் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி இறைவனை மனதுருகி வேண்டிக்கொண்டனர்.

    வாழ்வில் வளமும் செல்வமும் பெருக, தொழில், வியாபாரம் விருத்தி அடைய, விவசாயம் செழிக்க வேண்டிக்கொண்டனர்.

    புதுமண தம்பதிகள் தாலிச்சரடுகளை மாற்றிக்கட்டி வீட்டில் உள்ள மூத்த சுமங்கலி பெண்களிடம் ஆசி பெற்றனர்.

    பூஜைக்கு பின்னர் படையலில் வைத்தவற்றில் சிலவற்றை ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டு 2 பழம், பத்தி, மஞ்சள், பிள்ளையார், வெற்றிலை பாக்கு, திருமண மாலைகள் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்தும் அதில் காணிக்கையாக காசு மற்றும் ரூபாய் நோட்டுகளை வைத்து ஆற்றில் விட்டனர்.

    அம்மா மண்டபம் படித்துறையில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தீயணைப்பு படை வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியபடி அம்மா மண்டபம் தவிர்த்து அய்யாளம்மன் படித்துறை, கருடா மண்டபம், கீதாபுரம், சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை காந்தி படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு, கம்பரசம் பேட்டை( தடுப்பணை), முருங்கைப்பேட்டை,

    முத்தரசநல்லூர், அக்ரஹார படித்துறை, பழுர் படித்துறை, அல்லூர் மேல தெரு படித்துறை, திருச்செந்துறை, வெள்ளாளர் தெரு படித்துறை, அந்தநல்லூர் படித்துறை, திருப்பராய்த்துறை, மேலூர் அய்யனார் படித்துறை, பஞ்சகரை படித்துறை ஆகிய இடங்களிலும் ஆடிப்பெருக்கு வழிபாடுகள் நடந்தன.

    கரூர் மாவட்டத்தில் நொய்யல், தவிட்டுப்பாளையம், நன்செய் புகளூர், கடம்பன்குறிச்சி, என்புதூர், வாங்கல், மாயனூர் கதவணை, மகாதானபுரம், குளித்தலை ஆகிய காவிரி கரையோரப்பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இதே போன்று பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தண்ணீர் போதுமான அளவுக்கு வந்ததால் ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ×