என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akash Deep"

    • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • ஐ.பி.எல். போட்டியில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சாவில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது.

    மொத்தம் 40 விளை யாட்டுகள் 481 பிரிவுகளில் நடக்கிறது. கிரிக்கெட் போட்டியும் ஆசிய விளையாட்டில் இடம் பெற்றுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

    இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீரர் ஷிவம்மவி விலகியுள்ளார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆகாஷ்தீப் இடம் பெற்றுள்ளார்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வருமாறு:-

    ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஷ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, பிரப் சிம்ரன்சிங், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்தீப்சிங், முகேஷ்குமார், ஆகாஷ்தீப்.

    • ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
    • ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார். அவரது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் உடனிருந்து பார்த்து கொள்வதாலும் இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆகாஷ்தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளார். 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    • போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது.
    • காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை.

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    2-வது ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

    இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இந்த போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. உடல் நல பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை கவனிக்கும் பொருட்டு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், கேப்டன் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர்.

     மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இளம் சிவப்பு (பிங்க்) நிற சீருடை அணிந்து களம் காண்கிறது. ஸ்டேடியமும் பெரும்பாலும் 'பிங்க்' நிறத்தில் காட்சியளிக்கும். தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ரீஜா ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லரும், பந்து வீச்சில் லிசாத் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, பெலுக்வாயோ, கேஷவ் மகராஜூம் வலுசேர்க்கிறார்கள்.

    அண்மையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணி விளையாடும் முதல் ஒருநாள் போட்டி தொடர் இதுவாகும். ஒருநாள் போட்டி அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முனைப்பில் உள்ள இந்தியா தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த தென் ஆப்பிரிக்கா வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    • கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால், நோ-பால் என்பதால் தப்பினார்.
    • பின்னர் கிராலியை இன்-ஸ்விங் மூலம் மீண்டும் க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் இன்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடிய பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பும்ராவிற்குப் பதிலாக முகேஷ் குமார் களம் இறங்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் 27 வயதான ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். பும்ராவிற்கு பதிலாக அறிமுக வீரரா? என கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் வியப்படைந்தனர்.

    ஆனால், பும்ரா அணிக்கு எவ்வாறு பங்களிப்பாரோ, அதேபோல் தானும் பங்களிப்பேன் என்ற உறுதியுடன் ஆகாஷ் தீப் களம் இறங்கினார்.

    முதல் ஓவரை சிராஜ் வீச, 2-வது ஓவரை ஆகாஷ் தீப் வீசினார். சுமார் 135 கி.மீ. முதல் 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசினார். இதனால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது.

    தனது 2-வது ஓவரிலேயே கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால் இந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால், அது நோ-பாலாக அமைந்தது.

    இருந்தாலும் மனம் தளராமல் உத்வேகத்துடன் பந்து வீசினார். இதற்கு அவரின் 5-வது ஓவரில் பலன் கிடைத்தது. இந்த ஓவரின் 2-வது பந்தில் டக்கெட்டை (11) வெளியேற்றினார்.

    இதே ஓவரின் 3-வது பந்தில் ஒல்லி போப்பை ரன்ஏதும் எடுக்க விடாமல் டக்அவுட்டில் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேற்றினார். இரண்டு முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணிக்கு உத்வேகம் அளித்தார். அதோடு நிற்காமல் நோ-பால் மூலம் தப்பிய கிராலியை (42) அடுத்த ஓவரின் ஐந்தாவது பந்தில் க்ளீ்ன் போல்டு மூலம் வெளியேற்றினார். 6 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    27 வயதாகும் ஆகாஷ் தீப் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். 30 முதல்தர போட்டிகளில் விளையாடி 104 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு அரைசதத்துடன் 423 ரன்கள் எடுத்துள்ளார்.

    • வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.
    • போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி என சச்சின் கூறினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி மீண்டும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்றது. இது நமது வீரர்களின் குணத்தையும் மன வலிமையையும் காட்டுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு முதல் ஸ்பெல் அற்புதமாக அமைந்தது.

    துருவ், இரு இன்னிங்சிலும் பந்தின் லென்த்தை கணித்து விளையாடினார். மேலும் அவரது புட்வொர்க் துல்லியமாக இருந்தது. அவருடன் குல்தீப் யாதவின் பார்ட்னர்ஷிப் முதல் இன்னிங்சில் ஆட்டத்தை நமது கையில் வைத்திருந்தது. 2-வது இன்னிங்சில் வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. 2-வது இன்னிங்சில் குல்தீப்பின் பந்து வீச்சு முக்கியமானது.

    சுப்மன் கில் சேசிங்கில் தனது உள்ளுணர்வைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தி முக்கியமான அரை சதம் எடுத்தார். மேலும் சீனியர் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, ரோகித் ஆகியோர் தங்களது வேலைகளை சரியாக செய்தனர்.

    போட்டியும் தொடரும் எங்களுடையது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

    இவ்வாறு சச்சின் கூறினார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    • ஜாகிர் ஹசன் 24 பந்துகள் சந்தித்து 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இந்திய தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஜாகிர் ஹசன்- ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜாகிர் ஹசன் ஒரு ரன் எடுக்க முடியாமல் திணறினார். பும்ரா வீசிய முதல் 3 ஓவரையும் இவர் மெய்டன் செய்தார்.

    1 ரன் எடுக்க திணறிய இவர் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகள் சந்தித்து 1 ரன் கூட எடுக்க முடியாமல் 0 ரன்னில் வெளியேறினார்.

    பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷத்மான் இஸ்லாம் 4 பவுண்டரிகள் விரட்டி 24 ரன்கள் குவித்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து கேப்டன் சாண்டோ மற்றும் மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை வங்கதேச அணி 26 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்துள்ளது. சாண்டோ 28 ரன்னிலும் மொமினுல் ஹக் 17 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு.
    • இந்திய அணியின் ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியில் உணவு இடைவேளை வரை வங்கதேசம் அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 74 ரன்களையே எடுத்திருந்தது.

    இதன்பிறகு ஆட்டம் துவங்கிய நிலையில், வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்த போது போதிய வெளிச்சம் இல்லாததால், முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

    முதல் நாளில் வங்கதேசம் அணியின் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிகுர் ரகுமான் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • மழை குறுக்கிட்டதால், முதல்நாள் போட்டி பாதிக்கப்பட்டது.

    இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்த போது மழை குறுக்கிட்டதால், முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

    முதல் நாளில் வங்கதேசம் அணியின் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிகுர் ரகுமான் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இன்று 2-ம் நாள் ஆட்டம் துவங்கவிருந்த நிலையில், மைதானத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

    • முதல் இன்னிங்சில் இந்திய அணி 285 ரன்கள் குவித்தது.
    • இது வங்கதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலை ஆகும்.

    இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இது வங்கதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலையாகும்.

    இந்த போட்டியில் முதலில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பேட்டர்கள்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றால், வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அவரது பங்குக்கு முதல் 3 பந்தில் 2 சிக்சர்களை விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். இதில் ஒரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் அவர் விராட் கோலி பேட்டை வைத்து இந்த 2 சிக்சர்களை அடித்துள்ளார்.

    இவர் சிக்சர்கள் அடிக்கும் போது வெளியில் இருந்த விராட் கோலி சிரித்தப்படி பும்ராவிடம் பேசி கொண்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விராட் கோலி அவரது பேட்டை ஆகாஷ் தீப்புக்கு பரிசாக வழங்கி இருக்கிறார். இதனை ஆகாஷ் தீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி விராட் பாய் என பதிவிட்டிருந்தார்.

    • வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் அணியில் சேர்ப்பு.
    • குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அதிரடி நீக்கம்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    பெங்களூருவில நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் நவம்பர் 1-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்திய அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முகமது சிராஜ், கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர், கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணி விவரம்:-

    ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பும்ரா.

    நியூசிலாந்து அணி விவரம்:-

    டாம் லாதம், கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், பிளண்டெல், கிளென் பிளிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுத்தி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓ'ரூகே

    • ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதுவரை ஒட்டுமொத்தமாக 8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆகாஷ் தீப் விளையாடியுள்ளார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது பெங்களூரு அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்-ஐ ரூ.8 கோடி கொடுத்து லக்னோ அணி வாங்கியுள்ளது. இவரின் அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    ஒட்டுமொத்தமாக 8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆகாஷ் தீப்-ஐ ரூ.8 கோடி கொடுத்து லக்னோ வாங்கி வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி ஹர்ஷித் ராணா உடன் களம் இறங்கும் என எதிர்பார்ப்பு.
    • அதேவேளையில் ஆகாஷ் தீப் உடனம் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. இந்த போட்டியில் பிங்க்-பால் பயன்படுத்தப்பட இருக்கிறது. பிங்க்-பால் இரவு நேரத்தில் லைட் வெளிச்சத்தில் அதிக அளவில் ஸ்விங் ஆகும்.

    இந்தியா முதல் (பெர்த்) டெஸ்டில் பும்ரா, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நிதிஷ் ரெட்டி ஆல்-ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளரான அணியில் உள்ளார். அறிமுகமான பெர்த் டெஸ்டில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசினார். பிங்க்-பால் பயிற்சி ஆட்டத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனால் நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா களம் இறங்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் பிங்க்-பால் போட்டியில் ஆகாஷ் தீப்பை களம் இறக்க வேண்டும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஷ்திரி கூறுகையில் "ஒரு முக்கியமான விசயம் என்றவென்றால், இது பிங்க்-பால் டெஸ்ட் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஹர்ஷித் ராணா அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் என்பது எனக்குத் தெரியும்.

    ஆனால் பிங்க் பால் சற்று கூடுதல் அரக்கு- வார்னீஷ் (Lacquer) இருக்கும். இதனால் பந்து ஸ்விங் செய்யவும், சீம் செய்யவும் கொஞ்சம் கடினமாக இருக்கும். இதனால் ஆகாஷ் தீப் அணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.

    ×