என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ammapettai"

    • சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
    • சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஜோதிகண்ணன் தலைமையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.

    இதையடுத்து சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சேலம் சிட்டிபாபு தலைமை தாங்கினார். கலைமதியழகன் வரவேற்புரை ஆற்றினார். கணபதி, பழனியப்பன், மகாபாண்டியன், அங்கப்பன், முரளி, ஞானசேகரன் மற்றும் பலர் சொற்பொழிவு ஆற்றினார்கள். குமார், ஸ்ரீராமன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். முடிவில் லோகநாதன் நன்றி கூறினார்.

    • பள்ளி குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
    • குறுகலான சாலையில் வேன் இயக்கப்பட்டதால் விபத்து.

    அம்மாப்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்.ஏ.எம். எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி களை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். அவர்களில் பலர் பள்ளி வேனில் அழைத்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களை இன்று காலை வேனில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தது.

    இதையடுத்து அந்த பள்ளி வேன் அம்மா பேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் செல்லும் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை வழியாக பள்ளி வேன் ஓட்டுநர் அம்மாபேட்டையை சேர்ந்த குணசேகரன் (வயது 38) என்பவர் வேனை ஓட்டி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சாலையில் சிறிய அளவிலான வளைவில் திருப்பும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் வலது புறம் சாலையை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

    இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதை கண்ட பள்ளி குழந்தைகள் கதறி அலறினர்.

    இது பற்றி தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு கால தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அதற்குள் தகவல் கிடைத்ததும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து தங்கள் குழந்தைகள் விபத்தில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளி வாகனத்தில் இருந்து தங்களது குழந்தைகளை மீட்டு இரு சக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள அம்மா பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து பள்ளி குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் குறுகலான சாலையில் அதிக நீளமுடைய பள்ளி வேன் இயக்கப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார் விபத்திற்கு உள்ளான பள்ளி வேனை, கிரேன் எந்திரம் கொண்டு வந்து அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
    • நெஞ்சு வலிப்பதாக சக பணியாளர்களிடம் கூறியுள்ளார்.

    அம்மாப்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் சரவண க்குமார் (வயது 29). இவர் பூனாச்சியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல சரவணகுமார் வேலைக்கு சென்றுள்ளார்.

    மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நெஞ்சு வலிப்பதாக சகப் பணியாளர்களிடம் கூறிய சரவணக்குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூனாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த போது சரவணக்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சரவணகுமாரின் பெற்றோருக்கு தனியார் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரவணகுமாரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நேற்று மதியம் பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மில் முன்பு உயிரிழந்த சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் நிறுவனத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் (பொ) தலைமையிலான போலீசார் சரவணகுமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கைவிடப்பட்டது.

    மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    அம்மாப்பேட்டை:

    கோபி மின்பகிர்மான வட்டம் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை,சித்தார்,சின்னப்பள்ள ம்,ஆனந்தம்பாளையம் குட்டமுனியப்பன்கோயில்,கேசரிமகலம்,காடப்பநல்லூர், கல்பாவி,பூதப்பாடி,எஸ்.பி.கவுண்டனூர்,குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    அம்மாபேட்டை அருகே குடிநீர் கேட்டு இன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் குதிரைக்கல் மேடு. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதி மக்களுக்கு காடப்ப நல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குடி தண்ணீர் வரவில்லையாம். மேலும் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சும் நிற்பதில்லையாம். இதை கண்டித்தும் குடிநீர் சீராக வழங்க கோரியும் மேலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் குதிரைக்கல் மேட்டில் உள்ள பவானி- மேட்டூர் ரோட்டில் காலி குடங்களுடன் இன்று காலை 6.45 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் விரைந்தனர். மேலும் பஞ்சாயத்து செயலாளர் கணேசனும் சென்றார். அவர் சாலை மறியல் நடத்திய பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் குடிநீர் குழாய் உடைந்து விட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அம்மாப்பேட்டை அருகே தீயில் கருகிய மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரப்ப கந்தசாமி தெருவை சேர்ந்தவர் சுசிலா (வயது 80). இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டில் உள்ள அடுப்பில் வைத்து பால் காய்ச்சு கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் இருந்த தீ, அவரது சேலையில் பிடித்துக் கொண்டது. இதனால் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் பலத்த காயம் அடைந்த சுசிலாவை, அக்கம், பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்ட சுசிலாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுசிலா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாப்பேட்டை அருகே உறவினர் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே திருக்கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன், இவரது மகள் சந்தியா. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று சந்தியா தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறி சென்றார். பின்னர் அவர் மாயமாக விட்டார்.

    இது குறித்து சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபோட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருந்த நிலையில் ஜவுளி எடுக்க சென்ற மணப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பாலமலை களக்காட்டை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் லதா (வயது23).

    இவருக்கும் அதே பாலமலை பகுதி திம்பம்பதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் தமிழரசன் (28) என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது.

    திருமணத்தையொட்டி புதிய ஜவுளி வாங்க இருவர் வீட்டாரும் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூருக்கு சென்றனர். அவர்களுடன் மணப்பெண் லதாவும் ஜவுளி எடுக்க சென்றார்.

    ஜவுளி கடையில் உறவினர்கள் தங்களுக்கு பிடித்த புதிய துணிகளை தேர்வு செய்து வாங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது மணமகளை தேடினர். ஆனால் அங்கு அவரை காணவில்லை. அவர்களுடன் வந்த புதுப்பெண் லதா திடீரென மாயமாகி விட்டார்.

    இதனால் உறவினர்களிடையே பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. கடை உள்ளேயும், வெளியேயும் ஓடி வந்து தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இது குறித்து புதுப்பெண்ணின் தந்தை அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுப்பெண் லதாவை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு யாருடனும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் மாயமாகி விட்டாரா? என்ற பல்வேறு சந்தேகத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×