என் மலர்
நீங்கள் தேடியது "Ayodhya"
- அயோத்திக்கு வாருங்கள் என்று மக்களை நேரில் அழைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
- அட்சதையுடன் ராம் லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் வழங்கி அயோத்திக்கு அழைப்பார்கள்.
சென்னை:
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி நடக்கிறது.
நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கும்பாபிஷேக நிகழ்ச்சி விபரங்களை கிராமங்கள் வரை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்வதோடு அயோத்திக்கு வாருங்கள் என்று மக்களை நேரில் அழைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
இதற்காக அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட 100 கிலோ அட்சதை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அட்சதையை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் நிகழ்ச்சி சேத்துப்பட்டு ஆரிங்டன் சாலையில் உள்ள சின்மயா மிஷன் பள்ளியில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் விசுவ இந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கிறார்கள்.
அட்சதையுடன் ராம் லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் வழங்கி அயோத்திக்கு அழைப்பார்கள். ஏற்கனவே 85 லட்சம் குடும்பத்தினர் தொடர்பில் இருப்பதாகவும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க திட்டமிட்டு உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தெரிவித்தனர்.
- 25 தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மணிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு லாரி மூலம் அயோத்திக்கு அனுப்பப்பட்டன.
சென்னை:
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவிலில் பொருத்தப்பட உள்ள ஆலய மணிகளை பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜேந்திர நாயுடு என்பவர் வழங்குகிறார். அவர் இந்த மணிகளை தயாரிக்க நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்திருந்தார். 25 தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மணிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக 48 மணிகள் தயாராகி உள்ளன. இதில் 5 மணிகள் தலா 75 கிலோ எடை கொண்டது. 6 மணிகள் தலா 60 கிலோ எடை கொண்டது. ஒரு மணி 25 கிலோ எடை கொண்டது. இதுதவிர 36 பிடிமணிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த மணிகள் அனைத்தும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு லாரி மூலம் அயோத்திக்கு அனுப்பப்பட்டன.
இதில் 12 ஆலய மணிகளும் கோவில் பிரகாரத்தில் பொருத்தப்பட உள்ளது. கும்பாபிஷேகத்தின்போது தமிழகத்தின் இந்த மணிகள் அயோத்தியில் ஒலிக்கும்.
மணியை தயாரித்தவர்கள் கூறும்போது, "இரும்பு கலக்காமல் முழுவதும் காப்பர், வெள்ளி, துத்தநாகம் ஆகியவற்றால் செய்யப்பட்டு உள்ளது" என்றனர்.
- ஜனவரி 22-ம் தேதி மதியம் 12 மணிக்கு விழா நடைபெறுகிறது.
- ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பு.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் கூறியதாவது:-
ஜனவரி 22-ம் தேதி மதியம் 12 மணிக்கு விழா நடைபெறுகிறது. கருவறை தயாராக உள்ளது. சிலை தயாராக உள்ளது. ஆனால் கோயிலில் நிறைய வேலைகள் உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டுமானப் பணிகள் தொடரலாம்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அயோத்தி திறப்புக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். நகரத்தில் நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 22-ம் தேதி அயோத்திக்கு வர வேண்டாம். அருகில் உள்ள சிறிய, பெரிய கோயிலில் ஒன்று கூடுங்கள். வேறு கடவுள் அல்லது தெய்வத்திற்கு உரியதாக இருந்தாலும் உங்களால் சாத்தியமான கோவிலுக்குச் செல்லுங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- கும்பாபிஷேகம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று முடிவு.
- கும்பாபிஷேகத்திற்கான விருந்தினர் பட்டியல் பெரிதாகி வருகிறது.
அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஜனவரி 22 அன்று, அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, இந்த நிகழ்வு இன்னும் பல ஆண்டுகளாக நினைவில் வைக்கப்படும் அளவுக்கு பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
எனவே, அறக்கட்டளை சார்பில் நாடு முழுவதும் உள்ள புனிதர்கள், பாதிரியார்கள் மற்றும் மதத் தலைவர்களை அழைப்பது மட்டுமல்லாமல், 1992 ஆம் ஆண்டில் அயோத்தி பகுதியில் நிர்வகித்த முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாக அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. முக்கிய தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், நடிகர்கள் மற்றும் பத்ம விருதுகளுடன் கௌரவிக்கப்பட்ட நபர்கள் என்று விருந்தினர் பட்டியல் பெரிதாக இருக்கிறது.

தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய பட்டியல் கவனமாகத் தொகுக்கப்பட்டு இருக்கிறது என்று அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறினார். விருந்தினர் பட்டியலில் ஆன்மீக தலைவர் தலாய் லாமா, பாபா ராம்தேவ், அம்மா அமிர்தானந்தமயி, முகேஷ் அம்பானி, அதானி குழுமத்தின் கவுதம் அதானி, டாடா குழுமத்தின் நடராஜன் சந்திரசேகரன், எஸ்.என். எல் அண்ட் டி குழுமத்தின் சுப்ரமணியன் மற்றும் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீட்சித் ஆகியோர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் இந்த பட்டியலில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்களை கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அயோத்திக்கு வர வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
"இருவரும் வயதில் பெரியவர்கள், வயதைக் கருத்தில் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்" என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறினார்.

பா.ஜ.க. நிறுவன உறுப்பினரான அத்வானிக்கு இப்போது 96 வயது, ஜோஷிக்கு அடுத்த மாதம் 90 வயது. ஆனால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து விழாவுக்கு அழைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வயது 90. விழாவுக்கு அத்வானி மற்றும் ஜோஷி வர வேண்டாம் என்று கூறிவிட்டு,அதே வயதையுடைய தேவ கவுடா அழைக்கப்பட்டு இருக்கிறார்.
ராமர் ரத யாத்திரை மற்றும் ராம ஜென்மபூமி இயக்கங்களுக்கு அத்வானி மிக முக்கிய பங்குவகித்தார். ராமர் ரத யாத்திரை என்பது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஊக்குவிக்க எல்.கே. அத்வானி, பா.ஜ.க. நடத்திய அரசியல் மற்றும் மத ஊர்வலம்.

1990 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தடைகளை எதிர்கொண்டு, ஏராளமான மக்கள் மத்தியில் உரையாற்றி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என வாதிட்டவர் அத்வானி. அவரை ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கு வயதை காரணம் காட்டி வர வேண்டாம் என்று சொன்னது விமர்சனத்திற்கு உள்ளானது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரவேண்டாம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அறக்கட்டளை சார்பிலான குழு இன்று எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது.
- காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் அயோத்தி ராமர் கோயில் அமைப்பதில் பல ஆலோசனைகள் அளித்து முக்கிய பங்கு வகித்துள்ளார்.
- ராமர் கோயில் திறப்பதற்கு நல்ல நாள் குறித்தவர், தமிழரான ஸ்ரீகணேஷ்வர சாஸ்திரி திராவிட் ஆவார்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், ஜனவரி 22-ந்தேதி திறக்கப்படுகிறது. இதில் முக்கிய விருந்தினராக பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். ராமர் கோயில் அமைக்கும் பணியில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
ஜெயேந்திரர், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ராமர் கோயில் கட்டுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். இதனால் அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ஜெயேந்திரருக்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போதைய காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரும் அயோத்தி ராமர் கோயில் அமைப்பதில் பல ஆலோசனைகள் அளித்து முக்கிய பங்கு வகித்துள்ளார். கோயில் கட்டுவதற்காக பூமி பூஜையன்று கருங்காலி மரத்தில் நவரத்தினங்கள் பதித்த சங்கு, காஞ்சியிலிருந்து 2 செங்கற்கள், 5 தங்க காசுகள், தாமரை பட்டயம் அனுப்பியிருந்தார்.
விஜயேந்திரர் கூறியபடியே நல்ல நாள் குறிக்கவும், ராமர் சிலை அமைக்கும் பிராண் பிரதிஷ்ட சமாரோஹம் செய்யவும் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டனர். ராமர் கோயில் திறப்பதற்கு நல்ல நாள் குறித்தவர், தமிழரான ஸ்ரீகணேஷ்வர சாஸ்திரி திராவிட் ஆவார். இவர் ஏற்கெனவே ராமர் கோயில் பூமி பூஜைக்காக, விஜயேந்திரர் வழிகாட்டுதலின் பேரில் நல்ல நாள் குறித்திருந்தார்.
வாரணாசியில் பிரதமர் மோடியால் புனரமைத்து திறக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் இவரே தான் நாள் குறித்தார். இவர் ஜோதிட சாஸ்திர நிபுணர் ஆவார். வாரணாசியின் ஹனுமர் படித்துறையில் தமிழக பிராமணர்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் அருகே உள்ள திருவிசைநல்லூர் கிராமத்திலிருந்து வந்தவர்கள். இவர்களில் ஒருவரான ராஜேஷ்வர சாஸ்திரி திராவிட், காசி ராஜாவிற்கு ராஜகுருவாக இருந்தார். இவரது 3-வது மகன்தான் ஸ்ரீகணேஷ்வர சாஸ்திரி திராவிட் ஆவார். சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கூறியதன் பேரில் ராமர் சிலை உயிர்ப்பித்தல் பணிக்கு வாரணாசியின் பிரபல பண்டிதர் லஷ்மிகாந்த் மதுரநாத் தீட்சித் (86) தலைமை வகிக்கிறார். இவர், 17-ம் நூற்றாண்டில் வாரணாசியில் வாழ்ந்த பண்டிதரான கங்கா பட் என்னும் சம்ஸ்கிருதம் மற்றும் வேத அறிஞரின் பரம்பரையில் வந்தவர்.
ராமர் சிலையை அமைக்கும் பணியை ஏற்றுள்ள லட்சுமிகாந்த் தீட்சித்தின் கீழ், 150 பண்டிதர்கள் ஓதுவார்களாக இருப்பார்கள். இவர்கள் ஜனவரி 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்களுக்கு, ராமர் சிலை அமைக்க வேதங்களை ஓதி பிரதிஷ்டை செய்கிறார்கள்.
- அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டிட கலையில் கட்டப்படுகிறது.
- சனாதனம் என்பது நமது வாழ்வியல் முறை. அதனை இந்து மதத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது.
அயோத்தி:
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டிட வடிவமைப்பை குஜராத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோமபுரா என்பவர் தான் செய்து இருக்கிறார். அவருக்கு 80 வயது ஆகிறது. அவரது மகன்கள் நிகில் மற்றும் ஆசிஷ் ஆகியோர் கண்காணிப்பில் தான் தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவில் கட்டுமானம் குறித்து சந்திரகாந்த் சோமபுரா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அயோத்தி ராமர் கோவில் வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
பதில்:- எங்களது சோமபுரா குடும்பம் பல ஆண்டுகளாக கோவில் கட்டும் பணியை செய்து வருகிறோம். நான் அதில் 15-வது தலைமுறை. எனது தந்தை தான் சோம்நாத் கோவிலை கட்டினார். பிர்லா மந்திர் கோவில்கள் எல்லாம் எங்களால் கட்டப்பட்டவை தான். எனவே தொழில் அதிபர் பிர்லா தான், அப்போது விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்லால் சிங்காவிடம் என்னை பரிந்துரை செய்தார்.
கேள்வி:- அயோத்தி ராமர் கோவில் வரைபடம் தயாரித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
பதில்:- ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும், அதற்கு வடிவமைப்பு செய்து தாருங்கள் என்று 1989-ம் ஆண்டு என்னிடம் கேட்டார்கள். அதற்காக என்னை கோவில் வளாகத்திற்குள் அழைத்து சென்றார்கள். அப்போது இங்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதனால் கட்டிட அளவு எடுப்பதற்கான உபகரணங்கள், பேனா, பென்சில், பேப்பர் என எந்த பொருட்களையும் எடுத்து வர முடியவில்லை. இதனால் நான் நடந்தே அளவு எடுத்தேன். ஒவ்வொரு அளவையும் எனது மனதில் குறிப்பு எடுத்து வைத்து கொண்டேன். பின்னர் வீட்டிற்கு திரும்பியவுடன் கோவில் கட்டுமானத்திற்கு 3 வரைபடங்கள் தயாரித்தேன். அதனை அடிப்படையாக கொண்டு, மரத்தால் கோவில் மாதிரியை உருவாக்கினேன். இந்த கோவில்கள் 1992-ம் ஆண்டு நடந்த கும்பமேளா விழாவின்போது சாமியார்கள் பார்வைக்கு வைத்தேன். அதில் அவர்கள் தேர்வு செய்த ஒன்றுதான் அயோத்தி ராமர் கோவிலாக தற்போது உருவாகி வருகிறது.
கேள்வி:- பல நாற்றாண்டுகளை தாண்டி நிலைத்து இருக்கும் தென்னகத்து கோவில்களான மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில்களுடன் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தை ஒப்பிட முடியுமா?
பதில்:- மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவிலுக்கு எல்லாம் நானும் வந்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் மிகவும் நேர்த்தியாக, கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளன. அதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் கோவில்கள் என்பது வெறும் கட்டிட கலை அல்ல. அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு சென்றால் நமக்கு ஒரு அதிர்வலைகளை அது ஏற்படுத்த வேண்டும். மன நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை தர வேண்டும். இவற்றை மீனாட்சி அம்மன் கோவில்போல் அயோத்தி ராமர் கோவிலும் பக்தர்களுக்கு தரும் என்பதில் நீங்கள் எள்ளளவும் சந்தேகப்பட வேண்டாம். அதே நேரத்தில் அயோத்தி கோவில் கட்டுமானத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பழங்கால முறைப்படி, நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வரும் கோவில் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி:- நீங்கள் குறிப்பிடும் பழங்கால முறைப்படியான கட்டுமானம் என்பது எது?
பதில்:- அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டிட கலையில் கட்டப்படுகிறது. இந்த கோவிலுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது. கற்களின் ராஜாவான ராஜஸ்தான் இளஞ்சிவப்பு கற்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கற்கள் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும். கோவில் கட்டுமானத்தில் இரும்பு, உருக்கு போன்று எந்த உலோகங்களையும் பயன்படுத்தவில்லை. பழங்கால முறைப்படி வெறும் கற்கள் மூலமே, நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படுகிறது. இந்த கோவில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைத்து இருக்கும். அதனை தற்போது உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். நிலநடுக்கம், வெள்ளம்-மழை போன்ற எந்த ஒரு பேரிடரையும் தாங்கி நிற்கும் அளவுக்கு கோவில் மிக வலுவாக கட்டப்பட்டு வருகிறது. பழங்கால கோவில்களில் உள்ளது போன்று அயோத்தி கோவிலிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
கேள்வி:- சனாதன தர்மத்திற்கான கோவில் என்பதனை எப்படி புரிந்து கொள்வது?
பதில்:- சனாதனம் என்பது நமது வாழ்வியல் முறை. அதனை இந்து மதத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது. ஒவ்வொரு மனிதனும் அதனை கடைபிடிக்க வேண்டும். அது மதத்திற்கானது அல்ல, மனிதனுக்கு ஆனது என்ற பார்வையில் அதனை அணுக வேண்டும். அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் வெறும் ராமர் கோவில் மட்டுமின்றி இதர தெய்வங்கள் கோவிலும் கட்டப்பட உள்ளது.
கேள்வி:- இந்த கோவிலின் சிறப்பம்சமாக எதனை நீங்கள் சொல்வீர்கள்?
பதில்:- அயோத்தி ராம ஜென்ம பூமியில், ராமர் கோவில் கட்டுவதே மாபெரும் சிறப்பானது. சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவில், 58 ஆயிரம் சதுரடியில் 3 தளங்களுடன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதன் கருவறை எண்கோண வடிவத்தில் கட்டப்படுகிறது. அதுதான் கோவிலின் உச்சபட்ச சிறப்பு அம்சம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திறப்பு விழா முடிந்த பிறகு பொதுமக்கள் ராமரை தரிசிப்பதற்கான ஏற்பாட்டை பா.ஜ.க. செய்கிறது.
- வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கம்-2 நிகழ்ச்சிக்கும், தமிழ் நாட்டில் இருந்து மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
புதுடெல்லி:
உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கருதியும் நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்கள் இவ்விழாவுக்கு வர வேண்டாம் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனால், திறப்பு விழா முடிந்த பிறகு பொதுமக்கள் ராமரை தரிசிப்பதற்கான ஏற்பாட்டை பா.ஜ.க. செய்கிறது. இந்த இலவச ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் பீகார் மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதிலும் இருந்து 5 கோடி பேர் அயோத்தி ராமர் கோவிலில் இலவசமாக தரிசனம் செய்ய பா.ஜ.க. ஏற்பாடு செய்து உள்ளது. இதற்காக, 'ராம் தர்ஷன் அபியான்' எனும் பெயரில் ஜனவரி 24-ல் தொடங்கும் ஆன்மிக யாத்திரை மார்ச் 24 வரை நடைபெற உள்ளது.
இதற்காக, ரெயில்வே துறையில் நாடு முழுவதிலும் இருந்து 275 சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதில், உணவு உள்ளிட்ட சகல வசதிகளுடன் 5 கோடி பேரும் இலவசமாக பயணம் செய்யலாம். இதன் மூலம், ராமர் தரிசனத்துடன், அயோத்தியின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றி நாட்டு மக்களை அறிய வைப்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம்.
வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கம்-2 நிகழ்ச்சிக்கும், தமிழ் நாட்டில் இருந்து மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பயணம், தங்குதல், உணவு என அனைத்து வசதிகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் செய்தது போல், அயோத்தி பயண ஏற்பாட்டை பா.ஜ.க. செய்ய உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக உ.பி. அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இவ்விழா, இந்திய வரலாற்றில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக அமையும் வகையில் மிகமிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
- அயோத்தியில் அடுத்த மாதம் 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி ராமர் கோவில் திறப்புவிழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் ராமர் கோவில் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த விழாவை புறக்கணிக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கலந்து கொள்ளாது என ஏற்கனவே அக்கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சுரி அறிவித்துள்ளார். இதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியும் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மம்தா பானர்ஜியோ அல்லது கட்சியின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள், மதத்துடன் அரசியலை கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்களா? என்பது தொடர்பாக கட்சி மேலிடம் எதுவும் அறிவிக்கவில்லை.
இந்தியா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறும்போது. இதுவரை விழாவில் பங்கேற்க அழைப்பு எதுவும் வரவில்லை என தெரிவித்தார்.
- குடிமை வசதிகளை மறுசீரமைப்பதும் பிரதமரின் தொலைநோக்கு பாா்வையாகும்.
- குழந்தை பராமரிப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரெயில் நிலையம், விரிவு படுத்தப்பட்ட சாலைகள் உள்ளிட்டவற்றை பிரதமா் மோடி சனிக்கிழமை (டிச.30) திறந்துவைக்கவுள்ளாா்.
இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அயோத்தி நகரில் ரூ.11,100 கோடி மதிப்பில் பணி நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டவுள்ளாா். இதேபோல், உத்தர பிரதேசத்தின் இதர பகுதிகளில் ரூ.4,600 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.
அயோத்தியின் வளமான பாரம்பரியம் மற்றும் வரலாறு மாறாமல், அங்கு உலகத் தரத்தில் உள் கட்டமைப்புகளை உருவாக்குவதும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதும், குடிமை வசதிகளை மறுசீரமைப்பதும் பிரதமரின் தொலைநோக்கு பாா்வையாகும்.

ரூ.1,450 கோடிக்கும் மேற்பட்ட செலவில் அயோத்தியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் முதல் பகுதியை நாளை (சனிக்கிழமை) பிரதமா் திறந்து வைக்கவுள்ளாா். இந்த விமான நிலையத்துக்கு ராமாயணம் எழுதிய வால்மீகி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதேபோல், 'அயோத்தி கோவில் சந்திப்பு' என்ற பெயருடன் ரூ.240 கோடிக்கும் மேற்பட்ட செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்தையும் அவா் திறந்து வைக்கிறாா். நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், உணவு அரங்குகள், பூஜைப் பொருள் கடைகள், ஓய்வறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கோவை, பெங்களூர் இடையிலான வந்தே பாரத் உள்பட 6 புதிய வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்க உள்ளார். இதே போல், தர்பங்கா அயோத்தி ஆனந்தவிகார் உள்பட இரு புதிய அம்ருத் பாரத் ரெயில்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
- பிரதமர் மோடி காலை 11.15 மணியளவில் அயோத்தி ரெயில் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
- மதியம் 12.15 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு முன்பாக, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அயோத்தி ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை அயோத்தி வருகிறார்.
பிரதமர் மோடி காலை 11.15 மணியளவில் அயோத்தி ரெயில் நிலையத்தையும், மதியம் 12.15 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து, 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்க நாடு முழுவதிலிருந்தும் சுமார் 1400 கலைஞர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமான நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் ராம் பாத் வரை அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 40 மேடைகளில் 1,400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாட்டுப்புற கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை அளிக்க உள்ளனர்.
இதில், அயோத்தியைச் சேர்ந்த வைபவ் மிஸ்ரா, காசியைச் சேர்ந்த மோகித் மிஸ்ரா டமாரம் அடித்து, சங்கு ஊதி பிரதமரை வரவேற்கின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்பிலான பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
- அயோத்தி சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி செல்கிறார். சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்பிலான பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அயோத்தி சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைக்கிறார். அடுத்த மாதம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
இன்று அயோத்தி செல்ல இருக்கும் நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள், தகவல் தொடர்பு வளர்ச்சி, கடவுள் ராமரின் நகரான அயோத்தியின் உயர்ந்த பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்க இருக்கிறேன். அதோடு பல திட்டங்களை திறந்து வைப்பதுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
15 ஆயிரம் கோடி ரூபாய் அயோத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிகளுக்கான திட்டம். 4,600 கோடி ரூபாய் திட்டங்கள் உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள திட்டங்கள் ஆகும்.
- புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- அப்போது இரண்டு அம்ரித் பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்திய ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசத்திக்காக பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் என இருந்த நிலையில், சேரக்கூடிய இடங்களை மிகவும் விரைவாக சென்றடையும் வகையில் வந்தே பாரத் என்ற ரெயிலை அறிமுகப்படுத்தியது.
குறைந்த பெட்டிகளை கொண்ட ரெயிலாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதிவேகமாக செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ரெயில் முழுவதும் ஏ.சி. பெட்டிகளை கொண்டது. கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் இந்திய ரெயில்வே அம்ரித் பாரத் ரெயில் என்பதை அறிமுகப்படுத்த இருக்கிறது. இன்று புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அப்போது இரண்டு அம்ரித் பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
#WATCH | Uttar Pradesh: Inside visuals of the new Amrit Bharat train, which PM Narendra Modi will flag off in Ayodhya today.PM Narendra Modi will also inaugurate the redeveloped Ayodhya Dham railway station and flag off the new Amrit Bharat trains and Vande Bharat trains pic.twitter.com/xs6MjynQ3C
— ANI (@ANI) December 30, 2023
பீகார் மாநிலத்தின் தர்பங்கா- டெல்லியின் ஆனந்த் விஹார் இடையில் ஒரு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் அயோத்தி வழியாக செல்லும்.
மற்றொரு ரெயில் மேற்கு வங்காளத்தின் மால்டா டவுண்- பெங்களூருவின் விஸ்வேஸ்வராய முனைமம் இடையே இயக்கப்படுகிறது.
#WATCH | Uttar Pradesh: Inside visuals of the new Amrit Bharat train, which PM Narendra Modi will flag off in Ayodhya today.PM Narendra Modi will also inaugurate the redeveloped Ayodhya Dham railway station and flag off the new Amrit Bharat trains and Vande Bharat trains pic.twitter.com/xs6MjynQ3C
— ANI (@ANI) December 30, 2023
இந்த ரெயில் ஏ.சி. பெட்டிகள் கிடையாது. படுக்கை வசதி கொண்ட ரெயிலாகும். தற்போது எல்.இ.டி. லைட்டுகள், செல்போன் சார்ஜ் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொண்டதாக உள்ளது. மேலும், கட்டணமும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 6 வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.