என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore airport"

    • சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர்.
    • தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருகிறது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 30 விமானங்கள் சேவை வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் விமான இயக்கங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.

    இதன்படி கோவை விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 179 சர்வதேச விமானங்களும், 1,651 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 1,830 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

    இது கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.43 சதவீதம் அதிகமாகும்.

    சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 31.23 சதவீதம் கூடுதலாகும்.

    இதேபோல சர்வதேச விமானங்களில் 180.1 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு விமானங்களில் 764.7 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 944.8 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.52 சதவீதம் அதிகமாகும்.

    தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருவதாகவும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமான நிலைய முனையத்தை விரைவாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • கோவை சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • நேற்றுமுன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர்.

    கோவை:

    சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர். அவர்களில் சேலத்தை சேர்ந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமானநிலையம் வந்ததும், அவரை போன்று மற்றொருவரும் சீனாவில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து இவருக்கு கோவை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று வந்தது. அதில் சேலத்தை சேர்ந்த பயணிக்கு கொரோனா உறுதியானது.

    மேலும் இவருக்கு எந்தவகையான கொரோனா என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அத்துடன் அவருடன் விமானத்தில் கோவை வந்த 166 பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அவர்களிடம் தனிமைப்படுத்தி கொள்ளவும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

    • கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது.
    • சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    கோவை விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகளிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.

    தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை எந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சிலர் காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிப்பதாகவும், அவர்கள் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனையில் இருந்து தப்பி செல்வதையே நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது. இதுதவிர சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ஒருசில பயணிகள் தங்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதை மறைக்க காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிக்கின்றனர்.

    அவர்களின் நோக்கம் பரிசோதனைகளில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பது தான். ஆனால் வீட்டுக்கு சென்ற உடல்நிலை மேலும் மோசமடைந்து அதற்கு பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதுபோன்று பரிசோதனையில் சிக்காமல் வெளியேறும் நபர்கள் சமுதாயத்தில் நோய் பரவல் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றனர்.

    எனவே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த சரக்கக வளாகம்.

    இங்கிருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நேரடி விமான சேவை இல்லாத ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் பாண்டட் டிரக் சேவை மூலம் சாலை வழியாக கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.

    மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 700 டன், வெளிநாட்டு பிரிவில் 150 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.

    தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வழக்கமாக பொறியியல் உற்பத்தி பொருட்கள், வார்ப்படம், காய்கறிகள், பழங்கள் மற்றும் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும்.

    சிங்கப்பூர் விமானத்தில் சரக்குகள் புக்கிங் மிகவும் குறைவாக உள்ளதால் அரை டன் அல்லது ஒரு டன் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன.

    ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது.

    கோடை காலத்தில் மாம்பழம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கேரளா மற்றும் பொள்ளாச்சியில் இருந்து மாம்பழங்கள் அதிகளவு ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றன.

    வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.

    சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்தால் சரக்குகள் கையாளப்படும் அளவும் கணிசமாக அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • விமானம் சிறிது நேரத்தில் தனது ஓடுபாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
    • வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 23 விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

    இதுதவிர வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. அதன்படி ஷார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் இருந்து 175 பயணிகளுடன் விமானம் கோவை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்று விட்டனர்.

    அதனை தொடர்ந்து கோவையில் இருந்து ஷார்ஜாவிற்கு இன்று அதிகாலை 4 மணிக்கு, விமானம் புறப்பட்டது.

    இந்த விமானத்தில் 175 பயணிகள் ஷார்ஜாவுக்கு செல்ல தயாராக இருந்தனர். விமானம் சிறிது நேரத்தில் தனது ஓடுபாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.

    வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியது.

    இதனை அறிந்து கொண்ட விமானி உடனடியாக கோவை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி அந்த விமானம் மீண்டும் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், அதில் இருந்த பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர். அவர்களில் கோவையை சேர்ந்தவர்களை வீட்டிற்கும், மற்றவர்களை ஓட்டலிலும் தங்க வைத்தனர்.

    இதனை தொடர்ந்து விமான நிலைய பொறியாளர்கள் உடனடியாக விரைந்து சென்று, விமானத்தில் ஏறி ஆய்வு செய்தனர்.

    விமானத்தில் தற்போது பராமரிப்பு பணிகளையும் பொறியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் மீண்டும் விமானம் எப்போது கோவையில் இருந்து புறப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்.

    விமானி பறவை மோதியது பார்த்து உடனே தகவல் கொடுத்ததால் 175 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

    கோவை:

    குடியரசு தின விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கி உள்ளன.

    கோவை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். மேலும் காவல்துறையில் சிறப்பாக வேலை பார்த்த போலீசாருக்கு பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

    குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகர அளவில் 1500 போலீசாரும், மாவட்ட அளவில் 1000 போலீசாரும் என மொத்தமாக 2500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் தற்போது மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை பீளமேடு விமானநிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கோவை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. தண்டவாளங்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் கடந்த முறை கொரோனா தொற்று பரவியபோது இங்குள்ள மக்களிடம் நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது.
    • கொரோனா தொற்று பரவல் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையிலை.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் அனைத்து நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் 5 நாட்களும் சர்வதேச விமானங்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனை தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவில் இருந்து சர்வதேச விமானம் மூலம் கோவை வரும் பயணிகளிடம் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் பரிசோதனை பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இதுதொடர்பாக கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறுகையில், கோவை விமான நிலையத்துக்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தற்போது காய்ச்சல் பாதிப்புகளை கண்டறியும் வகையில் சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் கோவை விமான நிலையத்தில் ஏற்கனவே தானியங்கி காய்ச்சல் கண்டறியும் எந்திர பரிசோதனைகள் செயல்பாட்டில் உள்ளன.

    சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக மத்திய-மாநில அரசுகள் இதுவரை பிரத்யேக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.

    கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா கூறுகையில், தமிழகத்தில் கடந்த முறை கொரோனா தொற்று பரவியபோது இங்குள்ள மக்களிடம் நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்கு கொரோனாவை தடுக்கும் விதமாக, 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. எனவே கொரோனா தொற்று பரவல் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையிலை. சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசு சார்பில் பிரத்யேக தகவல் வெளியாகும்பட்சத்தில் அவற்றின்படி கூடுதல் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

    • கோவை பீளமேடு போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் கோவை விமான நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இன்று காலையும் விமான நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்களை வழி அனுப்பி வைக்கவும், ஊர்களில் இருந்து வருபவர்களை வரவேற்கவும் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. விமானநிலைய ஊழியர்களும் தங்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

    இன்று காலை 7.30 மணிக்கு விமான நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்திருந்தது. அதில் விமான நிலையத்தின் குளியலறை தண்ணீர் குழாயில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கோவை பீளமேடு போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசாரும் மோப்ப நாய்களுடன் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் விமான நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

    குளியலறை மற்றும் கழிப்பிடங்களிலும் சோதனை நடைபெற்றது. ஆனாலும் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடி குண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மிரட்டல் எங்கிருந்து வந்தது. எந்த மின்னஞ்சல் முகவரியில் வந்தது. மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே கோவை விமான நிலையத்திற்கு 2முறை வெடிகுண்டு மெட்டல் வந்தது. தற்போது 3-வது முறையாகவும் மிரட்டல் வந்துள்ளது.

    இதற்கிடையே கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.
    • ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர்.

    அமெரிக்காவில் இருந்து ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று (14/12/2024) தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோக மையம் வரை வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று பிரம்மாண்டமான வரவேற்பினை வழங்கினர்.

    அமெரிக்காவில் இருக்கும் ஈஷா யோக மையத்திற்கு கடந்த மே மாதம் சென்ற சத்குரு ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.

    சத்குரு மாலை 6 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு மட்டுமே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். மேலும், சத்குருவுக்கு மக்கள் ஆரத்தி காட்டி வரவேற்றனர். 

    இதைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில இருந்து ஈஷா யோக மையம் வரை பல்வேறு இடங்களில் மக்கள் திரளாக அணிவகுத்து நின்று மலர்களை தூவியும், விளக்குகளை ஏந்தியும், மேள தாளத்துடன் சத்குருவை வரவேற்றனர்.

    குறிப்பாக அவிநாசி சாலையில் உள்ள நாகர்கோவில் ஆர்ய பவன் உணவகத்தில் திரண்டு இருந்த மக்கள் அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

    ரேஸ் கோர்ஸ் சாலையில் வள்ளி கும்மி நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காளம்பாளையம், மாதம்பட்டி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பினை வழங்கினர். 

    ஈஷா யோக மையத்தின் நுழைவாயிலான மலைவாசலில், ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடி மக்கள் திரண்டு அவர்களின் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கொண்டாட்டமாக சத்குருவை வரவேற்றனர்.

    மேலும் ஆதியோகியில் 10,000-க்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் சத்குருவை வரவேற்கும் பொருட்டு ஆதியோகி மற்றும் ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர்.

    ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர். மேலும் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் சத்குருவை வரவேற்றனர். ஆதியோகி முன்பு திரண்டு இருந்த மக்கள் முன்பு சத்குரு உரையாற்றினார்.

    • அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் பெரிய அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது இல்லை.
    • ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருட்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு முறையும் 3 டன்கள் வரை சரக்குகள் கையாளப்படுவது வழக்கம். மேலும் காய்கறிகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் முன்பதிவு செய்யப்படும்.

    இந்த நிலையில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் கரும்புகளை கொண்டு செல்வதற்கான புக்கிங் பணிகள், கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்றன.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் விமான சேவை வழங்கப்படும் போதும் ஒவ்வொரு முறையும் ஒரு டன் வீதம் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகிறது.

    அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் பெரிய அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது இல்லை. ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருட்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

    அதிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10, 11-ந்தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் கோவை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 டன் கரும்புகள் புக்கிங் செய்யப்பட்டு, ஷார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    கோவை விமான நிலையத்தில் தினமும் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டமும் அதிகரித்து உள்ளது.

    அதிலும் குறிப்பாக ஜனவரி 9-ந்தேதி மட்டும் உள்நாட்டு பிரிவில் 9893 பேரும், வெளிநாட்டுப்பிரிவில் இருந்து 1279 பேரும் என மொத்தம் 11,172 பேர் பயணித்து உள்ளனர். மேலும் அன்றைய தினம் 33 விமானங்கள் இயக்கப்பட்டன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்து பேசினார்.
    • ஆதாயம் இருக்கமானால் எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள்.

    கோவை விமான நிலையத்தில் வைத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

    குறிப்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. நான் தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தலை மாற்றிவிட்டனர். மானுடத்தை கொன்றுவிட்டு மதத்தை தூக்கி நிறுத்துவதா? கைக்கூலி, ஓட்டுப்பிச்சை என்று கூறுவதா?, ஆதாயம் இருக்கமானால் எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள்.

    அனைவரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டுமென்றே இவ்வளவு நாள் நான் போராடினேன் என்று கூறினார்.

    மேலும் மயிலாடுதுறை இரட்டை கொலைக்கு முன் விரோதமே காரணம் என போலீசார் கூறுவது வேதனையளிக்கிறது, எப்படியாவது இந்த அரசை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்று தெரிவித்தார். 

    • சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.
    • 2 பயணிகள் உள்ளாடைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

    கோவை:

    கோவை விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்து தங்கத்தை கடத்தி வரும் பயணிகளை மடக்கி பிடித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை தீவிர சோதனை செய்தனர். அதில் 2 பயணிகள் உள்ளாடைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரூ.2.94 கோடி மதிப்பிலான 5.6 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது அப்சல் (வயது 32) மற்றும் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்பது தெரியவந்தது.

    இதில் முகமது அப்சல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கத்தை கடத்தி வந்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த கிருஷ்ணனை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

    மேலும் தங்கம் கடத்தலில் வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர். 

    ×