என் மலர்
நீங்கள் தேடியது "Crops Damaged"
- டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த இரண்டு நாட்களாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக பெய்துவரும் கனமழையால் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
கனமழையின் காரணமாக அப்பகுதிகளில் ஓடும் ஆறுகள் மற்றும் சிற்றாறுகளில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருக்கிறது. ஆற்றின் கரைகள் பல இடங்களில் பலவீனமாக இருப்பதால் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே, வருவாய் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆற்றங்கரை ஓரங்களிலும், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் பலவீனமான கரைப் பகுதிகளைக் கண்டறிந்து, உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி அவற்றை பலப்படுத்துவதுடன், கனமழையால் ஆறு, ஏரி. வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வழிப் பாதைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறேன்.
மேலும், அரசு அதிகாரிகள் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணிரில் மூழ்கியுள்ள வேளாண் பயிர்களைக் கணக்கெடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரு நாட்களாகப் பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள நீரை கனரக மோட்டார்களை வைத்து வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
கடந்த வாரம் பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வெள்ள நீரால் பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத்தை வழங்குமாறு ஏற்கெனவே திமுக அரசை வலியுறுத்தி இருந்தேன். பல இடங்களில் நிவாரணங்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
எனவே, அரசின் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது.
- அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்:
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனை தொடர்ந்து முக்கொம்பில் இருந்தும், கல்லணையில் இருந்தும் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது.
பயிர்கள் மூழ்கியது இதன் காரணமாக தஞ்சை அடுத்த அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க தொடங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.
இந்த வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளான வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலுர், புத்தூர், குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் பழைய மன்னியாற்று பகுதியில் ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கி உள்ளது.
மேலும் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது.
சில இடங்களில் அறுவடைக்கு தயாரான முன்பட்ட குறுவை பயிர்களும் மூழ்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும், வெள்ள பெருக்கு காரணமாகவும் மூழ்கிய பயிர்கள் அழுகும் சூழ்நிை உருவாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேப்போல் பட்டுக்குடி கிராமத்தில் ஈமகிரியை மண்டபமும் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள பெருக்கால் மூழ்கியது.
நிவாரணம் வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் வெள்ள பெருக்கு காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் சில இடங்களில் அறுவடைக்கு தயாரான முன்பட்ட குறுவை பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. நாகை மாவட்டத்தில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மட்டுமின்றி மற்ற பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.
தொடர்ந்து நெற்பயிர்கள் பாதிப்படைந்து வருவதால் அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை வட்டாரத்தில் புளியரை, தெற்குமேடு, பகவதிபுரம், கற்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கார் பருவ நெல் பயிர்களில் அண்மையில் பெய்த அதிகப்படியான மழை மற்றும் அதிவேக காற்றினால் ஏற்பட்ட சீதோஷ்ணநிலை மாற்றம் காரணமாக நெற்கதிர்கள் வெளிவரும் தருவாயில் மகரந்த சேர்க்கை இல்லாமல் நெல் மணிகள் பதராகி மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நெல்லை வேளாண்மை இணை இயக்குநர் செந்திவேல் முருகன் வழிகாட்டுதலின்படி, அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ஆறுமுகச்சாமி, மண்ணியல் பேராசிரியர் ஜோதிமணி, உழவியல் உதவி பேராசிரியர் ஸ்ரீரெங்கசாமி, நோயியல் உதவி பேராசிரியர் ராம்ஜெகதீஷ், நெல்லை மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசுப்பிரமணியம், வேளாண்மை உதவி இயக்குநர் நல்லமுத்துராசா, துணை வேளாண்மை அலுலவர் ஷேக்முகைதீன், உதவி வேளாண்மை அலுவலர் ஜானகிராமன் ஆகியோர் கொண்ட குழு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் நெல் பயிர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அண்மையில் தொடர்ந்து பெய்த அதிகப்படியான மழை, அதிக வேகமான காற்றினால் நெற் கதிர்கள் வெளிவந்து பால் பிடிக்கும் தருவாயில் மகரந்த சேர்க்கை ஏற்படாமல் மணிகள் அனைத்தும் பதராகி காய்ந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள 150 எக்டேர் பரப்பில் விவசாயிகளுக்கு 50 சதவீதத்துக்கும் மேலாக மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இப்பகுதியில் நெல் சாகுபடி செய்து நெற் கதிர்கள் பதராகி பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகள் விவரம் சேகரித்து கணக்கிடப்பட்டு அரசுக்கு அனுப்பி உரிய நிவாரண தொகை பெற்று தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான நடவடிக்கை உடனே மேற்கொள்ளப்படும் என்று வேளாண்மைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.