என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Medical College"

    • மருத்துவ மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக, இறந்தவர்களின் உடல்கள் தானமாக பெறப்படுகிறது.
    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு ஆண்டில் 41 சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.

    மதுரை:

    தென் மாவட்டங்களில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு தனி பிரிவு, மகப்பேறு சிகிச்சைக்கு தனி பிரிவு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அனைத்து வகையான சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால், மதுரை மட்டுமின்றி மதுரையை சுற்றி உள்ள பக்கத்து மாவட்ட மக்களும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    கடந்த ஆண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தவர்களின் விவரம், உடல்கள் தானம் பெற்றது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

    "பொதுவாக சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடையும் நபர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 13 நபர்களிடம் இருந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள், எலும்பு, தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இந்த உடல் உறுப்புகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மட்டுமின்றி சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    இதுபோல், மருத்துவ மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக, இறந்தவர்களின் உடல்கள் தானமாக பெறப்படுகிறது. அதன்படி, கடந்த 1½ ஆண்டில் மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு 65 உடல்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதற்கான முயற்சிகளை மதுரை அரசு ஆஸ்பத்திரியின் இருப்பிட மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்டு, உடல் தானம் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அதன் விளைவாக உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் தாங்களாக முன்வந்து உடலை தானமாக வழங்குவது என கிட்டத்தட்ட 65 உடல்கள் தானமாக பெறப்பட்டு, மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளன. தானமாக பெறப்பட்ட உடல்களில், மதுரை மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுக்கு 20 உடல்கள் போதுமானது. மீதமுள்ள உடல்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட அரசு மருத்துவகல்லூரிகளுக்கும், அரசு விதிமுறைகளை பின்பற்றி தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. உடல்களை தானமாக வழங்கும் நபர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களின் உறவினர்களுக்கு பாராட்டு சான்றிதழும், போலீஸ் நிலையங்கள் மூலம் ஒப்படைக்கப்படும் உடல்களுக்கு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இதுபோல், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு ஆண்டில் 41 சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அதிநவீன சிறப்பு சிகிச்சைகளின் மூலம், அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதியதாக மருத்துவமனை 5 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
    • காவிரி ஆற்றில் இருந்து 15 லட்சம் லிட்டா் நீரை குழாய் வழியாகக் கொண்டுவர வேண்டிய சூழல் உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதியதாக மருத்துவமனை 5 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட 7 ஆழ்துளைக் கிணறுகளிலும் நீராதாரம் இல்லாததால், காவிரி ஆற்றில் இருந்து 15 லட்சம் லிட்டா் நீரை குழாய் வழியாகக் கொண்டுவர வேண்டிய சூழல் உள்ளது.

    இதற்காக ரூ.13 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனைக்கு நீரை கொண்டு வருவதற்கான வழித்தடத் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகிறது.

    இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் நீடிக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அனுமதி கிடைத்து விடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி கிடைத்தாலும் நீரைக் கொண்டு வருவதற்கான பணிகள் நிறைவடைய மேலும் 6 மாதங்களாகி விடும். தற்போது நாமக்கல் நகராட்சிக்கு கட்டணம் செலுத்தி 1½ லட்சம் லிட்டா் காவிரி நீரை மருத்துவமனை நிா்வாகம் பெற்று வருகிறது.

    மாணவா்கள் உடற்கூறாய்வுப் பயிற்சிக்காக நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு, மருத்துவக் கல்லூரியில் பேருந்துகள் இல்லாததால், மாணவா்களை அழைத்துச் செல்ல அரசு பேருந்துகளை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து நிா்வாகம் பயன்படுத்தி வருகிறது. மருத்துவக் கல்லூரி பயன்பாட்டுக்கென தனியாக பேருந்துகள் வழங்க வேண்டும் என்பது மாணவா்களின் கோரிக்கையாக உள்ளது.

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.சாந்தாஅருள்மொழி கூறுகையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி சென்ற ஆண்டு தொடங்கியபோது, 150 இடங்களை எதிா்பாா்த்த நிலையில் 100 இடங்களை இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியது. அந்த இடங்கள் முழுமையாக நிரம்பி மாணவா்கள் படித்து வருகின்றனா். 2-ம் ஆண்டாக, மாணவா் சோ்க்கைக்குத் தயாராக உள்ளோம்.

    மருத்துவக் கலந்தாய்வு முடிவடைந்து மாணவா்கள் சோ்வதற்கு அக்டோபா் அல்லது நவம்பா் மாதமாகி விடும். அதற்குள் தற்போது முதலாமாண்டு படித்து வரும் மாணவா்கள் பருவத் தோ்வுக்கு (செமஸ்டா்) தயாராகி விடுவா். ஜனவரியில் இத்தோ்வு நடைபெற வாய்ப்புள்ளது. முதலாம் ஆண்டு சேர உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன என்றாா்.

    • செப்டம்பர் 10ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது.
    • தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி நுழைவாயிலில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாணவ செயலர் பூபதிராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் , செப்டம்பர் 10 ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது, இந்தாண்டின் மையக்கருத்தாக "செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" உள்ளது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, கடன் பிரச்சனை இப்படி எண்ணற்ற காரணங்களை முன்வைத்து தற்கொலை முடிவுகளை இளைஞர்கள் எடுக்கிறார்கள், அரிது அரிது மானிடனாக பிறப்பது அரிது, இன்பம் இருக்கும் இடத்தில் துன்பங்களும் இருக்கும் .அதை ஆராயந்து வாழ வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாகாது. இப்படியான தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின் நோக்கம் ஆகும்.

    முடிந்த அளவிற்கு தனிமையில் இருந்து வெளியே வர வேண்டும். பிரச்சனைகளை மனதிற்குள் கொண்டு செல்லக்கூடாது. மாணவர்கள் பெற்றோரிடம் மனம் விட்டு பேசவேண்டும்.தற்கொலை எண்ணங்களை தடுக்கவும், தற்கொலை முயற்சி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை மீண்டும் இந்த முயற்சியில் ஈடுபடாமல் தடுத்து மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த வரம். அதை அனுபவித்து வாழ வேண்டும் என்றார்.

    மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில் ,பள்ளி கல்லூரிகளில் ஆலோசனை குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம் என்றார். பிறகு மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், அரவிந்தன் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தற்கொலை தடுப்பு ரிப்பன் அணிவிக்கப்பட்டது.தற்கொலை தடுப்பு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    வாழ்க்கை என்பது வாழ்வதற்கே, வெற்றி தோல்வி இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை என்ற உறுதிமொழியை எடுத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் 620 மாணவர்கள் எம்.பி. பி.எஸ். படித்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் தனித்தனியாக கல்வி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த கல்வி கட்டணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இதில் 4 ஆண்டுகள் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளும் பங்கேற்றனர். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வாசலில் கூடினார்கள்.

    அங்கு தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி கட்டணத்தை உடனே குறைக்க வேண்டும் என கூறி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ் அழைப்பு விடுத்தார். ஆனால், பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
    ரூ.268 கோடியில் நடந்து வரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிவடையும் என தம்பிதுரை மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.
    கரூர்:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கரூர் காந்தி கிராமம் பகுதியில் ரூ.268 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அன்பழகனுடன் சென்று நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவக்கல்லூரி கட்டிட வரைபடத்தை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கினர். தற்போது கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு கம்பிகள் கட்டும் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகுறித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் கூறியதாவது:-

    கரூரில் 800 படுக்கைகள் கொண்ட 150 மாணவ- மாணவிகள் பயிலக்கூடிய மருத்துவக்கல்லூரி கட்டுவதற்காக கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி அன்று பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்திற்குள் முடித்திட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    ரூ.60 கோடியே 23 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 20 ஆயிரம் சதுரஅடி பரப்பில் வகுப்பறை கட்டிடங்களும், ரூ.145 கோடியே 94 லட்சம் மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்களும், ரூ.61 கோடியே 83 லட்சம் மதிப்பில் மாணவ- மாணவிகள் தங்கும் விடுதிகளும் என ரூ.268 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரி நகரின் மையப்பகுதியான காந்திகிராமத்தில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. இக்கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸிவெண்ணிலா, மருத்துவ கட்டிடங்கள் செயற்பொறியாளர் மாதய்யன், உதவி செயற்பொறியாளர்கள் தவமணி, சிவக்குமார், மஹாவிஷ்ணு மற்றும் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.செல்வராஜ், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் என்.தாணேஷ், தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், கரூர் நகர வங்கி தலைவர் ரேணுகா மோகன்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக கரூர் நகராட்சி வார்டு எண் 39 மற்றும் 48-க்கு உட்பட்ட தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் முகாமில் கலந்து கொண்டனர். அப்போது அந்த பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக கொடுத்து முறையிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். 39-வது வார்டில் குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் ரூ.2 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்த முகாமில் நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×