என் மலர்
நீங்கள் தேடியது "Gujarat Poll"
- குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது.
- ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.
புதுடெல்லி:
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அந்த மாநிலத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
தனது கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் குஜராத் மக்களுக்கு தனது வேண்டுகோளையும் முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "நான் உங்கள் சகோதரன், உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இலவச மின்சாரம் தருகிறேன்; பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டுகிறேன். உங்களை அயோத்தியின் ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறேன்" என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 90 முதல் 95 தொகுதிகள் வரை கைப்பற்றுவோம். மேலும் இந்த வேகம் தொடர்ந்தால் 140 முதல் 150 தொகுதிகள் வரை வெற்றி பெறுவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியிருக்கிறார்.
கடந்த தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.
- குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை.
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை
அறிவிக்கப்பட்டாயிற்று, குஜராத் சட்டசபை தேர்தல் திருவிழா. நாளை வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது.
திரைப்படங்களுக்கு பூஜை போடுகிற நாளிலேயே படம் விலை போய்விடுகிறமாதிரி, தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டிலேயே வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
182 இடங்களை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை. இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இங்கு வெற்றி வாகை சூடி, 1995-ம் ஆண்டு தொடங்கி சுவைத்து வருகிற வெற்றிக்கனியை மீண்டும் சுவைத்துவிட பா.ஜ.க. துடிக்கிறது.
ஆட்சியை பறிகொடுத்து கால் நூற்றாண்டு கடந்து விட்டது, இந்த முறையாவது வெற்றி பெற்று, ஆட்சியைப்பிடித்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அஸ்திவாரம் போட நினைக்கிறது காங்கிரஸ்.
ஆனால் டெல்லி, பஞ்சாபில் வெற்றி பெற்று, இப்போது ஆம் ஆத்மியின் பார்வை குஜராத் பக்கம் திரும்பி இருக்கிறது. 2024 தேர்தலுக்கு பின்னர் இந்தியாவை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று கனவு வளர்த்து களத்தில் குதிக்கிறது, கெஜ்ரிவாலின் கட்சி.
மும்முனைப் போட்டி தேர்தல் களத்தில் அனல் பறக்க வைக்கும் என்பதில் சந்தேகத்துக்கு அணுவளவும் இடம் இல்லை. இந்த மோதலில் வெற்றி யாருக்கு என்பதே நாட்டின் பேசுபொருளாக மாறப்போகிறது.
"எங்கள் கட்சியே வெற்றி பெறும். இரட்டை என்ஜின் அரசு மீண்டும் அமையும். பிரதமர் மோடி தலைமையில் மாபெரும் வெற்றி பெறுவோம்" என்று தேர்தல் அறிவிப்பு வெளியான கணத்திலேயே மார் தட்டி இருக்கிறார், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா.
எந்தவொரு ஆட்சியும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறபோது, அதற்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படுவது வாடிக்கை. இப்போது அந்த வகையில் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராய் திரும்பியுள்ள பிரச்சினைகள் உண்டு.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பில்கிஸ்பானு கும்பல் கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு, மோர்பி பால விபத்து, அரசு வேலைவாய்ப்பு தேர்வு வினாத்தாள் கசிந்துவிடுவதும் தேர்வு ஒத்திவைப்பும், கடைக்கோடி பகுதிகளில் சுகாதார வசதி-அடிப்படை கல்வி வசதியின்மை, மழைவெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமை, சரியான சாலை வசதிகள் இன்மை, அதிகபட்ச மின்கட்டணம், அரசு திட்டங்களுக்கு நில எடுப்பில் அதிருப்தி... இப்படி பா.ஜ.க. அரசுக்கு எதிரான அம்சங்கள் அணிவகுக்கின்றன.
குஜராத்தை சேர்ந்தவர் நாட்டின் பிரதமர் என்ற 'டிரம்ப் கார்டு' கை கொடுக்கும், மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசு என்னும் பிரசாரம் வெற்றிதரும் என்று முழுமையாய் நம்புகிறது பா.ஜ.க.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் காங்கிரசின் கனவுக்கு காரணங்கள் உண்டு.
காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் விடுவிப்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக அரை நூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்பு, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்குவங்கி, 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வாக்குறுதி போன்றவை இந்த முறை கண்டிப்பாய் கைகொடுக்கும், வெற்றி தேடித்தரும் என்பது காங்கிரசின் நம்பிக்கை.
ஆனால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை; சோனியா-ராகுல் பிரசாரம் செய்வார்களா என்பது கேள்விக்குறி; முன்னிலைப்படுத்துவதற்கு கட்சியில் எழுச்சிமிக்க தலைவர்கள் குஜராத்தில் இல்லை என்பதெல்லாம் பின்னடைவுகள்.
பா.ஜ.க., காங்கிரசுடன் மல்லு கட்டப்போகிறது, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. இந்தக் கட்சிக்கும் ஆட்சியை கைப்பற்றிவிடும் ஆசை இருக்கிறது. நாங்கள் மாறுபட்ட சக்தி என்னும் பிரசாரம், இலவச மின்சாரம்... வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்... 18 வயதான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என வாக்குறுதிகள் கைகொடுக்கும் என்று ஆம் ஆத்மி நம்புகிறது. இலவச வாக்குறுதிகளை குஜராத் மக்கள் வரவேற்பார்களா, மாட்டார்களா என்பது பட்டிமன்ற விவாதப்பொருள்.
ஆனால் பிரதமர் மோடி தேர்தல் இலவசங்களுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பும்போது, மக்களிடம் இந்த இலவச வாக்குறுதிகள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மறுக்கவும் முடியாது. பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களிடம் இது வரவேற்பை பெற்று ஓட்டு வங்கியாக மாறுமா என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அம்சங்கள்.
அதே நேரத்தில் குஜராத் மாநில அரசியலில் ஆம் ஆத்மி கத்துக்குட்டி, குஜராத்தில் ஆம் ஆத்மியில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை, ஓட்டு வங்கி பெயருக்குகூட இல்லை என்பது பாதகமான அம்சங்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டு தோல்வி அடைந்தால், அது ஆம் ஆத்மி இனி எடுக்கும் சோதனை முயற்சிகளுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தி விடும் வாய்ப்பும் இருக்கிறது.
வெற்றி யாருக்கு?
மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை என்ஜின் என்கிற பா.ஜ.க. வாதம், அந்தக்கட்சியின் வெற்றிக்கு அஸ்திவாரம். கட்சிக்கு தலித் தலைமை, வேலை வாய்ப்பு வாக்குறுதிகள், ஆட்சியைப் பறிகொடுத்து கால் நூற்றாண்டு என்ற அனுதாப அலை ஆகியவை காங்கிரசின் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையலாம். ஆம் ஆத்மி மாற்றத்துக்கான அரசியல் என்ற வாதம் அதன் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.
கடைசி நேர மாற்றங்கள், அதிரடிகள், பிரசாரங்கள் என்ன விதமான அலையை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது.
டிசம்பர் 8 தான் வெற்றியை தீர்மானிக்கும். ஆமாம். அன்றுதான் ஓட்டு எண்ணிக்கை.
- குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது
- தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார். இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி சார்பில் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
- குஜராத் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.
- தேர்தல் தேதியை அறிவித்தவுடன் அரசியல் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5-ம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்ததும் அரசியல் கட்சியினர் உற்சாகமடைந்து உள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரி வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி சார்பில் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநில தேர்தலில் போட்டியிடும் 43 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்பது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் மாநிலத்தில் அடுத்த அரசை ஆம் ஆத்மி கட்சி அமைக்கும்.
- தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க.வையும் பின்னுக்கு தள்ளி விடுவோம்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
டிசம்பர் 1, 5-ந் தேதிகளில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி உள்ளது.
இங்கு 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றி பெற துடிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது.
இந்த நிலையில், புதிதாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி கட்சியையும் இந்த தேர்தல் களத்தில் இறக்குகிறார். எனவே இப்போதே தேர்தல் களத்தில் சூடு பறக்கத்தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் டெல்லி முதல்-மந்திரி ஆக்குவதாகக்கூறி மணிஷ் சிசோடியாவிடம் பா.ஜ.க. பேரம் பேசியது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இந்த நிலையில், அந்தக் கட்சியினர் இப்போது என்னை நாடினார்கள். குஜராத் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாமல் விலகிக்கொண்டால், நாங்கள் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகிய இருவரையும் விட்டு விடுகிறோம். அவர்கள் மீதான எல்லா வழக்குகளையும் கைவிட்டு விடுகிறோம் என பேரம் பேசினார்கள்.
யார் இந்த பேரத்தை பேசியது என கேட்கிறீர்கள். எனக்கு சொந்தமான ஒருவரின் பெயரையே.... நான் எப்படி சொல்ல முடியும்? அவர்கள் மூலமாகவே பேரம் வந்தது... பாருங்கள்... அவர்கள் நேரடியாக என்னை அணுகவில்லை. அவர்கள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு, இன்னொருவருக்கு, இன்னொருவருக்கு என வந்து கடைசியில் ஒரு நண்பர் வழியாக வந்தார்கள். பின்னர் செய்தி உங்களுக்கு வந்தடைகிறது.
குஜராத் சட்டசபை தேர்தலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் தோற்றுவிடுவோம் என்று பா.ஜ.க.வுக்கு பயம் வந்து விட்டது. எங்கள் கட்சியைத் தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளனர்.
மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் என எங்கள் கட்சித்தலைவர்கள் இருவர் மீதும் போடப்பட்ட வழக்குகள், ஜோடிக்கப்பட்ட வழக்குகள் ஆகும்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த அரசை ஆம் ஆத்மி கட்சி அமைக்கும். எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும்.
எங்கள் கட்சி ஏற்கனவே 2-வது கட்சியாக முன்னிலை பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க.வையும் பின்னுக்கு தள்ளி விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மிக அதிகளவில் இடங்களை பிடிப்போம்.
- அதிக ஓட்டுகள் வாங்குவோம்.
ஆமதாபாத் :
குஜராத் சட்டசபை தேர்தலில் சனந்த் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கனுபாய் படேல் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த தொகுதி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் காந்திநகர் மக்களவை தொகுதியில் அடங்கியது. எனவே மனுதாக்கலின்போது அவரும் கலந்து கொண்டார்.
அப்போது அமித்ஷா கூறும்போது, "குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதற்கு முந்தைய சாதனைகளை முறியடிக்கும். இங்கு மீண்டும் பலத்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். மிக அதிகளவில் இடங்களை பிடிப்போம். அதிக ஓட்டுகள் வாங்குவோம்" என கூறினார்.
- ஆளும் பா.ஜ.க. மட்டுமே அனைத்து இடங்களிலும் நிற்கிறது.
- பதிவாகிற வாக்குகள், டிசம்பர் 8-ந்தேதி எண்ணப்படுகின்றன.
ஆமதாபாத் :
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிற இந்த மாநிலத்தில், இம்முறை ஆளும் பா.ஜ.க., காங்கிரசுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் போட்டியையும் எதிர்கொள்கிறது.
மும்முனைப் போட்டி நடைபெறுகிற தேர்தலில் பிரசார களத்தில் சூடேறி வருகிறது.
முதல் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. இரண்டாவது கட்ட தேர்தல் 93 இடங்களில் டிசம்பர் 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல், பரிசீலனை, திரும்பப்பெறல் யாவும் முடிந்துள்ளன.
இந்த நிலையில், அங்கு 1,621 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
முதல் கட்ட தேர்தலை 788 வேட்பாளர்களும், இரண்டாவது கட்ட தேர்தலை 833 வேட்பாளர்களும் சந்திக்கின்றனர்.
ஆளும் பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் (182) வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 3 இடங்களை கூட்டணிக்கட்சியான சரத் பவாரின் தேசியவாதக்காங்கிரசுக்கு ஒதுக்கித்தந்து விட்டு எஞ்சிய 179 இடங்களிலும் வேட்பாளர்களை போட்டியிடச்செய்துள்ளது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கோப்சிங் லாவர், தேவ்காத் பரியா தொகுதியில் தனது வேட்புமனுவைத் திரும்பப்பெற்றுள்ளார். எனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 182 இடங்களிலும் போட்டி போடுவதாக அறிவித்தது. ஆனால் அதன் வேட்பாளர் சூரத் கிழக்கு தொகுதியில் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், அந்தக் கட்சி 181 தொகுதிகளில் மட்டுமே களம் காண்கிறது.
ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் அதன் வேட்பாளர் பாபுநகர் தொகுதியில் வேட்பு மனுவை திரும்பப்பெற்று விட்டதால் 13 இடங்களில் மட்டுமே அக்கட்சி களத்தில் உள்ளது.
இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 765 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் (2 கோடியே 37 லட்சத்து 51 ஆயிரத்து 738), ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். 2 கோடியே 53 லட்சத்து 36 ஆயிரத்து 610 ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர் 1,417 பேர் இந்த மாநிலத்தில் வாக்காளர்களாக உள்ளனர்.
இந்த தேர்தலில் பதிவாகிற வாக்குகள், டிசம்பர் 8-ந் தேதி எண்ணப்படுகின்றன. அதே நாளில் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
- டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
- பிரதமர் மோடியும், தலைவர்களும் தீவிர ஓட்டு வேட்டையாடினர்.
காந்திநகர் :
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களம், களை கட்டி வருகிறது.
அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ந் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.
வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், குஜராத் கலவர வழக்கு குற்றவாளி மனோஜ் குக்ரானியின் மகள் பயல் குக்ரானி நரோடா தொகுதியிலும் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 4 பழங்குடியினர் தொகுதிகளில் காங்கிரஸ் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆம் ஆத்மியும் 3 பழங்குடியினர் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை போட்டியிடச் செய்துள்ளது.
89 தொகுதிகளில் 1-ந் தேதி நடக்கிற முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்களில் 167 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 பேர் மீது கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஏ.டி.ஆர். என்னும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 88 இடங்களில் போட்டியில் உள்ளது. இந்த 88 வேட்பாளர்களில் 36 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அந்த வேட்பாளர்களில் 35 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.
89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள பா.ஜ.க.வில், 16 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
முதல் கட்ட தேர்தலில் வைர நகரம் என்று அழைக்கப்படுகிற தொழில் நகரான சூரத் முக்கிய இடம் பிடிக்கிறது. இங்கிருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்கிறார்கள்.
முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற இந்த சூரத்தில் நேற்று பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். அவர் சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார். அதைத் தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் அவர் பாரூச் மாவட்டத்தில் உள்ள நேட்ராங்க், கெடா மாவட்டத்தின் மெகமதாபாத் ஆகிய நகரங்களிலும் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
கெடா மாவட்டத்தில் மெகமதாபாத்தில் அவர் பேசும்போது, "ஜனநாயகம் வலிமை பெற அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்கு அளிக்க வேண்டும். ஜனநாயகம் வலுவானால், நாம் அனைவரும் வலிமை பெற முடியும்" என தெரிவித்தார்.
பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்துகிற நர்மதா மாவட்டத்தின் டெடியாபடா நகரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கார்கே நேற்று ஓட்டு வேட்டையாடினார். அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர் பிரதமர் மோடியையும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சாடினார். அப்போது அவர், "பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காங்கிரஸ் 70 வருடங்களில் என்ன செய்தது என கேட்கிறார்கள். நாங்கள் எதுவுமே செய்யவில்லையென்றால் ஜனநாயகமே கிடைத்திருக்காது. நீங்கள் உங்களை ஏழை என்கிறீர்கள். நானும் ஏழைதான். ஏழையிலும் பரம ஏழை" என குறிப்பிட்டார்.
காங்கிரசுக்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
அவர் அங்கு ஜவுளித்தொழில் அதிபர்கள் மற்றும் ரத்தினக்கல் கைவினைஞர்களுடன் டவுன்ஹால் சந்திப்புகளை நடத்தி தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார்.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் நாளை (29-ந் தேதி) மாலை தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க. ஆதரவாளர்களே பெருமளவில் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடப்போகிறார்கள்.
- சாதாரண மனிதர்கள் பயப்படுகிறார்கள்.
ஆமதாபாத் :
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்களில் எனது கணிப்புகள் பலித்துள்ளன.
உங்கள் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கணித்துக்கூறுகிறேன். குறித்துக்கொள்ளுங்கள். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எனது கணிப்பு குஜராத்திலும் நன்றாகவே பலிக்கும்.
27 ஆண்டு கால தவறான ஆட்சிக்குப்பின், குஜராத் இந்த மனிதர்களிடம் இருந்து (பா.ஜ.க.) விடுபடப்போகிறது.
(குஜராத் தேர்தல் பற்றிய தனது கணிப்பை கெஜ்ரிவால் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி நிருபர்களிடம் காட்டினார்.)
பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ள அரசு ஊழியர்கள், எங்கள் கட்சி ஆட்சி அமைக்க உதவுங்கள்.
ஜனவரி 31-ந் தேதிக்குள் குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் அறிவிக்கையை நாங்கள் வெளியிடுவோம். நான் சும்மா சொல்லவில்லை. பஞ்சாப்பில் நாங்கள் அப்படி அறிவிக்கை வெளியிட்டுள்ளோம்.
பிற ஒப்பந்த பணியாளர்கள், போலீசார், மாநில போக்குவரத்து ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு தர ஊதியம், பணி நிரந்தரம், சம்பள உயர்வு, இட மாறுதல் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
நாங்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்பதை அவர்களுக்கு உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.
ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு அரசு ஊழியர்கள் ஆதரவு முக்கியம். எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது தபால் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு போடுங்கள்.
27 ஆண்டுகளில் இப்போதுதான் பா.ஜ.க. முதல் முறையாக கொந்தளித்துப்போய் இருக்கிறது. நீங்கள் தெருவில் இறங்கி மக்களிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடப்போகிறீர்கள் என கேளுங்கள். அவர்கள் ஆம் ஆத்மிக்கு அல்லது பா.ஜ.க.வுக்கு என்று சொல்வார்கள். பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுவதாக சொல்கிறவர்கள் 5 நிமிடங்கள் கழித்து தாங்கள் துடைப்பத்துக்கு (ஆம் ஆத்மி தேர்தல் சின்னம்) ஓட்டு போடுவோம் என்று வெளிப்படுத்துவார்கள்.
நாங்கள் பல மாநிலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம். ஆனால் குஜராத்தில்தான் முதல்முறையாக மக்கள் யாருக்கு வாக்கு அளிக்கப்போகிறோம் என கூறுவதற்கு பயப்படுகிறார்கள். சாதாரண மனிதர்கள் பயப்படுகிறார்கள். காங்கிரசுக்கு ஓட்டு போடும் வாக்காளர்களை எங்கும் காண முடியவில்லை. பா.ஜ.க. ஆதரவாளர்களே பெருமளவில் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடப்போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- பதிவான வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
அகமதாபாத் :
182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.
19 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 8 மணி முதலே பரவலாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
அப்போது 59.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.
ஆனால் 5 மணிக்கு முன்னரே வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் வாக்குப்பதிவு மேலும் அதிகரித்தது.
இதன்மூலம் மொத்தம் 63.14 சதவீத வாக்குகள் இறுதியில் பதிவாகி இருந்தது. இறுதி நிலவரத்தை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
இந்த தொகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் அதிகபட்சமாக நர்மதா மாவட்டத்தில் 78.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. பழங்குடியினர் அதிகம் வாழும் இந்த மாவட்டத்தில் வாக்களிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.
பழங்குடியினரின் ஆதிக்கம் மிகுந்த மற்றொரு மாவட்டமான தபி மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் முறையே 76.91 மற்றும் 71.06 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு இருக்கிறது.
மாநிலத்தில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி (நாளை மறுதினம்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பின்னர் 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
- குஜராத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
- தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை.
அகமதாபாத் :
குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த தேர்தல் முடிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜக்திஷ் தகோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உள்பட எல்லாவற்றையும் காங்கிரஸ் சரியாகச் செய்திருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லை என தெரிகிறது' என தெரிவித்தார்.
குஜராத்தில் புதிய அரசை அமைப்பதற்காக பிரதமர் மோடி மற்றும் மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீலுக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு புதிய அரசு தீர்வு காணும் என நம்புவதாகவும் கூறினார்.
இதற்கிடையே குஜராத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ரகு சர்மா ராஜினாமா செய்து உள்ளார்.
- குஜராத்தில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
- பிரதமர் மோடி பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
புதுடெல்லி :
குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை பிடித்து, குஜராத் மாநிலம் பா.ஜனதாவின் கோட்டை என நிரூபித்து இருக்கிறது. இந்த வெற்றியை நாடு முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று டெல்லியில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பா.ஜனதாவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
குஜராத்தில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதும், பா.ஜனதா மீது மக்கள் தொடர்ந்து பொழிந்து வரும் அன்பின் காரணமாக மாநிலத்தில் அனைத்து சாதனைகளும் முறியடித்து வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.
குடும்ப ஆட்சி மற்றும் அதிகரிக்கும் ஊழல் மீதான மக்களின் கோபத்தையே இந்த வெற்றி காட்டுகிறது.
ஏழை, நடுத்தர மக்களுக்கு அனைத்து வசதிகளையும் விரைவாக எடுத்துச்சென்றதால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து உள்ளனர்.
இமாசல பிரதேசத்திலும் பா.ஜனதாவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அங்கு வெற்றி பெற்றுள்ள கட்சியை விட ஒரு சதவீத வாக்குகளே நமக்கு குறைந்திருக்கிறது.
மக்களுக்கு தலை வணங்குகிறேன். அவர்களின் ஆசீர்வாதம் மகத்தானது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.