என் மலர்
நீங்கள் தேடியது "Honor Killing"
- ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்றுங்கள்.
- தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அதை மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.
அண்ணல் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளான இன்று சமத்துவ நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கலந்துகொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய பிரகாஷ் அம்பேத்கர், "ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்றுங்கள். தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அதை மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.
நாடு முழுவதும் சாதி ரீதியாக ஆணவக் கொலை நடக்கிறது; பல உயிர்களை இழந்துள்ளோம்; அனைத்து சமூகமும் ஆணவக் கொலையை தவறாகக் கருதாதது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்தார்.
- கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் வித்யா (வயது 22). இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 30-ந்தேதி வீட்டில் உள்ள பீரோ சரிந்து விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வித்யா பிணமாக கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.
இந்த நிலையில் வித்யாவின் காதலன் திருப்பூரை சேர்ந்த வெண்மணி (22), காதலி மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காம நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வித்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. வேறு சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான வெண்மணியை, வித்யா காதலித்து வந்ததால் அவரது சகோதரர் சரவணகுமார்(24) தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சரவணகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது தங்கை வித்யா கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அந்த கல்லூரியில் படிக்கும் திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இது எங்களுக்கு தெரியவரவே நாங்கள் வித்யாவை கண்டித்தோம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினோம்.
இருப்பினும் காதலை கைவிடாமல் வெண்மணியுடன் பேசி வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே வெண்மணியின் வீட்டினர் எனது தங்கையை பெண் கேட்டு எங்களது வீட்டிற்கு வந்தனர். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வது பற்றி பேசிக்கொள்வோம் என்று எச்சரித்து அனுப்பினோம். இந்த சம்பவத்திற்கு பிறகு வித்யாவை கடுமையாக எச்சரித்தேன். ஒழுங்காக படிக்க வேண்டுமென்றால் கல்லூரிக்கு செல்... இல்லையென்றால் வீட்டிலேயே இருக்குமாறு மிகவும் கண்டிப்புடன் கூறினேன்.
இதனால் கடந்த 2 மாதங்களாக என்னிடம் எனது தங்கை பேசாமல் இருந்து வந்தார். கடந்த 30-ந்தேதி எனது பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டனர். வித்யா மட்டும் தனியாக இருந்தார். அவருடன் பேச முயற்சித்த போது அவள் பேசமறுத்து விட்டாள். இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வித்யாவின் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாள். சிறிது நேரத்தில் இறந்து விட்டாள். இதனால் என்னசெய்தென்று தெரியாமல் தவித்தேன்.
கொலையை மறைக்க வீட்டில் இருந்த பீரோவை இறந்து கிடந்த வித்யா உடலின் மீது தள்ளி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தேன்.அவர்களிடம் வித்யா மீது பீரோ சரிந்து விழுந்ததில் இறந்து விட்டாள் என்று நாடகமாடினேன். வெளியில் சென்றிருந்த எனது பெற்றோரும் வந்தனர். அவர்களிடம் நடந்த விவரத்தை கூறினேன்.
பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் மயானத்தில் உடலை புதைத்து விட்டோம். இனிமேல் யாருக்கும் சந்தேகம் வராது என்று எண்ணியிருந்தேன். இந்த நிலையில் போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து வித்யாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் பிரச்சினையில் தங்கையை கொன்று சகோதரர் நாடக மாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 30-ந் தேதி தூங்கி கொண்டிருந்த வித்யா என்ற பெண் தலையில் பீரோ விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். அதில் இருந்த மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்ததில் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து போலீசாருக்கு எந்த தகவலும் அளிக்காமல் அந்த பெண்ணை உறவினர்களே அடக்கம் செய்துள்ளனர்.
முன்னதாக மரணமடைந்த வித்யா என்ற பெண்ணும் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர் பெண் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வெவ்வேறு ஜாதி காரணங்களாலோ, அல்லது தனிப்பட்ட காரணங்களாலோ திருமணம் முடித்து கொடுக்க பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பெண் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. அந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்த நிலையில் காதலி பலியானதால் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணியில் காவல் துறை ஈடுப்பட்டுள்ளது. மேலும் ஆணவக்கொலையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இவர்களின் காதல் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.
- ஜெகனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.
இந்த நிலையில் இன்று மதியம் கே.ஆர்.பி. அணை அருகே ஜெகன் பைக்கில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. ஜெகனின் உறவினர்கள் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆணவக் கொலையில் தொடர்புடைய பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பெண்ணின் தந்தை சங்கர், கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்போது, தனது மகளுக்கு வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்த நிலையில், தன் மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் ஜெகனை கொன்றதாக நீதிபதி முன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- காதல் விவகாரத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
- மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்துவிட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஜெகன் இருசக்கர வாகனத்தில் தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் டேம் ரோடு மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோடு சென்றபோது மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் 3 பேர் அரிவாளால் ஜெகனை வெட்டி சாய்த்தனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இந்த கொலை குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சங்கர் (45) நேற்று இரவு கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இது தொடர்பாக போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். கைதான அவரை நேற்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தலைமறைவான உறவினர்கள் 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையடுத்து மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்துவிட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். அதனால் கொலை குறித்த தகவல்களை சேகரிக்க அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். அதற்காக இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர்.
- கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார்.
- போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு கவனா(20) உள்பட 2 மகள்கள் உள்ளனர்.
கவனா தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தார். மஞ்சுநாத்தின் 2-வது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத் தனது மகளை கண்டித்துள்ளார். எனினும் தந்தையின் பேச்சை கேட்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி 2-வது மகள் தனது காதலனுடன் மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் அவரை, போலீசார் மகளிர் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரத்தில் தங்கைக்கு கவனா உதவி செய்திருக்கலாம் என்று மஞ்சுநாத் சந்தேகித்தார். மேலும் அவர் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இதற்கிடையே மூத்த மகள் கவனா தான் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு மஞ்சுநாத் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே உனது தங்கை வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து ஓடியுள்ளார். எனவே நீயும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை காதலிப்பதை நிறுத்தி விடு கவனாவிடம் தந்தை மஞ்சுநாத் கூறினார்.
இருப்பினும் கவனா தனது காதலை கைவிடாமல் இருந்து வந்தார். இது மஞ்சுநாத்திற்கு தெரிந்தது.
இதுதொடர்பாக அவர் தனது மகளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மகளை கடுமையாக திட்டியதுடன், இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கவனா மயங்கி விழுந்தார்.
அப்போது கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கவனா துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து மஞ்சுநாத், விஸ்வநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். மேலும் தனது மகளை ஆணவக்கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
உடனே போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் கவனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கவனா, வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் அவரை மஞ்சுநாத் கொலை செய்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 4 மாதங்களாக பிரவீன் எங்கு செல்கிறார்? என்பதை தினேசும் அவரது நண்பர்களும நோட்டமிட்டனர்.
- பள்ளிக்கரணையில் நடந்துள்ள இந்த ஆணவக்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேளச்சேரி:
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரவீன். 26 வயது வாலிபரான இவர் ஜல்லடியான்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஷர்மியும், பிரவீனை விரும்பினார்.
இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதனால் இளம்பெண்ணின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஷர்மியின் அண்ணன் தினேஷ், பிரவீனின் சாதியை சுட்டிக்காட்டி, நீ அவனை திருமணம் செய்யக்கூடாது என்று தங்கையை எச்சரித்து உள்ளார்.
வாலிபர் பிரவீனை மறந்து விடு, உனக்கு நமது சாதியிலேயே நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று வீட்டில் கூறி வந்துள்ளனர். ஆனால் ஷர்மி இதனை ஏற்க மறுத்துள்ளார்.
இருப்பினும் மனதை மாற்றி எப்படியாவது பிரவீனிடம் இருந்து ஷர்மியை பிரித்துவிட வேண்டும் என்பதில் அண்ணன் தினேசும் அவரது குடும்பத்தினரும் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர்.
ஆனால் ஷர்மியோ தனது பெற்றோரின் பேச்சை கேட்காமல் பிரவீனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உள்ளனர். இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரவீன், ஷர்மியை அழைத்துச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஷர்மியின் குடும்பத்தினருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்து முடிந்து உள்ளது. இதனால் பிரவீன், ஷர்மியின் அண்ணன் தினேஷ் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக தனது நண்பர்களிடம் சொல்லி, தினேஷ் வருத்தப்பட்டு உள்ளார். எனது தங்கையை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டதால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என்று கூறி அவர் ஆதங்கப்பட்டு வந்துள்ளார்.
இதை தொடர்ந்து பிரவீனை கொலை செய்ய தினேஷ் திட்டம் போட்டார். கடந்த 4 மாதங்களாக பிரவீன் எங்கு செல்கிறார்? என்பதை தினேசும் அவரது நண்பர்களும நோட்டமிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு பிரவீன் பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தினேசும் அவரது நண்பர்கள் 3 பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பிரவீனை சுற்றி வளைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் அவர்களின் பிடியில் இருந்து தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் 4 பேரும் நவீனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. அலறி துடித்தபடியே பிரவீன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிச்சென்று பிரவீனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரவீன் உயிரிழந்தார்.
நேற்று இரவு 9 மணி அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்த நேரத்திலேயே நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரவீனை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணையில் நடந்துள்ள இந்த ஆணவக்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட வாலிபரும், கொலை செய்த வாலிபர்களும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
- குடும்பத்தின் எதிர்பை மீறி நாகமணி - ஸ்ரீகாந்த் திருமணம் நடந்துள்ளது.
- பலத்த காயமடைந்த நாகமணி இரத்த வெள்ளத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தெலுங்கானாவில் சாதி மாறி திருமணம் செய்த இளம் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் அண்ணனால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், இப்ராஹிம்பட்டினம் மண்டலம், ராய்போல் கிராமத்தை நாகமணி. ஹயத்நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் நாகமணி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தான் காதலித்து வந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். குடும்பத்தின் எதிர்பை மீறி நாகமணி - ஸ்ரீகாந்த் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் போலீஸ் கூற்றுப்படி, ராயபோலில் இருந்து மன்னேகுடா நோக்கி இன்று காலை ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த நாகமணி மீது கார் ஒன்று வேண்டுமென்றே மோதியுள்ளது.
ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி விழுந்த நாகமணியை காரில் இருந்து இறங்கிய அண்ணன் பரமேஷ் கத்தியால் அவரது கழுத்து மற்றும் பிற இடங்களில் அறுத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த நாகமணி இரத்த வெள்ளத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகமணியின் உடலை கைப்பற்றினர். நாகமணி காதல் திருமணத்தால் கோபமடைந்த அவரது அண்ணன் பரமேஷ் இந்த ஆணவக் கொலையை செய்துள்ளதாக போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.
வழக்குப்பதிவு விசாரணை நடத்திவரும் போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர். கொலைக்கு சொத்து தகராறு காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காததால்தான் நாகமணி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் ஸ்ரீகாந்த்தும் தெரிவித்துள்ளார்.