என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur Riot"

    • சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.
    • இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும்

    மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் உள்ள லான்வா டிடி பிளாக் நிவாரண முகாமுக்குள் 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை 6:30 மணியளவில் காணாமல் போனாள். நேற்று நள்ளிரவு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

    சிறுமி காணாமல் போனதும், அவளது பெற்றோரும், முகாமில் வசிப்பவர்களும் தீவிர தேடுதலைத் தொடங்கினர். தொடர்ந்து நிவாரண முகாமின் வளாகத்திற்குள் காயங்களுடன் கிடந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் சிறுமி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    2023 முதல் மணிப்பூரில் இரண்டு சமூகளுக்கிடையே நடந்து வரும் கலவரத்தில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த வருட இறுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கலவரம் தீவிரமடைந்தது.  கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    சிறுமியின் மரணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பைரன் சிங், இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் குற்றவாளிகள் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • மணிப்பூரில் 5,751 தேர்வர்கள் பங்கேற்கின்றனர்.
    • கலவரம் எதிரொலியாக நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இம்பால்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.

    கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, புகலிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பதற்ற சூழலால் அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும் இணையதள சேவையை முடக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், மத்திய கல்வி இணை மந்திரி டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில் மாணவர்களால் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில், பிராட்பேண்ட் மற்றும் இணையதள இணைப்பு பிரச்சனை ஏற்படும். அதனால், தேசிய தேர்வு முகமையிடம் (என்.டி.ஏ.) தேர்வு தேதியை மாற்றி அறிவிக்கவோ அல்லது தள்ளி வைக்கவோ செய்யும்படி கேட்டுக்கொண்டேன். இதன்படி தேர்வு தள்ளி வைப்பு பற்றிய அறிக்கையை என்.டி.ஏ. வெளியிட்டு உள்ளது. 5,751 தேர்வர்கள் மணிப்பூரின் 2 மையங்களில் தேர்வு எழுத இருந்தனர். தேர்வுக்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • ஆயுதங்களுடன் வந்த கும்பல் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு
    • முதலில் கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்திய வீரர்கள் பின்னர் எதிர்தாக்குதல்

    மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் உள்ள காங்காபோக் என்ற இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஆயுதங்களை கடத்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. அப்போது பாதுகாப்பு வீரர்களுக்கும், அந்த கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர். ஆனால், ஆயுதம் வைத்திருந்த அந்த கும்பல் வீரர்களை நோக்கி சுடத்தொடங்கினர்.

    இதனால் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் கொள்ளையடிக்க வந்த கும்பலில் 27 வயது நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அதேவேளையில் அசாம் ரைபிள் வீரர் ஒருவரும் குண்டு காயத்திற்கு உள்ளானார்.

    அந்த கும்பல் மற்ற பகுதிகளில் இருந்து வீரர்களை உள்ளே விரமுடியாத அளவிற்கு சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தியிருந்தனர். இருந்தாலும் வீரர்கள் அந்த இடத்திற்கு சென்று ஆயுத கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.

    அந்த கும்பல் அசாம் ரைபிள் வீரர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வாகனத்தையும் தீ வைத்து எரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்தவர் பெயர் ரொனால்டோ எனவும், மேலும் 10 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மே மாதம் 3-ந்தேதியில் இருந்து இரு பிரிவனருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த வன்முறையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாமலில் தஞ்சம் அடைந்த நிலையில் உள்ளனர்.

    • ஆயுத கடத்தல் முயற்சி தோல்வியால் வீடுகளுக்கு தீ வைப்பு
    • பதுங்கு குழி உள்ளிட்டவைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்

    மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் திடீரென கும்பலாக சென்று தாக்குதல் நடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

    நேற்று தவுபால் மாவட்டத்தில் ராணுவ முகாமில் புகுந்து ஆயுதங்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயற்சி செய்தது. இதை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சண்டையில் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அசாம் ரைபிள் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

    ஆயுத கடத்தல் தோல்வியடைந்ததை அடுத்து, அந்த கும்பல் இந்திய ராணுவ வீரர்கள் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். மேலும், இம்பால் மேற்கு மற்றும் சுரசந்த்புரில் உள்ள பதுங்கு குழிகளையும் அழித்துள்ளனர்.

    இம்பால் மேற்கு மற்றும் கங்போக்பி மாவட்ட எல்லையில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு சார்பில் நாங்கள் விவாதத்திற்கு தயார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
    • எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசவேண்டும் என வலியுறுத்துகிறது

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை பற்றி எரிகிறது. இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் குறித்து மவுனம் காத்து வந்தார். நேற்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய தினம், மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லும் வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேவேளையில் நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் அவையை நடத்தவிடாமல் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர்.

    எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் பாராளுமன்றம் 2-வது நாளாக முடங்கியுள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசு சொல்வது என்ன?. எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன? என்பதை பார்ப்போம்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

    நான் மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால், எனக்கு வாய்ப்பு வழங்கப்படவிலலை. இந்த விவகாரம் குறித்து அரசு விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச வேண்டும். பாராளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் மோடி பேசுகிறார். அவர் பாராளுமன்றத்தில் பேச வேண்டும்.

    உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத்

    இது மிகவும் முக்கியமான விசயம். மணிப்பூர் வன்முறை பற்றி சர்வதேச அமைப்பில் பேச வேண்டும். நமது பாராளுமன்றத்தில் இல்லை. ஏன் நீங்கள் (மத்திய அரசு) மணிப்பூர் சட்டம்-ஒழுங்கை பற்றி பேசவில்லை. நிர்பயா விவகாரத்தில், பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்த போது அரசை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனால் தற்போது இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா

    மணிப்பூர் வன்முறை நமது ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. மத்திய அரசு தூக்கத்தில் இருந்து எழுந்து, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். மணிப்பூரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய ஒட்டு மொத்த மக்களும் விரும்புகிறார்கள். மணிப்பூர் அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என விரும்புகிறோம்.

    காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி

    இந்த நேரத்தில் இதை வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிடுவதைவிட துரதிர்ஷ்டவசமானது வேறு எதுவும் இருக்க முடியாது. அதுவும் கடந்த 77-478 நாட்களாக மணிப்பூரில் அராஜக சூழ்நிலை நிலவுகிறது. அரசு மற்றும் நிர்வாகம் அங்கு சீர்குலைந்துள்ளது என்பதை சொல்வது தவறாக இருக்க முடியாது. மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் பேசுவது அவரது வேலை இல்லையா?. அதனால் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.

    எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி

    சபாநாயகர் எப்போது உத்தரவு பிறப்பித்தாலும், விவாதிக்க தயாராக இருக்கிறோம். சபாநாயகர் மற்றும் மாநிலங்களை தலைவரிடம் நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் புதிய கோரிக்கைகளை வைப்பது, விவாதங்களை தடுப்பது தவறு

    பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்

    மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துவது பற்றி எதிர்க்கட்சிகள் முக்கியமானதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அரசு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புகிறது. இந்த விவகாரத்தால் நாடே வெட்டுகப்படுகிறது. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றால், அவர்கள் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

    மத்திய மந்திரி அனுராக் தாகூர்

    விவாதங்களைத் தவிர்க்கவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவும் எதிர்க்கட்சிகள் சில அல்லது வேறு சாக்கு போக்குகளை கூறுகின்றன. பாராளுமன்றத்தில் இருந்து சிலர் வெளியேறுகின்றனர். பாராளுமன்றம் நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. பாராளுமன்ற விவாதத்தில் இருந்து அவர்கள் ஏன் ஓட வேண்டும்?. அவர்களுடைய அரசியல்வாதிகள் நீண்ட நாட்கள் பாராளுமன்றத்தில் சேவை ஆற்ற முடியாது என்பதாலா? அல்லது அவர்களுடைய அரசின் ஓட்டைகள் வெளிப்படும் என்பதாலா?.

    பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா

    காங்கிரஸ் கட்சி ஜனநாயத்தில் பாராளுமன்றம் அல்லது சட்டசபையில் விவாதம் நடத்த விரும்பாது. காங்கிரஸ் அதிகாரத்திற்கும் வரும்போதெல்லாம், ஜனநாயகத்தை நசுக்க முயற்சிக்கும். கர்நாடகாவில் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, சகோதரனையும் அந்த கும்பல் கொலை செய்துள்ளது
    • வீடுகள் எரிக்கப்பட்டு கிராமமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது

    மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் எம்.டி. டி.வி.க்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அதில் எனது கணவர் மற்றும் இளைய மகனையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டனர். தற்போது உதவியற்றவளாக நிற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    பேச்சு வராத நிலையில், ஆங்கில செய்தி சேனலுக்கு கண்ணீருடன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய மகளை நிர்வாணமாக்கி ஊர்வலாக அழைத்துச் செல்வதற்கு முன், என்னுடைய கணவர் மற்றும் இளைய மகனை அந்த கும்பல் கொலை செய்தது. ஒட்டுமொத்தமாக என்னுடைய நம்பிக்கையாக இருந்த எனது இளைய மகனை இழந்து விட்டேன். அவன் 12 ஆம் வகுப்பை முடித்தவுடன், கஷ்டப்பட்டாவது அவனை மேற்கொண்டு நல்லபடியாக படிக்க வைக்க நினைத்தேன். தற்போது அவனுடைய தந்தையும் இல்லை. என்னுடைய மூத்த மகனுக்கு வேலை இல்லை. ஆகவே, என்னுடைய குடும்பம் பற்றி நினைக்கும்போது, எந்த நம்பிக்கையும் இல்லாததுபோன்று உணர்கிறேன். நான் நம்பிக்கையற்றவளாக, உதவியற்றவளாக உணர்கிறேன் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

    என்னுடைய கிராமத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்த எண்ணம் எனது மனதில் தோன்றவில்லை. திரும்பி செல்ல விரும்பவில்லை. எங்களுடைய வீடு எரிக்கப்பட்டுள்ளது. வயல்வெளி அழிக்கப்பட்டுள்ளது. நான் எதற்காக திரும்பிச் செல்வேன். எனது கிராமம் சூறையாடப்பட்டு விட்டது. என்னுடைய மற்றும் என்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால், அங்கு திரும்பி செல்ல முடியாது.

    அரசை நினைக்கும்போது கோபமாக வருகிறது. எனது கணவர் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவளுக்கு எதிராக அவகரமான செயலை செய்துள்ளனர். நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். மணிப்பூர் அரசு எதுவும் செய்யவில்லை. இந்தியாவின் தாய், தந்தையர்களே, நாங்கள் அனைத்தையும் இழந்து, ஒரு சமூகமாக என்ன செய்ய போகிறோம் என்று சிந்திக்க முடியாமல் இருக்கிறோம்.

    கடவுளின் ஆசியால், நான் உடல் ரீதியாக நன்றாக இருக்கிறேன், ஆனால் நான் இரவும் பகலும் அதைப்பற்றி சிந்திக்கிறேன். சமீப காலமாக நான் மிகவும் பலவீனமாக இருந்ததால் மருத்துவரை அணுகினேன்.

    இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தை காட்டிலும் குறைவாகத்தான் மணிப்பூரில் நடந்துள்ளது
    • ஒட்டுமொத்த மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது

    மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    இந்த வீடியோ சம்பவம் குறித்து முன்னதாகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த வீடியோ பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே இதில் ஒரு அரசியல் விஷயம் உள்ளடங்கியுள்ளது.

    வீடியோ தேதியை பொருட்படுத்தாமல் இந்த சம்பவம் கட்டாயம் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால் ஒட்டு மொத்த மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது.

    மணிப்பூரில் நடந்தது வருத்தமான சம்பவம்தான். ஆனால் இது தினந்தோறும் மணிப்பூரில் நடப்பதுபோல் ஒரு எண்ணம் கொடுக்கப்படுகிறது.

    மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு எதிராக மணிப்பூரை எடுத்துக் கொண்டால், மணிப்பூரில் மிகவும் குறைவான சம்பவங்கள்தான் நடைபெற்று உள்ளது.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் வன்முறையாக மாறி 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

    • 140 கோடி மக்களின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பேசுகிறார்
    • பிரதமர் மோடி இரு அவைகளிலும் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வியாழக்கிழமை (20-ந்தேதி) தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அலுவல் பணி ஏதும் நடைபெறாமல் இன்று காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

    விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையிலும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இன்று காலை பாராளுமன்றம் தொடங்கியதும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இதன்காரணமாக மதியம் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது. இதற்கிடையே இன்று காலை பாராளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அமளியில் ஈடுபடுவது ஏன்? என்பது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் ''நாங்கள் விவாதத்திற்கு தயார், ஆனால் 140 கோடி மக்களின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பேசிய நிலையில், அந்த மக்களின் பிரதிநிதிகள் அமர்ந்து இருக்கும் பாராளுமன்றத்திற்குள் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும்'' என்றார்.

    • போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்ள தொடங்கியபோது, பதற்றம் உருவானது
    • அனைத்து சம்பவங்களையும் மணிப்பூர் அரசு கண்காணித்து வருகிறது

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைய இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வன்முறை தொடர்வதால் அண்டை மாநிலங்களில் மணிப்பூர் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரமில் 13 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மிசோரமில் குகி-ஜோ பழங்குடியினர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒற்றுமை பேரணி நடத்தினர். இதில் அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா கலந்து கொண்டார். இந்த பேரணியின் போது மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் குறித்து அவதூறாக பேசப்பட்டுள்ளது.

    மிசோ பழங்குடியினருக்கு குகி-ஜோ பழங்குடியினர் மற்றும் மியான்மரின் சின் மக்களுடன் நல்ல தொடர்பு உள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின் மக்கள் அகதிகளாக மிசோரம் மாநிலத்தில் உள்ள முகாமில் உள்ளனர்.

    மிசோரம் மாநில முதல்வர் பேரணியில் கலந்து கொண்ட நிலையில், அடுத்த மாநில உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுறித்து பிரேன் சிங் கூறியதாவது:-

    போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்ள தொடங்கியபோது, பதற்றம் உருவானது. மணிப்பூர் மாநிலத்தில் வாழும் குகி சமுதாயத்தினருக்கு எதிராக மணிப்பூர் அரசு செயல்படவில்லை.

    அனைத்து சம்பவங்களையும் மணிப்பூர் அரசு கண்காணித்து வருகிறது. மணிப்பூர் ஒருமைப்பாட்டை அழிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் வகையில் ஆயுதமேந்தியவர்களுக்கும் அரசுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. எனக்கு எதிராக மிசோரம் பேரணியில் அவதூறு குரல் எழுப்பியது காட்டுமிராண்டி தனமானது.

    மற்றொரு மாநிலத்தின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மிசோரம் மாநில முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். ஐரோப்பிய யூனியன் கள நிலவரம் தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றி, அதிகாரிகள் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • I.N.D.I.A. எம்.பி.க்கள் மணிப்பூர் செல்ல இருக்கின்றனர்
    • மணிப்பூர், நாகாலாந்து எரிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்

    மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மத்திய அரசு சிபிஐ விசாரணை கேட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை மற்றும் நாளைமறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் மணிப்பூர் செல்ல இருக்கிறார்கள். பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேச மறுத்து வருகிறார். இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில் ''நீங்கள் (பா.ஜனதா) இன்னும் ஆறு மாதம்தான் இருக்கப் போகிறீர்கள். மணிப்பூரை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?. உங்களுடைய எம்.பி.க்களை அனுப்புங்கள். யார் பொறுப்பு என்று அவர்கள் சொல்லட்டும். நீங்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். மணிப்பூர், நாகாலாந்து எரிந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீர் எரிந்து முடிந்துவிட்டது.

    இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் மணிப்பூர் செல்ல இருக்கின்றனர். நான் மணிப்பூர் செல்ல அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது'' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோடி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான சதி- அமித் ஷா
    • வீடியோ வைரல் ஆன பின்னர்தான், நடவடிக்கை- ஒவைசி

    மணிப்பூரில் இரு பிரிவனருக்கு இடையிலான மோதல், கடந்த மே மாதம் 3-ந்தேதி வன்முறையாக வெடித்தது. அதில் இருந்து தற்போது வரை அங்கு அமைதி திரும்பவில்லை. இதற்கிடையில் கடந்த வாரம் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியானது. காட்டுமிராண்டித்தனமான இந்த செயலுக்கு நாடு முழுவதும் இருந்து கண்டன குரல் எழும்பியது.

    இந்த விசயத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்ற மக்களவையில் கொண்டு வந்தனர்.

    இதங்கிடையே மணிப்பூர் கலவரம் தொடர்பாக பேசிய அமித் ஷா ''பாராளுமன்றம் நடக்கும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒவைசி தனது டுவிட்டர் பக்கத்தில் ''மணிப்பூர் வீடியோ, மோடி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியிடப்பட்டது சதியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் இருந்து வன்முறை நடைபெற்று வருகிறது. வீடியோ சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட பழைய வீடியோ. ஆனால், வீடியோ வைரல் ஆன பின்னர்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோடி அரசு எப்போதுமே அவர்களுடைய இமேஜ் குறித்துதான் கவலைப்படுகிறது. குகி பெண்களின் கண்ணியத்தை பற்றியல்ல. என்ன ஒரு வெட்கக்கேடு'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக,

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதற்கிடையே 2 பெண்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தாமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

    நேற்று நடந்த விசாரணையின்போது, மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பூரில் மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் காட்சியை வீடியோவாக பதிவு செய்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மைதேயி இனத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் வீடியோவாக பதிவு செய்த காட்சிகள் அடங்கிய செல்போன் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த விசாரணைகளில் என்னென்ன நடந்தது என்பது தெரிய தொடங்கி இருக்கிறது. குகி இனப் பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சியை பதிவு செய்தவர்கள் அதை ரகசியமாக வைத்திருந்துள்ளனர். பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பு அந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பது முதல் கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நடக்கும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டிருக்கிறது.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கு ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த 7 வழக்குகள் விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும். விசாரணை முடிவில் நிச்சயம் உண்மை தெரியும். விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

    எனவேதான் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். சி.பி.ஐ. விசாரிப்பது போல மணிப்பூர் கலவரத்தின் 3 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பான காட்சிகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருப்பதால் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்குகிறார்கள். மேலும் மணிப்பூர் மாநில அரசு செயல் இழந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

    ஆனால் மே 4-ந்தேதி 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி அழைத்து செல்லப்பட்டபோது அங்கு ராணுவமோ, உள்ளூர் போலீசாரோ இல்லை. சம்பவம் குறித்து தெரிய வந்த பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே சமரசம் செய்து கொள்வதற்கு இதுவரை 12 தடவைக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    இரு இனத்தவர்களின் வாழ்விடங்களுக்கு இடையே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமரச முயற்சிகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் ஒவ்வொரு நாளும் மணிப்பூர் சட்டம் ஒழுங்கை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். மணிப்பூரில் நாங்கள் முழுமையாக அமைதி ஏற்படுத்தி வருகிறோம். 16 மாவட்டங்களில் தலா ஒரு படை வீதம் 16 படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கலவரத்தை அவர்கள் முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளனர்.

    மணிப்பூரில் 72 சதவீதம் அரசு ஊழியர்கள் இடையூறு இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். 82 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு திரும்பி உள்ளனர். சமீபத்தில் கூட மத்திய, மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் திட்டமிட்டபடி அமைதியாக நடந்தன. 90 சதவீதம் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. விரைவில் மணிப்பூர் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    மணிப்பூரில் வன்முறை ஏற்படுவதற்கு அம்மாநில ஐகோர்ட்டில் வழங்கப்பட்ட மைதேயி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கலாம் என்ற தீர்ப்புதான் காரணமாகி விட்டது. இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யும். மேலும் மணிப்பூரில் நாங்கள் ஆயுத சட்டத்தை திரும்ப பெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வருபவர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள். வருகிற டிசம்பர் மாதம் இது தொடர்பான பட்டியல் வெளியிடப்படும். பட்டியலில் இல்லாதவர்கள் இந்திய குடியுரிமை அடையாள அட்டை பெற இயலாது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் பா.ஜனதா ஆட்சியில் மட்டும் நடப்பது போல காங்கிரசார் பிரசாரம் செய்கிறார்கள்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது 1993, 1995, 1997, 1998 ஆண்டுகளில் 4 தடவை மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

    பாராளுமன்றத்தில் முழுமையாக விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அதை கேட்பதற்கு முன் வருவது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது 14 நாட்கள் கழித்துதான் துணை நிலை ராணுவத்தை அனுப்பி வைத்தார்கள். ஆனால் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணிப்பூர் குழுக்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்கிறோம்.

    இதன் மூலம் வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பரவுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியின்போது மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது 149 நாட்கள் தொடர்ந்து அந்த மாநிலத்துக்குள் யாரும் செல்ல முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 240 ரூபாய்க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.1900-த்துக்கும் விற்பனை ஆனது.

    ஆனால் நாங்கள் அத்தியாவசிய பணிகள் அனைத்தையும் சீராக வைத்திருக்கிறோம். மணிப்பூருக்கு இப்போதும் யாரும் சென்று வரலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம். ராகுல்காந்தி சென்றபோது ஹெலிகாப்டரில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் வாகனத்தில் செல்வது சரியாக இருக்காது என்று சொல்லப்பட்டதால் அவர் தடுக்கப்பட்டார். அது அவருக்கே தெரியும். தற்போது மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படும். இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    • இந்தியா என்ற பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி உருவான பிறகு எம்.பி.க்கள் குழு மணிப்பூருக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.
    • இன்னமும் வெளியே வராத பல சம்பவங்கள் மணிப்பூரில் இருக்கின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4-ந் தேதி கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் 2 பேர் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும், அம்மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் பதில்அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி சார்பாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

    இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் அறிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு நேரில் சென்று இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளது.

    மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர்ரஞ்சன், துணைத்தலைவர் கவுரவ் கோகாய் தலைமையிலான இந்த குழுவில் கூட்டணியின் முதன்மை கட்சிகளில் ஒன்றான தி.மு.க. சார்பாக அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி இடம்பெற்று உள்ளார். மேலும் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த ராஜின் ரஞ்சன் சிங், அனில் பிரசாத் ஹெக்டே, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொல் திருமாவளவன், தி.மு.க. ரவிக்குமார், சுஷ்மிதா தேவ், சந்தோஷ் குமார், ஏ.ஆர். ரஹிம், மனோஜ் குமார் ஜா, ஜாவத் அலிகான், மஹுவா மாஜி, முஹம்மது பைசல், மொஹம்மது பஷீர், பிரேம சந்திரன், சுஷில் குப்தா, அரவிந்த் சாவந்த், ஜெயந்த் சிங் மற்றும் புலோ தேவி உள்ளிட்ட 21 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது எதிர்கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த இந்த 21 எம்.பிக்கள் இன்று மணிப்பூர் சென்றுள்ளனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பைசல் முகமது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், ஜாவேத் அலி, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சந்தீப் பதக் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

    இந்தியா என்ற பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி உருவான பிறகு எம்.பி.க்கள் குழு மணிப்பூருக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். இந்த குழுவினர் இன்று இம்பாலுக்கு விமானம் மூலம் சென்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சுரா சந்த்பூருக்கு சென்றார்கள். இந்த குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பேசினர். குக்கி பழங்குடியினர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து வன்முறை தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் இம்பாலுக்குத் திரும்பும் முன், மைதேயி சமூகத்தினரையும் சந்திப்பார்கள் என்று எதிர்க்கட்சி கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இது குறித்த அறிக்கை ஒன்றையும் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிவாரண முகாம்களுக்குச் சென்று நிலைமையை பர்வையிட்ட இந்த குழு நாளை (ஞயிற்றுக் கிழமை) காலை மணிப்பூர் கவர்னர் அனுசுயா உய்கேவையும் சந்திக்க உள்ளது.

    குழுவில் இடம்பெற்று உள்ள காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறுகையில் "மணிப்பூரில் உண்மை நிலவரத்தை கண்டுபிடித்து, அந்த உண்மையை பாராளுமன்றத்தில் முன்வைப்போம். இந்த விவகாரத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்து விட்டது என்றார். ஆதிர்ரஞ்சன் எம்.பி. கூறுகையில், மணிப்பூர் நிலவரம் குறித்து அங்குள்ள சூழ்நிலைகளை அறிந்து எங்கள் பரிந்துரைகளை அரசுக்கு முன்வைப்போம் என்றார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி. சுஷ்மிதா தேவ் கூறுகையில், மணிப்பூர் வன்முறைகளை வெளிஉலகுக்கு ஊடகங்கள்தான் கொண்டு வந்தன. ஆனாலும் இன்னமும் வெளியே வராத பல சம்பவங்கள் மணிப்பூரில் இருக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் அந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் நாங்கள் வெளியே கொண்டு வருவோம் என்றார்.

    ×