என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor Priya"

    • நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.
    • ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி வரி விதிப்பு, நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியாகி உள்ள அறிவிப்புகளில் சில... 

    * சென்னை மாநகராட்சியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மின்னணு பலகைகள் பொருத்த திட்டம். இதற்காக மின்னணு பலகைகள் வாங்க ரூ.64.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கென தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை (Display) வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூபாய் 40,000/- வீதம் வழங்கப்படும்.

    * சென்னையில் தெருநாய்களுக்கு வெறிநாய்கடி நோய் தடுப்பூசி மற்றும் ஓட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.

    * மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, (Standard Operating Procedure) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கப்படும்.

    * சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் அவர்தம் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.

    * சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவித்து வினாடி வினாப் போட்டிகள் நடத்திட பள்ளிகளில் குழு அமைத்து வினாத்தாள்கள் தயாரித்து போட்டித் தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கிட பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 15,000 முதல் ரூபாய் 75,000 வரை, 211 பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    * 81 சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து ஆலோசனைகள் வழங்கவும் போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 15,000-முதல் ரூபாய் 1,50,000 வரை வழங்குதல்.

    * சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு மண்டலம் வாரியாக வளமிகு ஆசிரியர் குழு (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

    * பெருநகர சென்னை மாநகராட்சியின் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும், கோப்பைகளை வெல்லவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 15,000 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 18,000/ என்ற வகையில், மொத்தம் 141 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்டையில் பணியமர்த்தப்படுவார்கள்.

    * 29 சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் விளையாட்டு மைதானங்களில் கூடைப்பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ, கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் மாணவ மாணவியர்கள் தங்களை ஈடுபடுத்தி அவ்விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள எதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

    * 26 சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப் பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ,கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

    * 50 சென்னை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவமாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப்பந்து மற்றும் எறி பந்து விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

    * மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/- வீதம் வழங்கப்படும்.

    * முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என் கார்டன் மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா மையத்திற்கு ரூபாய் 30.00 இலட்சம் வீதம் 3 மையத்திற்கு முதியோர்களுக்கென தனிப் பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.

    • கடந்த மாதம் 25-ந்தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பாலியல் ரீதியான அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில், ‘போதும்... நிறுத்துங்கள்...’ என்று குறிப்பிடுவது போல தனது கையை நீட்டி பிரியா இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை:

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    கடந்த மாதம் 25-ந்தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. விழிப்புணர்வு பிரசார திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதன் ஒருகட்டமாக மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டு இருக்கிறது. இதேபோல நேப்பியர் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்து வருகின்றன.

    இதுதவிர மாநகராட்சி சார்பில் பெண்கள் அதிகம் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொதுவான பகுதிகளிலும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இந்த பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி மேயர் பிரியா சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். பாலியல் ரீதியான அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில், 'போதும்... நிறுத்துங்கள்...' என்று குறிப்பிடுவது போல தனது கையை நீட்டி பிரியா இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    அவரது இந்த நூதன விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • அரசு அதிகாரிகள் அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
    • அ.தி.மு.க. தான் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம்.

    சேலம்:

    ஆத்தூரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

    சென்னையில் புயல் காற்றினால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டபோது முதல்-அமைச்சர் பாதுகாப்பு காரில் சென்னை மேயர் பிரியா தொங்கிக்கொண்டு போனார். அது அவர் கட்சிக்காரர்.

    ஆனால் உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், திறமையான அதிகாரி. அவர் அந்த காரை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போகிறார். தி.மு.க. மாவட்ட செயலாளர் போல் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி செயல்படுகிறார். இது வேதனையாக இருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி என்றால் அது ஒரு கவுரவம்.

    உயர்ந்த பதவி இருக்கிறவர்கள் இப்படி தாழ்வான நிலைக்கு போகாதீங்க. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

    பிற மாநிலத்தில் இருக்கிற மக்கள் எல்லாம் நம்முடைய மாநிலத்தை பார்க்கின்றபோது தரத்தை குறைத்து மதிப்பிடுவாங்க.

    அரசு அதிகாரிகள் அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தயவு செய்து இப்படி இருக்க வேண்டாம். அரசு அதிகாரி காரில் தொங்கிக்கொண்டு போனால் மக்கள் எப்படி பார்ப்பார்கள்?

    அ.தி.மு.க. தான் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம். மீண்டும் அம்மாவுடைய அரசு உங்களுடைய பேராதரவோடு மலரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    • சென்னையில் 18 சாலைகள் குப்பையில்லா சாலையாக பராமரிக்கப்படும்.
    • மாநகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சியின் சார்பில் தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், உர்பேசர் மற்றும் சுமீத் நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், சென்னை என்விரோ நிறுவனத்தின் சார்பில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக நாள்தோறும் வீடுகளுக்கே சென்று குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக பெறப்படுகிறது. முக்கிய பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு சேகரமாகும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

    மேலும், தனியார் கடைகள், அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக சேகரிக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிறத்திலான இரண்டு குப்பை தொட்டிகளை வைக்க மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள் என்ற திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு மாநகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைத்தல், சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதிவண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இந்த 18 சாலைகளில் குப்பையில்லா பகுதிகளாக அறிவிப்பதன் மூலம் 74.3 கி.மீ. நீள சாலைகள், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட உள்ளன. இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க ஏதுவாக 442 சிறிய வகையிலான குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.

    இவ்வாறு மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 60 முதல் 80 ஆக இருந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மண்டலங்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை மேயர் பிரியா கூறியதாவது:-

    கொரோனா தொற்று அதிகரிப்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது அதன்படி சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 60 முதல் 80 ஆக இருந்தது.

    நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமான கொரோனா நடைமுறைகளின் படி தொற்று பாதித்தவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை தொற்று பாதித்தவர்கள் யாரும் மோசமான நிலையை அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் அளவுக்கு இல்லை. அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அவர்களை கண்காணித்தும் வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் ஒட்டப்படவில்லை. பொதுமக்களை விழிப்புடனும் தகுந்த பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும்.
    • தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நிலுவை சொத்து வரியை உடனடியாக செலுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி சலுகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.

    அந்த வகையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை இணையதளம், இ-சேவை மையம், பாரத் பில் பேமன்ட் முறை, இணைய வங்கி, கியூ-ஆர் கோர்டு, காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை தானியங்கி எந்திரம் மூலம் செலுத்தும் நடைமுறையை சென்னை மாநகராட்சி நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் தானியங்கி எந்திரத்தின் செயல்பாட்டை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்தார்.

    பெடரல் வங்கியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி இதை நிறுவியுள்ளது. இந்த தானியங்கி எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும். இதற்கான ரசீதும் இந்த எந்திரத்தில் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் விசு மகாஜன், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் மற்றும் வருவாய்துறை உயர் அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.

    • கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் செய்ய தொடங்குகிறோம்.
    • குப்பை தொட்டி இல்லாத நகரத்தையும் நாங்கள் விரும்புகிறோம்.

    சென்னை:

    சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா ஒரு வார பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்.

    மேயர் பிரியா இன்று இரவு ஸ்பெயின் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து பிரான்சுக்கு சென்று பின்னர் இத்தாலிக்கு செல்கிறார். மேயருடன் துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் உடன் செல்கிறார்கள். ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 24-ந் தேதி அவர்கள் சென்னை திரும்புகிறார்கள்.

    ஸ்பெயின், பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகளில் கடைபிடித்து வரும் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக மேயர் பிரியா அங்கு செல்கிறார்.

    சுற்றுச்சூழல் தீர்வுக்கு உலகத்தின் முன்னணியில் உள்ள உலகளாவிய நிறுவனம் அர்பேசர் ஆகும். அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்பெயினில் உள்ளது. நாங்கள் முதலில் அதை பார்வையிடுவோம்.

    கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் செய்ய தொடங்குகிறோம். அதை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். 2-வதாக குப்பை தொட்டி இல்லாத நகரத்தையும் நாங்கள் விரும்புகிறோம். எனவே ஐரோப்பிய நாடுகள் அதை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

    சென்னை நகரில் கழிவு மேலாண்மை தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. எனவே குப்பை சேகரிப்பு மற்றும் செயலாக்க சேவைகளை மேம்படுத்தவும், கண்காணிக்கவும் இந்த பயணம் உதவும்.

    இவ்வாறு மேயர் பிரியா கூறியுள்ளார்.

    • 4-வது முறையாக திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
    • நிகழ்ச்சியில் 3 பெண்களுக்கு தையல் எந்திரம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை மேயர் பிரியா வழங்கினார்.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்கும் வகையில் மக்களைத்தேடி மேயர் என்ற திட்டத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார்.

    இதுவரை ராயபுரம், திரு.வி.க.நகர், அடையாறு மண்டலத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 889 மனுக்கள் பெறப்பட்டு அதில் 720 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 4-வது முறையாக திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளிக்க வந்தபோது மேயர் பிரியா மேடையை விட்டு கீழே இறங்கி வந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்களுக்கு தையல் எந்திரம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை மேயர் பிரியா வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம் கே.பி.சங்கர், துணை மேயர் மகேஷ் குமார், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு வார்டில் நடக்கும் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா காலை சிற்றுண்டி திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

    அப்போது மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது தொடர்பாக நன்றி தெரிவிக்கக்கோரி பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்த் எழுந்து கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க. மட்டுமின்றி காங்கிரஸ் உறுப்பினர்கள் எம்.எஸ். திரவியம், ராஜசேகரன் உள்ளிட்டோர் பலர் எழுந்து எதிர்த்து குரல் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து உமா ஆனந்த் வெளிநடப்பு செய்தார்.

    கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர் (24-வது வார்டு) சேட்டு பேசும்போது, எனது வார்டில் தனியார் நிறுவனம் ஒன்று கியாஸ் பைப்லைன் ரோட்டில் பதித்து செல்கிறது. அது என்ன திட்டம், யார் போடுகிறார்கள் என்ற எந்த தகவலும் எனக்கு தெரியாது.

    ஆனால் கியாஸ் பைப் வெடித்து அசம்பாவித சம்பவம் நடந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது எங்களை வந்து கேட்பார்கள். வார்டுகளில் எந்த பணி நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    அவரது கருத்திற்கு அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்து ஒருமித்த குரலாக எழுப்பினர். வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பது இல்லை என்றும் பிரச்சனை வந்தால் மட்டும் எங்களிடம் கூறுகிறார்கள் என்று தி.மு.க. கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், ஒவ்வொரு வார்டில் நடக்கும் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த பணி நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு கேட்பதற்கு உரிமை உள்ளது. கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்ல 5 நிமிடங்கள் ஆகும். எந்த பணி நடந்தாலும் தகவல் தெரிவியுங்கள் என்றார்.

    துணை மேயர் மகேஷ் குமார் பேசும்போது, சாலைப் பணிகள் நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கண்காணிப்பார்கள் என்றார்.

    கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, சென்னை நகரம் 476 சதுர கி.மீ. தூரம் வளர்ந்துள்ளது. அதனால் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில் அதிகாரிகளுக்கு என்ன கஷ்டம், ஆய்வு பணிகள், வளர்ச்சி பணிகள், எது நடந்தாலும் கட்டாயம் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு பிரபல கர்நாடகா சங்கீத இசையமைப்பாளர் டாக்டர் எம்.பால முரளி கிருஷ்ணா மேம்பாலம் என பெயர் மாற்றம், 130-வது வார்டில் உள்ள குமரன் நகர் பிரதான சாலைக்கு "மாண்டோவின் ஸ்ரீநிவாஸ் பிரதான சாலை" என பெயர் மாற்றம், மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் ஓய்வுபெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு 50 சதவீத சலுகை, கொடுங்கையூர், பெருங்குடியில் பொது, தனியார் கூட்டாண்மை முறையில் பயோ-சி.எஸ்.ஜி. ஆலை உரம் தயாரிக்கும் அழகு பொருள் மீட்பு வசதி மற்றும் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் வசதி ஆகியவற்றிற்கு திட்ட அறிக்கை தயார் செய்வது உள்ளிட்ட 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மேயர் ஆர்.பிரியா சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    சென்னை:

    சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர், இந்த மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஆர்.பிரியா பரிசுகளை வழங்கினார். இதில், ஆண்கள் பிரிவில் முதலிடம் சச்சின் பிரிய தர்ஷன், இடண்டாமிடம் தட்சிணாமூர்த்தி, மூன்றா மிடம் ஜோஷ்வா, பெண்கள் பிரிவில் முதலிடம் செல்வி லாவன்யா, இரண்டாமிடம் புனிதா, மூன்றா மிடம் செல்வி ஜெகதீஸ்வரி ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    மேலும், மாணவர்களில் கோபிநாத், கிஷோர் குமார், ஹரிஷ், ஹரிபாலன், மாணவிகளில் அபிநயா, பாபி ஹோலா, நிஷா ஆகியோருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த ரெட்ரன் மாரத்தானில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றிய அடிப்படை அறிவு அதிகப்படுத்துதல், போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிர்த்தல், இளைஞர்களுக்கிடையே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பாலியல் நடத்தையை ஊக்குவித்தல், எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்று தொடர்பான சேவைகளை ஊக்குவித்தல், காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குதல், தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவித்தல் போன்றவையாகும். இந்நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
    • அரசின் நடவடிக்கையால் வால்டாக்ஸ் சாலையில் தண்ணீர் நிற்கவில்லை.

    சென்னை:

    யானைக்கவுனி பகுதியில் மழை பாதிப்புகளை குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    * 2,700 கி.மீ. அளவுக்கு புதிய மற்றும் பழைய மழைநீர் வடிகால்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.

    * சென்னையில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களும் தூர்வாரப்பட்டுள்ளன.

    * மழைநீர் வடிந்து செல்லும் அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    * அரசின் நடவடிக்கையால் வால்டாக்ஸ் சாலையில் தண்ணீர் நிற்கவில்லை.

    * தொடர் மழையால் ஒரு சில தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது.

    * அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

    * சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்.
    • வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    'மிச்சாங்' புயலால் மழை வெள்ளத்தில் சென்னையே நிலைகுலைந்தது. நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டன. இந்தநிலையில் நடிகர் விஷால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

    அதில், 'அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களை யோசித்து பாருங்கள். 2015-ம் ஆண்டை விட இது மோசமாக இருக்கிறது. மழைநீர் சேமிப்பு வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. ஒரு வாக்காளர் என்ற முறையில் இதை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தயவு செய்து வெளியில் வந்து பிரச்சினைகளை சரி செய்து கொடுங்கள். எதற்காக வரி கட்டுகிறோம் என்று கேட்க வைத்துவிடாதீர்கள்', என்று விஷால் காட்டமாக பேசியிருந்தார். இதனை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும் டுவிட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதில் அளித்து மேயர் பிரியா டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2015-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயற்சிக்காமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்.

    இவ்வாறு மேயர் பிரியா கூறியுள்ளார்.

    ×