என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "military rule"

    • தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
    • மியான்மரில் கடுமையான மருந்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர்: இடிபாடுகளைத் தோண்ட, தோண்ட உடல்கள் தொடர்ந்து மீட்பு பலி எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.

    மியான்மரில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாடு உருக்குலைந்துள்ளது.

    தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.

    அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்டிடங்கள் உருக்குலைந்து இடி பாடுகள் குவியலாக கிடக்கிறது.

    அதனை அகற்றி ஏராள மானோர் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதில் பலர் உயிரிழந்த நிலையில் மீட்கப் படுகிறார்கள். இதுவரை சுமார் 1,700 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளதாக மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    மியான்மரில் கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தோண்ட, தோண்ட உடல் கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

    இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புபணி களில் பொதுமக்களும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் பலர் வெறும் கைகளால் இடிபாடுகளை அகற்றி உதவி செய்து வருகிறார்கள்.

    காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல பகுதிகளில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நிலநடுக்கத்தால் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்து உள்ளதால் மியான்மரின் பல பகுதிகளுக்கு உதவிகள் சென்றடைவது தடைபட்டுள்ளது.

     

    இதற்கிடையே மியான்மரில் கடுமையான மருந்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. இது நிவாரணப் பணிகளை மேலும் பாதிக்கும் என்று உதவி குழுக்கள் கவலை தெரி வித்துள்ளன.

    மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு நிலஅதிர்வுகள் உண்டானது. இதனால் பீதியடைந்துள்ள மக்கள் தெருக்களிலோ அல்லது திறந்த வெளிகளிலோ இரவுகளை கழிக்கின்றனர். பலர் வீடுகளை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

    மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் அங்கு உள்நாட்டு போரும் நடந்து வருகிறது. ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களை தற்போது நிலநடுக்கம் மேலும் இன்னலுக்கு தள்ளி உள்ளது.

    இந்த நிலையில் ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் மியான்மரின் நிழல் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் ஆயுதப் பிரிவான மக்கள் பாதுகாப்புப்படை, 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தது.

    நிலநடுக்க மீட்புப்பணிகளை எளிதாக்கும் வகையில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தாங்கள் கட்டுப்படுத்தும் பகுதிகளில் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தற்காலிக மீட்பு மற்றும் மருத்துவ முகாம்களை நிறுவுவதை உறுதி செய்ய ஐ.நா. மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு பல நாடுகள் உதவி வருகின்றன. குறிப்பாக இந்தியா, நிவாரண பொருட்கள், மீட்பு குழுவை அனுப்பியது. 60 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 5 மீட்புப்படை விமானங்கள் சென்றுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    மியான்மரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், தாய்லாந்தையும் தாக்கியது. தலைநகர் பாங்காங்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த 33 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர் களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தாய்லாந்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இன்னும் 90 பேர் மாயமாகி உள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
    • மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.

    இந்நிலையில், மியான்மர் நாட்டில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடைக்காரரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கடைக்காரரின் 3 செல்போன் கடைகளையும் அந்நாட்டு அரசு மூடியுள்ளது.

    தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக இதேபோல் 10 முதலாளிகளை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பது நல்ல விஷயம் தானே, பின்னர் எதற்காக அவரை கைது செய்துள்ளார்கள் என்று கேள்வி எழுகிறது அல்லவா? அதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்தால் விலைவாசி விண்ணை தொடும். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் இந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதை மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள். இது அரசுக்கு தலைகுனிவாகும். இது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

    மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வுக்கு மத்தியில் வேலையும் இல்லாமல் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    • ஷேக் ஹசீனா லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
    • 1975-ம் ஆண்டு புரட்சியில் ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைந்தது.

    இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார் என தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.

    நாட்டைவிட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு வருகை புரிந்துள்ளதாகவும் அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது ஒன்றும் இது முதல்முறையல்ல. இதற்கு முன்பே 2 முறை ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ராணுவம் காப்பாற்றிய அந்த சமயத்தில் 2 அதிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசத்தின் அதிபராக இருந்தபோது, 1975 ஆம் ஆண்டு நடந்த முதல் ராணுவப் புரட்சியின்போது படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த புரட்சியின் போது ஷேக் ஹசீனாவும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். அந்தப் புரட்சியின் போது மொத்தமாக ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.

    1981-ல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த ஜியாவுர் ரஹ்மான் ராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டார். அதே சமயம் பல முறை ராணுவத்தின் புரட்சி முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.

    2009 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ஏற்ற இரண்டே மாதத்தில் பங்களாதேஷ் ரைபிள் படையினர் பெரும் கலக்கம் செய்தனர் பெரும் சிரமத்திற்குப் பின்னர் அந்த கலகத்தை ராணுவம் அடக்கியது. கடந்த 2012-ம் ஆண்டும் ஹசீனாவுக்கு எதிராக ராணுவம் புரட்சி நடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ இடைக்கால ஆட்சியில் பாகிஸ்தான் சார்புடைய ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஆதிக்கம்
    • ஹசீனா இந்தியாவைச் சார்ந்திருக்கும் வரைக்கும் இந்தியாவின் கைகளும் வங்காளதேச வெளியுறவு விவகாரங்களில் ஓங்கி இருந்தது

    வங்காளதேச வன்முறை 

    வங்காள தேசத்தில் ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியதை அடுத்து நேற்று அதன் உச்சமாக ஹசீனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதனைத்தொடர்ந்து ராணுவ விமானம் மூலம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

    ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், வங்காளதேச ராணுவம் ஆட்சியைக் கையில் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் போராட்டக்காரர்களை அமைதி காக்கும்படி ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

     

    இந்தியாவுக்கு எதிரான மனநிலை 

    எனவே ஆட்சி மாற்றத்துடன் காட்சிகள் மாறுவதும் தவிர்க்க முடியாததாகி உள்ளது. அமையவுள்ள ராணுவ ஆட்சியால் இதுவரை இருந்துவந்த இந்தியா உடனான வங்காள தேசத்தின் வெளியுறவுக் கொள்கைகளிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் நடக்கலாம் என்று தெரிகிறது.

    இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார பந்தமும், பாதுகாப்பு தொடர்பான நல்லுறவும் ஷேக் ஹசீனா ஆட்சியில் வலுவடைந்தது. ஹசீனா இந்தியாவோடு அதிக நெருக்கம் காட்டுவதும், தற்போது நடந்துள்ள போராட்டத்திற்கான காரணங்களில் ஒன்று என்ற ஊகங்களையும் அரசியல் நோக்கர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது வங்காளதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலையையே ஏற்படுத்தியுள்ளது.

    ராணுவத்தின் இடைக்கால அரசு

    ராணுவத் தளபதி வகார்-உஸ்-ஜமான் தலைமையில் அமைய உள்ள இடைக்கால அரசானது எத்தகு தன்மையோடு செயல்படும் என்பதைக் கணிக்க முடியாததாக உள்ளது. வங்காள தேசம் தனக்கான அரசியல் பாதையை வருங்காலங்களில் எவ்வாறாக அமைக்க உள்ளது என்பதைப் பொறுத்தே இந்தியாவுக்கு அதன்மூலமாக வரும் சாதக பாதகங்களைக் கணிக்க முடியும். ஆனால் தற்போதைய நிலைமையோ அதிக பாதகங்கள் இருக்கும் என்பதையே உணர்த்துவதாக அமைந்துள்ளது.  

     

    ஹசீனாவின் இந்திய சார்பு

    1997 முதல் 2001 வரை வங்காளதேச பிரதமராக இருந்த ஹசீனா அதன்பின் 8 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரானார். அன்றுதொட்டு தற்போது [2024 ஆகஸ்ட்]வரை பிரதமராக ஆட்சி  செய்துள்ளார் ஹசீனா. வங்காள தேசத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பிரதமரும் இவரே ஆவார். அதற்கு முக்கிய காரணம் இந்தியாவுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவே ஆகும். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் அதிகம் இல்லாமல் சமாளிக்கவும், ஸ்திரத்தன்மை கொண்ட ஆட்சியை நிலைநிறுத்தவும் இந்திய நல்லுறவு ஹசீனாவுக்கு கைகொடுத்தது. எனவே ஹசீனா இந்தியாவைச் சார்ந்திருக்கும் வரைக்கும் இந்தியாவின் கைகளும்  வங்காளதேச வெளியுறவு விவகாரங்களில் ஓங்கி இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக மாறியுள்ளதையே பார்க்கமுடிகிறது.  

     

     பொருளாதார பாதிப்பு

    இந்தியாவின் வங்காளதேசத்தினுடனான வணிகத் தொடர்பும், வங்காளதேசத்தின் ஊடாக மேற்கொண்டுவந்த வணிகத் தொடர்புகளும் [ transit and shipment] தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த வணிக ஒப்பந்தங்களானது 2010 முதல் பேச்சுவார்த்தை மூலம் மெல்ல மெல்ல முன்னேறி 2015 ஆம் ஆண்டில் இந்தியா- வங்காள தேசத்திற்கிடையே கையெழுத்தானதாகும். எனவே தற்போது இந்த பெருமுயற்சிகள் அனைத்தும் புதிதாக அமையவுள்ள இடைக்கால அரசின் அரசியல் முடிவுகளையே சார்ந்துள்ளது.

    ஜமாத் இ இஸ்லாமி

    வங்காளதேசத்தில் இயங்கி வரும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பானது தற்போதைய போராட்டங்களில் முக்கிய பங்காற்றியது. இந்த அமைப்பு பாகிஸ்தான் சார்புடையதாக பார்க்கப்படுகிறது. அமையவுள்ள புதிய இடைக்கால அரசிலும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஆதிக்கம் இருக்கவே செய்யும். எனவே அவர்களின் பாகிஸ்தான் சார்பு இந்தியாவுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயமும் உள்ளது.

    சீன ஆதிக்கம்

    இந்திய எல்லையில் சீனா ஏற்கனவே பல்வேறு அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய எல்லை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றத்தையும் கூர்ந்து கவனித்து வருகிறது. அமையவுள்ள இடைக்கால அரசின்  கொள்கைகள் கணிக்க முடியாத நிலையில், சீனா நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சூழலும் எழுந்துள்ளது.

    நழுவும் இந்தியாவின் பிடி 

    எனவே பாகிஸ்தான், நிலைத்தன்மையற்ற வங்காள தேசம், சீன சார்பு அதிபரைக் கொண்டுள்ள மாலத்தீவு என இந்தியாவைச் சுற்றிய எல்லைகளில் இந்தியாவின் பிடி நழுவிக்கொண்டிருப்பதையே பார்க்கமுடிகிறது என்பதே புவிசார் அரசியல் உணர்த்துகிறது.

    • மியான்மரின் ராணுவ அரசுக்கு ஆதரவாக இருக்கும் நாடான பெலாரஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றார்.
    • ஜனநாயக ஆதரவு போராளிகளும், தன்னாட்சி கோரும் சில இனக்குழுக்களை சேர்ந்த ஆயுதப் போராளிகளும் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

    அண்டை நாடான மியான்மரில் 2021 இல் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. இந்நிலையில் 4 வருட ராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மியான்மரின் ராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங், அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளார் என மியான்மர் அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    மியான்மரின் ராணுவ அரசுக்கு ஆதரவாக இருக்கும் நாடான பெலாரஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள மின் ஆங் அங்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

    அதில் அவர், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அல்லது 2026 ஜனவரி மாதத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் கூறியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் போட்டியிட ஏற்கனவே மியான்மரின் 53 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

    ஜனநாயக ஆதரவு போராளிகளும், தன்னாட்சி கோரும் சில இனக்குழுக்களை சேர்ந்த கிளர்ச்சியாளர்களும்  மியான்மர் ராணுவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    கடந்த 2021 ஆம் ஆண்டு ஆவுன் சன் சுகியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ அரசு அமைக்கப்பட்டதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு, ராணுவ அரசின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    ×