என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ponmudi"

    • கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
    • 5 வருடமாக நடைபெறாமல் இருந்த கவுன்சிலிங் தற்போது ஆன்லைன் வழியாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறியியல் கலந்தாய்வு 4-வது சுற்று வருகிற 14-ந்தேதி தான் நிறைவடைகிறது. இதுவரையில் 89,585 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். சென்ற ஆண்டு 80,383 பேர் சேர்ந்து இருந்தனர். 10 ஆயிரம் பேர் அதிகமாக சேர்ந்து இருக்கிறார்கள். 4-வது சுற்றிலும் மாணவர்கள் சேர உள்ளனர்.

    அதன் பின்னர் துணை கலந்தாய்வு காலி இடங்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு அதிக மாணவர்கள் சேர்க்கப்படுகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் 4000 பேர் தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் இதற்கான பணி தொடங்கும். கெஸ்ட் விரிவுரையாளர் தேர்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 5 வருடமாக நடைபெறாமல் இருந்த கவுன்சிலிங் தற்போது ஆன்லைன் வழியாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5,408 உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    3 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன. விரும்பும் இடங்களை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் காலி இடங்களுக்கு மாறுதல் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொறியியல் பட்டப்படிப்பு சிவில், மெக்கானிக்கல் என்பதையும் தாண்டி, கணினி அறிவியல் பிரிவிலும் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது.
    • தமிழர் மரபும், தமிழரின் தொழில்நுட்பமும் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மொழியின் அருமையைத் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியில் பாடத் திட்டங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்" என உள்துறை மந்திரி அமித்ஷா சென்னையில் நடைபெற்ற "இந்தியா சிமென்ட்ஸ்" நிறுவன பவள விழாவில் பேசியிருக்கிறார்.

    அன்னைத் தமிழ் மொழி மீது உள்துறை அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் முதலில் தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் எங்கள் தாய்மொழி. எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த மொழி.

    ஆகவே தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்ற காலத்தில் எல்லாம் தமிழ் மொழியை அரியணையில் அமர வைத்து அழகு பார்ப்பதுதான் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் எங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலையாய பணி.

    ஆகவே, தமிழ்மொழிக் கல்விக்காகத் தி.மு.க. அரசு ஆற்றிய பணிகள் சிலவற்றை உள்துறை மந்திரிக்கு நினைவூட்டிட விரும்புகிறேன்.

    இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளை தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்காக, 1997-2001-ல் தமிழ்மொழி, இலக்கிய வரலாறு, புவியியல், வரலாறு போன்ற பாடங்கள் தமிழில் தனித்தனியே தொகுத்து வெளியிட முடிவு எடுக்கப்பட்டு, முதல் முயற்சியாக தமிழ்மொழி வரலாறு வெளியிடப்பட்டது.

    பள்ளிப்படிப்பில் 10-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தமிழ் கட்டாயப்பாடம் என தி.மு.க. அரசில்தான் சட்டம் இயற்றி, அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் வரை அங்கீகரித்தது.

    கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கும் திட்டம் தி.மு.க.வின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 1967-68-ல் அறிவிக்கப்பட்டு, அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ஆண்டிற்குத் தமிழ்வழியில் பயிலும் ஒரு மாணவருக்கு ரூ.900 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் கழக அரசின் திட்டம்தான்.

    உள்துறை மந்திரி இப்போது சுட்டிக்காட்டியுள்ள பொறியியல் பட்டப்படிப்பை முதன்முதலில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில், கலைஞர் கருணாநிதி 2010-ம் ஆண்டே அறிமுகப்படுத்தி விட்டார்.

    இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொறியியல் படிப்பினைத் தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டிட (சிவில்) மற்றும் இயந்திரப் (மெக்கானிக்கல்) பொறியியல் படிப்புகளைத் தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழில் பொறியியல் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல் படிப்பு நடைமுறையில் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழில் பொறியியல் கல்வி படித்து பி.இ., பட்டம் பெற்ற தமிழக இளைஞர்கள் இன்றைக்குப் பொதுப்பணித்துறை, வீட்டுவசதி வாரியம், மெட்ரோ ரெயில் திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பல துறைகளில் பொறியாளர்களாகவும், பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர்பதவிகளை அலங்கரிப்பவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். ஏன், அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா 2020-ம் ஆண்டு குடிமைப் பணித்தேர்வில் (ஐ.ஏ.எஸ்.) வெற்றி பெற்றுள்ளார்.

    இதன் அடுத்தகட்டமாக, இப்போது 2022-23-ஆம் ஆண்டு முதல் பட்டயப் படிப்புகளிலும் மேற்காண் பாடப்பிரிவுகள் தமிழ்வழியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காகப் பொறியியல் பட்டப்படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ்வழியில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல் பட்டப்படிப்பு சிவில், மெக்கானிக்கல் என்பதையும் தாண்டி, கணினி அறிவியல் பிரிவிலும் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழர் மரபும், தமிழரின் தொழில்நுட்பமும் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்வழியில் பொறியியல் கல்வி தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவிட்டாலும், மருத்துவப் படிப்பு, அதாவது எம்.பி.பி.எஸ். தமிழில் கற்பதற்கு வழி செய்யவும் இப்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மூன்று பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எங்கள் அன்னைத் தமிழ் மீது காட்டியுள்ள அக்கறையோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாக உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் நிதியுதவி அளித்திடவும், உள்துறை மந்திரியே ஒப்புக்கொண்டிருப்பது போல், தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை ஒன்றிய அரசு அலுவலகங்களில் அளித்திடவும் தேவையான முயற்சிகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    குறிப்பாகத் தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டத்தை அமல்படுத்தவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நலமான சமுதாயம் அமைப்போம் திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை-எளிய பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும், பல்வேறு சிகிச்சைகள் சம்பந்தமாக வழி காட்டவும் தாண்டவமூர்த்திகுப்பத்தில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மருத்துவ மையத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.

    புதுச்சேரி:

    அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நலமான சமுதாயம் அமைப்போம் திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை-எளிய பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும், பல்வேறு சிகிச்சைகள் சம்பந்தமாக வழி காட்டவும் தாண்டவமூர்த்திகுப்பத்தில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டது.

    இந்த மருத்துவ மையம் திறப்பு விழாவுக்கு தாண்டவ மூர்த்திக்குப்பம் கவுன்சிலர் ராஜாத்தி வெங்கடேசன் தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் பொது மேலாளர் சவுந்தரராஜன், துணைப் பொது மேலாளர் புகழேந்தி, கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ்.வாசன், கண்டமங்கலம் தி.மு.க. பிரமுகர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மருத்துவ மையத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலி யர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உதயநிதிக்கு எல்லா தகுதியும், திறமையும் உள்ளது.
    • முதலிலே அவரை அமைச்சராக ஆக்கி இருந்தால் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்திருப்பார்.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அடுத்த கல்வியாண்டில் தமிழ்வழிப் பாடம் எல்லா வகுப்பிலும் நடத்தப்படும்.

    பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டுதலின்படி பி.எச்.டி. போன்ற தகுதி பெற்ற தமிழ் படித்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். முதன்முதலாக தமிழ்வழி கல்வியை அறிமுகம் செய்தவர் கலைஞர்.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உள்ள உதயநிதிக்கு எல்லா தகுதியும், திறமையும் உள்ளது. மிக திறமையுள்ள இளைஞர். திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    1½ ஆண்டுக்கு முன்பே அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருக்க வேண்டும். இதை கால தாமதமாக நான் கருதுகிறேன். அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பதை முதலமைச்சர் நாளை அறிவிப்பார்.

    முதலிலே அவரை அமைச்சராக ஆக்கி இருந்தால் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்திருப்பார். அவருக்கு வழங்க உள்ள பொறுப்பில் திறம்பட செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது.
    • 5-வது நாளாக நீடித்த ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதி தேர்வு நடத்தப்படும் என்ற அரசாணையை திரும்ப பெறக்கோரி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், 5-வது நாளாக நீடித்த ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    • மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
    • தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் 28 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மதியம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். மேலும், அங்கிருந்த டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

    பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்கவைத்ததே அவர்கள்தான்.

    கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக காவல்துறைக்கு அவர் அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மேலும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையில் தனி ஆணையத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். அதனால் தான் குறைந்துள்ளது.

    தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவை அரசே விற்பனை செய்யும் என அறிவித்தார். அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் மூலம் மது விற்பனையை கொண்டு வந்தார். அதற்கு சட்டமன்றத்தில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது வேண்டுமென்றே அரசின் மீது குறை, பழி சொல்லவேண்டும் என ஒருவர் பேசியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
    • அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் முன் கூட்டியே தொடங்குகிறது. ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு தொடங்கி நடைபெறும்.

    பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கல்லூரிகளில் திறந்து இருக்கும். சி.பி.எஸ்.இ., மாநில கல்வி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்க உள்ள நிலையில் ஜூலை 7-ந்தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும்.

    பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

    அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை கட்டணம் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் பலவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. ஏழை மாணவர்கள் நலன் கருதி எல்லா கல்லூரிகளிலும் சேர்க்கை கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 வீதம் ஒவ்வொரு ஆண்டிற்கும் இனி வசூலிக்கப்படும்.

    அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. 22-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
    • சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

    சென்னை:

    அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை ராணி மேரி கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டார்.

    அவருடன் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குனர் கீதா ஆகியோரும் உடன் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் இருக்கின்றன. தற்போது சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்கி உள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 643 மாணவ-மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல், விரும்பிய இடங்களில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். நாளை (வியாழக்கிழமை) முதல் பொது கலந்தாய்வு தொடங்க இருக்கிறது.

    கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு இலவச விடுதி, கல்லூரி கட்டணம் என்று அறிவித்ததன் அடிப்படையில் ஆர்வமுடன் பலர் சேருகிறார்கள். அதேபோல், புதுமை பெண் திட்டம் அறிவிக்கப்பட்டதாலும், மாணவிகளின் விண்ணப்பப்பதிவு, சேர்க்கை அதிகரித்துள்ளது.

    கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால் மட்டும் போதாது. கல்வித்தரமும் உயர வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். மாணவர்களின் திறமையையும், தகுதியையும் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான் நான் முதல்வன் திட்டம்.

    சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதன்படி, அங்குள்ள பேராசிரியர்கள், மாணவர்களும், இங்குள்ளவர்களும் அங்கே சென்று கல்வித்தரத்தை அறிந்து கொள்ள முடியும். வேலைவாய்ப்பு பயிற்சிகளை கொடுக்கவும் இயலும். வரும் காலங்களில் உயர்கல்வித்துறை மாணவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுகிற துறையாக மாறும்.

    மாணவர் சேர்க்கையை போல, கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அந்த வழக்கு முடிந்ததும், ஜூன் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

    எல்லா பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதுதொடர்பாகவும், மாநில கல்வி கொள்கை குறித்து விவாதிக்கவும் துணைவேந்தர்கள், மண்டல இணை இயக்குனர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    கவர்னர் துணைவேந்தர்கள் மாநாட்டை 5-ந்தேதி நடத்துகிறார். அதில் கலந்துகொள்வது என்பது துணைவேந்தர்களுடைய தனிப்பட்ட விருப்பம். மாநிலங்கள் மாநில கல்விக்கொள்கையை வகுப்பதற்கு முன்னுரிமை உண்டு. தமிழ்நாட்டை போல, கர்நாடகாவிலும் மாநில கல்வி கொள்கை வகுக்கப்பட உள்ளது. இதில் கவர்னர்கள் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
    • பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் உட்பட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

    பொறியியல் கலந்தாய்வுக்கு 1,87,693 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 7.5% இட ஒதுக்கீட்டில் 7,052 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது.

    தொழிற்சாலைகளோடு தொடர்புகொண்டு பொறியியல் கல்லூரிகளில் கட்டமைப்பை மாற்றியுள்ளோம். நடப்பாண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பல்வேறு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றும் பட்டம் பெறாமல் உள்ளனர்.

    பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து நடத்த வேண்டும் என்று கவர்னர் நினைக்கிறார்.

    உடனடியாக பட்டமளிப்பு விழாவை அனைத்து பல்கலைக்கழங்களில் நடத்த கவர்னர் முன்வர வேண்டும். கவர்னர் முன்வந்தால் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.

    பட்டமளிப்பு விழா குறித்து முடிவெடுக்க துணைவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • அமைச்சரை முழுமையாக நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்றார்.

    சென்னை:

    அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலகவேண்டும் என முதல்வருக்கு கவர்னர் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார்.

    ஒரு அமைச்சர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதனால் மட்டுமே அவர் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க. அமைச்சர்கள் 33 பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2 துறைகளை 2 அமைச்சர்களுக்கு மாற்றக்கோரி பரிந்துரைத்த தமிழக அரசின் கடிதத்தை கவர்னர் ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.

    கவர்னர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலாக அதே கோரிக்கையுடன் மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளோம். அமைச்சரை முழுமையாக நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது.

    துறை மாற்றத்திற்கு கவர்னர் ஒப்புதல் பெற அவசியமில்லை. மரபு கருதி கடிதம் அனுப்பப்பட்டது. அமைச்சரவையை மாற்றுகிறோம் என்று காரணங்களை குறிப்பிட்டு கடிதம் அனுப்பினாலும், அதனை கவர்னர் திருப்பி அனுப்புகிறார்.

    அமைச்சர்களின் துறைகளை ஏன் முதலமைச்சர் மாற்றுகிறார் என காரணம் கேட்க கவர்னருக்கு அதிகாரமும், உரிமையும் இல்லை.

    கவர்னர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாகவும், தமிழக அரசின் அதிகாரங்களில் அதிகம் தலையிடுபவராகவும் இருக்கிறார். அரசியல் சட்டத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் என தெரிவித்தார்.

    • தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம்.
    • பொறியியல் படிப்பில் சேர 1,87,847 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    * மாணவர்கள், தங்களது தரவரிசை பட்டியலை tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    * பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா என்ற மாணவி முதலிடம்

    * தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம்.

    * பொறியியல் படிப்பில் சேர 1,87,847 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    * அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காட்டின் கீழ் 28,425 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    * மாதம் 1000 ரூபாய் பெறும்திட்டம் மூலம் 13,284 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

    * ஜூலை 2-ந்தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு இன்னும் தொடங்காததால் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார்1.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவை ஆண்டு தோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

    அதன்படி நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதற்கான இணைய தள விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரை நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,175 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீட்டான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31,445 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

    அவர்களுக்கான ரேண்டம் எண்கள் கடந்த 6-ந்தேதி ஒதுக்கப்பட்டன.

    அதை தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது.

    சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31 ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் ஆவணங்களின் அடிப்படையில் 28,425 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.

    இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 5,842 அதிகம். இது 25.86 சதவீதம் அதிகம் ஆகும். இது தமிழக முதலமைச்சர் அறிவித்த புதுமைப் பெண் திட்டத்திற்கான வெற்றி ஆகும்.

    புதுமைப் பெண் திட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து பொறியியலில் சேர்ந்த 13,284 பேர் பயன் அடைகின்றனர்.

    நீட் தேர்வு முடிவுகள் வந்து விட்டாலும், மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்காததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு நடத்தியதும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதை பொறுத்து கலந்தாய்வு தேதியை அறிவிப்போம். பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் நேத்ரா என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார்.

    இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊரை சேர்ந்தவர் ஆவார். அவர் திருச்செந்தூரில் உள்ள காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.

    தர்மபுரியை சேர்ந்த ஹரிணிகா என்ற மாணவி 2-வது இடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு என்ற மாணவி 3-வது இடத்தை பெற்றுள்ளார். முதல் 3 இடங்களை பெற்றவர்கள் மாணவிகள் ஆவர்.

    அரசுப் பள்ளியில் படித்தவர்களில் சைதாப்பேட்டையை சேர்ந்த மகா லட்சுமி என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். நாகப்பட்டினத்தை சேர்ந்த நிவேதிதா 2-வது இடத்தை பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த சரவணகுமார் என்ற மாணவர் 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

    மாணவர்கள் விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ இன்று முதல் 5 நாட்களுக்குள் அருகில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்தை அணுகலாம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    ×