என் மலர்
நீங்கள் தேடியது "Naam Thamizhar katchi"
- ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான்.
- 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். நாங்கள் மக்களை தேடி சென்று மக்களுக்காக அரசியல் செய்கிறோம். கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது.
ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். தொடர்ச்சியாக 4 முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 117 பெண்கள், 117 ஆண்கள் போட்டியிடுவார்கள். த.வெ.க. தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டது அந்த கட்சி சார்ந்த விஷயமாகும்.
- 40 முனை இருந்தாலும் என் முனைதான் கூர் முனையாகும்.
சென்னை:
வக்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இஸ்லாமியர்கள் தங்களது சொத்துக்களை கொடையாக கொடுத்ததே வக்பு சொத்துக்கள். அது ஏழைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்கிற கோட்பாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும். அதனை வாங்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. அது அல்லாவுக்கே சொந்தமாகும்.
வக்பு வாரிய சொத்துக்களை அரசு அதிகாரிகள் நிர்வகிக்கும் முறையை கொண்டு வந்திருப்பது இந்து மக்களின் மனதை குளிர்விப்பதற்கே ஆகும்.
இந்துக்களின் வாக்கை பெறுவதற்காகவே மத்திய அரசு இது போன்று செயல்பட்டுள்ளது. வக்பு சொத்தை நிர்வகிப்பதற்கு இந்து மதத்தினரை அமர்த்துவது பேராபத்தை ஏற்படுத்தும். இந்து அறநிலையத்துறையிடம் உள்ள சொத்துக்களை நிர்வகிக்கவும் முஸ்லிம், கிறிஸ்தவர்களை நியமிக்க வேண்டும். முஸ்லிம் மதத்தை குறி வைத்து மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையது அல்ல.
இது இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கையாகும். வாக்குகளை மட்டுமே குறி வைத்து ஆட்சியாளர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் மிக வலிமையானது என்று அண்ணல் அம்பேத்கார் கூறியுள்ளார். அது திராவிடர்களின் கையில் இருப்பது மிகவும் கொடுமையானதாகும்.
தமிழகத்தில் நிலமற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும். நீண்ட நாட்கள் இது போன்று ஏமாற்றி கொண்டிருக்க முடியாது.
கால சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. அப்போது எங்களிடம் ஒருநாள் அதிகாரம் வரும் போது இதையெல்லாம் சரி செய்வோம். வாக்குகளை குறி வைத்தே இன்று கட்சிகள் செயல்படுகின்றன. மக்களை பற்றி கவலைப்படுவது இல்லை.
தி.மு.க., அ.தி.மு.க. 2 கட்சிகளும் ஒன்றுதான். கொடி மட்டுமே கொஞ்சம் மாறுபட்டுள்ளது. 2 கட்சிகளுமே லஞ்சம், ஊழலில் சிக்கி திளைத்த கட்சிகள் ஆகும். இரு கட்சிகள் ஆட்சி செய்த போதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. 2 கட்சிகளும் கச்சத்தீவை மீட்போம் என்பார்கள். டாஸ்மாக்கை மூடுவோம் என்பார்கள். ஆனால் ஒன்றும் நடக்காது.
அதனால்தான் காமராஜர் 2 கட்சிகளையும் பார்த்து ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்றார். அந்த மட்டையை பிய்த்து நார் நாராக பிரிப்பதற்குதான் நாங்கள் வந்துள்ளோம்.
தமிழக பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டது அந்த கட்சி சார்ந்த விஷயமாகும். அதில் கருத்து கூறக்கூடாது. சட்டசபை தேர்தல் நிலைப்பாடு பற்றி கேட்டுள்ளீர்கள். 40 முனை இருந்தாலும் என் முனைதான் கூர் முனையாகும். பண பலத்தோடு அவர்கள் நிற்கிறார்கள். நான் மக்களோடு நிற்கிறேன்.
பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. அடி பணிந்துள்ளதா? என்று கேட்கிறீர்கள்? எல்லா விஷயத்திலும் கருத்து சொல்வது கண்ணியமாகவும், நாகரிகமாகவும் இருக்காது. யாருடன் கூட்டணி? யாருடன் கூட்டணி என திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். டிரம்புடன் கூட்டணி வைக்கலாம் என்று நினைக்கிறேன். சைவம், வைணவத்தை குறிப்பிட்டு அமைச்சர் பேசி இருப்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.
- இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் ‘திராவிட மாடல்’ மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.
- இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடும் தமிழ்நாடு அரசு, அவர்களைவிடவும் பெரும்பான்மை சமயத்தினராக தமிழ்நாட்டில் வாழ்கின்ற கிறித்துவப் பெருமக்களின் கோரிக்கைக்கு சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.
மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளை மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? அரசின் வருமானம் ஒருநாள் தடைபடுவதைத் தவிர, மதுக்கடைகளை மூடுவதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது? எல்லோருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசு, குறிப்பிட்ட மக்களின் சமய உணர்வுகளுக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட சமய மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுவது சிறிதும் அறமற்றச்செயலாகும். இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் 'திராவிட மாடல்' மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே, திமுக அரசு கிறித்துவப் பெருமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென்றும், அதனை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.
- தமிழகத்திலேயே அதிக வழக்குகளை சந்தித்த அரசியல் கட்சி நாங்கள்தான்.
- மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.
திருச்சி:
திருச்சி நீதிமன்றத்தில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வந்த போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களுக்கான தொடர்பு தெளிவுபடுத்தப்படவில்லை.
அதேபோன்று அமைச்சர் நேருவின் சகோதரர் ராம ஜெயம் கொலை வழக்கிலும் விசாரிக்கப்பட்ட சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம் ஆகியோரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து என்கவுண்டர்களும் போலியானது. உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல், வழக்கை முடிப்பதிலேயே காவல் துறை முனைப்பு காட்டுகிறது.
யார் வேண்டுமானாலும் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் தமிழுக்கு முதலிடம் அளிக்க வேண்டும். தமிழ் எனக்கு உயிர் மூச்சு.
நான் இதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறேன். தீமையை தீமையால் வெல்ல நினைக்கக் கூடாது. நன்மையால் தீமையை வெல்ல வேண்டும் என கருதுகிறேன். ஆள் மாற்றத்திற்கான அரசியலில் நான் இல்லை.
அரசியலமைப்பு மாற்றத்தை உருவாக்க வந்தவன். ஆகவே வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்ற இதே நிலைப்பாடு தான்.
நான் கூட்டணி வைக்கப்போவதே அமெரிக்க அதிபர் ட்ரம்போடுதான் என சிரித்தவாறு கூறினார்.
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு, தேர்தல் நேரங்களில் இதுபோன்று சோதனைகள் நடத்துவது வாடிக்கையானது.
தேர்தல் நடக்கும் போது நடைபெறும் திருவிழா போன்றது. அமலாக்கத்துறை வருமானவரித்துறை என வருவார்கள்.
சட்டமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் பிரச்சனையை பேசுவதில்லை.
தமிழகத்திலேயே அதிக வழக்குகளை சந்தித்த அரசியல் கட்சி நாங்கள்தான். இதனால் எங்கள் கட்சியின் செயல்பாடு வேகம் குறையாது. கோலி குண்டு விளையாடியது கோர்ட்டு வாசலில்தான். நீதிபதி மன்றங்களும், ஜெயில்களும் கட்டப்பட்டதே எங்களுக்காகத்தான் என்று நினைக்கிறேன்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.
- தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
- இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர்.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தமிழகத்தில் முன்எப்போதும் இல்லாத வகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் களம் காண உள்ளனர். இதில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கிட்டத்தட்ட கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளுடனும் போட்டியிட உள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அரசியலில் களம் கண்டு முதல் தேர்தலை எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் தற்போது வரை தனித்து போட்டியிடும் சூழலில் தான் உள்ளது. இருப்பினும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் இவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில், சட்டசபையில் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். நாளைய தினம் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டத்தில் இடும்பாவனம் கார்த்தி அறிமுகப்படுத்தப்படுகிறார்.
- தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
- தற்போதுதான் மக்களுக்கு மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு, இயற்கை உணவுகள் மீதான ஆர்வமும் - அக்கறையும் அதிகரித்து வருகிறது.
சென்னை :
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தர்பூசணி குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதால், விற்பனை குறைந்து தர்பூசணி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
ஒரு சில விசமிகள் தர்பூசணியில் செயற்கை இரசாயனம் கலக்கின்றனர் என்ற புகாரில், ஒட்டுமொத்த தர்பூசணி விவசாயிகளும் பாதிக்கப்படும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
கோடைக்காலத்தில் மட்டுமே நடைபெறும் பெருமளவு விற்பனையை நம்பியே நுங்கு, இளநீர், பதநீர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட தாகம் தணிக்கும் இயற்கை பானங்களையும் - பழங்களையும் உள்நாட்டு ஏழை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.
நம் நாட்டில் உடலுக்கு கேடு விளைவிக்கும், விலை அதிகமான பன்னாட்டு பெருநிறுவனங்கள் தயாரிக்கும் செயற்கை குளிர்பானங்கள் குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறையில் பளப்பளப்பாகப் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டு விவசாயிகள் வெயிலிலும், மழையிலும் வெம்பாடுபட்டு விளைவிக்கும் இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி போன்றவை இன்றளவும் தெருவோரத்தில் கிடக்கிறது என்பதுதான் வேதனை நிறைந்த உண்மை.
தற்போதுதான் மக்களுக்கு மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு, இயற்கை உணவுகள் மீதான ஆர்வமும் - அக்கறையும் அதிகரித்து வருகிறது. உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது, நலம்தரும் சத்துகள் நிறைந்த இயற்கை பானங்களையும், பழங்களையும் அதிகளவில் விற்பனையாக ஊக்கப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையாகும். ஆனால், அதற்கு நேர்மாறாக இயற்கையாக விளைவிக்கப்படும் பழங்களில் செயற்கை இரசாயனங்கள் கலக்கப்படுவதாக அரசு அதிகாரிகளே வதந்தியைப் பரப்பி, மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி, தர்பூசணி விளைவித்த விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியருப்பது சிறிதும் அறமற்ற கொடுஞ்செயலாகும்.
தவறு செய்பவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதை விடுத்து தமிழ்நாட்டு தர்பூசணி விவசாயிகள் அனைவரையும் அரசு தண்டித்திருப்பது எவ்வகையில் நியாயமாகும்?
அரசு அதிகாரிகளின் இத்தகைய அவதூறு பரப்புரைகளுக்குப் பின்னால் பன்னாட்டு செயற்கை குளிர்பான நிறுவனங்களின் திட்டமிட்ட சதி இருப்பதாக தமிழ்நாட்டு விவசாயிகள் சந்தேகிப்பது மிக மிக நியாயமானதாகும்.
ஆகவே, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் பொய்ப்பரப்புரையால் தர்பூசணி விற்பனை பெருமளவு குறைந்து பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வோடு விளையாடும் கொடுஞ்செயலாகும்.
- அனைவரையும் உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களை, கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய கடந்த 4 ஆண்டுகளாக தி.மு.க. அரசு மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது காலியாக உள்ள 2500 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வோடு விளையாடும் கொடுஞ்செயலாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு தம்முடைய பிடிவாதத்தை இனியேனும் கைவிட்டு, செவிலியர் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எவ்வித நிபந்தனையுமின்றி அவர்கள் அனைவரையும் உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம்.
- தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்.
கே.கே. நகர்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கொலை நடந்து 13 ஆண்டு கடந்த நிலையிலும் குற்றவாளி யார்? என்று தெரியவில்லை. பெரிய தலைவர்களின் நிலை இப்படி என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. உரிய விசாரணை நடத்தப்படவில்லை.
அரசுக்கு எது தேவையோ எடுத்துக் கொள்ளப்படுகிறது. மற்றவைகளை மூடி மறைக்கப்படுகிறது.
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது யாருக்கும் தெரியாது.
நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் அனைத்தும் தி.மு.க.வின் அலுவலகம் போன்று செயல்படுகிறது.
நான் பெரியார் குறித்து பேசியதற்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் நான் கொடுக்கும் வழக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
ஆனால் என் மீது கொடுக்கப்படும் வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
என் மீது பல்வேறு இடங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான எல்லா வழக்குகளும் ஒன்றிணைந்து விசாரிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் நீதிமன்றம் மதிப்பை இழந்து வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என சி.ஓட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. நாங்கள் பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு 36 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். ஆனால், எங்கள் கட்சி அந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.
இதிலிருந்து கருத்துக்கணிப்பின் நேர்மை புலப்படுகிறது. இது கருத்துக்கணிப்பல்ல, கருத்து திணிப்பு. நாங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல, போராளிகள் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம்.
ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. அதில் உண்மை உள்ளதா இல்லையா என தெரியவில்லை. அதில் வழக்கில் தொடர்புடைய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளிகளா அல்லது குற்றத்தில் தொடர்புடையவர்களா? என்பதை அரசு கூற வேண்டும்.
சவுக்குசங்கர் வீடு தாக்குதலுக்கு உள்ளானது. குற்றத்தை யார் புரிந்தார்? என்பது வெளிப்படையாகவே தெரியும். அதற்கு எதற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை. அதிகாரத்தில் உள்ளவர்களே அந்த குற்றச்செயல்களை செய்துள்ளனர்.
இது பூனை தன் குட்டியை கவ்வதும், எலியை பிடிப்பதற்கு உள்ள வித்தியாசமாகும். எங்களை கடிக்கும் போது எலியை கடிப்பது போல் கடிக்கிறீர்கள். கொடுமையானவர்களே குற்றச் செயல்களில் உடந்தையானவர்களை பூனை குட்டியை கவ்வதை போல் பிடிக்கிறீர்கள்.
சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கில் ஒப்புக்காக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரம் அவர்கள் கையில் உள்ளதால் நாட்டில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுட்டு பிடிப்பதற்கு காரணம் அவர்களது இயலாமை. அவர்களை பிடித்தால் பல்வேறு உண்மைகள் வெளியே வரும் என்பதால் அவர்களை சுட்டுக்கொன்று விடுகின்றனர்.
சங்கிலி திருடர்களை சுட்டு பிடிப்பதற்கு என்ன காரணம்? கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த சம்பவத்தை விட இது பெரிய சம்பவமா?
குடித்துவிட்டு பாட்டிலை திரும்பி கொடுத்தால் பத்து ரூபாய், பாடையிலே படுத்துவிட்டால் 10 லட்ச ரூபாய், இது திராவிட மாடல் பாலிசி. வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு தி.மு.க.வை வீழ்த்துவேன் என்ற விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.
நான் பிரபாகரனை போல தனித்தே நின்று போட்டியிடுவேன். நான் புலி போன்றவன் தனித்தே நின்று போட்டியிடுவேன். படை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பவன் அல்ல நான். கூட்டத்தில் ஒரு ஆளாக போட்டியிட துணிவோ, வீரமோ தேவையில்லை, தனித்து நிற்கவும் தான் துணிவும் வீரமும் தேவை.
எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம். எந்த குழப்பமும் இல்லை தடுமாற்றமும் இல்லை. இன்னும் சில மாதங்கள் உள்ளது. தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.
- கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறங்கினார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனிடையே கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி. இவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியில் அவர் இணைந்தார். உடனடியாக அவருக்கு நா.த.க தலைமை கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமென செய்யப்படும் சூழ்ச்சியேயாகும்.
- தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க அரசு சார்பாக என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொடர்வண்டித்துறை தேர்வெழுத தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும்.
தென்னக தொடர்வண்டித்துறையில் காலியாகவுள்ள 493 லோகோ பைலட் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு வருகின்ற 19.03.25 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்காக, தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்களை ஒதுக்கி, நுழைவுச் சீட்டினை அனுப்பி இருப்பது தேர்வர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதற்கட்டத் தேர்வுக்கு அருகாமையிலேயே தேர்வு மையங்களை அமைத்துக்கொடுத்த தேர்வாணையம் இரண்டாம் கட்ட தேர்விற்கு 1000 கி.மீ.க்கு அப்பால் தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளது.
தேர்வு மையம் குறித்து நான்கு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்ற நிலையில், வேறு மாநிலத்தின் இரண்டாம் நிலை நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்துள்ள தேர்வு மையத்தினை தமிழகத் தேர்வர்கள் கண்டறிவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, இது தமிழகத் தேர்வர்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, உளவியலாக அவர்களைச் சிதைத்துத் தோல்வியுறச் செய்வதற்கும், தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமென செய்யப்படும் சூழ்ச்சியேயாகும். இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கின்ற தமிழ்நாட்டில் போதிய அளவில் தேர்வு மையங்களை அமைக்காதது ஏன்?
கடந்த 2019 ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறையின் முதல்நிலை தேர்விலும் இதேபோன்று வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்து அறிவிப்பு வெளியானபோதும், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் உடனடியாக அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அது குறித்து உடனடியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022 ஆம் ஆண்டு மற்றும் தற்போதும் தேர்வு மையங்கள் வேற்று மாநிலத்தில் அமைக்கப்படுவதை வாய்மூடி வேடிக்கைப்பார்ப்பது ஏன்? தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க அரசு சார்பாக என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்துதர தொடர்வண்டித்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை தொடர்வண்டித்துறை இரண்டாம் கட்டத் தேர்வினை தள்ளிவைக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- முறையான விசாரணை நடத்தி, கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை, உக்கடம் அருகே வாகனத்தில் எரிகாற்று உருளை வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை தேசியப்புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிகத்தவறான நிர்வாக முடிவாகும். தேசியப்புலனாய்வு முகமையானது பா.ஜ.க.வின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசியப்புலனாய்வு முகமையின் வசம் இவ்வழக்கை ஒப்படைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. வன்முறைச்செயலில் ஈடுபட்டு, சமூக அமைதியைக் குலைக்க முனைவோர் எவராயினும் அவர்களை சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேசமயம், இவ்வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ளவர்கள் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, அச்சமூகத்தினரையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் போக்கென்பது மிக ஆபத்தானது.
இவ்விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, அக்கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய தேசிய கட்சிகளுக்கு எதிராகவும், மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.முக.வுக்கு எதிராகவும் நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.
- மாநில, தேசிய கட்சிகளுக்கு எதிராக எப்போதுமே செயல்படுவோம் என்றும், தனித்து போட்டியிடும் முடிவில் எப்போதும் மாற்றம் இருக்காது என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டியிடுவது என்கிற முடிவில் மாறாமலேயே இருந்து வருகிறார்.
2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த கட்சி இதுவரை நடந்துள்ள சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தனித்தே களம் கண்டுள்ளது. தேர்தல் களத்தில் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் தனித்து போட்டியிடுவதையே நாம் தமிழர் கட்சி பலமாக கருதுகிறது.
அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. இதற்கான பணிகளை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான ஏற்கனவே தொடங்கி விட்டார்.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்கிறது.
இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சீமான் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், அடுத்த மாதம் நாம் தமிழர் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு பிறகு இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய தேசிய கட்சிகளுக்கு எதிராகவும், மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.முக.வுக்கு எதிராகவும் நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது. இப்படி மாநில, தேசிய கட்சிகளுக்கு எதிராக எப்போதுமே செயல்படுவோம் என்றும், தனித்து போட்டியிடும் முடிவில் எப்போதும் மாற்றம் இருக்காது என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.