என் மலர்
நீங்கள் தேடியது "Pension Scheme"
- கலெக்டர் அலுவலகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மதுரை
அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், பரமேஸ்வரன், தினகர்சாமி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஜுலை 1-ம் தேதி முதல் 4 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும், குறைபாடு இல்லாத மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 20 சதவீதம் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65-70 வயது எட்டிய பழைய ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன் வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரெயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது?
- இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம் தான் கட்டமைக்கப்பட்டிருந்தது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் செயல்படுத்த முடியாது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது பேசுவதற்கு இனிப்பாக இருக்கும். நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் கசப்பானதாக இருக்கும் என்பது தான் பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக இருந்தது.
ஆனால், அதையெல்லாம் முறியடித்து ராஜஸ்தான் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது.
அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இந்த மாநிலங்களுக்கு முன்பே மேற்குவங்கம் என 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலில் ஆறாவது மாநிலமாக இமாச்சலப்பிரதேசம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
இமாச்சல சட்டப் பேரவைத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
அதன்படியே ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதல் அறிவிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது.
இந்தியாவின் 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது?
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தான் நாட்டிற்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், அந்த வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது. இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பகவத் கரத் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
- பஞ்சாப் அரசும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி :
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பகவத் கரத் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறி இருப்பதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்கள் தங்கள் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற முடிந்தது. இந்தத் தொகை தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்தது.
ராஜஸ்தான், சத்தீஷ்கார், ஜார்கண்ட் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டு வரும் முடிவினைத் தெரிவித்துள்ளன. பஞ்சாப் அரசும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால் ஓய்வூதியத் தொகை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ), சட்டப்படி தேசிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (என்.பி.எஸ்.) மாநில அரசுகளும், ஊழியர்களும் அளித்த பங்களிப்பை மாநில அரசுகளிடம் திரும்பத்தர சட்டப்படி இயலாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் வழியிலான அரசு இது என முதல்வர் பேச்சு
- நம் அரசு வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நலனுக்கென பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2023 விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-
அயலக மண்ணில் வசிக்கும் நம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்குத் தேவை ஏற்படக்கூடிய நிலைகளில் உதவி புரிந்து வரும் தமிழ்ச் சங்கங்களின் பணிகளை அங்கீகரிக்கவும், அடுத்த தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் "அயலகத் தமிழர் நாள்" கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது வெறும் அறிவிப்பல்ல என்பதைத்தான் இங்கே திரண்டிருக்கின்ற நீங்களும் உங்களோடு கலந்து நானும் சேர்ந்து இங்கே நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்திட முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டோடு தமிழ் பரப்புரை கழகத்தைத் தொடங்கி வைத்தேன்.
தமிழர்களின் நலன் பேணவும் அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவும், புலம்பெயர் தமிழர் நலவாரியம் உருவாக்கப்பட்டு கார்த்திகேய சிவசேனாபதி அதன் தலைவராகவும், வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய தமிழர்கள் அரசுசாரா உறுப்பினர்களாகவும், அரசு உயர் அலுவலர்களை உள்ளடக்கியதாகவும் இந்த வாரியம் செயல்பட உள்ளது. ஆம்.. சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் வழியிலான அரசு இது.
அயலகத்தில் வாழும் தமிழர் நலன் காக்கும் வகையில் தொடங்கப்பட்ட இத்துறையில், கடந்த ஓராண்டில் மட்டும், வெளிநாடுகளில் இறந்து போன 288 தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருதல், அங்கே இறந்தவர்களின் ஊதிய நிலுவை மற்றும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருதல்,
மருத்துவ இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தல், இதுபோன்ற வேலைகளை அங்குள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது.
அயலகத் தமிழர்களின் நலனுக்கென அமைக்கப்பட்டுள்ள அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்து, அயல்நாட்டிற்கு செல்லும் தமிழர்களுக்கு அடையாள அட்டை, காப்பீடு, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை என பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
ஏற்கனவே நம் அரசு, வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நலனுக்கென பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், வெளிநாடுகளிலிருந்து 80 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பணி வாய்ப்பை இழந்த காரணத்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மூலமாக மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கும் புதிய திட்டம் செயல்ப டுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்ட போது, இந்திய ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடனும், உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடனும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியால், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த 1,890 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்களில் 1,524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் சொந்த ஊருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தமிழ்நாடு அரசின் சார்பிலே உடனடியாக அவர்களுக்குத் தேவையான 174 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள், பால்பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்து, மனிதநேய அடிப்படையில் அங்குள்ள மக்களின் இன்னலைப் போக்கிட உதவிக்கரம் நீட்டியது.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும்போதெல்லாம், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கவனத்தில்கொண்டு, தாயுள்ளத்தோடு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, அயலகத் தமிழர் நாளான இன்று சில அறிவிப்புகளை மகிழ்ச்சியோடு நான் அறிவிக்க விரும்புகிறேன்.
முதலாவதாக, தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு காலக்கட்டங்களில், புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.
2-வதாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்.
3-வதாக அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நான்காவதாக, அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவுத் தளம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிடுவதோடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் தமிழ்ச் சொந்தங்களின் நலன் காத்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, கண்ணை இமை காப்பதைப்போல, உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன். தமிழ்நாட்டி னுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கக்கூடிய நான், உங்களில் ஒருவனாக, உங்களுடைய ஒரு சகோதரனாக, உங்களில் பலருக்கு அண்ணனாக, சிலருக்கு தம்பியாக, ஏன், அனைவருக்கும் உடன்பிறப்பாக நான் இருக்கிறேன். உங்களுக்கு உறுதுணையாக இந்த அரசு இருக்கும். உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய உங்களால் ஆன ஒத்துழைப்பினை நீங்கள் வழங்குங்கள், இணைந்து நாம் பயணிப்போம். நம்மைக் கடலும் கண்டங்களும் பிரித்திருந்தாலும், தமிழ் இணைக்கும். உலகெங்கும் வாழும் தமிழர் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு தழைக்கும்.
அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அரசுப் பணியாளர்களுக்கான யு.பி.எஸ். திட்டம் ஏப்.1-ந்தேதிமுதல் அமலுக்கு வர உள்ளது.
- யு.பி.எஸ். திட்டத்தை மாநில அரசுகளும் அமல்படுத்தலாம்
புதுடெல்லி:
நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி (என்.பி.எஸ்). கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு உறுதியான ஓய்வூதியம் கிடைக்காது.
அத்துடன் அரசுப் பணியாளர் ஒருவர் கடைசியாக என்ன ஊதியம் வாங்கினாரோ, அதில் 50 சதவீதத்துக்கு நிகராக ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்த பழைய ஏற்பாட்டையும் என்.பி.எஸ். மாற்றியமைத்தது.
இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்டில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு (யுபி எஸ்) மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசுப் பணியாளர்களாக குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் தாங்கள் கடைசியாக பெற்ற
ஊதியத்தில் மீண்டும் 50 சத வீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவதையும், பணவீக்க (விலைவாசி உயர்வு விகிதம்) போக்குகளுக்கு ஏற்ப அவ்வப்போது அகவிலைப்படி உயர்வுபெறுவதையும் இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.
25 ஆண்டுகளை நிறைவு செய்யாவிட்டாலும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் மத்திய அரசுப் பணியாளர்களாகப் பணியாற்றியிருந்தால், அவர்களும் குறைந்தபட்சம் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதை யு.பி.எஸ். திட்டம் உறுதி செய்கிறது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையின்படி, மத்திய அரசுப் பணியாளர்களுக்கான யு.பி.எஸ். திட்டம் ஏப்.1-ந்தேதிமுதல் அமலுக்கு வர உள்ளது.
யுபிஎஸ் திட்டத்தில் சேருவோர், புதிய ஓய்வூதிய திட்டத்தில் (என்.பி.எஸ்.) மீண்டும் இணைய முடியாது. யு.பி.எஸ். திட்டத்தை மாநில அரசுகளும் அமல்படுத்தலாம்.
- மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
- 24.01.2025 அன்று ஒன்றிய அரசும் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் தற்போது சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இதனிடையே பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசும் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
1. ககன்தீப்சிங் பேடி. இ.ஆ.ப. கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை.
2. டாக்டர்.கே.ஆர்.சண்முகம், முன்னாள் இயக்குநர், Madras School of Economics
3. பிரத்திக் தாயன். இ.ஆ.ப. துணைச் செயலாளர் (வரவு செலவு), நிதித் துறை, உறுப்பினர் செயலர்.
இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மத்திய அரசுக்கு முன்பாக தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணையிட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் ஐயமில்லை.
மத்திய அரசுக்கு முன்பாக தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின்படி அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது என்பதால், அந்த முறையை மாற்றி விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். எனவே, குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி பராமரிப்பு பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அது பற்றிய உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமாகிறது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை 2003-ல் நடைமுறைக்கு கொண்டுவந்த பின்பு, அத்திட்டப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடாக 10 சதவீதம் தொகையை அரசு வழங்கி வருகிறது. இத்திட்டப்படி இந்தத் தொகைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய முடிவெடுக்காத நிலையில் இந்த நிதி தனி பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது.
இந்த நிதி அவ்வப்போது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சேமநல வைப்பு நிதி வட்டி வீதத்தின்படி வட்டியைக் கணக்கிட்டு, அத்தொகைக்கும் கருவூல பத்திரங்களில் கிடைக்கும் வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மாநில அரசே பொறுப்பேற்று அதை கருவூல பத்திர முதலீட்டில் கிடைக்கும் வட்டியுடன் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படுகிறது.
அந்தவகையில் அரசு 2017-18-ம் ஆண்டு வரை ரூ.2,115.47 கோடி கூடுதல் வட்டியை வழங்கியுள்ளது. இந்த நிதியில் உரியவாறு ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா? என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த நிதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ரூ.8,283.97 கோடியுடன் அரசின் பங்களிப்பாகப் பெறப்பட்ட ரூ.8,283.97 கோடியும், பெறப்பட்ட வட்டியாக ரூ.5,252.90 கோடியும் பொதுக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டிலும் பெறப்படும் பங்களிப்புத் தொகை முறையாக வரவு வைக்கப்படுவதுடன் ஆண்டின் இறுதியில் அதற்கான வட்டியும் கணக்கிடப்பட்டு அதுவும் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படும். ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை எவ்வளவு?, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை எவ்வளவு?, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு? என்பதை முறையாக அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மூலம் கணக்கிட்டு கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் விவரத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் http://cps.tn.gov.in/pub-l-ic இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி தனி பொதுக்கணக்கு வட்டியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே பிடித்தம் செய்யப்பட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுவதுடன் அதற்கான வட்டி, சேமநல நிதிக்கு தற்போது கிடைக்கும் வட்டி அளவான 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.