என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power loom"

    • கடந்த 19-ந் தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் கிலோ நூல்கள் பயன்படுத்தப்படுகிறது.

    பல்லடம்:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில், மின் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் நலி வடைந்துள்ளது. கடந்த 2022 நெசவு கூலி உயர்வு ஒப்பந்தத்தின்படி கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த 19-ந் தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    விசைத்தறிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் மறு சுழற்சி நூல் மில்களில் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேக்கமடைந்துள்ளது.

    இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மாநில தலைவர் ஜெயபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேக்கமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் 1,700 ஸ்பின்னிங் நூற்பாலைகளும், 650 ஓ.இ.மில் என்கின்ற மறுசுழற்சி நூற்பாலைகளும், 5.5 லட்சம் விசைத்தறிகளும் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பில் 5.50 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தியாகின்றது.

    இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் கிலோ நூல்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தால் நூற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேங்கியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இதனை விசைத்தறியாளர்கள்-ஜவுளி உற்பத்தியாளர்கள் பிரச்சனை என்று பாராமல், ஒட்டு மொத்த ஜவுளி தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்பதனை கருத்தில் கொண்டு உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.
    • விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

    கோவை:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து விசைத்தறியாளர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அதன்படி விசைத்தறியாளர்கள் கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் பகுதியில் தங்கள் குடும்பத்தினருடன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவையில் நடந்த விழாவுக்கு வருகை தந்த பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சோமனூரில் போராட்டத்தில் ஈடுபட்டு விசைத்தறியாளர்களை நேரில் சந்தித்தார்.

    அப்போது அவர் தரையில் அமர்ந்து விசைத்தறியாளர்களுடன் பேசினார். அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அவர், நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடும் உங்களுக்கு பா.ஜ.க உறுதுணையாக இருக்கும் என கூறி தங்களது ஆதரவை தெரிவித்தார்.

    பின்னர் அவர் விசைத்தறியாளர்கள் மத்தியில் பேசியதாவது:-

    விசைத்தறியாளர்களின் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் தங்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர்.

    எனவே விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

    ஒரு மாத காலமாக நடந்து வரும் இந்த போராட்டம் விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர். எனவே விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விசைத்தறித் தொழில் ஏழைகளை வாழவைக்கும் தொழில். 60 சதவீத கூலி உயர்வு கோரிக்கை நியாயமானது.
    • ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது

    சூலூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஜவுளி உற்பத்தியாளர்களுடனான நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நேற்று முதல் விசைத்தறியாளர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

    சோமனூரில் நடந்த இந்த போராட்டத்தில், சோமனூர், அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான ஈ.ஆர். ஈஸ்வரன், சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

    அப்போது ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசும்போது, விசைத்தறித் தொழில் ஏழைகளை வாழவைக்கும் தொழில். 60 சதவீத கூலி உயர்வு கோரிக்கை நியாயமானது. இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பி, முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வி.பி கந்தசாமி எம்.எல்.ஏ. பேசும்போது, விசைத்தறி உரிமையாளர்களுக்கு விரைவில் பிரச்சினையை முடித்து தர வேண்டும். தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதால் விசைத்தறி தொழில் அழிந்து வருகிறது. ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விசைத்தறி தொழில் நசிந்து போகாமல் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

    இன்று 2-வது நாளாக விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. விசைத்தறியாளர்கள் தொடர் போராட்டத்தால், ரூ.600 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும் அரசும், ஜவுளி உற்பத்தியாளர்களும் இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காணாவிட்டால், தொழில் மேலும் பாதிக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    • விசைத்தறி கூடத்தில் ஈரோடு மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீட்டு அமலாக்க துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
    • இது குறித்து குழந்தைவேல் மீது தகுந்த ஆதாரங்களுடன் ஜெயவேல் கணேசன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே சிறுக்களஞ்சி ஊராட்சி, கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி (45). இவர் விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார்.

    இவரது விசைத்தறி கூடத்தில் ஈரோடு மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீட்டு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஜெயவேல் கணேசன் தலமையில் அமலாக்க துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது குழந்தைசாமிக்கு சொந்தமான 2 விசைத்தறிகளில் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட டாபி டிசைனுடன் கூடிய காட்டன் பெட்ஷீட் ரகத்தை உற்பத்தி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் இது குறித்து குழந்தைவேல் மீது தகுந்த ஆதாரங்களுடன் ஜெயவேல் கணேசன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னிமலை பகுதியில் இது போன்று பல விசைத்தறி கூடங்களில் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகத்தினை உற்பத்தி செய்வதாக தொடர் புகார் வந்துள்ளது.

    அதனால் இது போன்று தொடர்ந்து தீடீர் சோதனை நடத்தப்படும் என்றும், இது போன்று கைத்தறி ரகத்தினை விசைத்தறியில் உற்பத்தி செய்து அதை விற்பனைக்காக வாங்கி வைத்திருப்பதும் சட்டபடி குற்றம் என அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது.
    • நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை

    திருப்பூர் : 

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் சோமனூரில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த மூன்று மாதங்களாக, ஆணைய தலைவர், அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மின் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அரசு உடனடியாக மின் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    சாதா விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை வரும் காலங்களில் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டணம் குறைக்கப்படும் வரை, மின் கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்து 70 நாட்கள் ஆகியுள்ளது. நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.
    • தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம்.

    திருப்பூர்:

    மின் கட்டணம் குறைப்பு, டிமாண்ட் கட்டணம் குறைப்பு, நிலை கட்டணத்தை பழைய கட்டணப்படி மாற்றுதல், எல்.டி.சி.டி., உச்ச நேர கட்டணங்களில் இருந்து விலக்கு அளித்தல், சூரிய ஒளி மின் உற்பத்திக்கான நெட்வொா்க் கட்டணங்களை ரத்து செய்தல், பஞ்சு,நூல் விலையை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஜவுளி தொழில் துறையினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

    இதற்காக அத்தொழில் துறையினா் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடு பட்டனா். தமிழக அரசு சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்த தொழில் துறையினா் வரவழைக்கப்பட்டனா். சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.

    பேச்சுவாா்த்தை நடந்து 2 வார காலங்கள் ஆன நிலையில் தமிழக அரசிடமிருந்து எந்தவித ஆறுதலான பதில்களும் இதுவரை கிடைக்க வில்லை. இது தொழில் துறையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசைத்தறி தேசிய மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத் தலைவா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:-

    மின் கட்டண உயா்வு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பெரும் பாலான தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தும், சில நிறுவனங்கள் இயங்காமலும் உள்ளன. இதே நிலை நீடித்தால் ஜவுளித் தொழில் ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயம் உள்ளது. தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம். ஆனால் இதுவரை, அரசிடமிருந்து நம்பிக்கையான பதில் எதுவும் வராதது வருத்தம் அளிக்கிறது. ஜவுளித் தொழில் துறையினரை அரசு மீண்டும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

    • மத்திய அரசு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன,
    • நெசவாளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் நேற்று கைத்தறி நெசவு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. சர் பிட்டி தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் முன்னிலையில், சேலம் நெசவாளர் சேவை மைய இணை இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

    மத்திய அரசு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, நெசவாளர்களுக்கு 90 சதவீத மானியத்துடன் தறி மற்றும் உபகரணங்கள் , நெசவாளர் தறி கூடம் அமைக்க ரூ.1லட்சத்து 20 ஆயிரம் மானியம் பெறவும், நெசவாளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 கிலோ கொண்ட நூல் 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது விலை ஏற்றத்தின் காரணமாக 17 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.
    கருமத்தம்பட்டி:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சேலை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது சேலை உற்பத்தியாளர்களிடம் இருந்து நூல், ஜரிகை, பாலியஸ்டர் நூல் போன்றவை வாங்கி கூலி அடிப்படையில், விசைத்தறி உரிமையாளர்கள் சேலை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சேலை உற்பத்தியாளர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேலை உற்பத்தியை 15 நாட்களுக்கு நிறுத்த சேலை உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, சோமனூர், கிட்டாம்பாளையம், பதுவம்பள்ளி, தொட்டியபாளையம், மாதப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சாமலாபுரம், கோம்பக்காடு, பள்ளப்பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் சேலை தயாரிப்பு விசைத்தறி கூடங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து சேலை உற்பத்தியாளர் ரவி என்பவர் கூறியதாவது:-

    நூல் விலை தற்போது 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். நூல் விலை அதிகரிப்பதால், சேலையின் உற்பத்தி விலையும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் நெசவு செய்யும் சேலையை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடிவதில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 கிலோ கொண்ட நூல் 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது விலை ஏற்றத்தின் காரணமாக 17 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. வார்ப்பு நூல் 15 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.

    இதனால் சேலை விலை சராசரியாக ரூபாய் 30 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நூல் விலை தினமும் ஏறுவதால் சமாளிக்க முடியவில்லை. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    ×