என் மலர்
நீங்கள் தேடியது "Private Finance Company"
- தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளியில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் நடத்தி பொருட்கள் கொடுக்காமல் ஏமற்றியதாக தனியார் பைனான்ஸின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாக்கடை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் என்கின்ற ராஜன் மற்றும் அவரது சகோதரி வனிதா ஆகியோர் தனியார் பைனான்ஸ், தனியார் சிட்பண்ட்ஸ், தனியார் டிராவல்ஸ், தனியார் சிறு சேமிப்பு திட்டம், தனியார் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம், தனியார் சூப்பர் மார்கெட் என பல்வேறு நிறுவனங்களை போச்சம்பள்ளி தலைமையிடமாக கொண்டு நடத்தி வந்தனர்.
தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு சீட்டு நடத்தினார். அதில் நம்ப முடியாத வாக்குறுதிகளை அளித்து விளம்பரப்படுத்தினார். மாதம் ரூ.300 என ஒரு வருடத்திற்கு ரூ.3600 கட்டினால் சுமார் ரூ.9000 மதிப்புள்ள வீட்டு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தார். இதனை நம்பிய பொது மக்கள், இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவடங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த திட்டத்தில் பொது மக்கள் சேர்ந்தனர். பலர் ஏஜென்டுகளாக மாறி தங்களது கிராமத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் இந்த திட்டத்தில் இணைத்தனர்.
இதனால் நிறுவனத்திற்கு சுமார் ரூ.9 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தற்போது தீபாவளி வந்தும் பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு பதில் அளித்து வந்தனர்.
தினமும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 100-க்கும் மேற்பட்டோர் பைனான்ஸ் நிறுவனம் முன்பு காத்திருந்து சென்ற நிலையில், பணத்தை ஏதாவது ஒரு வகையில் திருப்பி கொடுப்பார்கள் என எதிர்பாத்திருந்த பொது மக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்று தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் வனிதாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வனிதா கைது செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிய வரவே, போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
அதிகளவில் திரண்ட பொதுமக்களை கட்டுப் படுத்த பர்கூர் சரகத்திற்கு உட்பட்ட பாரூர், நாகரசம்பட்டி, பர்கூர், பர்கூர் மகளிர், போச்சம் பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட வனிதாவை போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைக்க அழைத்து செல்ல முயன்றபோது போலீஸ் வாகனத்தை தடுத்தனர். வாகனம் சென்ற பின்னர் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பணத்தை பெற்றுத்தர போலீஸ் நடவடிக்கை எடுக்காமல், மேலாளர் வனிதாவுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக குற்றம் சாட்டினர். அப்போது அங்கிருந்த பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன், அவர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவராக மனுக்களை அளிக்க கேட்டார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
இதைத்தொடர்ந்து வனிதாவை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
- இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் தண்ணீர் தொட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செவ்வந்தி வீரன் (வயது 60). இவர் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஒச்சம்மாள் (வயது 57). இவர்களது மகன் ராஜேஷ் (வயது 30). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இவர்கள் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை வாங்கி அதனை மாத தவணையாக கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. நேற்று வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை கேட்டு ஒச்சம்மாளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பார்த்ததால் அவர் மிகுந்த வேதனையடைந்தார். இரவு வீட்டுக்கு வந்த தனது கணவர் மற்றும் மகனிடம் இது குறித்து அவர் கூறி கதறி அழுதார். பொதுமக்கள் முன்னிலையில் தன்னை அவமானமாக பேசியதால் இனிமேல் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்து 3 பேரும் விஷ மருந்தை குடித்தனர்.
இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களது உடல்களை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நாய், வீட்டு வளாகத்தில் நின்றிருந்த ஜெகதீஷ் மீது பாய்ந்தது. அவரை 12 இடங்களில் கடித்து குதறியது.
- புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாயை ஏவி கடிக்க வைத்த பிரியாவை கைது செய்தனர்.
கோவை:
கோவை அருகே உள்ள வெள்ளலூர் மகாகணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி தர்ஷனா என்ற பிரியா(29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு மணிகண்டன் ரூ.6½ லட்சத்துக்கு புதிதாக கார் வாங்கினார். அதற்கு முன்பணமாக ரூ.2 லட்சம் செலுத்தினார். மீதமுள்ள பணத்துக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினார். அதற்கு மாதம் தோறும் ரூ.6 ஆயிரத்துக்கும் மேல் தவணை தொகை செலுத்த வேண்டும்.
ஆனால் அந்த தவணை தொகையை மணிகண்டன் முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அவர் 20 மாதத்துக்கும் மேல் தவணை தொகையை செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள், தவணை தொகையை செலுத்தவில்லை என்றால் காரை பறிமுதல் செய்வோம் என்று கூறினர்.
இதன்படி அந்த நிதிநிறுவனத்தில் வேலை செய்து வரும் ஜெகதீஷ்(45), சுரேஷ், கதிரவன் ஆகிய 3 பேரும் மணிகண்டனின் வீட்டுக்கு சென்றனர். அப்போது மணிகண்டனும், அவரது மனைவியும் தங்களிடம் பணம் இல்லை என்றனர்.
இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேரும் தங்களிடம் இருந்த சாவியை வைத்து அந்த காரை எடுக்க சென்றனர். அப்போது அங்கு ஓடிவந்த மணிகண்டன் திடீரென காரை ஸ்டார்ட் செய்து, அங்கிருந்து ஓட்டிச்சென்றார். ஜெகதீஷ் உள்பட நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேரும் காரை நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்... என்று கூறியபடி பின்னால் ஓடினர். இருந்தாலும் மணிகண்டன் நிறுத்தாமல் காரை ஓட்டிச்சென்று விட்டார்.
அப்போது அங்கு நின்றிருந்த பிரியா, தான் வளர்த்து வரும் ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த நாயை அவிழ்த்து விட்டதுடன், ஜெகதீஷ் உள்பட 3 பேரை பார்த்து அவர்களை விடாதே, கடி.. கடி.. என்று கூறினார். உடனே அந்த நாய், வீட்டு வளாகத்தில் நின்றிருந்த ஜெகதீஷ் மீது பாய்ந்தது. அவரை 12 இடங்களில் கடித்து குதறியது.
நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த ஜெகதீசை அவர்கள் மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாயை ஏவி கடிக்க வைத்த பிரியாவை கைது செய்தனர்.