என் மலர்
நீங்கள் தேடியது "Priyanka Gandhi"
- இருவரையும் இமாச்சல பிரதேச மாநில முதல்வா் சுக்விந்தா் சிங் வரவேற்றாா்.
- இருவருக்கும் நினைவுப் பரிசாக பாரம்பரிய இசைக்கருவிகளை வழங்கினாா்.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, அவரது மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோா், இமாசல பிரதேசத்துக்கு நேற்று தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டனர்.
சிம்லாவின் சாப்ரா பகுதிக்கு ஹெலிகாப்டா் மூலம் வந்திறங்கிய அவா்களை இமாச்சல பிரதேச மாநில முதல்வா் சுக்விந்தா் சிங் வரவேற்றாா். இருவருக்கும் நினைவுப் பரிசாக பாரம்பரிய இசைக்கருவிகளை அவா் வழங்கினாா்.
பின்னா், சாப்ரா பகுதியில் உள்ள வத்ராவின் இல்லத்துக்கு இருவரும் சென்றனா். ஜனாதிபதியின் கோடைகால பயண மாளிகைக்கு அருகே இந்த இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லம் ஆங்கில மற்றும் மலைப்பகுதி கட்டுமான கலைகளின் கலவையாக அமைந்துள்ளது. அடா்ந்த ஊசியிலை காடுகளுக்கு இடையே அமைதியான சூழலில் இது அமைந்துள்ளது.
- தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார்.
- ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.
- பாராளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்த முயன்றனர்.
- மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவீட்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றதை ஒட்டி போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தடையை மீறி பாராளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவீட் செய்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்கள் நம் நாட்டின் பெருமை. அந்த பதக்கங்களாலும், விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பாலும் நாட்டின் கவுரவம் அதிகரிக்கிறது.
பாஜக அரசின் ஆணவம் அதிகமாகிவிட்டதால், நமது பெண் வீராங்கனைகளின் குரலை அரசு இரக்கமின்றி மிதித்து வருகிறது.
இது முற்றிலும் தவறு. அரசின் திமிரையும், அநீதியையும் முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
- ஏன் அரசும், பா.ஜனதாவும் பாதுகாக்கின்றன? ஏதேனும் பதில்கள் உள்ளதா? என்று கூறி உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இப்போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போராட்டம் நடத்தும் இடத்துக்கு சென்று மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார்.
இதற்கிடையே பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். அதில் அவர் மீது கடுமையான குற்றச் சாட்டுகள் கூறப்பட்டு இருப்பது குறித்து ஊடகத்தில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, 'பிரதமர் மோடி, இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை படித்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து நாட்டுக்கு பதில் சொல்லுங்கள்.
பிரிஜ்பூஷன் சிங்கை பிரதமர் மோடி தொடர்ந்து நாட்டின் பெண் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி அமைதியாக இருக்கிறார். விளையாட்டுத்துறை மந்திரி கண்ணை மூடிக் கொள்கிறார்.
பிரிஜ்பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசார் தொடர்ந்து பாதுகாத்து வருகிறார். தாமதப்படுத்தி வருகின்றனர். இவரை ஏன் அரசும், பா.ஜனதாவும் பாதுகாக்கின்றன? ஏதேனும் பதில்கள் உள்ளதா? என்று கூறி உள்ளார்.
- காலியாக இருக்கும் வயநாடு தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து வருகிறது.
- வயநாடு தொகுதிக்கான மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்தார்.
இவர் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார் என குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மேலும் ராகுல்காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தான் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பு காலியாக இருக்கும் வயநாடு தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கேற்ப வயநாடு தொகுதிக்கான மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அதில் மாதிரி வாக்குபதிவும் நடத்தப்பட்டது. அனைத்து கட்சி பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தலை நடத்த மத்திய தேர்தல் கமிஷன் தயாராகி வருவதை தொடர்ந்து அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ராகுல் காந்தி இங்கு போட்டியிட்ட போது அவருக்காக அவரது சகோதரி பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்ட பின்னர் நடந்த காங்கிரஸ் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
மேலும் அவரும் வயநாடு தொகுதி மக்களை தொடர்ந்து சந்தித்து கட்சிக்காக பிரசாரம் செய்து வந்தார். இதன்காரணமாக இந்த இடைத் தேர்தலில் அவர் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தொண்டர்களும் இதனை ஆர்வமுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
- இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
- மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக, கட்சியின் சித்தாந்தத்தை கைவிட்டதாக பிரியங்கா குறிப்பிட்டார்.
ஜபல்பூர்:
மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஜபல்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம் ஊழலில் மூழ்கிவிட்டது. வேலைவாய்ப்பை வழங்க தவறிவிட்டது. 'வியாபம்' மற்றும், 'ரேஷன் விநியோகம்' ஆகியவற்றில் ஊழல் நடந்திருக்கிறது. மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியின் 220 மாத ஆட்சியில் 225, 'மோசடிகள்' நடந்துள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில், பா.ஜ.க. அரசாங்கத்தால், மாநிலத்தில் 21 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, எனது அலுவலகத்தில் இதனை 3 முறை சரி பார்த்ததற்கு பிறகு, இது உண்மைதான் என கண்டறிந்தேன்.
நாங்கள் (காங்கிரஸ்) பல இரட்டை-எஞ்சின் மற்றும் மூன்று-எஞ்சின் அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் (பா.ஜ.க.விற்கு) தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
காங்கிரசிலிருந்து பா.ஜ.க.விற்கு மாறிய தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவை, பெயரை குறிப்பிடாமல் கிண்டல் செய்த பிரியங்கா காந்தி, மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக, கட்சியின் சித்தாந்தத்தை கைவிட்டதாக குறிப்பிட்டார்.
சிந்தியாவுக்கு விசுவாசமான எம்.எல்.ஏக்கள் கடந்த மார்ச் 2020 வருடம் காங்கிரஸிலிருந்து வெளியேறி, கமல்நாத் அரசாங்கத்தை வீழ்த்தி, தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் ஆட்சிக்கு வர வழி வகுத்தனர்.
- காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக உள்ள சிலரை மாற்ற கட்சி திட்டமிட்டுள்ளது.
- காங்கிரஸ் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி ஏற்கனவே உறுப்பினராக உள்ளார்.
புதுடெல்லி:
மத்தியில் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது.
இதுபோல வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் தோல்வியை தழுவிய காங்கிரஸ், அங்கும் ஆட்சியை இழந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கர்நாடகா மாநில தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அடுத்து வர இருக்கும் வடமாநில தேர்தலிலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் இப்போதே வியூகம் வகுக்க தொடங்கியுள்ளது.
இதன்ஒரு பகுதியாக கட்சியின் முக்கிய அமைப்புகளில் இளம் ரத்தத்தை புகுத்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் திட்டமிட்டு உள்ளனர். குறிப்பாக கட்சியின் தேர்தல் வியூகம், செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை வகுக்கும் காரிய கமிட்டியை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி காங்கிரஸ் காரிய கமிட்டியில் இளம்தலைமுறைக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமனம் மூலம் கட்சி இன்னும் உத்வேகத்துடன் செயல்படும் எனவும், இதன்மூலம் ஏற்கனவே ஆட்சியில் இருந்த மாநிலங்களில் இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்க முடியும் எனவும் மூத்த நிர்வாகிகள் நம்புகிறார்கள்.
இதற்காக இப்போது காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக உள்ள சிலரை மாற்ற கட்சி திட்டமிட்டுள்ளது. இதில் கேரள மாநில முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாண்டி, தினேஷ் குண்டு ராவ், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் எச்.கே.பாட்டீல், பீகார் பொறுப்பாளர் பக்தச ரண்தாஸ் மற்றும் நிர்வாகிகள் அவினாஷ் பாண்டே, ஹரிஷ் சவுத்திரி ஆகியோர் மாற்றப்படுவார்கள் என தெரிகிறது.
இவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, மேல்சபை எம்.பி.ரஞ்சித் ரஞ்சன், நிதின் ராவத், கர்நாடக மாநில மூத்த தலைவர் ஹரிபிரசாத், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான், முன்னாள் மத்திய மந்திரி சுபோத்காந்த் சகாய் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதனை கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ராய்ப்பூரில் நடந்த கட்சி மாநாட்டில் காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியின் விசுவாசியாகவே கருதப்படுகிறார். எனவே அவர், அவர்களின் விருப்பப்படி, கட்சியில் இளம்தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க ஏற்பாடு செய்வார் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி ஏற்கனவே உறுப்பினராக உள்ளார். பிரியங்கா காந்தியும் இப்போது உறுப்பினர் ஆகியுள்ளார். இவர்கள் புதுமுகங்களுடன் இணைந்து கட்சியை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
- பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை பிரியங்கா காந்தி சாடினார்.
- மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
புதுடெல்லி:
மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுப்பத்தும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இம்பால் பள்ளத்தாக்கில் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மணிப்பூரில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மணிப்பூர் மக்களின் பாதுகாப்பையும் அமைதியை மீட்டெடுக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
- சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு 500 ரூபாய் மானியம் என்று தாரளமாக சலுகைகளை அறிவித்து உள்ளார்.
- மத்திய பிரதேசத்தை பிடிப்பதற்கு தூண்டில் போட்டுள்ளார் பிரியங்கா.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது அந்த கட்சிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. அதேபோல் அடுத்து வர இருக்கும் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில் நடைபெற்ற தேர்தல் பணிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா உற்சாக மூடில் காணப்பட்டார்.
தமிழ்நாடு மாடல் பிரசார யுக்தியை அந்த மாநிலத்திலும் புகுத்தி இருக்கிறார். ஏனெனில் தமிழ்நாட்டை போல் பெண்களுக்கு மாதம் ரூ.1000, பஸ்சில் இலவச பயணம் என்ற வாக்குறுதிகள் கர்நாடகத்தில் வாக்குகளை பெறுவதற்கு காங்கிரசுக்கு கை கொடுத்தது. அதேபோலத்தான் மத்திய பிரதேசத்திலும் தமிழ்நாடு மாடலை கையில் எடுத்து உள்ளார். அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 யூனிட் வரை இலவச மின்சாரம். அதற்கு மேல் 200 யூனிட் வரை பாதி மின்சார கட்டணம் என்று அறிவித்ததோடு ஏற்கனவே அந்த மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்திருப்பதால், அதில் இருந்து ஒரு படி மேல் போய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவித்து கை தட்டலை பெற்றார்.
மேலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு 500 ரூபாய் மானியம் என்று தாரளமாக சலுகைகளை தமிழ்நாடு மாடலிலேயே அறிவித்து உள்ளார். அறிவித்ததோடு மட்டுமல்ல நாங்கள் சொன்னது போல் கர்நாடகாவில் செயல்படுத்தி இருக்கிறோம். அதேபோல் மத்திய பிரதேசத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களால் செயல்படுத்த முடியும் என்று சொல்லி மத்திய பிரதேசத்தை பிடிப்பதற்கு தூண்டில் போட்டுள்ளார் பிரியங்கா.
- மத்திய பிரதேசத்திலும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு உள்ளது.
- மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த ஊரான குவாலியர்-சம்பல் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
புதுடெல்லி:
மத்திய பிரதேச மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் இந்த மாநிலத்தில் முதல்-மந்திரி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கும், கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவை போல் மத்திய பிரதேசத்திலும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா காந்தி கடந்த ஜூன் மாதம் ஜபல்பூரில் பேரணி நடத்தி பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.1500 உதவி உட்பட கட்சியின் 5 வாக்குறுதிகளை அறிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்ட சபை தேர்தலில் பிரியங்கா காந்தியின் பிரசாரம் மற்றும் காங்கிரசின் வாக்குறுதிகள் காங்கிரஸ் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தை மத்தியப் பிரதேசத்துக்குக் கொண்டு சென்றதில் பிரியங்கா காந்தியின் பங்கு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்தியப் பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், கடந்த மாதம் பிரியங்கா காந்தியின் பேரணிக்கு முன்பு ஜபல்பூரில் புதிய திட்டத்தைத் தொடங்கினார். அதன்படி மாநிலத்தில் தகுதியான பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். எதிர்காலத்தில் லட்லி பஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் தொகை அதிகரிக்கப்படும் என்று சவுகான் கூறியிருந்தார்.
ஜபல்பூர் பகுதி பழங்குடியினரின் வாக்குகள் அதிகமாக நிறைந்த பகுதி ஆகும். பிரியங்கா காந்தியின் பேரணி அந்த சமூகத்தின் மத்தியில் காங்கிரசுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் காங்கிரசின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த ஊரான குவாலியர்-சம்பல் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.க.வுக்குச் செல்வதற்கு முன்பு பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்தவர். இந்த பகுதியில் காங்கிரசின் செல்வாக்கை பலப்படுத்தவும், பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை தன்பக்கம் ஈர்க்கவும் காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. அதன் முயற்சியாகவே பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை குவாலியர்-சம்பல் பகுதியில் நடத்துகிறது.
- ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு
- கர்நாடக ஊழல் அரசை போன்று மத்திய பிரதேச அரசையும் மக்கள் வெளியேற்றுவார்கள்
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஞானந்திரா அவாஸ்தி என்ற பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அந்தக் கடிதத்தில் மத்திய பிரதேச மாநில அரசு ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை மேற்கொள்காட்டி காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ''கர்நாடகாவில் ஊழல் பா.ஜனதா அரசு 40 சதவீத கமிஷனை பயன்படுத்தியது. தற்போது மத்திய பிரதேசத்தில், அதை தாண்டி சாதனைப் படைத்துள்ளது. 40 சதவீதம் கமிஷன் அரசை கர்நாடக மக்கள் அப்புறப்படுத்திவிட்டனர். தற்போது மத்திய பிரதேச மக்கள் 50 சதவீத கமிஷன் அரசை வெளியேற்றுவார்கள்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதே கருத்தை அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தும், அருண் யாதவும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் நிமேஷ் பதாக் புகார் அளித்துள்ளார். கடிதம் யார் பெயரில் வெளியானதோ, அவர் மீதும் புகார் அளித்துள்ளார்.
சந்யோகிதகஞ்ச் காவல் நிலைய போலீசார் புகார் அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 469 (போலி ஆவணம் மூலம் வேண்டுமென்றே நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அதானியின் விமானத்தில் நமது பிரதமர் அமர்ந்திருக்கும் படம் எங்களிடம் உள்ளது.
- மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் உரிமைகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி பாராளுமன்றத்துக்கு செல்ல முழு தகுதியுடையவர் என அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், பிரபல தொழிலதிபருமான ராபர்ட் வதேரா டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "பிரியங்கா காந்தி கண்டிப்பாக மக்களவையில் இருக்க வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. அவர் பாராளுமன்றத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுவார். அங்கிருக்க தகுதியானவர். காங்கிரஸ் கட்சி அவரை ஏற்று சிறப்பாக திட்டமிடும் என நம்புகிறேன்" என கூறினார்.
அதாவது, அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை ராபர்ட் வதேரா சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராபர்ட் வதேரா தனது பேட்டியில், பாராளுமன்றத்தில் பேசும் போது தொழில் அதிபர் கவுதம் அதானியுடன் தனது பெயரை இணைத்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசியதை கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். ஆனால் என் பெயருக்காக போராட நான் பேசுவேன், ஏனென்றால் அவர்கள் ஏதாவது சொன்னால் அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.
நான் அதானியுடன் செய்ததை எனக்கு காட்டுங்கள் என்று அவர்களுக்கு சவால் விடுகிறேன். ஏதேனும் தவறு நடந்தால், நான் எதிர்கொள்வேன். இல்லையென்றால், அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதானியின் விமானத்தில் நமது பிரதமர் அமர்ந்திருக்கும் படம் எங்களிடம் உள்ளது. அதுபற்றி ராகுல் காந்தி கேட்டதற்கு ஏன் பதில் இல்லை.
மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் உரிமைகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினர். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய மந்திரி என்ற முறையில் இரானி அவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க ஒருபோதும் செல்லவில்லை.
மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. அதுபற்றி பேசாமல், பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத என்னைப்பற்றி ஒருவித எதிர்மறையான விஷயத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.