என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PTR"

    • 200 நாட்களாக விலை குறைக்கப்படாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது
    • சில சக்திகள் விலையை குறைக்க விடாமல் செய்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

    சென்னை:

    இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயரும். ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைவது இல்லை.

    கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்தாலும் கூட, பெரிய அளவில் விலை குறைக்கப்படவில்லை. அந்த வகையில் 200 நாட்களாக விலையை குறைக்காமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 200 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும் உள்ளது.

    இதனை தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல்/ டீசல் விலை அதற்கு இணையாக குறையாமல் இருக்கிறது. இந்தியாவில் சில சக்திகள் விலையை குறைக்க விடாமல் செய்வதுபோல உள்ளது, என்று அவர் கூறி உள்ளார்.

    இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    பெட்ரோல் லிட்டருக்கு ₹2 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹4 குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும், ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

    • இதுபோன்ற கோழைத்தனமாக முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என அமைச்சர் தெரிவித்தார்.
    • ஆற்றல்மிகு செயல் வீரரான அமைச்சர் உதயநிதி குறித்து நான் எப்படி பேசுவேன்? என கேள்வி

    சென்னை:

    திமுக அரசின் ஊழல் குறித்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது.

    இந்த விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுபற்றி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தொடங்கியதில் இருந்து ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையாக இயங்கி வருகிறோம்.

    சமூக வலைத்தளத்தில் பரவி வரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. ஆடியோ ஜோடிக்கப்பட்டது. நவீன தொழில் நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். எண்ணங்களை நிறைவேற்ற துடிக்கும் பிளாக் மெயில் கும்பலின் இதுபோன்ற கோழைத்தனமாக முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.

    முதலமைச்சரிடம் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல் வீரரான அமைச்சர் உதயநிதி குறித்து நான் எப்படி பேசுவேன்?

    திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் சாதனைகள் செய்யும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டி, ஆலோசகர், உறுதுணையாக இருப்பவர் சபரீசன். அமைச்சர் உதயநிதி, சபரீசன் மீது களங்கம் சுமத்த ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளை விட, இரண்டே ஆண்டுகளில் நாங்கள் அதிகம் செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது.
    • தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வாங்கி சமர்ப்பித்துள்ளது.

    வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் முழு விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும். அவற்றை மார்ச் 13ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    இதனையடுத்து 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "ஒரே நாளில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை வங்கியால் வழங்க முடியும் என நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதை தான் இன்று பாரத ஸ்டேட் வங்கி செய்திருக்கிறது. மார்ச் 4 ஆம் தேதி எங்களால் அந்த அவகாசத்துக்குள் தரவுகளை வழங்க முடியாது என்று அப்பட்டமாக பொய் சொன்ன SBI நிர்வாகிகள் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    • வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது
    • அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது

    வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது. அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    அனந்த நாகேஸ்வரனின் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளார். 

    • அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா எம்.எல்.ஏ. கோட்டாவில் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்தார்
    • உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன். 5 ஆண்டுகள் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படித்தேன்

    கோவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலையும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் நேற்று அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, "அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா எம்.எல்.ஏ. கோட்டாவில் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்தார். ஆனால், நான் எம்.எல்.ஏ. கோட்டாவில் இல்லை.. அப்பா பெயரை வைத்து நான் படிக்கவில்லை. தனி மனிதனாக உழைத்து இந்த மண்ணில் நீங்கள் எல்லாம் உழைத்து தனிமனிதராக இருக்கிறீர்களோ அதேபோல உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன். 5 ஆண்டுகள் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படித்தேன் என் பேசினார்.

    அண்ணாமலையின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் இது தொடர்பாக பேசிய சிங்கை ராமச்சந்திரன், எனது தந்தையான சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் இறந்தபோது எனக்கு 13 வயது. அவர் எப்படி எனக்கு, எம்.எல்.ஏ. கோட்டாவில் கல்லூரியில் சீட் வாங்கி தரமுடியும். எனது தந்தை குறித்த பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும்" என வலியுறுத்தினார்.

    இந்நிலையில் அண்ணாமலையின் 5 வருட பொறியியல் படிப்பு தொடர்பாக ஸ்ரீராம் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "அண்ணாமலை விசித்திரக் கதைகளின் உலகத்திற்கு சென்று பொறியியல் படித்தாரா?. அவர் 4 ஆண்டு பொறியியல் படிப்பிற்கு பதிலாக ஏன் 5 வருட பொறியியல் படிப்பை படித்துள்ளார்?. ஒருவேளை அவர் மாயாஜால பொறியியல் சமன்பாடுகளின் பிரமையில் தொலைந்து போயிருக்கலாம். ஆமாம் அவர் குறிப்பிடும் இந்த மர்மமான எம்.எல்.ஏ. கோட்டா என்றால் என்ன? என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

    "பொறியியல் பட்டப்படிப்பு 1984 இல் 5 வருடத்திலிருந்து 4 வருடமாக மாற்றப்பட்டது. 1987 இல் REC திருச்சியில் (இப்போது NITT) 4-ஆண்டு B.Tech (Hons) பட்டம் பெற்றேன். பி.எஸ்.ஜி கல்லூரியில் 2002-ல் 5 வருட பொறியியல் பட்டப்படிப்பை எப்படி வழங்கியது?. ஒருவேளை இது ஒருங்கிணைந்த B.Tech & M.Tech பட்டபடிப்பா?. அப்படியென்றால்... அது 5 ஆண்டு பட்டபடிப்பாக இருக்கலாம்?

    அந்த படிப்பிற்கு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லையா? மேலும் "எம்எல்ஏ கோட்டா" என்றால் என்ன, அது எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? நான் ஓபன் கோட்டாவின் கீழ் REC திருச்சியில் சேர்ந்தேன். 1987 இல் நான் அமெரிக்காவிற்குச் செல்லும் வரை இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    • எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்காது.
    • ஏற்கனவே இந்தி தான் தேசிய மொழி என்று கூறி முப்பது மொழிகளை அழித்து விட்டார்கள்.

    மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ. 2400 கோடி நிதியை அளிக்கும் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்தார். இவரது கருத்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பூதாகாரமாக வெடித்துள்ளது. மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    தமிழ்நாடு பா.ஜ.க. மட்டும் மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு இல்லை என்றும் மாணவர்கள் விரும்பிய மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என்றும் தொடர்ச்சியாக கூறி வருகிறது. மேலும், தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்படும் நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் இந்தி கற்பதை தி.மு.க. திட்டமிட்டு தடுப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த நிலையில், மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கரண் தப்பார் மேற்கொண்ட நேர்காணலில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். அவரது கேள்விகளுக்கு அதிரடி பதில் அளித்ததோடு, பதில் கேள்விகளையும் அடுக்கினார்.

    நேர்காணலில் மும்மொழிக் கொள்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த பி.டி.ஆர். "மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் ரூ. 2400 கோடி நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் கூறுவது லஞ்சம் கொடுத்தாதால் தான் தொழிலை நடத்த விடுவேன் என ரவுடி துப்பாக்கியை எடுத்து எனது நெற்றி பொட்டில் வைத்து மிரட்டி கேட்பது போல இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "எப்பொழுதும் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை குறிப்பாக இந்தியை எதிர்ப்பதாக பேசி வருகின்றீர்கள். கல்வி மிக நுட்பமானது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தி குறிப்பாக எங்களுக்கு தேவையில்லை என்பதை நீதிக்கட்சி காலத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். ஏற்கனவே இந்தியை திணிக்க நினைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாடறியும்."

    "எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்காது. ஏற்கனவே இந்தி தான் தேசிய மொழி என்று கூறி முப்பது மொழிகளை அழித்து விட்டார்கள். எங்கள் குழந்தைகளுக்கு எந்த மொழி தேவையோ அதனை கற்று கொள்ளட்டும். நாங்கள் தடுக்க மாட்டோம். இந்தி கற்றுத் தரும் பள்ளிகளை நாங்கள் அழிக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு தமிழ் மொழியை தான் கற்றுக் கொடுக்கும். கூடுதலாக ஆங்கிலம் மட்டும் தான் கற்பிக்கப்படும்."

    "நான் ஒரு தொழிலை ஆரம்பிக்கிறேன். அந்த தொழிலுக்கு பாதுகாப்பு தர வேண்டிய நபர் ஒரு ரவுடி போல துப்பாக்கி எடுத்துக்கொண்டு எனது நெற்றியில் வைத்து மாமுல் தர வேண்டும். அப்போதுதான் தொழிலை நடத்த முடியும் என சட்ட விரோதமாக கேட்கிறார். அவர் மிரட்டுவதற்காக நான் மாமூல் தர வேண்டுமா? நியாயப்படி நீங்கள் துப்பாக்கி எடுத்து என் தலையில் வைத்து மிரட்டுபவரிடம் தான் பேச வேண்டும். என்னிடம் பேசக்கூடாது" என்றார்.

    இந்நிலையில், இந்த நேர்காணலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி தேசிய அளவில் பேசுபொருளானது. இந்நிலையில், அந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில், ஏகாதிபத்திய மனோபாவம் கொண்ட சிலரது வசதிக்காக தமிழ்நாட்டின் மீது மொழிக் திணிப்பு ஏன்" என்று பதிவிட்டுள்ளார். 

    ×