என் மலர்
நீங்கள் தேடியது "Sharad Pawar"
- மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சர் தகவல்.
- விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இதற்கு கொள்கை வகுக்க வேண்டும் என சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக, சட்டசபையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்பாக வெளியான தகவல் கவலையளிக்கும் விதமாக உள்ளது. நாங்கள் வெவ்வேறு இடங்களில் சரியான தரவுகளை சேகரிக்க உள்ளோம். விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மேலும், சரத் பவார் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் கட்சிக்கு மாற இருப்பதாக தகவல் வெளியானது குறித்து கேட்க கேள்விக்கு, இது தொடர்பாக மீடியாவுக்கு அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்" என்றார்.
பாராமதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஜெயந்த் பாட்டீல் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர், தான் விரக்தியில் உள்ளது. தன்னுடைய கருத்தில் இருந்து தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
- சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக ஜெயந்த் பாட்டீல் உள்ளார்.
- இவர் அதிருப்தி காரணமாக அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனத் தகவல் வெளியாகி வருகிறது.
சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதல்வருமான சஞ்சய் ஷிர்சாத், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவரான ஜெயந்த் பாட்டீல் அக்கட்சியில் இருந்து விலகி, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் ஷிர்சாத் கூறியதாவது:-
ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு செல்வார் என்பதை முன்னதாகவே நான் சொல்லியிருக்கிறேன். நீண்ட காலத்திற்கு சரத்பவார் கட்சியில் இருக்க வேண்டும் என்ற மனநிலை அவருக்கு இல்லை. சரத் பவார் கட்சியில் பூகம்பம் ஏற்பட இருக்கிறது. ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவதை நீங்கள் பார்ப்பீர்கள்.
இவ்வாறு சஞ்சய் ஷிர்சாத் தெரிவித்துள்ளார்.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ஜெயந்த் பாட்டீல், தன்னைப் பற்றி உறுதியாக ஏதும் தெரியவில்லை எனக் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் ஷிர்சாத் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., விஜய் வடேட்டிவார் "ஜெயந்த் பாட்டீல் அதிருப்தியில் இருப்பதால்தான் அவ்வாறு தெரிவித்துள்ளார்" எனத் தெரிவித்ள்ளார். மேலும், "அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை நாம் யூகிக்க மட்டுமே முடியும். அவரது கருத்துக்குப் பின்னால் உள்ள அனுமானம் எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு மூத்த அரசியல்வாதி, எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மற்றும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்" என்றார்.
சரத் பவாரின் மகளும், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே "சரத் பவார் எதிரிகளுக்கு மிகப்பெரிய அமைப்பு பலம் இருந்தபோதிலும், ஜெயந்த் பாட்டீல் தேவைப்படுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் கடந்த 2023-ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்களுடன் கோஷ்டியாக செயல்பட்டு, பின்னர் கட்சியை கைப்பற்றிக் கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
அஜித் பவார் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது. சரத் பவார் தலைமையிலான கட்சி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
- கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் கூட வேண்டாம்.
- இவர் இதற்குமுன் வாய் புற்றுநோய்க்கான சிகிச்சையும் எடுத்துள்ளார்.
மும்பை :
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவாருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டரின் அறிவுரையின் பேரில் அவர் மும்பையில் உள்ள பிரிச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிவாஜிராவ் கார்ஜே வெளியிட்டுள்ள அறிக்கையில், "3 நாட்களுக்கு சரத்பவார் ஆஸ்பத்திரியில் தான் இருப்பார்.
2-ந் தேதி அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 3-ந் தேதி நடைபெறும் கட்சி கூட்டத்தில் சரத்பவார் கலந்து கொள்வார். கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் கூட வேண்டாம்" என்றார்.
81 வயதான சரத்பவாருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல வாய் புற்றுநோய்க்கான சிகிச்சையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீர சாவர்க்கர் மீது ராகுல்காந்தி தனது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
- ராகுல் காந்தி வெட்கமே இல்லாமல் வீரசாவர்க்கர் பற்றி பொய் பேசி வருகிறார்.
மும்பை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் அவர் நேற்று முன்தினம் வாஷிம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை பற்றி கடுமையாக தாக்கி பேசினார்.
அப்போது அவர், "சாவர்க்கர் பா.ஜனதா மற்றும் ஆர்.ஆர்.எஸ். அமைப்பின் அடையாளம். அவர் அந்தமான் ஜெயிலில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுத தொடங்கினார். சாவர்க்கர் தன்னைப்பற்றி வேறு ஒருவரின் பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் தான் வீரமிக்கவர் என கூறியுள்ளார். அவர் ஆங்கிலேய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர்களுக்காக வேலை செய்தார். காங்கிரசுக்கு எதிராக வேலை பார்த்தார்" என்று பேசினார்.
வீரசாவர்க்கர் மராட்டியத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. வீர சாவர்க்கரை அவமதித்த ராகுல்காந்தியின் நடைபயணம் மகாராஷ்டிராவில் நிறுத்தப்பட வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த எம்.பி. ராகுல் செவாலே அரசை வலியுறுத்தினார்.
இந்த நிலையில் நேற்று ராகுல்காந்தியின் நடைபயணம் 71-வது நாளாக நடந்தது. மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தில் அவர் நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது அவருடன் நடிகை ரியாசென் பங்கேற்றார்.
நடைபயணத்துக்கு மத்தியில் ராகுல்காந்தி நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது வீர சாவர்க்கர் மீது அவர் மீண்டும் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் வீரசாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதத்தை நிருபர்களிடம் ராகுல்காந்தி காண்பித்தார்.
"உங்களுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனாக இருக்க நான் கெஞ்சுகிறேன்" என்று கடைசி வரியில் வீரசாவர்க்கர் குறிப்பிட்டு இருப்பதை ராகுல்காந்தி படித்து காட்டினார்.
மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் வீரசாவர்க்கரை பற்றி கூறிய கருத்துக்களை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளேன். பயம் காரணமாக தான் சாவர்க்கர் கருணை கடிதத்தை எழுதினார். மேலும் அவர் ஆங்கிலேய அரசுக்கு உதவியது தெளிவாகிறது. இது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர் செய்த துரோகம். சிலர் எனது நடைபயணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். வேண்டுமென்றால் எனது நடைபயணத்தை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி பார்க்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ராகுல்காந்தியின் பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், " எந்த சூழ்நிலையிலும் வீரசாவர்க்கர் அவமதிக்கப்படுவதை மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் " என்றார்.
மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், " ராகுல் காந்தி வெட்கமே இல்லாமல் வீரசாவர்க்கர் பற்றி பொய் பேசி வருகிறார். மகாராஷ்டிரா மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு தகுந்த நேரத்தில் உரிய பதிலடி கொடுப்பார்கள். வீர சாவர்க்கர் போல எத்தனை காங்கிரஸ் தலைவர்கள் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து உள்ளனர். அந்த கொடுமையிலும் அவர் சுதந்திரத்துக்காக பாடல் எழுதினார். மற்றவர் எழுதி கொடுப்பதை ராகுல்காந்தி வாசிக்கிறார். அந்த முட்டாள்களுக்கு வீர சாவர்க்கர் எத்தனை ஆண்டுகள் ஜெயிலில் இருந்தார் என்பது கூட தெரியாது" என கூறினார்.
வீரசாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் கருத்தில் தான் உடன்படவில்லை என்று மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் கூறியிருக்கிறார்.
- காங்கிரசின் சித்தாந்தத்தையும், பங்களிப்பையும் புறக்கணித்துவிட முடியாது.
- சிலர் காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மும்பை :
மூத்த அரசியல் தலைவர் சரத்பவார் கடந்த 1999-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவர் காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய பிறகு, மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள காங்கிரஸ் பவனுக்கு செல்லவில்லை.
இந்தநிலையில் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அவர் புனேயில் உள்ள காங்கிரஸ் பவனுக்கு சென்றார். காங்கிரஸ் நிறுவன நாளையொட்டி அங்கு நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார்.
விழாவில் சரத்பவார் பேசியதாவது:-
சிலர் காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது. அது சாத்தியமில்லை. காங்கிரசின் சித்தாந்தத்தையும், பங்களிப்பையும் புறக்கணித்துவிட முடியாது. கொள்கைகளில் முரண் இருக்கலாம், ஆனாலும் நாங்கள் காங்கிரசுடன் இணைந்து பயணிப்போம்.
புனேயில் பல காங்கிரஸ் தலைவர்கள் அப்போது இருந்தனர். 'புனே என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் புனே' என இருந்தது. ஆனால் தற்போது ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது.
- மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
புனே :
பா.ஜனதா கட்சி 2024-ம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் 45 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்கை அந்த கட்சி நிர்ணயித்து உள்ளது. இதனை "மிஷன் 45" என்று மராட்டியத்தில் சுற்றுப்பயணம் செய்த பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா குறிப்பிட்டார்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து அவர், "எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதனால் பா.ஜனதா "மிஷன் 48" என்று தான் தொடங்கி இருக்க வேண்டும். 45 அல்ல.
ஜே.பி. நட்டா அந்த கட்சியின் தலைவர். அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் உரிமை கூட அந்த கட்சிக்கு உள்ளது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
எனவே பா.ஜனதா தலைவர்களின் இதுபோன்ற பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்றார்.
மேலும் 'லவ் ஜிகாத்'துக்கு எதிராக சட்டம் இயற்ற கோரி இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் முடிவெடுக்கலாம். யார் எதிர்ப்பு தெரிவித்தனர்?" என்றார்.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் சமீபத்தில் சட்டசபையில் பேசியபோது, சம்பாஜி மகாராஜாவை மதப்பாதுகாவலர் இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டும் இன்றி அஜித் பவார், சம்பாஜி மகாராஜாவை அவமதித்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், "சுயராஜ்யத்தின் பாதுகாவலராக சத்ரபதி சாம்பாஜியை சமுதாயத்தில் சிலர் நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அதேபோல ஒரு சிலர் அவரை மத பாதுகாவலர் என அழைத்து அவரது பணிகளை மத கோணத்தில் பார்த்தாலும் அதிலும் எனக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால் அவருக்கு தர்ம ரட்ஷகர் அல்லது தர்மவீரர் என்று அடைமொழியை பயன்படுத்தாதது குறித்து சிலர் புகார் கூறுவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளை விவாதிக்க எந்த காரணமும் அல்ல" என்றார்.
- எல்லை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.
- குடியரசு கட்சி மற்றும் சில கட்சிகளும் சோ்க்கப்படும்.
மும்பை :
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக சென்றதால் மகாவிகாஸ் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது மகாராஷ்டிராவில் பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இந்தநிலையில் அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி தொடரும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று கோலாப்பூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் பால்தாக்கரே சிவசேனா வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தோ்தலை ஒன்றாக சந்திக்க வேண்டும் என்ற புரிதல் உள்ளது. குடியரசு கட்சி மற்றும் சில கட்சிகளும் சோ்க்கப்படும்.
இதுதொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகிறது. பல விவகாரங்களில் நாங்கள் சேர்ந்து முடிவு எடுத்து உள்ளோம். எனவே எந்த பிரச்சினையும் இல்லை.
சிவசேனா உடைந்து உள்ள போதும், பெரும்பான்மையான தொண்டர்கள் உத்தவ் தாக்கரேக்கு ஆதரவாக உள்ளனர். பிளவின் போது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஷிண்டே அணிக்கு சென்று இருக்கலாம். ஆனால் தேர்தல் வரும் போது மக்களின் மனநிலையை அவர்கள் புரிந்து கொள்வார்கள். மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சினை தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
எல்லை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கை மூத்த சட்ட வல்லுநர்களை வைத்து நமது தரப்பு வாதத்தை பலமாக முன்வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
- மத பிரச்சினைகளுக்கு மக்கள் ஒருபோதும் தங்கள் வாக்குகளை அளிக்க மாட்டார்கள்.
மும்பை :
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஆவணப்படத்தை வெளியிட்டது.
இதற்கு பா.ஜனதா கட்சி தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவில் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் சரத்பவார் கூறியதாவது:-
பி.பி.சி. ஊடக குழுவால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை என்பது ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல். கடந்த சில நாட்களாக இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது. மத பிரச்சினைகளுக்கு மக்கள் ஒருபோதும் தங்கள் வாக்குகளை அளிக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த நடைபயணத்திற்கு மாறுபட்ட கோணத்தில் சாயம் பூச முயன்றது. சாதாரண மக்களின் பெரும் ஆதரவு காரணமாக இந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவியில் இருந்து விலக விரும்புவதாக கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரத்பவார் பதில் அளித்து கூறுகையில், "மராட்டியத்தை சேர்ந்த பெரிய தலைவர்களான சத்ரபதி சிவாஜி மற்றும் பலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபரிடம் இருந்து மராட்டிய மாநிலமும், மக்களும் விடுபடுவது நல்ல விஷயம். அடுத்து யார் கவர்னராக வருவார் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை" என்றார்.
- பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மகாவிகாஸ் அகாடியில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.
- உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது.
மும்பை
மகாராஷ்டிராவில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் 25 ஆண்டுகளுக்கு மேல் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வந்தன.
2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறில் அந்த கூட்டணி உடைந்தது.
இதைதொடர்ந்து சிவசேனா, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி கொள்கைகள் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி மகாவிகாஸ் அகாடி கூட்டணி என அழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார். இதை தொடர்ந்து மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே - பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது.
இந்த அரசியல் பூகம்பத்துக்கு பின்னரும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், சட்டமேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியும் கூட்டணி அமைத்தன.
வஞ்சித் பகுஜன் அகாடியை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என உத்தவ் தாக்கரே கூறினார். அதே நேரத்தில் பிரகாஷ் அம்பேத்கர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு எதிராக பேசியதால் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியை கூட்டணியில் சேர்த்து கொள்வது பற்றி மகாவிகாஸ் அகாடியில் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என சரத்பவார் கூறி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக நேற்று கோலாப்பூரில் அவர் கூறியதாவது:-
தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மகாவிகாஸ் அகாடியில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. அதுபற்றி நாங்கள் எதுவும் இதுவரை ஆலோசிக்கவில்லை. வர இருக்கும் தேர்தலை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி சந்திக்கும். பிரகாஷ் அம்பேத்கருடன் கூட்டணி பற்றி நாங்கள் இதுவரை எதுவும் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.
- 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.
மும்பை :
மராட்டியத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறை அடுத்து சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அந்த கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தது.
அந்த நேரத்தில் திடீரென தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் அதிகாலை 5 மணிக்கு ராஜ்பவனில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் அந்த ஆட்சி பதவி ஏற்ற 3 நாளில் கவிழ்ந்தது.
இந்தநிலையில் சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கழித்து சரத்பார் ஆதரவோடு தான் 2019-ல் அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டி.வி. நிகழ்ச்சியில் கூறியதாவது:-
நிலையான அரசு தேவைப்பட்டதால் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆட்சி அமைக்க நாங்கள் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையின் போது சரத்பவாரும் இருந்தார். ஆனால் அதன் பிறகு நிலைமை மாறியது. நிலைமை எப்படி மாறியது என நீங்களே பார்த்தீர்கள். நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட தகவலை சரத்பவார் மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேவேந்திர பட்னாவிஸ் ஜென்டில் மேன், பண்பட்டவர் என்று நினைத்தேன். அவர் பொய்யை நம்பி இதுபோன்ற ஒரு அறிக்கையை விடுவார் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை." என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.
- வில், அம்பு சின்னத்தை இழந்தது உத்தவ் தாக்கரேக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.
- 2 நாட்களுக்கு முன்பே இந்த விவகாரத்தில் என் நிலைப்பாட்டை கூறிவிட்டேன்.
மும்பை :
மராட்டியத்தில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இருவரும் கட்சிக்கு உரிமை கோரி வந்த நிலையில், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு கட்சியின் வில், அம்பு சின்னத்தையும், பெயரையும் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அவர் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியதாவது:-
வில், அம்பு சின்னத்தை இழந்தது உத்தவ் தாக்கரேக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. அவரது புதிய சின்னத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏக்நாத் ஷிண்டேக்கு கட்சி, சின்னம் வழங்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் தலையிட நான் விரும்பவில்லை.
2 நாட்களுக்கு முன்பே இந்த விவகாரத்தில் என் நிலைப்பாட்டை கூறிவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாங்கள் அதிகார பேராசை கொண்டவர்கள் அல்ல.
- நாங்கள் எங்கள் கொள்கைகளை எதற்காகவும் தியாகம் செய்வது இல்லை.
மும்பை :
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மராட்டியத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், 2-வது நாளாக நேற்று கோலாப்பூரில் நடந்த பா.ஜனதா கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
2019-ம் ஆண்டு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 48 நாடாளுமன்ற தொகுதிகளில் 42 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தமுறை பா.ஜனதா 48 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும். முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டது.
உத்தவ் தாக்கரே கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய கட்-அவுட்டுடன் தேர்தலை சந்தித்தார்.
ஆனால் முடிவுகள் வெளியான பிறகு அவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டார்.
நாங்கள் அதிகார பேராசை கொண்டவர்கள் அல்ல. நாங்கள் எங்கள் கொள்கைகளை எதற்காகவும் தியாகம் செய்வது இல்லை.
கடந்த மராட்டிய சட்டசபை தேர்தலில் அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் தலைமையில் தான் எங்கள் கூட்டணி போட்டியிட்டது. இதை நானும், பிரதமர் நரேந்திர மோடியும் பொதுக்கூட்டங்களின்போது வெளிப்படையாக தெரிவித்தோம். இருந்தபோதிலும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தார்.
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அணியை உண்மையான சிவசேனா என்று அங்கீகரித்து வில் அம்பு சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை பாராட்டுகிறேன். உத்தவ் தாக்கரே அணியினர் தற்போது பாடம் கற்றிருப்பார்கள்.
வஞ்சகத்தால் நீங்கள் சில நாட்களுக்கு அதிகாரத்தை கைப்பற்றலாம். ஆனால் போர்க்களத்திற்கு வரும்போது வெற்றி பெறுவதற்கு உங்களுக்கு தைரியம் தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.