என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக"

    • நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
    • அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?.

    ரம்ஜான் பண்டிகையை சுதந்திரமாக கொண்டாட பாஜக தலைமையிலான அரசு தடைகளை ஏற்படுத்துவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் இதை சொல்லக்கூடாது என்றாலும், முழுப்பொறுப்புடன் செல்கிறேன். பாஜக நாட்டை அரசியலமைப்பின்படி நடத்தவில்லை.

    நீங்கள் பல வருடங்களாக ரம்ஜான் பண்டிகையை பார்த்து இருப்பீர்கள். இதுபோன்று அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?. போலீசார் காரணங்கள் ஏதுமின்றி என்னுடைய பாதுகாப்பு வாகனங்களை (Convoy) வேண்டுமென்றே அரைமணி நேரம் நிறுத்தி வைத்தனர்.

    நான் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன் என்று கேட்டபோது, எந்த அதிகாரியிடமும் பதில் இல்லை. இதை நான் என்னவென்று அழைப்பது? சர்வாதிகாரமா? அறிவிக்கப்படாத அவசரநிலையா? அல்லது பிற சமூகங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க எங்களை மிரட்டும் முயற்சியா?

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    • தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.
    • அன்று முதல் இன்று வரை நான் வெளிப்படையாகவே இருக்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. கட்சிக்கு புதிய மாநில தலைவர் யார் என்ற அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மீண்டும் அண்ணாமலையே நியமிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரத்தில் உறுதியாக கூறப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு சூழ்நிலைகள் மாறி வருவதாக கருதப் படுகிறது.

    பா.ஜ.க.வுடன் கூட் டணி அமையும்போது தமிழகத்தில் இரு கட்சிகள் இடையேயும் நெருடல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இதை அடுத்து அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து விவாதித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி அண்ணாமலை அமித்ஷாவிடம் எடுத்து கூறி இருக்கிறார்.

    டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலையிடம் கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக தமிழக பா.ஜ.க. தலைமையில் மாற்றம் வருமா? அ.தி.மு.க.வை ஏற்கனவே கடுமையாக விமர்சித்த உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியதாவது:-

    நான் 2020-ல் பா.ஜ.க.வில் சேர்ந்தது முதல் எந்த பதவியையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். பா.ஜ.க.வின் வளர்ச்சி தங்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

    எந்த தலைவர் மீதும், எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் கிடையாது.

    கூட்டணி பற்றி எல்லாம் தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். எனது கடமை நடுநிலையாக இருந்து தமிழகத்தின் களநிலவரத்தை உள்ளதை உள்ளபடியே கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்க வேண்டும். அந்த கடமையை செய்து இருக்கிறேன். அது சரியாக இருந்தால் தான் அதற்கேற்ப தலைவர்கள் முடிவெடுக்க முடியும்.

    என்னால் யாருக்கும் பிரச்சனை வராது. நான் கடுமையாக விமர்சித்தேன் என்பது சரியல்ல. தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. கருத்துக்களைத்தான் கருத்துக்களால் எதிர்கொண்டு வருகிறேன்.

    அன்று முதல் இன்று வரை நான் வெளிப்படையாகவே இருக்கிறேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிறு கூட மாற்றம் கிடையாது.

    எல்லா சூழ்நிலைகளையும் ஆய்ந்து தமிழக தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். விரைவில் பார்ப்பீர்கள்.

    அண்ணாமலையை பொறுத்தவரை எதையும் மாற்றி பேசுபவன் கிடையாது. அதை வருங்காலத்திலும் பார்ப்பீர்கள். எதற்காக அரசியலுக்கு வந்தேனோ? அந்த வெறியும், நெருப்பும் என் உள்ளத்தில் எரிந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை இப்படி சூசகமாக பேசியது தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்படலாம் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் அண்ணாமலையின் அதிரடி கருத்துக்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் இரு கட்சி மேலிட தலைவர்களும் உறுதியாக இருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் பற்றி அண்ணாமலையிடம் அமித்ஷா தெளிவுபடுத்தியதோடு அவரது கருத்தையும் கேட்டு உள்ளார். அப்போது தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சிக்கு வரவில்லை. கட்சியின் சாதாரண தொண்டராக இருந்து கட்சி பணியாற்றவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இந்த வார்த்தையை பயன்படுத்தியது உண்மை என்பதையும் அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். எனவே தலைவர் மாற்றம் என்பது உறுதியாகி விட்டதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    புதிய தலைவருக்கான ரேசில் வானதி சீனிவாசன், எச்.ராஜா, டாக்டர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.

    ஆனால் இப்போது மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது மத்திய மந்திரி எல்.முருகன், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கோவை முருகானந்தம் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது.

    இதில் கோவை முருகானந்தம் அண்ணாமலை நடத்திய 'என் மண் என் மக்கள்' யாத்திரையை சிறப்பாக நடத்தியதில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் புதிதாக ஒருவரை தலைவராக நியமித்தால் சரிப்பட்டு வராது என்று மேலிடம் யோசிப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் புதிதாக ஒரு வரை தலைவராக நியமித்து வெற்றி பெற முடியாமல் போனதே அதற்கு காரணம் என்கிறார்கள்.

    எனவே முருகனா? தமிழிசையா? என்றுதான் மேலிடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் தலைவர்களாக இருந்தவர்கள். இந்த இருவரில் ஒருவரைத்தான் தலைவராக நியமிப்பார்கள் என்று கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

    • அண்மையில், செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது.
    • செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி புறப்பட்டு சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினார்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த வாரம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி புறப்பட்டு சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிச்சாமி மறுக்கும் நிலையில், செங்கோட்டையனை முன்னிறுத்தி பாஜக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

    • ஆன்மிக அறிவு இருந்தால் மட்டும்தான் ஒரு வாழ்க்கையை சமமாக பார்க்கக்கூடிய ஒரு பண்பு கிடைக்கும்.
    • நம்முடைய மதத்தை உயர்வாக நினைக்கும் ஒரு சிலர் மற்ற மதத்தை பற்றி தாழ்வாக நினைக்கிறார்கள்.

    கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரையில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

    கற்றல் என்பது 20 சதவீதம் மட்டுமே பள்ளிக்கூடத்தில் கிடைக்கிறது. 80 சதவீதம் வெளியே கிடைக்கிறது. வெளியே கிடைக்கும் அறிவை ஊட்டுகின்ற பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

    டவுன் பஸ்சில் ஒரு குழந்தை ஏறி இறங்குகிறது என்றால் அந்த அறிவு கிடைக்கிறது. நாம் எப்படி நடந்து கொள்கிறோம் அதை ஒரு குழந்தை பார்த்தால் அங்கு அறிவு கிடைக்கிறது. ஒரு வீட்டிற்குள் தந்தை, தாய் எப்படி நடந்து கொள்கிறார்கள் அதை பார்த்து குழந்தைக்கு அறிவு கிடைக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம். வீட்டில் அப்பா அம்மாவை சரியாக நடத்தவில்லை என்றால் ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்ற அறிவு குழந்தைக்கு மனதுக்குள் போய்விடும். வீட்டில் அப்பா அம்மாவை எப்படி அழைத்து பேசுகிறார், வேலைகளை எப்படி பகிர்ந்து செய்கிறார்கள், அந்த வீட்டில் பெரியோர்களுக்கான மரியாதை எப்படி இருக்கிறது. இந்த 80 சதவீதம் கற்றல் என்பது பள்ளிக்கூடத்திற்கு வெளியே தான் நடக்கிறது.

    ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகப்பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது. நாம் குழந்தைக்கு கற்றல் அறிவை வெளியே கொடுத்தால் மட்டும் தான் இங்கே கிடைக்கக்கூடிய 20 சதவீத கற்றலை முழுமையாக கிரகித்து அந்த குழந்தை சுவாமி விவேகானந்தர் கேட்ட முழுமையான ஒரு குழந்தையாக இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வரும்.

    ஆன்மிக அறிவு இருந்தால் மட்டும்தான் ஒரு வாழ்க்கையை சமமாக பார்க்கக்கூடிய ஒரு பண்பு கிடைக்கும்.

    secular education என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அதன் அர்த்தம் எந்தவொரு மதத்தையும் சிறுமைப்படுத்தாமல் இருப்பது தான். எந்தவொரு மதத்தை பற்றியும் பேசாமல் இருப்பது secular education கிடையாது.

    ஒரு மதத்தை சிறுமைப்படுத்தாமல் எல்லா மதத்தையும் சமமாக மதிக்கக்கூடிய ஒரு கல்வி secular education.

    இன்றைக்கு ஒரு மதத்தை சார்ந்த, எல்லா மதத்தையும் சொல்லிக்கொடுக்கக்கூடிய கல்வி ஒரு பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டும்.

    அரசு சொல்கிறதோ இல்லையோ, பகவத் கீதையின் 18 அத்தியாயத்தையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    8 முதல் 12-ம் வகுப்பு முடிக்கும்போது அந்த குழந்தைக்கு ஸ்லோகம் தெரிந்து இருக்கும். பகவத் கீதையின் கருப்பொருள் தெரிந்து இருக்கும். மகாபாரதம் ஒரு பாடமாக சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

    அந்த குழந்தை மேடையில் நாடகம் போடும்போது ஒரு பகுதியை எடுத்து செய்ய வேண்டும். அதே குழந்தைக்கு குரானில் என்ன சொல்கிறார்கள் என்ற புரிதல் இருக்க வேண்டும். அது இந்து மதத்தை பின்பற்றக்கூடிய குழந்தையாக இருந்தாலும் மற்ற மதத்தின் அடிப்படையை சொல்லிக்கொடுத்து தான் பள்ளிக்கூடத்தை விட்டு அனுப்ப வேண்டும். கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையும் அந்த குழந்தைக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

    Lent என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன? 7-வது நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சினகாக் யூத கம்யூனிட்டி சொல்கிறார்களே அது என்ன? இதை எல்லாம் அந்த குழந்தைக்கு சொல்லிக்கொடுத்து அனுப்பினால் தான் இந்து, முஸ்லீம் சண்டை வராது.

    நம்முடைய மதத்தை உயர்வாக நினைக்கும் ஒரு சிலர் மற்ற மதத்தை பற்றி தாழ்வாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு மதத்தை பற்றிய புரிதல் இல்லை.

    நாம் secular education என்ற போர்வையில் பள்ளிக்கூடத்தில் அதை எல்லாம் பிடுங்கி எறிந்து விட்டோம்.

    பள்ளிக்கூடத்தில் எல்லா மதத்தை பற்றியும் அடிப்படை புரிதல் ஒரு குழந்தைக்கு தெரிந்தால் மட்டும் தான் அந்த குழந்தை ஒரு மனிதனை சகோதரனாக, சகோதரியாக, எல்லா மனிதனையும் சமமாக, இன்னொரு மதத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை கையில் எடுக்கும்.

    நான் எல்லா பள்ளிக்கூடத்திலும் என்னுடைய பேச்சில் இதை சொல்கிறேன். குழந்தைக்கு ஆன்மிகத்தை, தர்மத்தை, மாற்று மதமாக இருந்தாலும் எடுத்து சொல்லிக்கொடுங்கள். 12-ம் வகுப்பிற்குள் அவர்களுக்கு என்ன மனது உருவாகிறதோ அது தான் அவர்களுடைய வாழ்க்கை. அதன்பிறகு அது உருவாகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு வந்தார்.
    • செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதனையடுத்து, செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கஉள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • நான் தெளிவாக இருக்கின்றேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.
    • பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

    அதிமுக உடன் கூட்டணி இல்லை என தெளிவாக இருக்கிறேன் என்றும் அவ்வாறு இருப்பின் ராஜிமானா செய்வேன் என்று கூறினீர்களே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எப்போதும் பேச்சை மாற்றி பேசுபவன் நான் இல்லை. வருங்காலத்தில் என்னை பார்ப்பீர்கள், எதையும் மாற்றி பேச மாட்டேன்.

    நான் தெளிவாக இருக்கின்றேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.

    பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
    • பாஜகவில் தொண்டராக பணியாற்றிக் கூட தயாராக இருக்கிறேன்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கூட்டணி குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை இறுதி முடிவாக எடுத்து கொள்ளுங்கள்.

    தமிழகத்தில் 4-ல் ஒருவர் தான் முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவில் தொண்டராக பணியாற்றிக் கூட தயாராக இருக்கிறேன்.

    தொண்டராக இருக்கிறேன் என்பதன் கருத்தை நீங்கள் புரி்நது கொள்ளுங்கள். பாஜகவின் வளர்ச்சியே முக்கியம், என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி முக்கியமல்ல. என்னுடைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

    திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொண்டிருக்கிறேன். ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் வருகிறார்.

    காங்கிரஸ் போல டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழக அரசியலை பாஜக கட்டுப்படுத்தாது. 

    விஜய்க்கான பாதுகாப்பு வேறு, அரசியல் என்பது வேறு. விஜய், செங்கோட்டையனுக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதில் அரசியல் காரணம் இல்லை.

    'Y' பிரிவு பாதுகாப்பு- பாஜகவுக்கு, விஜய், செங்கோட்டையனுக்கும் இடையே எந்த உறவும் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.
    • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடிபத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானம் மூலம் நாக்பூர் சென்றார். விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வரவேற்றனர்.

    அதன்பிறகு மோடி விமான நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாக தலைமை அலுவலகமான ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஹெட் கேவர் ஸ்மிருதி மந்திருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆா்.எஸ்.எஸ். நிறுவன தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

    அதைத் தொடர்ந்து அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்று இருந்தார். அவர் இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார்.

    அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்றார். அங்கு அவர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார். 2017-ம் ஆண்டுக்கு பிறகு அவர் அங்கு சென்றார்.

    குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னோக்கு கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. அது தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளிநோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

    மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:-

    குடிபத்வா பண்டிகையையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களில் லட்சக்கணக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் நாட்டின் சிறந்த டாக்டர்களின் ஆலோசனை, முதன்மை சிகிச்சை மற்றும் கூடுதல் உதவிகளை பெற முடியும். நோய் கண்டறிதலுக்காக அவர்கள் இனி நூற்றுக்கணக்காக கிலோ மீட்டர் பயணம் செய்யவேண்டிய தேவையில்லை.

    நாங்கள் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 2 மடங்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும் 3 மடங்கு உயர்த்தியுள்ளோம்.

    கொரோனா தொற்று காலத்தின் போது உலகத்துக்காக இந்திய உதவியாக இருந்தது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்திய மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளன.

    நாட்டின் பல்வேறு துறைகளிலும் பகுதிகளிலும் ஆர்.எஸ். தொண்டர்கள் தன்னலமின்றி பணியாற்றுகிறார்கள். மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உதவினார்கள்.

    அடிமை மனநிலையையும் அடிமைத்தனத்தின் சின்னங்களையும் நிராகரிப்பதன் மூலம் இந்தியா இன்று முன்னேறி வருகிறது. அடிமை மனநிலையுடன் உருவாக்கப்பட்ட தண்டனைச் சட்டத்தை நாங்கள் நிராகரித்துள்ளோம்.

    உலகின் அனைத்து மூலைகளையும் சென்றடையும் உலகம் ஒரு குடும்பம் என்பதே எங்கள் மந்திரமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பிரதமர் மோடி 'சோலாா் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதிகளையும் அவா் திறந்து வைத்தார்.

    • விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.
    • செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்று பேசுகிறார். எதுகை மோனையில் வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எதிரில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியில் அடிப்படையிலேயே மிக தீவிரமாக மக்கள் பணியாற்றி முன்னுக்கு வந்தனர்.

    விஜய் முதலில் தி.மு.க.வுக்கான எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும். அந்த காலத்து நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால் இன்று விஜய் படம் தெலுங்கானாவில் ஓஹோவென்று ஓடுகிறது. உங்களுக்கு பல மொழிகள் தேவைப்படும் போது குழந்தைகளுக்கும் இணைப்பு மொழி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    உங்கள் படத்திற்கு பல மொழிகள் வேண்டும். பாடத்திற்கு பல மொழிகள் வேண்டாம் என்று சொன்னால் எப்படி? விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.

    எங்களை தி.மு.க.வின் பி அணி என்று விஜய் சொல்கிறார். தி.மு.க. சொல்வதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். நீங்கள்தான் தி.மு.க.வின் பி அணி.

    பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று விஜய் சொல்கிறார். உங்களுக்கு பனையூர் வேண்டும். நீங்கள் சாலிகிராமத்தில் எனது வீட்டு அருகில் தான் சிறிய வீட்டில் இருந்தீர்கள். உங்கள் வாழ்க்கை விரிவடைய விரிவடைய உங்களுக்கு பனையூர் தேவைப்படுகிறது. அப்படியென்றால் தமிழக மக்களின் வாழ்க்கை விரிவடைய விரிவடைய பரந்தூர் தேவைப்படுகிறது. தமிழக அரசு கொடுக்கும் இடத்தில்தான் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும்.

    பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் தைரியும் இருப்பதாக கூறும் விஜய் தனது தயாரிப்பாளரை எதிர்த்து பேசி இருப்பாரா? உங்களுடைய டைரக்டரை எதிர்த்து பேசி இருப்பீர்களா?

    விஜய் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், ஆழமாகவும் அரசியலை கற்றுக் கொண்டு பேச வேண்டும். செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர்.
    • சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி. இது தமிழகத்தின் நலன்களை காப்பதற்கான சந்திப்பு என்றும் கூட்டணி பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

    ஆனால் மத்திய மந்திரி அமித்ஷாவோ தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக 2 கட்சிகளுமே தனித் தனி அணியை உருவாக்கி போட்டியிட்டு தோல்வியையே தழுவின. அது போன்ற நிலை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் 2 கட்சி தலைவர்களும் உறுதியோடு உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். பா.ஜ.க.வால் தான் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற முடியாமல் போய் விட்டது. அதுவே சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.

    இதற்கு பா.ஜ.க. தலைவர்களும் பதிலடி கொடுத்திருந்தனர். இது போன்ற காரணங்களால் 2 கட்சி தலைவர்களிடையே மனக்கசப்பும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே 2 கட்சிகளின் விருப்பமாக உள்ளது.

    இதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என டெல்லி பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் கூட்டணி விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளநிலையில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளையும் சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் அதற்கான சூழலை உருவாக்குவதில் தமிழக தலைவர்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்றும் டெல்லி பா.ஜ.க. தலைமை தெரிவித்துள்ளது.

    இப்படி அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைவர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்கி விட்டு அதன் பிறகே 2-வது கட்ட கூட்டணி பேச்சுவார்த் தையை நேரடியாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறும் பட்சத்தில் அது வலிமையான கூட்டணியாக நிச்சயம் மாறும் என்றே அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடி பத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானம் மூலம் நாக்பூர் புறப்பட்டு சென்றார். நாக்பூர் விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வரவேற்றனர்.

    அதன்பிறகு பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஸ்மிருதி மந்திருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆா்.எஸ்.எஸ். நிறுவன தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

    அந்த புத்தகத்தில், 'டாக்டர் ஹெட்கேவர், குருஜி ஆகியோருக்கு மனமார்ந்த வணக்கங்கள். உங்களின் நினைவுகளை போற்றி, இங்கு வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கலாச்சாரம், தேசியவாதம் மற்றும் அமைப்பின் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த இடம், தேச சேவையில் முன்னேற நம்மை ஊக்குவிக்கிறது. இந்த இடம், நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் இருக்கும் லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு ஒரு சக்தி மிகுந்த இடமாகும். நமது முயற்சிகள் மூலம் மகிமை எப்போதும் அதிகரிக்கட்டும்' என்று பிரதமர் மோடி எழுதி கையெழுத்திட்டார்.

    குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னோக்கு கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. அது தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளி நோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

    அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்றார். அங்கு அவர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.

    அதன்பிறகு பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்றுள்ளார். நரேந்திர மோடி இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். மேலும் ஆா்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்லும் முதல் இந்திய பிரதமரும் அவா் என்பதால் இந்த பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அங்கு அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தீர்க்கும் வகையில் பிரதமர் மோடி இன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவரது தேசிய தலைவர் பதவியும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்வாக்கும் இருப்பதால் புதிய தேசிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றியும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    அங்கு ஆலோசனையை முடித்துவிட்டு புறப்பட்ட பிரதமர் மோடி 'சோலாா் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதிகளையும் அவா் திறந்து வைத்தார்.

    நாக்பூரில் சமீபத்தில் இரு பிரிவினரிடையே மோதல்-வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார். 2024 பாராளுமன்ற தோ்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அவர் அங்கு அவா் செல்கிறாா்.

    இதையொட்டி பிலாஸ்பூரில் சுமாா் 2 லட்சம் பொதுமக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமா் மோடி, சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ரூ.33,700 கோடிக்கும் மேல் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறாா். தொடா்ந்து அவா் மக்களிடையே உரையாற்றுகிறார்.



    • டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை.
    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் சூட்டை கிளப்பி இருப்பதுடன் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே அமித்ஷா-செங்கோட்டையன் சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்று அமித்ஷா, செங்கோட்டையனிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இது பற்றி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை. அப்படி இருக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி விட்டு செங்கோட்டையனை அவருக்கு எதிராக எப்படி திருப்பி விட முடியும் என்பதும் பாரதிய ஜனதா கட்சியினரின் கேள்வியாக உள்ளது.

    ×