என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகவல் அறியும் உரிமைச் சட்டம்"

    • டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு சட்டத்தின் 44 (3) பிரிவு RTI-யை நீர்த்துக்பொகச் செய்யும் வகையில் உள்ளது.
    • சட்டமானது தனிநபர் உரிமை, ஊடக சுதந்திரம் ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

    மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் நாம் விரும்பும் தகவலை பெற முடியும்.

    ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது டிஜிட்டல் தரவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுள்ளது. இந்த சட்டமானது தனிநபர் உரிமை, ஊடக சுதந்திரம் ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

    மேலும், இதில் உள்ள சட்டப்பிரிவு 44 (3) ஆர்.டி.ஐ. சட்டத்தை நீர்த்துக்பொகச் செய்யும் வகையில் உள்ளது. இந்த பிரிவை தீரும்பப் பெற வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கவுரவ் கோகாய், ஜான் பிரிட்டாஸ், எம்.எம். அப்துல்லா, பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் அரசுக்கு மனு கொடுத்துள்ளனர்.

    • இலவச சட்ட பயிற்சி முகாம் சிவகிரி மு.வீ.தே.தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
    • போலீஸ் நிலையத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பது எப்படி? என்பது குறித்த சட்டப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரியில் பாதிக்கப்பட்டோர் கழகம், வரி செலுத்துவோர் நல உரிமை, புளியங்குடி சமூக பாதுகாப்பு சங்கம் மற்றும் மாற்றத்தை நோக்கி குழு சங்கங்களின் சார்பில் இலவச சட்ட பயிற்சி முகாம் சிவகிரி மு.வீ.தே.தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாதிக்கப்பட்டோர் கழகம் மாநில தலைவர் கணேசன், மு.வீ.தே.தொடக்கப்பள்ளி செயலாளர் பாலு ஆசிரியர், வரி செலுத்துவோர் நல சங்கம் தலைவர் அருணாசலம் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆசிரியர் மருதுபாண்டியன், குட்டி ராசு, தீபக் ராஜப்பா, சதீஷ் குமார், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவது எப்படி?, அரசு வழங்கும் இலவச சேவைகளை லஞ்சம் இல்லாமல் பெறுவது எப்படி?, போலீஸ் நிலையத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பது எப்படி? என்பது குறித்த இலவச சட்டப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளை இனிவரும் காலங்களில் அரசே நடத்த வேண்டும் அப்போதுதான் சரியான முறையில் மக்களுக்கான சேவைகளை செய்யப்படும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிற மாவட்ட பகுதிகளில் இருந்து சமூக ஆர்வலர்கள் 136 பேர் கலந்து கொண்டனர்.

    • கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது
    • 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்

    மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் இந்தியன் ரெயில்வே ₹5,800 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியன் ரெயில்வே பதில் அளித்துள்ளது.

    அதில், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் மார்ச் 20, 2020 முதல் ஜனவரி 31, 2024 வரை ரெயில்வே துறைக்கு 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது.

    இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களுக்கு மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

    ரயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்.

    அதன்படி, கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு, ரெயில் கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீத சலுகையும் ரெயில்வே வழங்கியது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் பிரிவில் சுமார் 13 கோடி ஆண்களும், ஒன்பது கோடி பெண்களும் மற்றும் 33,700 திருநங்கைகள் மொத்தமாக 13,287 கோடி பணம் செலுத்தி ரெயில் டிக்கெட் பெற்றுள்ளனர்.

    வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றிய தகவல்களை தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. #PMO #BlackMoney
    புதுடெல்லி:

    பிரபல இந்திய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைகளில் பலர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முறைகேடாக பதுக்குவதாக குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் பெரும் அளவில் கருப்பு பணம் வருவதாகவும் கூறப்படுகிறது.

    2005-14-ம் ஆண்டுகளில் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் சுமார் ரூ.11 லட்சம் கோடியை கருப்பு பணமாக பதுக்கி வைத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய நிதி விவகார கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது. அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் ரூ.53 லட்சம் கோடி கருப்பு பணம் ஊடுருவி இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

    இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் சஞ்சீவ் சதுர்வேதி என்பவர் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

    அதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதில் அளித்த பிரதமர் அலுவலகம் இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறிவிட்டது.

    இதனால் சதுர்வேதி மத்திய தகவல் ஆணையத்தை இது தொடர்பாக அணுகினார். அதையடுத்து பிரதமர் அலுவலகம் அடுத்த 15 நாட்களுக்குள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றிய விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று கடந்த மாதம் 16-ந்தேதி உத்தரவிட்டது.


    என்றபோதிலும் பிரதமர் அலுவலகம் மத்திய தகவல் ஆணைய உத்தரவின்படி கருப்பு பணம் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் பிரதமர் அலுவலகம் இதற்கு பதில் அளித்து கூறியிருப்பதாவது:-

    கருப்பு பணத்தை மீட்பதற்காக ஏற்கனவே சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில் கருப்பு பணம் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை வெளியே கூறினால் அது விசாரணைக்கு முழுமையாக இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்து விடும்.

    அதேபோல் இது சிறப்பு குழுவின் விசாரணையை தாமதப்படுத்துவதற்கும், குற்றவாளிகள் தப்பி விடுவதற்கு உதவி செய்வது போலவும் அமைந்து விடும். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு விதிவிலக்கு அளித்து இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #PMO #BlackMoney 
    அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு பிரதமர் செல்லும் போது பாதுகாவலர்கள் தவிர பயணம் செய்யும் தனி நபர்கள் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #RTI #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் தவிர, பிரதமருடன் செல்லும் தனி நபர்கள் குறித்த விபரங்களை தர வேண்டும் என சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்திருந்தார்.

    இந்த தகவல்களை வெளியுறவு அமைச்சகம் தர மறுக்கவே, மத்திய தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், “பிரதமருடன் விமானத்தில் பயணிக்கும் தனி நபர்கள் குறித்த பட்டியலை மனு தாரருக்கு அளிக்க வேண்டும்” என தலைமை தகவல் ஆணையர் மாத்தூர் வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். 
    கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற ஆர்.டி.ஐ கேள்விக்கு, அதற்கான ஆவணங்களை பராமரிக்கவில்லை என வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MEA #RTI
    புதுடெல்லி:

    தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், மத்திய தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையராக இருந்தவருமான ஷைலேஷ் காந்தி, வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்திற்கு சில கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் கேட்டிருந்தார். 

    அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் எத்தனை?, அதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் எவ்வளவு?, தனியார் நிறுவனங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் பணி மேற்கொண்டால், அந்நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு? ஆகிய கேள்விகளை ஷைலேஷ் காந்தி கேட்டிருந்தார்.

    மேற்கண்ட கேள்விகளுக்கு, வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அதிகாரி கடந்த 15-ம் தேதி பதில்களை அனுப்பியுள்ளார். அதில், பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்ட ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை எனவும் மற்ற கேள்விகளுக்கு ஒரு குறிப்பிட்ட விதியை சுட்டிக்காட்டி பதில் தெரிவிக்க முடியாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

    ஆவணங்களின் ரகசியம் பாதிக்கப்படும் என்றாலோ, பொதுமக்களின் தகவல்கள் கசியும் என்றாலோ சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் பதிலளிக்க தேவையில்லை என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் உள்ள ஒரு அம்சமாகும். இந்த அம்சத்தை பயன்படுத்தி மேற்கண்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சகம் அவ்வாறு பதிலளித்துள்ளது.

    மாறாக, கடந்த 2015-ம் ஆண்டு மனோரஞ்சன் ராய் என்பவர் 2012 முதல் 2013 வரை விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட் தகவல்களுக்கு, 2012-ல் 73,89,558 பாஸ்போர்ட்கள் மற்றும் 2013-ல்  58,17,515 பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப் பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சகம் முறையான பதிலை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×