search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாராயணசாமி"

    • கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை.
    • என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை. முன்பு இருந்த கவர்னர்கள் கிரண்பேடி, தமிழிசை ஆகியோர் அரசியல் செய்தனர். அதற்குத்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரியாக இருந்த கைலாஷ்நாதன், பா.ஜனதா முதலமைச்சர்களிடம் வேலை செய்திருந்தாலும், தற்போது அவர் கவர்னர்.

    அவர் நடுநிலையோடு செயல்படுவார் என நம்புகிறோம். அப்படி செயல்பட்டால் அவருடன் சேர்ந்து செயல்படுவோம். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் அரசியல் செய்து அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.

    புதுவை கவர்னர் அரசியல் செய்தால் அதையும் எதிர்ப்போம்.

    புதுவைக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மத்திய அரசிடம் வாங்குவது ரூ.2 ஆயிரத்து 300 கோடிதான். புதுவைக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கிடைக்க வேண்டும்.

    எனவே மாநில அந்தஸ்து பெற வேண்டியது அவசியம். புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் டெல்லிக்கும் கொடுக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் இதை கேட்பார் என்பதால் மத்திய அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது.

    முதலமைச்சராக ரங்கசாமி இருக்கும் வரை அவரால் மாநில அந்தஸ்து வாங்க முடியாது. அவர் புதுவை எல்லையை தாண்டி டெல்லி செல்லாதவர். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதவர். முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காதவர். அவர் பா.ஜனதாவில் சேர்ந்தால் மட்டுமே புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது. பா.ஜனதா தனியாக ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அப்போது வழங்குவார்கள். மத்திய மோடி அரசு புதுவையில் அரசியல் விளையாட்டு செய்கிறது. ரங்கசாமியை ஏமாற்றுகின்றனர். மாநில அந்தஸ்து பெற பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த ரங்கசாமி, ஏன் எந்த கூட்டணியை விட்டு வெளியேறவில்லை?

    அவருக்கு முதலமைச்சர் நாற்காலி வேண்டும். அதற்காக அவர் கட்சியை, எம்.எல்.ஏ.க்களை தியாகம் செய்வார். மாநில அந்தஸ்து பெற ராகுல்காந்தி, எதிர்கட்சி எம்.பிக்கள், பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல், பித்தலாட்டம் நடந்துள்ளது.
    • குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும், நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளை கண்டித்தும் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல், பித்தலாட்டம் நடந்துள்ளது. பீகாரில் நீட் தேர்வு கேள்வி தாள்களை கசியவிட்டு ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளனர். குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ளனர். இப்படி நீட் தேர்வில் பலதரப்பட்ட ஊழல் நடந்துள்ளது. நீட் தேர்வு முகமை தான் இந்த ஊழல்களுக்கு முக்கிய காரணம்.

    நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்மந்தமான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் தேர்வு முறைகேடு சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    பிரதமர் மோடி ஆட்சியில் எந்த தேர்வும் முறையாக நடைபெறவில்லை. எல்லாவற்றிலும் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சம்பந்தப் பட்டவர்களுக்கு கிடைக்கிறது. மோடி ஆட்சியில், ஒட்டுமொத்தமாக அரசு நடத்தும் தேர்வுகள் மோசமாக கையாளப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடந்தது இல்லை. மோடி ஆட்சியில் சர்வசாதாரணமாக முறைகேடுகள் நடக்கிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இது சகஜமாக நடக்கிறது. ஆகையால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுவாக வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாநில கட்சிகளை சமரசம் செய்து மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
    • இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்கட்சிகளை மதிக்காத தன்மை, ஆணவப் போக்கு, தொழிலதிபர்களை மிரட்டுவது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்துவது, குடியுரிமை சட்டம், நீட் உட்பட மக்கள் விரும்பாத சட்டங்களை நிறைவேற்றியது ஆகியவற்றுக்கு பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்திய மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    400 தொகுதிகளை பெறுவோம் என மார்தட்டிய பாஜனதா 240 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். மாநில கட்சிகளை சமரசம் செய்து மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.

    பாஜகவுக்கும், மோடிக்கும் இது அவமானம். சிறந்த அரசியல்வாதி என்றால் பிரதமராக மோடி பதவி ஏற்கக்கூடாது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் நீண்ட அனுபவம் உள்ள அரசியல் தலைவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள்.

    கூட்டணி கட்சிகளால் பாஜக ஆட்சி கவிழும். 5 ஆண்டு இந்த ஆட்சி நீடிக்காது. குறை பிரசவம்தான்.

    புதுவை மக்கள் காங்கிரசுக்கு பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியை தந்துள்ளனர். பண பலம், அதிகார மீறல் ஆகியவற்றை தாண்டி தீர்ப்பை புதுவை மக்கள் வழங்கியுள்ளனர். முதலமைச்சர், அமைச்சர்கள், 22 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் 28 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார்.

    முதலமைச்சர், அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அமைச்சர்கள் நமச்சிவாயமும், லட்சுமிநாராயணனும் தாங்கள் வசிக்கும் இடத்திலேயே வாக்குகள் குறைவாக பெற்றுள்ளனர்.

    என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் எதிர்ப்பை மீறி ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தோம். கார்களில் அமைச்சர்கள் வீதியுலா வந்தாலும், பொது மக்களை சந்திப்பது இல்லை.

    கிராமங்களுக்கும், பிற பிராந்தியங்களுக்கும் செல்வதில்லை. 2011-ல் கட்சி ஆரம்பிக்கும்போது கூறிய மாநில அந்தஸ்தை 300-க்கும் மேற்பட்ட முறை கூறினாலும், அதை பெறவில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.

    இதற்கு பிறகும் ஆட்சியில் ரங்கசாமி நீடிக்க தார்மீக உரிமை இல்லை. ஆனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்.

    இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும்.

    மத்தியில் சில மாநிலங்களில் நாங்கள் கணித்த வெற்றி கிடைக்கவில்லை. உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இனி இந்தியா கூட்டணி கட்சிகளின் காலம்தான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசியலமைப்பு சட்டப்படி எந்த கட்சியும் சாராமல் இருக்க வேண்டிய கவர்னர் பாஜக கைக்கூலியாக செயல்படுவது வேதனை தருகிறது.
    • புதுவையில் முன்பு இருந்த கவர்னர்கள் போல சி.பி.ராதாகிருஷ்ணனும் புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்கட்ட தேர்தல் முதல் 6-ம் கட்ட தேர்தல் வரை மோடி 10 ஆண்டு பிரதமராக என்ன செய்தார்? என பிரசாரத்தில் பேசவில்லை.

    பிரதமர், அமித் ஷா, பா.ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களை வசைபாடுவதும், காங்கிரஸ் கட்சியை தரம்தாழ்ந்து பேசுவதும், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சிறையில் தள்ளும் வேலையைத்தான் செய்கின்றனர்.

    அயோத்தி கோவிலை இடிக்கும் கட்சி காங்கிரஸ் என பிரதமர் பொய் பிரசாரம் செய்கிறார். பிரதமர் தன்னை அவதார புருஷன் என பேசி வருகிறார். அவரது பேச்சில் இருந்து பா.ஜ.க. படுதோல்வி அடையும் என தெரிகிறது. இந்தியா கூட்டணி மிகப்பெரும் அளவில் எம்.பி. தொகுதிகளை கைப்பற்றும்.

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் 200 இடங்களை தாண்டாது. இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். புதுவையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெறுவார். தமிழகம், புதுவையில் 40 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஒரு இடத்தில்கூட பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.வும் படுதோல்வி அடையும்.

    தமிழ்நாடு கவர்னராக ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். அவர் அதிகார மீறல், ஜனநாயகத்தை மதிக்கவில்லை என சுப்ரீம்கோர்ட் சாடியும் திருந்தவில்லை. தமிழக தி.மு.க. ஆட்சிக்கு தொல்லை கொடுப்பது, கோப்புகளை நிராகரிப்பது, திருப்பி அனுப்புவது என அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.

    தமிழக கவர்னர் ரவி திருவள்ளுவர் விழாவை கவர்னர் மாளிகையில் கொண்டாடியுள்ளார். திருவள்ளுவர் எந்த காலத்திலும் காவி உடை அணிந்தது இல்லை. அவர் படங்கள், சிலைகளில் வெள்ளை உடையுடன் இருப்பார். வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்க, தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கொச்சைப்படுத்த, தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க சர்ச்சை வேலையை கவர்னர் செய்துள்ளார்.

    இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல, அவரை ஊக்குவிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியும்தான் பொறுப்பு.

    கவர்னர் மூலம் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு விரைவில் வரும்.

    கவர்னர் தமிழக மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தனது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்ததை படிப்படியாக தமிழ்நாட்டில் நுழைக்கும் வேலையை பார்க்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி எந்த கட்சியும் சாராமல் இருக்க வேண்டிய கவர்னர் பாஜக கைக்கூலியாக செயல்படுவது வேதனை தருகிறது.

    புதுவையில் முன்பு இருந்த கவர்னர்கள் போல சி.பி.ராதாகிருஷ்ணனும் புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் என்ற நிலையில் இருந்து தடுமாறியுள்ளார்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தரம்தாழ்ந்து பேசி வருகிறார். ராகுல்காந்தியையும், காங்கிரசையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். பிரதமர் என்ற நிலையில் இருந்து தடுமாறியுள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளை பற்றி பேசாமல், புலம்பி வருகிறார். தினமும் தன் நிலையிலிருந்து மாறி, மாறி பேசி தடம் புரண்டு வருகிறார்.

    நடந்த முடிந்த 3 கட்ட தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். 7 கட்ட தேர்தல் முடியும் நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். யார் பிரதமர் என்பதை இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள். ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெறுவார்.

    மோடி மீதான எதிர்ப்பு அலை, பா.ஜ.க. வேட்பாளரின் செயல்பாடு ஆகியவற்றின் மீதான அதிருப்தியால் காங்கிரஸ் வெற்றி உறுதியாகியுள்ளது.

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி 3 ஆண்டு முடிந்து 4-ம் ஆண்டை தொடங்கியுள்ளது. இந்த ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்தான் அளிக்க முடியும். எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை. தேர்தலில்கூட முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசவில்லை.

    புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு ஆகியவை உருவாக்கப்படவில்லை. கஞ்சா, அபின் தாராளமாக விற்பனையாகிறது. விலை வாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் புதுவையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேபோல மாநில அரசு அளித்த வாக்குறுதிகளான மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் சேர்ப்பது, கடன் தள்ளுபடி ஆகியவை நிறைவேற்றப் படவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சி மக்களை வஞ்சித்துள்ளது. காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டங்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடக்கி வைத்துள்ளது.

    ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி னோம். இந்த திட்டத்துக்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் மாணவர் களுக்கு வழங்கப்பட வில்லை. இந்த நிதி கருவூலத்தில் உள்ளது. இதை திட்டமிட்டு மாணவர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்க காங்கிரஸ் அமைச்சரவையில் முடிவெடுத்தோம். இந்த திட்டத்தையும் அரசு கிடப்பில் போட்டுள்ளது. நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

    தற்போது நீட் தேர்வு மூலம்தான் நர்சிங் மாணவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும்.
    • இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி.

    புதுச்சேரி:

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை மிஷன் வீதியில் உள்ள பசுமை வாக்குச்சாவடியான வ.உ.சி. அரசு பள்ளி மையத்தில் தனது வாக்கை செலுத்தினார்.

    சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தனது மகளுடன் அவர் வாக்கை செலுத்தினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும். இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் தேர்தல். மோடியின் பணபலமும், ராகுல் காந்தியின் மக்கள் சக்தியும் களத்தில் இருக்கின்றன. எப்போதும் மக்கள் சக்திதான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும்.

    பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருக்கும் வேலைவாய்ப்பு, நாட்டின் அமைதி, பொதுசொத்தை பாதுகாப்பது, எல்லை பாதுகாப்பு போன்ற வாக்குறுதிகளை கொடுத்தார். 10 ஆண்டுகளாக அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதை பற்றி பேசுவதும் இல்லை.

    காங்கிரஸ் கட்சியை வசைப்பாடி, வாரிசு அரசியல் என பேசி வாக்கு சேகரித்தார். மோடியின் ஆட்சி ஒட்டுமொத்த ஊழல் ஆட்சி, வருமான வரித்துறை வழக்கு போன்ற வழக்குகளில் உள்ளவர்கள் தேர்தல் பத்திரங்களை கொடுத்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி 3 ஆண்டுகளில் எந்த சாதனையையும் செய்யவில்லை. புதுவையில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா போதை பொருட்கள் அதிகரித்துள்ளன.

    தேர்தல் அறிக்கையில் கூறிய எதனையும் அவர் நிறைவேற்றவில்லை. வேட்பாளர் நமச்சிவாயம் அவரது துறையில் எதையும் செய்யவில்லை. வெளிநாட்டிலேயே அவர் இருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    மின்சார துறையை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளார். சொத்து குவித்து வைத்துள்ளார். பா.ஜனதா பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி. புதுவை மக்கள் பணத்திற்கு அடிபணியமாட்டார்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சொத்து விபரங்களை அவர் கூறினால் நன்றாக இருக்கும்.
    • நம்ம புதுச்சேரியிலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம் ரூ.1000 கோடி அளவுக்கு சொத்து வைத்துள்ளார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார்.

    இந்த நிலையில் உப்பளம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் ரங்கசாமி, நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து பிரசாரம் செய்தார்.

    பா.ஜனதா வேட்பாளரும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயத்துக்கு ரூ.1000 கோடி சொத்து உள்ளதாக நாராயணசாமி கூறியுள்ளார். இவருக்கு ரூ.1000 கோடி சொத்துன்னா, அவருக்கு எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருக்கும்?


    அவர் முதலமைச்சர், மத்திய அமைச்சர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர், 15 ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக இருந்துள்ளார். அப்படியென்றால் அவரிடம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்? அவரிடம் உள்ள சொத்து விபரங்களை அவர் கூறினால் நன்றாக இருக்கும்.

    நம்ம புதுச்சேரியிலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும், எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். அவர் எதையாவது சொல்லனும் என போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போகிறார்.

    இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

    • மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
    • கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியில் புதுச்சேரி மாநில மக்கள் அவதிபடுகின்றனர். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நிலம், வீடு அபகரிப்பு நடக்கிறது.

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இரட்டை எஞ்சின் ஆட்சி இருக்க வேண்டும்.

    மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.

    ஆனால் அவரால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்தால், 5 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.

    புதுச்சேரி மாநிலத்தில் ரெஸ்டோ பார்களை திறந்து மதுகுடிக்கும் மாநிலமாக மாற்றிவிட்டனர். கஞ்சா மாநிலமாக ஆக்கி விட்டனர். இவர்கள் ஆட்சியில் நீடித்தால் புதுச்சேரியின் வளர்ச்சி மட்டுமின்றி, இளைஞர் சமுதாயம் வீணாகிவிடும். அதற்கு முன்னோட்டமாக இந்த மக்களவை தேர்தல் இருக்கிறது.

    இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். நாம் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

    கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கின்ற என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது.
    • குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் நடந்தது.

    100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.

    உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுச்சேரியில் நடந்த கொடூர சம்பவம் பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா கூட்டணி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது. கல்லூரி, பள்ளி, பல்கலைக்கழகம் முன்பாகவும் விற்கப்படுகிறது.

    புதுவை கஞ்சா நகரமாகிவிட்டது. மக்கள் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார்கள் திறக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    முதல்- அமைச்சரும், உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்தே இச்சம்பவம் நடந்துள்ளது. குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு எப்படி அனுப்புவது? யார் பாதுகாப்பு என பெற்றோர்கள் பயத்தில் உள்ளனர்.

    பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் இதேநிலைதான் உள்ளது.

    குஜராத்தில் ஏராளமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். பெண்களை துச்சமாக மதிக்கும் பா.ஜனதா, பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும்.

    சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என தெரியவில்லை.

    புதுவை அரசு வழக்கை பூசி மெழுக பார்க்கிறது. அத்துடன் கஞ்சா விநியோகம், எங்கிருந்து வருகிறது. யார் விநியோகம் செய்கிறாகள். எந்த அரசியல்வாதி பின்னணி, பல மாநிலங்களில் சேர்ந்து வருவதால் சி.பி.ஐ. விசாரணை வைத்தால் தான் இவ்வழக்கை முழு ரூபத்தை காணமுடியும். நடவடிக்கை எடுக்க முடியும்.

    சிறுபான்மையினரை பாதிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம். புதுச்சேரியில் அமல்படுத்த முயற்சித்தால் எதிர்ப்போம்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நிற்க யாருமில்லா நிலை பா.ஜனதாவில் உருவாகியுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்கும் என்று கூறினார்.

    • கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
    • வைத்திலிங்கம் புகைப்படத்துடன் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு நகர பகுதியில் காங்கிரசார் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதியடைந்துள்ளது.

    கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அளவிலான தொகுதிகளை பெற காங்கிரஸ் கடும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும், புதுவை தொகுதியை பெற தனி கவனம் செலுத்தினர்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரத்தில் தி.மு.க. 6 தொகுதியில் வெற்றிபெற்று எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது.

    இதன் மூலம் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் பெரிய கட்சியாக தி.மு.க. கருதுகிறது. இதனால் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சி தலைமையை வலியுறுத்தி வந்தது.

    அதே நேரத்தில் காங்கிரசார் புதுச்சேரியை தங்களின் கோட்டை என நிரூபிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதனால் புதுச்சேரி தொகுதியை பெறுவதில் தி.மு.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

    சிட்டிங் தொகுதி என்ற முறையில் புதுச்சேரி தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது.

    புதுச்சேரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கமே மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளார். காங்கிரசில் வைத்திலிங்கம் எம்.பி. தவிர முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சீட் கேட்டு வருகிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வேட்பாளர் யார்? என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஆனால் சிட்டிங் எம்.பி. என்ற முறையில் கூடுதலான வாய்ப்புகளை வைத்திலிங்கமே பெற்றுள்ளார். இதனிடையே வைத்திலிங்கம் புகைப்படத்துடன் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு நகர பகுதியில் காங்கிரசார் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.

    கிராமப்புறங்களில் கடந்த 10 ஆண்டுக்கு முன்புள்ள விலைவாசியையும், தற்போதுள்ள விலைவாசியையும் ஒப்பிட்டு காங்கிரசுக்கு வாக்களிப்பீர் என கேட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் கை சின்னத்தை வரைந்து பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர்.

    • தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    மதுரை:

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு பிரதமர் எந்த அளவுக்கு பொய் செல்ல வேண்டுமோ அந்த அளவையும் மீறி பிரதமர் மோடி பொய் சொல்லி வருகிறார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களை பிரதமர் புறக்கணித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டனர். அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றாக சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

    ஆனால் பிரதமர் மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு தமிழக மக்களை புறக்கணித்ததுடன் இதுவரை நிவாரணத்துக்கான எந்த உதவியைுயம் செய்யவில்லை. தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வாறு செய்திருந்தால் அதை பட்டியலிட்டு கூற வேண்டும். ராமேசுவரம், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை சந்திக்கவில்லை.

    10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலின்போது கூறிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டு வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வந்து ஒவ்வொரு கணக்கிலும் 15 ஆயிரம் ரூபாய் செலுத்துவோம் என்று கூறினார். அதை நிறைவேற்றவில்லை. வேலையில்லா திட்டாட்டம், வறுமையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. மின் கட்டணம் உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என மக்கள் அவதிப்படுகின்றனர்.


    மாநில கட்சிகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை குறை சொல்வதை மட்டுமே பிரதமர் செய்து வருகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு எந்த வேலையும் நடக்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

    தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது புதுச்சேரியில் சாராய ஆறு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை பா.ஜனதா அரசு செய்ததாக மோடி கூறி வருகிறார்.

    இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். அப்போது பா.ஜனதா வீட்டுக்கு அனுப்பப்படும். பா.ஜனதாவிடம் கூட்டணி சேர ஒரு கட்சிக்கூட முன்வரவில்லை. இந்தியா கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. அமெரிக்காவில் கூட இன்றும் வாக்குச்சீட்டு முறையே உள்ளது. அதே போல் இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
    • மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    ஆனால் புதுச்சேரி சட்டசபையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ந்தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது. ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வருகிற 22-ந் தேதி காலை 9.45 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது.

    அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    சட்டசபை கூடும் தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    2024-25-ம் நிதியாண்டுக்கான மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

    2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×