search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனுஷ்கோடி"

    • புனித ஸ்தலமாகவும், சுற்றுலாப் பகுதியாகவும் உள்ளது.
    • தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபும் மாவட்டம் ராமேசுவரம் இந்திய அளவில் புனித ஸ்தலமாகவும், சுற்றுலாப் பகுதியாகவும் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 2.50 கோடி வரை பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் அனைவரும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சந்திரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பல கோடி மதிப்பிட்டில் 2017 ஆண்டு முகுந்தராயர் சந்தரம் பகுதியில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இந்த பணி தொடங்கும் நிலையில் மீனவர்கள் இந்த பகுதியில் மீன் இறங்கு தளம் அமைத்தால் சேதமடைந்து விடும் என மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் கட்டுமான தொடங்கி முடிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தொடந்து கடல் சீற்றத்தின் காரணமாக டி வடிவில் அமைக்கப்பட்ட பாலம் ஒரு பகுதி உடைந்து கடலுக்குள் விழுந்து விட்டது. மற்றொரு பகுதி உடைந்து கடலுக்குள் விழும் நிலையில் உள்ளது.

    பாலத்தின் சேதமடைந்த பகுதியில் அலைகள் சீற்றத்துடன் மோதி 15 அடி உயரம் வரை மேல் எழும்புகின்றனர். சூறாவளி காற்று வீசம் நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆட்களை இழுத்து செல்லும் அளவிற்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்புகின்றன.

    இதன் ஆபத்தை உணராமல் முகுந்தராயர் சத்திரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் பாலத்தில் நடந்து சென்று பார்ப்பதுடன் பெண்கள், குழந்தைகளுடன் சென்று செல்பி எடுத்துக்கொள்ளுகின்றனர்.

    பாலம் உறுதி தன்மை இல்லாத நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்லுவதால் பாலம் சேதமடைந்து கடலில் விழுந்தால் யாரையும் காப்பற்ற முடியாது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் எச்சரித்தாலும் அதனை சுற்றுலாப் பயணிகள் பொருட்படுத்துவதில்லை. எனவே சேதமடைந்து பாலத்திற்கு யாரும் செல்ல முடியாத நிலையில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    • இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புள்ளவை.
    • இப்பகுதி வெளிர்நீல நிறத்தில் காணப்படுகிறது.

    புதுடெல்லி:

    தமிழகத்தின் ராமேசுவரம் அருகில் உள்ள தனுஷ் கோடியில் இருந்து இலங்கையில் தலைமன்னார் வரை கடற்பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ் கோடியில் இருந்து முதல் 6 தீடைகள் இந்தியாவுக்கும் 7 முதல் 13 வரையிலான தீடைகள் இலங்கைக்கும் சொந்தமானவை.

    இது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புள்ளவையாக இருப்பதால் ராமர் பாலம் (ராம் சேது), ஆதாம் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இது ராமர் கட்டிய பாலம் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.

    இப்பாலத்தின் கிழக்கில் சுமார் 130 சதுர கி.மீ. பரப்பளவை கொண்ட மன்னார் தீவு உள்ளது. இது, இலங்கையின் பிரதான நிலப்பகுதியுடன் சாலை மற்றும் ரெயில் பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் பாலத்தின் மேற்கில் இந்தியப் பகுதியில் ராமேஸ்வரம் தீவு உள்ளது. இது இந்தியாவின் பிரதான நிலப்பகுதியில் உள்ள பாம்பனில் இருந்து சாலை மற்றும் கடல் பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி தனது காப்பர்நிகஸ் சென்டினல்-2 செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ராமர் பாலத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டு

    உள்ளது. இங்கு கடல் மிகவும் ஆழமற்றதாக அதாவது 1 மீட்டர் முதல் 10 மீட்டர் வரையிலான ஆழத்தில் மட்டுமே இருப்பதால் இப்பகுதி வெளிர்நீல நிறத்தில் காணப்படுகிறது.

    இங்குள்ள சுண்ணாம்பு கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் கூறுகின்றன.

    இதுகுறித்து ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கூறுகையில், "இந்த இயற்கை பாலம் 15-ம் நூற்றாண்டு வரை பயணிக்க கூடியதாக இருந்ததாகவும் பின்னர் புயல்களால் படிப்படியாக அது அரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது" என்றும் கூறியுள்ளது. அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ராமர் பாலம் தொடங்கும் இடமாக கருதப்படும் அரிச்சல் முனை பகுதிக்கு பிரதமர் மோடி பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த பாலம் பயன்பாட்டில் இருந்தது.
    • பாலம் ஒரு பகுதி சேதடைந்து உடைந்து கடலில் மூழ்கி வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இந்த பகுதியில் கடல் பெரும்பாலான நாட்களில் கடல் சீற்றத்துடனேயே காணப்படும். இதனால், இந்த பகுதியில் துணை துறைமுகம் அமைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில், இங்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் 70 அடி அகலமும், 70 அடி நீளமும் கொண்ட 'டி' வடிவிலான மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்த இடத்தில் மீன் இறங்கு தளம் அமைத்தால் சேதமடைந்து விடும் என தெரிவித்தனர். ஆனால் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    இதன் பின்னர் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த பாலம் பயன்பாட்டில் இருந்தது. இதன் பின்னர் கடல் சீற்றம் காரணமாக அந்த பகுதிக்கு மீனவர்கள் படகுகளுடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனைதொடர்ந்து, மீனவர்கள் இந்த மீன் இறங்கு தளத்தை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். இதன் பின்னர் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களில் செல்பி எடுக்கும் இடமாக இந்த பாலம் மாறியது.

    இந்த நிலையில் தொடர்ந்து சூறை காற்று மற்றும் கடல் சீற்றத்தில் ஏற்படும் அலைகள் மீன் இறங்கு தளத்தில் மீது மோதி மோதி பாலம் சேதமடைய தொடங்கியது. இதன் பின்னர் அந்த பாலம் முழுமையாக அடைக்கப்பட்டது. தற்போது பாலம் ஒரு பகுதி சேதடைந்து உடைந்து கடலில் மூழ்கி வருகிறது. மீனவர்கள் பலமுறை எச்சரித்தும் அந்த இடத்தில் பாலத்தை கட்டி ரூ.15 கோடியை அதிகாரிகள் வீணடித்து விட்டதாக தனுஷ்கோடி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • வருகிற 9-ந்தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
    • கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும்.

    ராமேசுவரம்:

    தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதற்கிடையே தமிழகத்தின் தென் கடல் பகுதியில் எந்த வித அறிவிப்பும் இன்றி திடீரென்று ஏற்படும் கடல் சீற்றமான கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய வானிலைமையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் நீண்ட இடைவெளி விட்டு பாதுகாப்புடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நேற்று கேரளா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் கள்ளக்கடல் நிகழ்வு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பூந்துறை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

    இந்த நிலையில், தென் கடல் பகுதியான தனுஷ் கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கை யூர் உள்ளிட்ட கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கடல் சீற் றத்துடன் காணப்பட்டது.

    கரையோரம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள நீச்சல் வீரர்கள் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி நீந்தி வருவதை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு 13 பேர் நீந்திய நிலையில் இன்று அதிகாலையில் ஒருவர்க்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். உடல் ராமேசுவரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள நீச்சல் வீரர்கள் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி நீந்தி வருவதை ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடாக மாநிலம் பெங்களுர் மாவட்டம் பகுதியை சேர்ந்த கோபால்ராவ்(78) தலைமையில் 13 பேர் 22 ஆம் தேதி தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வருவதற்கு ராமேசுவரம் வருகை தந்தனர்.

    இதனைதொடர்ந்து, 31 பேர் கொண்ட குழுவினர் ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் இருந்து 22 ஆம் தேதி படகில் தலை மன்னார் சென்றனர். இன்று அதிகாலை 12.10 மணிக்கு 13 பேர் கடலில் குதித்து நீந்த தொடங்கிய நிலையில் இரண்டு மணி நேரம் வரை நீந்திய நிலையில் திடிரென கோபால் ராவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படகில் இருந்த மருத்துவ குழுவினர் அவரை மீட்டு பரிசோதனை செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.

    இதனைதொடர்ந்து, நீந்தி வருவதை ரத்து செய்து விட்டு உயிரிழந்தவர் உடலை தனுஷ்கோடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்த ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.
    • இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் இருந்து படகு மூலம் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்புடன் மண்டபம் முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.

    அவர்களிடம் போலீசாரும், வெளியுறவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பின்பு அவர்களை மண்டபம் முகாமில் அமைந்துள்ள இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பம் வாரியாக தனித்தனி வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.

    அவர்களை குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் அரிச்சல் முனையில் அகதிகள் வந்திறங்கிய பகுதிக்கு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில் மட்டக் களப்பு பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(45),அவரது மகன் சஜித்மேனன்(8) சிவனேசுவரன்(49) என்பது தெரியவந்தது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் போதிய வருவாயின்றி தவிப்பதாகவும் இதனால் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து, மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் மண்டபம் முகாமிலில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

    • மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களும் பலத்த சேதம் அடைந்தன.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ராமேசுவரம்:

    மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை. தீவுப்பகுதியான ராமேசுவரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனைக்கு சென்று இயற்கை அழகையும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் கண்டுகளிப்பது வழக்கம். இதனால் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பயங்கர சூறைக் காற்று வீசத்தொடங்கியது. இதனால் கடல் சீற்றம் ஏற்பட்டு தனுஷ்கோடி மீனவர் குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. மேலும் சீறி வந்த அலையால் தனுஷ் கோடி மற்றும் அரிச்சனை முனை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட தொடங்கியது. சுமார் 5 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளால் எங்கு பார்த்தாலும் கடலாகவே காட்சி அளித்தது.

    பல இடங்களில் மணல் பரப்பே தெரியாத அளவுக்கு அந்த பகுதிகளை கடல் நீர் சூழ்ந்திருந்தது. குறிப்பாக தனுஷ்கோடி பகுதியில் தங்கி தொழில் செய்து வரும் மீன் விற்பனையாளர்கள், குளிர்பான கடைகள் வைத்திருப்பவர்களின் உடமைகளை அனைத்தும் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களும் பலத்த சேதம் அடைந்தன.


    இதனைதொடர்ந்து, அங்கு வழக்கமாக கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற எச்சரித்தனர். இதனால் பீதியடைந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உடனே அவர்கள் வந்த வாகனத்துடன் வெளியேறினர்.

    நேற்று இரவு சுமார் 9 மணியளவில் மீண்டும் பயங்கர சூறாவளியுடன் காற்று வீசியதால் அப்போதும் கடல் நீர் நிலப்பரப்புகளை மூடியது. மணல் திட்டுகள் அனைத்தும் காணாமல் போனது. மேலும் அங்கு போடப்பட்டிருந்த தார்ச்சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. தற்காப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் காற்றில் வேகத்தில் பறந்தன. அந்த பகுதியையும் கடல் நீர் குளம்போல் மாற்றியது.

    மேலும் இன்றும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல வருவாய்த்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடராஜபுரம் பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் பகுதிகளுக்கு செல்ல ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதி வரை, கடல் நீர் புகுந்தது.
    • அச்சம் அடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்து மறியலில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி. இயற்கையாகவே தனுஷ்கோடி பகுதி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகும். வழக்கத்திற்கு மாறாக நேற்று பகலில் இருந்து கடல் சீற்றமாகவே இருந்தது.

    மாலை 4 மணிக்கு பிறகும் கடல் சீற்றத்துடனும், கடல் நீர் பொங்கியபடி கடற்கரை மணல் பரப்பை நோக்கியும், சாலை வரையிலும் வந்தது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது.

    அதுபோல் கம்பிப்பாடு பகுதியில் இருந்து அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட தென்கடல் பகுதியில் பயங்கர கடல் சீற்றம் இருந்ததுடன் கடல் நீரானது தடுப்புச் சுவரில் மோதி சாலை வரையிலும் வந்தது.

    இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். செல்போனிலும் வீடியோ படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    அதுபோல் தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதி வரை, கடல் நீர் புகுந்தது. இதன் காரணமாக, கடலுக்குள் இருந்த ஏராளமான நண்டுகள் கரைப்பகுதிக்கு வந்து முகாமிட்டன. இங்கு கடல் சீற்றமாக இருப்பதால், தடுப்புச்சுவரும், சாலையும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    இது குறித்து தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்த மீனவர் உமைய செல்வம் கூறுகையில், தற்போது கடல் சீற்றத்தால் கடல் நீர் கரையை தாண்டி வந்துள்ளது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை கடல் நீரில் இழுத்துச் சென்றது. அவற்றை கடும் முயற்சி எடுத்து மீட்டு தடுப்புச் சுவர் பகுதிக்கு கொண்டு வந்து வைத்து உள்ளோம் என்றார்.

    அதுபோல் தனுஷ்கோடி பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் கடல் சீற்றத்தால் சாலை முழுவதும் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்தும் கடலில் உள்ள பாசி மற்றும் தாழை செடிகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. வழக்கமாக கடல் சீற்றம் இருக்கும்போது பலத்த சூறாவளி காற்று வீசும். ஆனால் நேற்று ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் காற்று வீசாத நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் குமரி மாவட்டம் நேற்று கொல்லங்கோடு இரையுமன்துறை பகுதியில் கடல்சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழும்பி அலை தடுப்புச்சுவரை கடந்து கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

    இதனால் அச்சம் அடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் மற்றும் அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கடலில் சீற்றம் சற்று தணிந்தது. இதையடுத்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால், மீனவர்கள் இரவிலும் சாலைகளில் கூடி நின்றனர்.

    கன்னியாகுமரியிலும் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். 

    • அரிச்சல்முனை கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
    • அங்கு பூஜை முடித்து மதுரையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.

    மதுரை:

    மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    இதற்கிடையே, இன்று காலை தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார். தொடர்ந்து அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்ட அவர் அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வண்ண மலர்களை தூவி கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இதையடுத்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அங்கு பூஜை செய்தார்.

    இந்நிலையில், ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டார். மதுரை சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    • அரிச்சல்முனை கடற்கரையில் உள்ள புனித தூணிற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு பூஜைகள் செய்தார்.

    ராமேஸ்வரம்:

    மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    இந்நிலையில், இன்று காலை தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார். தொடர்ந்து அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்ட அவர் அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வண்ண மலர்களை தூவி கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

    இதையடுத்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அங்கு பூஜை செய்தார்.

    • தனுஷ்கோடியை ஒரு குட்டி சிங்கப்பூர் என்று செல்லும் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது.
    • கடந்த 1964 ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மிதமான காற்றுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது.

    ராமேசுவரம்:

    தனுஷ்கோடி... ஆழிப்பேரலை தாக்கி அழிந்ததின் 59 ஆண்டு நினைவு தினம் இன்று. சேதமடைந்த கட்டிடங்கள் நினைவுகளாக காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என்று இரண்டு கடல் பகுதியை கொண்டது தனுஷ்கோடி துறைமுக நகரம் இலங்கைக்கு மிகவும் குறுகிய தொலைவில் உள்ளது. இதனால் இங்கிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கினால் அதிகளவில் வருவாய் கிடைக்கும் என்பதால் தனுஷ்கோடியில் துறைமுகம் அமைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு துறைமுகம் அமைக்கப்பட்டு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இரண்டு கப்பல் போக்குவரத்து 1914 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்த துறைமுகத்திற்கு அதிகளவில் சரக்கு கொண்டு செல்லும் வகையில் ரெயில் போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு போட்மெயில் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு இரண்டு கப்பல்கள் இயக்கப்பட்டது. இதனால் தனுஷ்கோடி மிகப்பெரிய அளவில் வர்த்தக துறைமுக நகரமாக மாறியது.

    இந்த பகுதி மக்கள் தனுஷ்கோடியை ஒரு குட்டி சிங்கப்பூர் என்று செல்லும் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது. இலங்கை வழியாக செல்லும் பயணிகள் தங்களது பணத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் அலுவலகம், காவல் துறை, சுங்கத்துறை, தபால் அலுவலகம், ரெயில் நிலையம் என பரந்து விரிந்து காணப்பட்ட தனுஷ்கோடி துறைமுக நகரம், ஆழிப்பேரலையில் சிக்கிகொண்டு அழிந்து போகும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

    கடந்த 1964 ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மிதமான காற்றுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது. இரவு 10 மணிக்கு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வீடுகளிலும், அரசுத்துறை அதிகாரிகள் என அலுவலகத்திலும் இருந்தனர். காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கடலின் சீற்றமும் அதிகமானது. நள்ளிரவு 12.30 மணிக்கு கொட்டித்தீர்த்த மழை சுழன்று அடித்த காற்று கடலில் எழுந்த ஆழிப்பேரலை தனுஷ்கோடியை தாக்கியது. விடியும் என காத்திருந்த மக்கள் அனைவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

    அரசுத்துறை கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தது. மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதால் அனைத்து அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கடுமையாக சேதமடைந்தது இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு தனுஷ்கோடி கடலுக்குள் சென்று விட்டது. 

    ஆழிப்பேரலையில் சிக்கி சின்னாபின்னமான ரெயில்

    ஆழிப்பேரலையில் சிக்கி சின்னாபின்னமான ரெயில்

    பாம்பன் பகுதியில் இருந்து தனுஷ்கோடி நோக்கி வந்த ரெயில் சிக்னல் கிடைக்காமல் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பேரலையில் சிக்கி தூக்கி வீசப்பட்ட அந்த ரெயிலில் இருந்த பயணிகள் ஏராளமான பேர் உயிரிழந்தனர். விடிந்தால் 24-ந்தேதி அதிகாலையில் தனுஷ்கோடியில் தாக்கிய புயல் பாம்பன் பாலத்தையும் விட்டு வைக்கவில்லை. 8 இரும்பு கர்டர்களை தூக்கி கடலில் வீசியது. 45 நாட்களுக்கு பின் பாம்பன் பாலம் ரெயில்வே துறையினரால் மீண்டும் சீரமைக்கப்பட்டது.

    தனுஷ்கோடியை புயல் தாக்கியது காலையில் தான் தெரியவந்தது. துறைமுக நகரம் எங்கு பார்த்ததாலும் தண்ணீர் நிறைந்த சிறு சிறு தீவுகள் போல காட்சி அளித்தது. புயலில் சிக்கி உயரிழந்தவர்கள் சடலங்கள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்தது. மரண ஓலங்கள் அழுகை என மனதை தவிக்க வைத்து இன்றுடன் 59 ஆண்டுகள் ஆகிறது.

    இன்றும் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் ஆழிப்பேரலையின் தாக்கத்தை முழுமையை புரிந்து கொள்ளமுடிகிறது. புகழ் பெற்ற துறைமுக நகரம் தனது அழிவுக்கு பின் பழமையை எடுத்துகாட்டும் விதமாக கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றது. தனுஷ்கோடிக்கு நேராக வாகனங்கள் வர முடியாது. 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முகுந்தராயர் சத்திரம் வரையில் வாகனங்கள் வந்து விடும். இதன் பின் அங்கிருக்கும் பிரத்யேக வாகனங்கள் மூலம் தனுஷ்கோடிக்கு செல்ல வேண்டும். வழி நெடுகிலும் கடலில் இருந்து மணல் மேடுகளாக காணப்படுகின்றது. கடல் நீரில் தான் இந்த வாகனம் சென்று வருகிறது. பாதுகாப்பற்ற பயணமாக இருந்தாலும் இதை தவிர வேறு வழி கிடையாது. தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தை பார்த்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரிச்சல்முனை வரை சாலைகள் அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன் பின்னர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆண்டுக்கு 3 கோடி வரை வந்து செல்லுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிகளான கழிவறை, வாகன நிறுத்தம், பொதுமக்கள் கடற்கரையோரம் அமர்ந்து பொழுது போக்கிடும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவும், இடிந்து போன தேவாலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கவும் தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நீதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும்போது புதுப்பொலிவு பெற்று விடும். மேலும் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் மீண்டும் தனுஷ்கோடி பிரமாண்ட நகரமாக மாறி விடும் என்ற நம்பிக்கையுடன் இன்றளவும் 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் 59 ஆண்டு நினைவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரெயிலில் வரும் பயணிகள் கப்பல் மூலம் தலைமன்னார் சென்று மீண்டும் ரெயிலில் கொழும்பு வந்தடைவார்கள்.
    • குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் அளவுக்கு தனுஷ்கோடி வளர்ச்சி பெற்றது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இந்த தீவு பகுதி சுமார் 61.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ராமேசுவரம் தீவில் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகியவை அடங்கும். இதில் தென்னகத்து காசி என்று போற்றப்படும் கோவில் நகரமான ராமேசுவரத்தை விட தனுஷ்கோடி மிகவும் புகழ் பெற்றதாக திகழ்ந்தது.

    ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே வணிக தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. எனவே தான் தலைமன்னாரில் இருந்து பாம்பனுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து ராமேசுவரம் தீவை மண்டபம் நிலப்பகுதியுடன் இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு பாம்பன் ரெயில் பாலம் திறக்கப்பட்டது. அதன் பிறகு ராமேசுவரம் தீவின் ஆன்மீக தலமாகி போக்குவரத்து வசதிகளைப் பெற்றது.

    பாம்பனில் இருந்து 18 மைல் தொலைவிலும், ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் வளைந்த வடிவில் ராமேசுவரம் தீவின் தெற்கு முனையில் தனுஷ்கோடி அமைந்துள்ளது. இயற்கை துறைமுகமான தனுஷ்கோடியில் கப்பல் துறைமுகம் திறக்கப்பட்டு சென்னை-கொழும்பு இடையே போட்மெயில் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டது.

    சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரெயிலில் வரும் பயணிகள் கப்பல் மூலம் தலைமன்னார் சென்று மீண்டும் ரெயிலில் கொழும்பு வந்தடைவார்கள். புகழ்பெற்ற தனுஷ்கோடி திறந்த பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியது. கப்பல் போக்குவரத்து தொடங்கி, தனுஷ் கோடி துறைமுகம் சிறப்பாக செயல்பட்டதால், அதுவரை மின்சாரம் இல்லாத ராமேசுவரம் தீவுக்கு மின்சாரம் மிகவும் அவசியமானது. இதையடுத்து ராமேசுவரம் கோவிலுக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் ராட்சத ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.

    அதன்பிறகு, 1922-ல், ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்ட இரும்புத் தூண்கள், மண்டபம் மற்றும் பாம்பன் இடையே கடலில் உள்ள ரெயில்வே பாலத்தின் அருகே நிறுவப்பட்டு, ராமேசுவரத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும், தனுஷ்கோடி கடலுக்கு அருகில் உள்ளதாலும், அப்பகுதியில் வீசும் காற்றின் வேகத்தைக் கருத்தில் கொண்டும் மின்சாரம் வழங்கப்படவில்லை.

    இந்தியா-இலங்கை இடையே கப்பல் மற்றும் ரெயில் போக்குவரத்தால் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் அளவுக்கு தனுஷ்கோடி வளர்ச்சி பெற்றது. 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி வீசிய கடும் புயலால் தனுஷ்கோடி ஊருக்குள் கடல் புகுந்தது. கடல் அலையால் மூழ்கி அந்த பகுதியே முழுவதுமாக அழிந்தது.

    இதையடுத்து தனுஷ்கோடியை மனிதர்கள் வாழவும், வசிக்கவும் தகுதியற்றதாக அரசு அறிவித்தது. இங்கு வசித்த மக்கள் மாற்று இடங்கள் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேறியவர்கள் நடராஜபுரம், சேராங்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் குடியேறினர்.

    அவர்கள்தான் தற்போது தனுஷ்கோடிக்கு சென்று தொழில் செய்து வருகிறார்கள். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அங்கிருக்கும் அவர்கள் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளனர். மீன்கள் வியாபாரம், சமைத்து கொடுப்பது, முத்து, சிப்பிகளால் கலைநயமிக்க பொருட்கள் விற்பனை என்று காலத்தை நகர்த்தி வருகிறார்கள்.

    இருப்பினும், பாரம்பரியமாக வாழ்ந்த இடத்தை மறக்க முடியாமல், புலம் பெயர்ந்து செல்ல முடியாமல், சாலை, குடிநீர், மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் ஏதுமின்றி இங்கு குடிசைகளில் தவிக்கும் மீனவர்கள் தங்கியுள்ளனர். இந்த கிராமத்தில் 650-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தபோதிலும் மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்குகளுடன் இரவு பொழுதை கழிக்கிறார்கள்.

    அந்த பகுதியை சேர்ந்த நாட்டுப்படகுகளை பயன்படுத்தும் தனுஷ்கோடி கிராம மீனவர்கள் மின்சாரம் இல்லாததால், இருளில் வலையில் இருந்து மீன்களை எடுக்க முடியாமல், குளிர் சாதன பெட்டிகளில் வைத்து பாதுகாக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சில தொண்டு நிறுவனங்கள் சில வீடுகளுக்கு சோலார் மின்சாரம் வழங்கியுள்ளன. ஆனால் காற்றில் மின்கம்பிகள் சேதமடைந்து பயனற்றுப் போய்விட்டது.

    பல்வேறு பேரூராட்சி தலைவர்களிடமும், முதல்வரிடம் மனு அளித்தும் இன்று வரை தனுஷ்கோடிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் பலமுறை ஆராயப்பட்டன. அதாவது ராமேசுவரம் நடராஜபுரம் பகுதியில் இருந்துதான் தனுஷ்கோடிக்கு மின்சாரம் கொண்டு செல்லவேண்டும் இதற்கு இடைப்பட்ட தூரம் சுமார் 25 கி.மீ. ஆகும்.

    ஆனால் தனுஷ்கோடி பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பு, சூறாவளிக்காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மின்சாரம் கொண்டு செல்வது சாத்தியமற்றதாக உள்ளது. 1964 புயலால் ரெயில் தண்டவாளம் சேதமடைந்து தனுஷ்கோடி அழிந்தபோது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தற்போது அங்கு சிதிலமடைந்த கிறிஸ்தவ தேவாலயமும், ஒரு சில கட்டிடங்களுமே மிஞ்சியிருக்கிறது.

    கடலின் நிலையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடல் அலைகள் ஊருக்குள்புகுவது, சாலைகள் மணலால் மூடப்படுவது போன்ற காரணங்களால் 76 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாடும் தங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கவும், ஆண்டுக்கு 3 கோடி பேர் வரை வருகை தரும் தனுஷ்கோடியை மீண்டும் புத்துயிர் பெற செய்யவும் மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்ற நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் தனுஷ்கோடி பகுதியில் வசிக்கும் மக்கள் உள்ளனர்.

    இதற்கிடையே இலங்கை-தனுஷ்கோடி இடையேயான கடல் பகுதியை கண்காணிப்பதற்காக சமீபத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×