என் மலர்
நீங்கள் தேடியது "சித்திரை திருவிழா"
- கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
- உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது.
இத்தலம் நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த தலமாக கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை 'குடந்தைக் கிடந்தான்' என அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளி உள்ளார். திருவரங்கனின் புகழை கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. இந்த தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற பெருமை உடையதாகும். முன்னதாக உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 ரதவீதிகளில் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கும்பகோணம் மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
- பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
- சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர்.
தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன்றவையும் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
அதன்பிறகு பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது திரண்டிருந்தவர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காலை 5.05 மணிக்கு மேல் 5.29 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என பக்தி முழக்கம் விண்ணைப்பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துசென்று சாமி தரிசனம் செய்தனர்.
4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி சென்றதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் மதியம் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவை காணவந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்படுத்தினர்.
தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். நாளை (10-ந் தேதி) உச்சிக் காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜபெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி நாளை தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.
நாளை மறுநாள் (11-ந் தேதி) மதுரை நோக்கி வரும் அழகரை வழியெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்கிறார்கள். மதுரையில் மூன்றுமாவடியில் நாளை மறுநாள் காலை 6 மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் சிறப்பு தீபாராதனை காட்டியும் அழகரை மதுரை மக்கள் வரவேற்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் தங்குகிறார். அங்கு அவர் திருமஞ்சனம் கொள்கிறார். அங்கு அவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
12-ந்தேதி காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். அதன்பின் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருள்கிறார். பின்னர் சித்ரா பவுர்ணமி தினத்தன்று முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
- திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அவினாசி:
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டு கடந்த 1-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 5-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர்.
நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இன்று (வியாழக்கிழமை ) காலை 8 மணிக்கு தேரின் மேல் வீற்றிருந்த சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் 'அவிநாசியப்பா', 'அரோகரா', 'நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.
நாளை 9-ந்தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 10-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 11-ந்தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 12-ந்தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 13-ந்தேதி மகா தரிசன விழாவும், 14-ந்தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.
தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது.
92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும்.
- கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.
- வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டிபட்டி:
மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக வைகை அணையில் இருந்து முன்கூட்டியே மதுரையைச் சென்று சேரும் வகையில் தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை 1000 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றின் வழியே திறக்கப்படும். அணையில் இருந்து வெளியேறும் நீர் படிப்படியாக குறைக்கப்பட்டு மே 12-ந் தேதி காலை 6 மணிக்கு நிறுத்தப்படும். ஆற்றின் வழியாக தண்ணீர் செல்வதால் கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 55.27 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2762 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.35 அடியாக உள்ளது. வரத்து 197 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 1618 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 37.50 அடியாக உள்ளது. வரத்து 68 கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி 13.6, வீரபாண்டி 26.8, பெரியகுளம் 58, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 5, வைகை அணை 46.8, கூடலூர் 11.6, பெரியாறு அணை 14.8, தேக்கடி 18.2, சண்முகா நதி அணை 7.4, அரண்மனைபுதூர் 2.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, கடைசியாக சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சுந்தரேசுவரராக பிரகாஷ் பட்டர் மகன் கவுதம், மீனாட்சி அம்மனாக சிவசேகரன் பட்டர் மகன் சத்தியன் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டின் சார்பில் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் ரூ.35 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாப்பிள்ளை அழைப்பாக சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக வடக்கு-மேற்கு ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.
இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணி அளவில் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.
- மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது.
- மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார்.
மதுரையின் அரசி மீனாட்சி அம்மனுக்கு, சுந்தரேசுவரருடன் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மீனாட்சியின் திருமணம் அன்று எப்படி நடந்தது என்று ஸ்தானீக பட்டர் ஹலாஸ் கூறியதாவது:-
மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்தது முதல் மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறைந்து காணப்பட்டது. மீனாட்சியிடம் உறுதி அளித்த நாளில் நானே நேரில் வந்து திருமணம் செய்து கொள்வேன் என்று சுந்தரேசுவரராகிய சிவபெருமான் கூறியிருந்தார். அதன்படி புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணி கலன்களாகவும் கொண்டு காட்சி தரும் சிவபெருமான் அன்று மணக்கோலத்தில் சுந்தரேசுவரராக மதுரை மாப்பிள்ளையாக வந்தார். அவரது திருமுகத்தை கண்டு மதுரை மக்கள் பரவசம் அடைந்து தரிசித்தனர்.
மேலும் முக்கோடி தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தார்கள். திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தேவசேனா உடனும் பவளக்கனிவாய் பெருமாளும் நேரில் வந்து திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். இது தவிர வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷிகளும் உள்ளிட்ட முனிவர்கள் இறைவனின் திருமணக்கோலத்தை காண மணமேடையில் காத்து இருப்பார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மீனாட்சி திருக்கல்யாணம் வைபவம் இன்று காலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நிகழ இருக்கிறது.
மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார். அவர் சுந்தரேசுவரரை விட்டு ஒரு கணமும் பிரியாத அம்மன். அதனால் தான் அந்த அம்மனுக்கு பிரியாவிடை என பெயர் வந்தது. மீனாட்சி அம்மனுக்கு பட்டத்தரசியாக மக்களை காக்கும் பொறுப்பு அதிகம் இருக்கிறது. அதே நேரத்தில் தன்னுடைய கணவரையும் பாதுகாக்க வேண்டும். ஆதலால் கணவனின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான் பிரியாவிடை அன்னையாக காட்சி தருகிறாள்.
ஆட்சியையும் மக்களையும், கவனிக்கும் தன்னால் கணவனை கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை மீனாட்சி அம்மனுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் பிரியாவிடை உருவத்தில் சொக்கநாதருடன் கூடவே உற்சவ அன்னையாக பிரியாவிடை நாயகியாக வலம் வருகிறாள் என்றார்.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். சிறந்த சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் பெரியகோவில் விளங்கி வருகிறது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து காலை 6 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி, போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக்குழு தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, தேருக்கு முன்பாக விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது. தேரானது 4 ராஜவீதிகளில் அசைந்தாடி சென்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்தடையும்.
தேரோட்ட விழாவில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்படி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு துறை வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. பெரிய கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
- 16-ந்தேதி கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலைக்கு திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறும்.
- 17-ந்தேதி அழகர் கோவிலில் உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை:
தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 8-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் சன்னதியில் கடந்த 27-ந்தேதி சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் தொடர்ச்சியாக வருகிற 10-ந்தேதி மாலை 6 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும்.
11-ந்தேதி மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறுகிறது. இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக 12-ந்தேதி அதிகாலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தல் நிகழ்வு நடைபெறுகிறது.
13-ந்தேதி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அன்று நள்ளிரவில் திவான் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறும். 14-ந்தேதி அதிகாலை மோகினி அலங்காரத்தில் கள்ளழகர் காட்சி அளித்தல், பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் சேதுபதி மண்டபத்திற்கு அனந்தராயர் பல்லக்கு புறப்படுதல், இரவு 11 மணிக்கு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
16-ந்தேதி கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலைக்கு திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறும். 17-ந்தேதி அழகர் கோவிலில் உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்தநிலையில் அழகர்கோவில் நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளழகர் கோவிலில் 2025-ம் ஆண்டுக்கான சித்திரைப் பெருந்திருவிழா வருகிற 8.5.2025 முதல் 17.5.2025 வரை நடைபெறவுள்ளது. மேற்படி சித்திரைப்பெருந்திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசை கொண்ட நீருந்துகள் மூலம் தண்ணீர் பீய்ச்சாமலும் மற்றும் தண்ணீர் பைகளைக் கடித்து தண்ணீர் பீய்ச்சாமலும், விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் ஏதும் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டும் பீய்ச்சுமாறு பக்தர்கள் மற்றும் பொதுமக்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவது வழக்கம்.
- சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 9-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கர நாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்று.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று பெருங்கோட்டூரில் அமைந்துள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் கோவில் யானை கோமதி பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் இரவு 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், 7-ந்தேதி (புதன்கிழமை) இரவு சுவாமி, அம்பாள், நடராஜர், முதல் மூவர்கள் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், நள்ளிரவில் நடராஜர் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், 8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை நடராஜர் பச்சை சாத்தி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகர செயலாளர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் முப்பிடாதி, வக்கீல் காளிராஜ், ஜெய குமார், ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
- பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
தஞ்சாவூர்:
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி தஞ்சை மேல வீதியில் உள்ள பெரிய கோவில் தேர் நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது. முன்னதாக பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரில் பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணி ப்பாளர் ரவி, ஆய்வாளர் பாபு மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மற்றும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.15 அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி:
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 12-ந்தேதி நடைபெறுகிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரள்வார்கள். இதனை முன்னிட்டு வைகை அணையில் 4 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறக்கப்பட்டு மதுரைக்கு சென்றடையும் வகையில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து அணை அதிகாரிகள் கூறுகையில், மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து மே 8-ந்தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மற்றும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 55.76 அடி நீர் மட்டம் உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2842 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.15 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. அணையில் 1585 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.80 அடியாக உள்ளது. 39 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 99.83 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 39.20 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. போடியில் மட்டும் 21.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- 12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.
- இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (29-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்ககொடி மரம் பல வண்ண மலர்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணியளவில் பிரியாவிடையுடன் சுந்தரே சுவரரும், மீனாட்சி அம்மனும் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து 10.30 மணி முதல் 10.59 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் முன்னிலையில் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.
விழாவின் முதல் நாளான இன்று இரவு கற்பக விருட்சம்-சிம்ம வாகனத்தில் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் எழுந்தருளுகிறார்கள்.
2-ம் நாளில் (30-ந்தேதி) காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு பூதம்-அன்ன வாகனத்தில் வீதி உலா வருகிறார்கள். 1-ந்தேதி காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
4-ம் நாளில் (2-ந்தேதி) காலை 9 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சின்னடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகபடியில் எழுந்தருளுகிறார்கள். மாலை 6 மணி அங்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் சுவாமி-அம்பாள், மாலை மீண்டும் கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.
5-ம் நாள் (3-ந்தேதி) காலையில் தங்க சப்பரத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் மாசி வீதிகள் வழியாக வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயண சாவடியில் எழுந்தருளுகிறார்கள். இரவு தங்கக்குதிரை வாகனத்தில் வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.
6-ம் நாள் (4-ந்தேதி) காலை 7.30 மணிக்கு தங்க சப்பரத்தில் வீதி உலாவும், இரவு தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 7-ம் நாள் (5-ந்தேதி) காலை கங்காளநாதர் மர சிம்மாசனத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதி வழியாக உலா வருகின்றனர். இரவு நந்திகேஸ்வரர், யாழி வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது.
8-ம் நாள் (6-ந்தேதி) காலை தங்க பல்லக்கில் சுவாமி-அம்பாள் அருள் பாலிக்கின்றனர். இரவு 7.35 மணிக்கு மேல் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
அப்போது அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் கொடுக்கும் வைபவம் நடக் கிறது. மறுநாள் (7-ந்தேதி) காலை மரவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை அஷ்டதிக்கு பாலகர்களை எதிர்த்து மீனாட்சி அம்மன் வெற்றி பெறும் திக்குவிஜயம் நடக்கிறது. இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 8-ந்தேதி விமரிசையாக நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள். காலை 8.15 மணி முதல் 9.15 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிதுன லக்னத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்கள்.
மறுநாள் (9-ந்தேதி) அதிகாலை 5.05 மணி முதல் 5.28-க்குள் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங் குகிறது. பெரிய தேரில் சுந்தரேசுவரரும், சிறிய தேரில் மீனாட்சியும் எழுந்தருளுவார்கள். பக்தர்கள் வெள்ளத்தில் 4 மாசி வீதிகளில் தேர் ஆடி அசைந்து வரும் நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று இரவு சப்தவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது.
12-ம் நாள் இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள். இத்துடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே12-ந்தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.