search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சாவூர்"

    • மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கும்பகோணம்:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின்கட்கரி நாக்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிபேட் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலைக் கல்லூரி மைதானத்திற்கு வந்தார்.

    அவரை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், சுதா, பா.ஜனதா நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் ஆகியோரும் வரவேற்றனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் விக்கிரவாண்டி 4 வழி சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்களை அறிய தஞ்சாவூரில் இருந்து சோழபுரம் வரையிலான சாலை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சோழபுரத்திலிருந்து சேத்தியாத்தோப்பு பகுதி வரை 4 வழி சாலை திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளை முடித்து கொண்டு திருச்சி சென்று விமானம் மூலம் நாக்பூர் செல்கிறார்.

    மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.
    • ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பிறகு கவுன்சிலர்கள் வெளியேறினர். பின்னர், நகராட்சி அதிகாரிகளை வைத்து ஆணையர் குமரன் கூட்டம் நடத்தியுள்ளார்.

    அப்போது திடீரென பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி மற்றும் லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் அடங்கிய குழுவானது டெபுட்டி இன்ஸ்பெக்சன் செல் ஆபீஸர் ஐயம்பெருமாள் மற்றும் குணசேகரன் ஆகியோர் சென்று அதிகாரிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.

    நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் கணக்கில் வராத கையூட்டு தொகைகளை வைத்திருந்த நகராட்சி ஆணையர் குமரனிடமிருந்து ரூ.5 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதேப்போல் உதவி பொறியாளர் மனோகரனிடம் ரூ.80 ஆயிரம், ஒப்பந்ததாரர் எடிசனிடம் ரூ.66 ஆயிரம், டிரைவர் வெங்கடேசனிடம் ரூ.8 ஆயிரம் என மொத்தம் ரூ.6 லட்சத்து 54 ஆயிரம் கணக்கில் வராத கையூட்டு பணம் சோதனையில் கைப்பற்றப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

    பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த அதிரடி சோதனையில் ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
    • ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.

    தஞ்சாவூா்:

    ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளா் பால கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு 2 மாநிலங்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த பட்ஜெட் நகலை நாடு முழுவதும் எரிக்கும் போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.

    இதன்படி, தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கிராமங்களில் 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தை வருகிற 31-ந்தேதி நடத்து வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ந்தேதி வெள்ளையனே வெளியேறு நாளை கடைப்பிடிக்கும் விதமாக காா்பரேட்டுகளே இந்தியாவை விட்டு வெளியேறு என்ற கோரிக்கையை முன் வைத்து மாநிலம் முழுவதும் மாவட்ட, வட்ட தலைமையிடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இயற்கையை பாதுகாப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 17-ந்தேதி தூத்துக்குடி, சேலம், திருவாரூா், செங்கல்பட்டு ஆகிய 4 இடங்களில் கருத்தரங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இந்த போராட்டங்களுக்கு இந்தியா கூட்டணி கட்சியினா் ஆதரவு அளிக்கு மாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சில கண்டக்டர்கள் பெண்களை ஏற்றாமல் அவமதிக்கின்றனர்.
    • கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்களில் பெரும்பாலானோர் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் பணிக்காக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்களில் சென்று வருகின்றனர். தினமும் ஷிப்ட் முறையில் பணிபுரியும் இவர்கள் வேலை நேரத்திற்கு ஏற்றவாறு பழைய பஸ் நிலையத்தில் இருந்து செல்கின்றனர்.

    அதன்படி இன்று காலை நேர பணிக்காக 6.30 மணிக்கு பழைய பஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அரசு டவுன் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மருத்துவ கல்லூரி செல்லும் டவுன் பஸ் வந்தது. அதில் ஏற அவர்கள் முயன்றனர்.

    ஆனால் கண்டக்டர் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில ஏறுங்கள் என கூறினார். இதனால் அவர்கள் அடுத்து வந்த டவுன் பஸ்சில் ஏற முயன்றபோது அந்த கண்டக்டரும் இந்த பஸ்சில் ஏறாதீர்கள் என கூறி அலைக்கழித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பஸ்களை எடுக்க விடாமல் பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் வெளியே செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் அங்கேயே நின்றது. மற்ற பயணிகளும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கரந்தை போக்குவரத்து கிளை மேலாளர் சந்தானராஜ், மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பெண்கள், அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம் என்பதால் எங்களை போன்ற பெண்களை ஏற்ற மறுக்கின்றனர். பஸ்சில் ஏறினாலும் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில் ஏறுங்கள் என மாறி மாறி கூறுகின்றனர்.

    இலவச டிக்கெட் என்பதால் சில கண்டக்டர்கள் பெண்களை ஏற்றாமல் அவமதிக்கின்றனர். அரசே இலவச டிக்கெட் என கூறும்போது கண்டர்கள் அவமரியாதையாக நடந்து கொள்வதை ஏற்று கொள்ள முடியாது.

    நாங்கள் 7 மணிக்குள் மருத்துவ கல்லூரிக்கு சென்றால் தான் இரவு பணியில் ஈடுபட்டவர்களை மாற்றி விட முடியும். பஸ்களில் ஏற்ற மறுப்பது பல நாட்களாக நடக்கிறது. இலவச டிக்கெட் என்பதற்காக தான் அவமதிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை பஸ்களை எடுக்க விட மாட்டோம் என திட்டவட்டமாக கூறினர்.

    இதையடுத்து போக்குவரத்து மேலோளர் சந்தானராஜ், இனி இதுபோல் பிரச்சினை நடக்காமல் பார்த்து கொள்கிறோம். மறியலை கைவிடுங்கள். மாற்று பஸ்சில் உங்களை அனுப்பி வைக்கிறோம் என்றார்.

    இதனை ஏற்றுக்கொண்டு பெண் பணியாளர்கள் மறியலை கைவிட்டனர். மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அதில் ஏறி மருத்துவ கல்லூரிக்கு சென்றனர். மேலும் ஆம்புலன்சிலும் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த மறியல் போராட்டம் சுமார் 1.30 மணி நேரம் நடந்ததால் அதுவரை மற்ற பஸ்களும் செல்ல முடியாமல் நின்றது. மறியலை கைவிட்ட பிறகு மற்ற பஸ்களும் சென்றன. மேலும் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தஞ்சையில் வடபத்ரகாளியாக அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.
    • அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள்.

    அன்னை பராசக்தியானவள், துர்க்கையாக, காளிதேவியாக என்று பல்வேறு வடிவங்கள் எடுத்து, தீமையின் உருவமாகத் திகழ்ந்த பல அரக்கர்களை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் சொல்கிறது.

    வாழ்வில் வெற்றி, தோல்வி சகஜம் என்றாலும், அனைவரும் தெய்வத்திடம் வேண்டுவது 'செய்யும் செயல்களில் வெற்றிபெற அருள்புரிய வேண்டும்' என்பதைத்தான். அப்படி சோழர்களுக்கு வெற்றியை தேடித் தந்து இன்றும் தஞ்சையில் வடபத்ரகாளியாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள், மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் பார்வதி தேவியை நாடிச் சென்றனர்.

    அன்னையும், அந்த அரக்கர்களை அழிக்க 'கவுசீகி' என்ற அழகிய பெண் வடிவம் எடுத்து வந்தாள். அவள் அழகைக் கண்டு மயங்கிய சும்ப, நிசும்பர்கள், அவளை மணக்க எண்ணினர். ஆனால் அன்னையோ, "இருவரில் யார் மிகுந்த பலசாலியோ அவர்களையே மணப்பேன்" என்று கூறினாள்.

    இதையடுத்து சும்ப, நிசும்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அழிந்து போயினர். அவர்கள் அழிவுக்கு காரணமானதால், இந்த அன்னையை 'நிசும்பசூதனி' என்று அழைத்தனர்.

    சோழர்களால் குலதெய்வமாக வணங்கப்பட்டவள், இந்த நிசும்பசூதனி. கி.பி. 850-ல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி, பழையாறையில் இருந்து தஞ்சைக்கு தலைநகரை மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினார்.

    பின்பு வந்த ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன்னர், இந்த அம்மனை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.

    சோழர்கள் நிர்மாணித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் 7 அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தெரியும்படியான தோற்றத்தில் காட்சி தருகிறாள்.

    அஷ்ட திருக்கரங்களுடன் திகழும் இந்த அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள். நிசும்பனின் தலையைக் கொய்து, அந்த தலை மீது தன் திருவடியை வைத்து, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், திரிசூலம் ஆகியவற்றை தாங்கியபடி, அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி இருக்கிறாள்.

    இந்த கோவில் முன் மண்டபம், கருவறையுடன் கூடிய விமானத்துடன் அமைந்துள்ளது. முன்மண்டப முகப்பில் அம்மனின் அமர்ந்த கோலத்திலான உருவம் காணப்படுகிறது. 55 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.

    இக்கோவிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்தால், ராகு - கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும்.

    இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய இன்னல்கள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும்.

    இக்கோவிலில் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை, 21 நாட்களுக்கு ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் பால்குடம் எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயம் காலை 8 மணி முதல் 11 மணிவரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தர் கோவில் தெரு வழியாக இக்கோவிலை சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
    • மூச்சு திணறல் உள்ளதா? என்று சுகாதார துறையினர் ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜெபமாலை புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் காரணாக மளமளவென தீ பரவி பற்றி எரிந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த ஆணையர் மகேஸ்வரி விரைந்து சென்று தீ அணைக்கும் பணியை துரிதப்படுத்தினார்.

    இந்த தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறியதால் ஜெபமாலைபுரம் மற்றும் சுற்றியுள்ள சீனிவாசபுரம், மேலவீதி, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதி மக்கள், மாணவர்கள் அவதியடைந்தனர்.

    மேலும் துர்நாற்றத்துடன் கூடிய புகை பரவியதால் வாகன ஓட்டிகள் முகத்தை மூடியப்படி சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர். புகைமூட்டம் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

    மேலும் யாருக்காவது மூச்சு திணறல் உள்ளதா? எனவும் வீடு வீடாக சென்று சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்றால் குப்பை கிடங்கில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    • பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
    • மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

    தஞ்சாவூா்:

    நீட் நுழைவு தேர்வு முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக கூறி பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

    அந்த வகையில் இன்று நீட் தேர்வை கண்டித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மத்திய அரசின் கலால் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன் தலைமையில் ஏராளமான மாணவ- மாணவிகள் திரண்டனர்.

    பின்னர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பியவாறு கலால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.

    உடனே பாதுகாப்பில் இருந்த போலீசார் பேரிகார்டு கொண்டு மாணவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 மாணவ-மாணவிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
    • பாடப்பு த்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் பள்ளி களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது . பின்னர் வெயிலின் தாக்கத்தால் 10-ம் தேதி ( இன்று) பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .

    அதன்படி கோடை விடுமுறை முடிந்து 2 மாதங்களுக்குப் பிறகு இன்று (திங்கட்கிழமை) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி இன்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர்.

    அப்போது பள்ளி மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு முதல் நாள் சந்தோச இனிப்புடன் தொடங்கும் வகையில் அவர்களுக்கு சர்க்கரை பொங்கல், கல்கண்டு போன்றவை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவர்கள் இன்முகத்தோடு சிரிப்புடன் அதை வாங்கி கொண்டு பள்ளிக்கு உள்ளே சென்றனர்.

    மேலும் 2 மாதங்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் பழைய நிகழ்வுகளை மனம் விட்டு பேசினர்.

    தொடர்ந்து 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது. முதல் நாளிலே மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்பு த்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றை ஆர்வத்துடன் மாணவர்கள் வாங்கி படித்தனர். தொடர்ந்து இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடந்து வருகிறது.

    • வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
    • நாளை மறுநாள் வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் ஆண்டுதோறும் ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் எழுந்தருளி கருடசேவை வைபவம் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை வைபவம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் நடைபெறும் 90-வது ஆண்டு கருடசேவை விழாவானது நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகியது. வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் திவ்யதேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு 7 மணி முதல் 12 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜவீதிகளில் பெருமாள்கள் வீதிஉலா நடைபெற்றது.

    இதில் நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோவில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்கள் எழுந்தருளி ஒரே நேரத்தில் வலம் வந்து ராஜவீதிகளை அழகூட்டியது. தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு 25 பெருமாள்களையும் ஒரு சேர கண்டு தரிசித்து பரவசம் அடைந்தனர்.

    தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை நவநீத சேவை நடைபெற உள்ளது. இதில் வெண்ணாற்றங்கரையில் காலை 6 மணியளவில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 10.30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜவீதிகளில் வீதிஉலா நடைபெறும். இதில் 16 கோவில்களில் இருந்து பெருமாள் எழுந்தருளி ராஜவீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்க உள்ளனர்.

    தொடர்ந்து, நாளை மறுநாள் (31-ந்தேதி) வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. இதனிடையே ராஜராஜ சமய சங்கத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு திருவாய்மொழி தொடங்கி, நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சாற்று முறை நடைபெற உள்ளது. 25 கோவில்களில் இருந்து பெருமாள்கள் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
    • இளைஞர்கள் மற்றும், பெண்கள் மத்தியில் 100 சதவீதம் வரவேற்பு கிடைத்துள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை அருகே உள்ளது பொன்னப்பூர் கிழக்கு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்கள் ஊருக்குள் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஏகமனதாக முடி வெடுத்துள்ளனர்.

    இந்த முடிவின்படி பொன்னாப்பூர் கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது உள்ளிட்ட எந்தவிதமான போதைப் பொருளையும் விற்க தடை செய்யப்பட்டுள்ளது, மீறி விற்றாலோ விற்பனைக்குத் துணை போனாலோ அது இந்த கிராமத்துக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

    பல குடும்பங்களின் பாவ செயலில் ஈடுபடாதீர்கள் என போஸ்டர் அடித்து பஸ் நிறுத்தம், மளிகை கடைகள், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.

    அத்துடன் மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக, வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கிராம இளைஞர்கள் கூறும்போது, 'இளைஞர்கள் ஒன்றிணைந்து எங்கள் கிராமத்துக்குள் போதைப்பொருள் விற்பதையும் பயன்படுத்துவதையும் தடை செய்வது என முடிவு செய்துள்ளோம். இந்த முடிவுக்கு இளைஞர்கள் மற்றும், பெண்கள் மத்தியில் 100 சதவீதம் வரவேற்பு கிடைத்துள்ளது.

    கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் எங்கள் கிராமம் மிகவும் பின் தங்கி உள்ளதுக்கு போதைப் பொருள் பயன்பாடு தான் காரணம். ஆகவே எங்கள் ஊரின் ஒட்டுமொத்த நலனுக்காக போதைப்பொருள் பயன்படுத்தக்கூடாது விற்கக் கூடாது என முடிவெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    நாங்கள் மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதில் பெருமையாக உள்ளது என்றனர். இளைஞர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூா்:

    திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் சிவ சண்முகம் ஓட்டி வந்தார்.

    இன்று காலை அந்த பஸ் கும்பகோணத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து தஞ்சாவூருக்கு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    அப்போது தஞ்சாவூர் அருகே மானாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சிறிய பாலத்தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கவிழ்ந்தது. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.

    தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தஞ்சை கீழலாயத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது 50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மற்ற 25 பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு.
    • 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது திருவோணம் தாலுகா.

    தஞ்சாவூரில் புதிய தாலுகாவாக திருவோணம் உருவாக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைக்கப்படுகிறது.

    திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மக்கள் 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு செல்ல வேண்டி இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    அதன்படி, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வஙெ்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணம் தாலுகா உருவாகிறது.

    ×