என் மலர்
நீங்கள் தேடியது "கோடை காலம்"
- அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
- தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப் பக்கூடல், அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் நிலவியது. இந்தநிலையில், நேற்று காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பின்னர், மதியம் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அத்தாணி, கீழ்வாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்பக்கூடல்-அத்தாணி சாலையில் நல்லிக்கவுண்டன் புதூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் கிளையும், அத்தாணி- செம்புளிச்சாம்பாளையம் செல்லும் சாலையில் தென்றல் நகரில் சாலையோரம் இருந்த ராட்சத மரத்தின் கிளையும் முறிந்து சாலையில் விழுந்தது.
மேலும், அத்தாணி கருப்பண்ணகவுண்டன் புதூர் பிரிவில் இருந்து கருப்பண்ணகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் இருந்த இலகுவான 2 மரங்கள் வேரோடு சாய்ந்து ஒரு மரம் மின்கம்பிகளின் மீதும், மற்றொரு மரம் சாலையிலும் விழுந்தது.
இதைத் தொடர்ந்து, பவானி நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளையும், வேரோடு சாய்ந்து மின்கம்பிகளின் மீது விழுந்த மரங்களையும் அகற்றினர். ஆப்பக்கூடலில், நேற்று மாலை 3.30 மணிக்கு மேல் தூரல் மழையாக ஆரம்பித்து 30 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது, அதன் பின்னரும், அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கிய தூரல் மழை இரவு வரை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது.
- 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
சென்னை:
'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. பொதுவாக கத்திரி வெயிலின்போது வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே 100 டிகிரி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் வருகிற 28-ந்தேதி வரை நீடிக்கும். அதாவது, 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து இயற்கை மருத்துவர்கள் கூறும்போது, 'அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கலாம். குறிப்பாக, பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கோடைகாலம் வந்தாலே அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும்' என்கின்றனர்.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறும்போது, 'தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 6-ந்தேதி இதேபோன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 7, 8-ந்தேதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது' என்றார்.
- கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.
- நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர்.
சேலம்:
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அக்னி நட்சத்திர காலத்திற்கு இணையாக வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் வெயில் சதம் அடிக்கிறது. குறிப்பாக நேற்று 102.2 டிகிரி வெயில் பதிவானது.
இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்துகிறது. கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.
காலையில் இருந்தே அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அதிகளவில் வியர்வை வெளியேறுகிறது. இதனால் சீக்கிரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள நுங்கு, இளநீர், கம்பங்கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு, செயற்கை குளிர்பானங்களை நாடுகின்றனர்.
மேலும் நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே விரும்புகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கின்றன. இதனால் உடல் முழுவதும் வியர்வை வியர்த்து கொட்டுகிறது. தூங்க முடியாமல் அவதிபடுகின்றனர்
இதனிடையே தமிழகத்தில் இன்று காலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும், கடலோர பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்று குவிதல் காரணமாக இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி மூழ்கி உயிரிழந்தார்.
- கோடை கால விடுமுறை நாட்களில் எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது.
மதுரை:
மதுரை கே.கே நகர் பகுதியில் செயல்பட்டு வந்த கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் அரசு அனுமதியின்றி கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 4 வயதான சிறுமி ஆருத்ரா வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் மழலையர் பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி பள்ளிக்கு சீல் வைத்தனர்.
சிறுமி உயிரிழந்தது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாக பராமரிப்பு பணிகளின்போது அலட்சியமாக செயல்பட்டதாக பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் உதவியாளர் வைர மணி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 2 பேரும் நீதி மன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். சிறுமி இறந்த தனியார் மழலையர் பள்ளியில் உரிமத்தை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ரத்து செய்து உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை மாவட் டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் மழலையர் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும் கோடை கால விடுமுறை நாட்களில் எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வருகிற 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும்.
ஆனால் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி வரை வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வருகிற 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வருகிற 1-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும். 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய ஆவலாக இருந்து வருகிறது.
- கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது.
சென்னை:
தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.
கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.
அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.
இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஆங்காங்கே வெப்ப சலனத்தால் கோடை மழை ஓரளவுக்கு வெப்பத்தில் இருந்து தப்பிக்க வழி செய்கிறது. அதுவும் வருகிற 30-ந்தேதிக்கு பிறகு ''குட்-பை'' சொல்ல இருக்கிறது.
இப்படி இருக்கும் சூழலில் வெயிலின் உக்கிரத்தை கக்கும் அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்தே பல இடங்களில் வெயிலின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சில நிமிடங்கள் மின் விசிறி நிறுத்தப்பட்டாலே வியர்த்து கொட்டும் அளவுக்கு அசவுகரியத்தை உணருகிறோம். அப்படி பார்க்கையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய ஆவலாக இருந்து வருகிறது.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர்களிடம் கேட்டபோது அவர்கள், 'லா-நினோ மற்றும் ஐ.ஓ.டி. என்று கூறப்படும் கடல் அமைப்புகள் சமநிலையில் இருப்பதால், கடல் சார்ந்த அலைவுகள் முற்றிலுமாக வலுவிழந்து, மழைக்கான சாதகமான சூழல் எதுவும் ஏற்படாத நிலை இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் வெப்பம் சற்று உயர்ந்தே காணப்படும். இருப்பினும் வெப்ப அலை வீசும் அளவுக்கு இருக்காது என்பது ஆறுதல் வார்த்தையாக இருந்தாலும், வறண்ட காற்று மற்றும் அதிக ஈரப்பதத்தால் உணரும் வெப்பநிலையின் தாக்கம் இருக்கும். இதனால் அசவுகரியத்தை நாம் உணருவோம்' என்றனர்.
கடந்த ஆண்டு (2024) அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்ற வானிலை ஆய்வாளர்களின் பதில் ஆறுதலை கொடுக்கிறது. ஆனாலும் கடல் சார்ந்த அலைவுகள் தொடர்ந்து அதே நிலை நீடித்தால், நிலைமை எப்படி இருக்கும்? என்பது அப்போதுதான் தெரியும்.
- தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக வெப்ப நிலை 97 டிகிரி முதல் 99 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரியாகவும் இருக்கும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வருகிற 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் நேற்று ஈரோடு, மதுரை விமான நிலையம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 102.2 டிகிரி வெயில் பதிவானது. திருச்சியில் 102 டிகிரி, சேலம், வேலூரில் 101 டிகிரி, திருத்தணி, தர்மபுரியில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. மொத்தம் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று தமிழகத்தில் எட்டு இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
- இன்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
சென்னை:
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. இருப்பினும் மழை நின்ற பின்னர் கொளுத்தும் வெயில் மழை பெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத அளவுக்கு செய்து விடுகிறது.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலத்த கோடை மழை பெய்தது. காலை 8.45 மணியளவில் தொடங்கிய இந்த மழை விட்டு விட்டு தொடர்ச்சியாக மதியம் வரையில் பெய்து கொண்டே இருந்தது. இப்படி கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்தபோதிலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே கடுமையான வெயில் அடிக்க தொடங்கி விட்டது. இதுபோன்ற நிலைதான் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் எட்டு இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. திருத்தணி, மதுரை விமான நிலைய பகுதியில் 103 டிகிரியும், பரமத்தி வேலூர் மற்றும் மதுரை நகர் பகுதியில் 102 டிகிரி வெயிலும் திருச்சியில் 101 டிகிரியும் பதிவாகி இருக்கிறது. ஈரோடு, பாளையங்கோட்டையிலும் 100 டிகிரியும் தாண்டி வெயில் அடித்து உள்ளது. இதே போன்று இன்று காலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
இரவில் புளுக்கம், பகல் நேரங்களில் கொளுத்தும் வெயில் காரணமாக இரவு நேரங்களில் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவுக்கு அதிக வெப்பம் காணப்படுகிறது. இதன் காரணமாக குளிர்சாதன வசதி கொண்ட அறைகளை தவிர்த்து மற்ற அறைகளில் இருக்கும்போது கடுமையான புழுக்கத்துடன் உடலில் வியர்வை வழிந்தோடும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகிறார்கள்.
- தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து குளிர்வித்தது.
- நேற்று தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் சதமடித்தது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து குளிர்வித்தது. இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெப்பம் கொளுத்தியது. இது, அடுத்த 10 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். நேற்று தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 104.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
அதன்விவரம் வருமாறு:-
வேலூர் - 104.09 (40.5 செல்சியஸ்)
திருத்தணி - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)
மதுரை விமான நிலையம் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)
கரூர் பரமத்தி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
மதுரை நகரம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
திருப்பத்தூர் - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)
ஈரோடு - 100 டிகிரி (38 செல்சியஸ்)
- வருகிற 19-ந்தேதி தொடங்கும் வெயில் மே 5-ந்தேதி வரை அதிகமாக இருக்கும்.
- தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4-ந்தேதி தொடங்கும்.
சென்னை:
சென்னையில் நேற்று திடீரென்று பலத்த மழை பெய்தது. சென்னை மேடவாக்கத்தில் 16 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10 செ.மீ. மழை பெய்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியதாவது:-
சென்னையில் நேற்று பெய்தது சாதாரண வெப்பச்சலன இடி மழைதான். குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு உருவான இடிமழை மேகங்கள் அப்படியே காற்றின் போக்கில் தெற்கு நோக்கி நகர்ந்து வந்தது.
இந்த மழை மேகங்கள் கிட்டத்தட்ட 1,000 கி.மீ. தூரம் பயணித்து சென்னைக்கு நேற்று முற்பகல் 11 மணியளவில் நகர்ந்து வந்த போது கடற்காற்றும் உள்ளே புகுந்ததால் வலுவடைந்தது. இதனால் சென்னையில் நேற்று இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது.
சென்னையில் இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது கோடை மழை என்பதால் முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாது. ஆனால் இன்று முதல் மழை குறைய தொடங்கும். வருகிற 19, 20, 21-ந்தேதிகளில் வெயில் உச்சம் தொடும்.
வருகிற 19-ந்தேதி தொடங்கும் வெயில் மே 5-ந்தேதி வரை அதிகமாக இருக்கும். மே 5-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4-ந்தேதி தொடங்கும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்புதான் வெயில் கொளுத்தும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகியது. தமிழகத்தில் இன்று முதல் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க கூடும்.
வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல் , ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்பட 22 மாவட்டங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 106 டிகிரி வரை நிலவக்கூடும்.
தமிழகத்தின் உட்புற சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வருகிற 19, 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பஅலை வீசக்கூடும். இன்றும், நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை எதிர்ப்பார்க்கலாம்.
வருகிற 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளி பகுதிகளில் விவசாயப் பணிகள், கட்டுமான பணிகள் போன்ற பொதுவெளி பணிகளை தவிர்க்க வேண்டும்.
ஆன்மிக பாதயாத்திரை செல்பவர்கள், மலைப்பகுதி ஏறுபவர்கள் முற்பகல் 11 மணி முதல் 3 மணி வரையிலான காலக்கட்டத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகபடியாக நீர் சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
- 7915 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோடை கால மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஏப்ரல் மாதம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 1300 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2610 மெகாவாட், மே மாதத்தில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 650 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 1080 மெகாவாட் கொள்முதல் செய்ய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
- பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது.
- மே மாதம் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வடகர்நாடகத்தில் உள்ள விஜயாப்புரா, பாகல்கோட்டை, ராய்ச்சூர், கதக், கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.
கோடை காலத்தில் வடகர்நாடக மாவட்டங்களில் அரசு ஊழியர்களின் பணி நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கலபுரகி, ராய்ச்சூர், யாதகிரி, பீதர், கொப்பல், பல்லாரி, விஜயநகர், விஜயாப்புரா, பாகல்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.
வெயில் வாட்டி வதைத்து வருவதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. வெயில் நேரத்தில் பொது மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதையடுத்து அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதி அலுவலக பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 9 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டும் பணியாற்றினால் போதும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மே மாதம் 31-ந்தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.