என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து விதிமீறல்"

    • வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேர் போலீசில் சிக்கி இருக்கிறார்கள்.
    • மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேராக பயணிப்பவர்கள், ஒருவழிப்பாதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வாகன சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த போதிலும் கடந்த 2 மாதங்களாக மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2½ மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 82 ஆயிரத்து 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து சந்திப்புகளில் ஸ்டாப் லைன் என்று அழைக்கப்படும் நிறுத்த கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்தியதற்காக 3 ஆயிரத்து 328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேரும் போலீசில் சிக்கி இருக்கிறார்கள். 3 ஆயிரத்து 328 பேர் செல்போன் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டியதால் பிடிப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வணிக வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றதாக 7 ஆயிரத்து 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 33 ஆயிரத்து 331 பேர் ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்று விடுபட்டு இருக்கிறார்கள். சீட் பெல்ட் அணியாமல் அவர்களை ஓட்டிச்சென்ற 2 ஆயிரத்து 26 1 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களை போலீசார் வாகன சோதனை மூலமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் பிடித்து வருகிறார்கள்.

    இதன்படி சென்னை மாநகரில் தாமாகவே முன் வந்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 293 சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன் மூலமாகவும் வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக விதிமீறல் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் எந்த சந்திப்பாக இருந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து வாகனங்களை இயக்காவிட்டால் நிச்சயம் மாட்டிக் கொள்வது உறுதி. இதுபோன்ற அபராதங்களை தவிர்க்க வேண்டும் என்றால் விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் வாகனங்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னையில் 10 போக்குவரத்து துணை கோட்டங்களிலும் போலீசார் பம்பரமாக சுழன்று அபராதம் விதிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • அண்ணாநகர் போக்குவரத்து துணை கோட்டத்தில் மட்டும் மொத்தம் 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.

    புதிய சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து போலீசார் முதல் நாளான நேற்று அதிரடியாக அபராதம் விதித்தனர். சென்னையிலும் கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி காட்டினார்கள்.

    அந்த வகையில் சென்னையில் நேற்று முதல் நாளில் மட்டும் போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.15½ லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 1100 பேரிடம் இருந்து உடனடியாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 10 போக்குவரத்து துணை கோட்டங்களிலும் போலீசார் பம்பரமாக சுழன்று அபராதம் விதிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போலீசில் சிக்கினர். சென்னை மாநகர் முழுவதும் முதல் நாளான நேற்று மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 1,500 பேருக்கு கையில் பணம் இல்லாததால் அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் உடனடியாக பணத்தை கட்ட முடியாவிட்டால் அவர்களிடம் அபராத ரசீது தொகையை போலீசார் கொடுத்து விடுவார்கள்.

    அபராத தொகை நிலுவையில் இருப்பதாக பதிவு செய்து ரசீதை மட்டும் வழங்குவது வழக்கம். அந்த வகையில்தான் தற்போது பிடிபட்ட 2,600 பேரில் 1,500 பேருக்கு அபராதத்தை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் ஆன்லைன் வழியாக அபராதத்தை செலுத்தி கொள்ளலாம்.

    அண்ணாநகர் போக்குவரத்து துணை கோட்டத்தில் மட்டும் மொத்தம் 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 99 பேரிடம் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 10 பேரிடம் இருந்து ரூ.1000 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் பகுதியில் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டிய 10 பேரும் போலீசில் சிக்கினர். இவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வகையில் அபராதம் வசூலித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் 2-வது நாளான இன்றும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    சென்னையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு பலர் பயணிப்பார்கள். அதுபோன்று அறிமுகம் இல்லாத நபர்களை லிப்ட் கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர்களும் சிக்கினர். அவர்களுக்கும் போலீசார் ரூ.100 அபராதம் விதித்ததையும் காண முடிந்தது.

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், யாருக்கும் பாரபட்சம் காட்டப்படாது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் என்று அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.

    • சென்னையில் உள்ள போக்குவரத்து துணை கோட்டங்களில் போலீசார் பம்பரமாக சுழன்று அபராதம் விதிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
    • கடந்த 3 நாட்களில் மட்டும் போக்குவரத்து காவல்துறை 6,187 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை சமீபத்தில் தொடங்கியது. புதிய சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து போலீசார் அதிரடியாக அபராதம் விதித்தனர். சென்னையிலும் கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி காட்டினார்கள். அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாளாக போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.42 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது போக்குவரத்து காவல்துறை

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில் கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும். யாருக்கும் பாரபட்சம் காட்டப்படாது என தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    • போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
    • சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் திருத்தம் செய்யப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி தற்போது விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு உயர்த்தப்பட்ட அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    அதன்படி சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதில் 12 ஆயிரத்து 625 வழக்குகளில் அபராத தொகை ரூ.70 லட்சத்து 46 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாததற்காக 8,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.42 லட்சத்து 78 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அரசு பள்ளி சிறுமி ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் ஆபத்தை பற்றி பாட்டாக பாடி எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
    • பாடலை கேட்ட போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த குழந்தையைபோல் யாரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

    சென்னை:

    அரசு பள்ளி சிறுமி ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் ஆபத்தை பற்றி பாட்டாக பாடி எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறார். அவர் பாடிய பாடல் வருமாறு:-

    பைக்கில ஏறி நீ பண்ணுற ஜாலி

    நீ தவறி விழுந்துட்டா ஆளே காலி

    பத்திரமா போவனும்டா நீயும் வீட்டுக்கு

    பாதை மாறி நீயும் போயிடாத சுடுகாட்டுக்கு

    ரோட்டுலத்தான் சின்ன பசங்க குறுக்க போகும்டா

    பைக்க ஓட்டுற நீ தான் நாலு பக்கமும் பாத்து போகனும்டா

    எட்டு வயசு பையன்கூட பைக்கை ஓட்டுறான்

    அவனை பெத்தவனும் ஓட்டுறத பார்த்து ரசிக்கிறான்

    பைக்கை ஓட்டத்தான் பையன் அடம்புடிக்கிறான்

    பாதி வயசுலையே சுடுகாட்டுல இடம்புடிக்கிறான்

    ஓரம் ஒதுங்கி வழிய விடனும் 108க்கு

    தலையில ஹெல்மெட்டை நீ போடனும் உன் பாதுகாப்புக்கு

    போக்குவரத்து விதிகளைதான் மதிச்சு போகனும்

    ரோட்டுல ட்ராவல் செய்யும் போலீசுக்கும் உதவி செய்யணும்

    போன உசுருதான் மீண்டும் திரும்ப வராது

    ஒருத்தன அநியாயமா கொன்ன பாவம் உன்ன விடாது

    பச்சை, மஞ்ச, சிவப்பு விளக்கு மேல எரியுது

    நீ நின்னு போக வெள்ளகோடு கீழே தெரியுது

    சாலை விதிய மீறி நாம போகக்கூடாது

    தண்ணிய அடிச்சுட்டுத் தான் வண்டிய நீ ஓட்டக்கூடாது

    செஞ்சத் தப்புத்தான் நான் குத்திக்காட்டல

    ரோட்டுல பாத்தததான் பாடுறன்ப்பா இந்த பாட்டுல

    சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த பாடல் எல்லோரையும் கவர்ந்துள்ளது.

    இந்த பாடலை கேட்ட போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த குழந்தையைபோல் யாரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

    • எண்ணூர் விரைவு சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • அபராதமாக கட்டி விட்டால் குடும்பம் நடத்த என்ன செய்வேன் என்று டிரைவர் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினார்.

    சென்னை:

    சென்னை எண்ணூர் விரைவு சாலையில் மணலி சி.பி.சி.எல். சந்திப்பு வளைவு பகுதி அருகில் ஏராளமான கனரக வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    அந்த பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது லாரி டிரைவர் ஒருவரை அழைத்தார். அவர் காக்கி சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். எதற்காக சீருடை அணியவில்லை என்று கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தார்.

    அதற்கு லாரி டிரைவர் என்னால் 500 ரூபாய் அபராதம் கட்ட இயலாது. இரவு முழுக்க கண் விழித்து லாரி ஓட்டினால் தான் என்னால் 500 ரூபாய் சம்பாதிக்க முடியும். அதையும் அபராதமாக கட்டி விட்டால் குடும்பம் நடத்த என்ன செய்வேன் என்று இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினார்.

    அதற்கு அவர் விடாபிடியாக அபராதம் விதித்து நீ கட்டாவிட்டால் உன் லாரி உரிமையாரை கட்ட சொல் என்றார். அதற்கு லாரி டிரைவர் விழி பிதுங்கியபடி அவர் கட்டமாட்டார். எனது ஒருநாள் உழைப்பு வீணாகி விட்டதே என்று கண்ணீர் விட்டு புலம்பினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
    • சென்னையில் கடந்த 15 நாட்களில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    சென்னை:

    போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு, திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை பன்மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த புதிய அபராத தொகையை பல மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி, தலைக்கவசம் அணியாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 (பழைய அபராதம் ரூ.100), செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தவர்களுக்கு ரூ.1000, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000, பதிவெண் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.2,500, வாகனம் உரிமம் தொடர்பாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அதுதெரிந்தே அவருடன் பயணிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிக்கத் தொடங்கி உள்ளனர்.

    சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன்மூலம் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துக்கு முக்கிய காரணியாக இருந்தபோதிலும், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக காவல்துறையினர் அப்பாவி மக்களை துன்புறுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • அதிவேகம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுதல், செல்போன் பேசி கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் சோதனை முக்கியமான இடங்களில் நடந்தது.

    சென்னை:

    சென்னையில் மோட்டார் வாகன விபத்தை குறைக்க போக்குவரத்து துறையுடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை தடுக்க அபராத தொகை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

    கடந்த மாதம் 21-ந்தேதி முதல் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர், இணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சிறப்பு வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சென்னை பெருநகரத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 50 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அபராதமாக ரூ.4 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதிவேகம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுதல், செல்போன் பேசி கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். குறிப்பாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சோதனை முக்கியமான இடங்களில் நடந்தது.

    சென்னை நகர் முழுவதும் ஒரே நாள் இரவில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 166 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 15 பேர் மது அருந்தி காரை ஓட்டி வந்து சிக்கிக்கொண்டனர். போக்குவரத்து விதிகளை மீறிய 217 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தவிர 683 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை சந்தித்து குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டன. 13 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டது.

    சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    • கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
    • ஓட்டுனர் உரிம வழக்குகளை பொறுத்தவரையில் இதற்கு முன்னர் மாதம் 3500 வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அது 589 ஆக சரிந்துள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அபராத நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது.

    கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.1000மும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இது போன்று பல்வேறு விதிமீறல்களுக்கும் நூற்றுக்கணக்கில் இருந்த அபராத தொகை ஆயிரங்களை தாண்டி உள்ளது. சென்னையிலும் புதிய அபராத வசூலில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 2 மாதங்களில் ரூ 17 கோடியே 47 லட்சம் ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 94 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. புதிய அபராத தொகை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு சென்னையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 27 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    ஆனால் புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு இந்த வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவாகும் வழக்குகள் ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளன. 97 ஆயிரம் வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.

    போலீசார் விதிமீறலில் ஈடுபடுபவர்களை பிடித்து கடுமையாக அபராத தொகையை வசூலிப்பதால் போக்குவரத்து விதிமீறல்கள் வெகுவாக குறைந்துள்ளன.

    அந்த வகையில் 60 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்திருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஒவ்வொரு மாதமும் பழைய அபராத முறை அமலில் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எவ்வளவு? புதிய அபராத முறை அமலான பின்னர் பதிவாகி இருக்கும் வழக்குகள் எவ்வளவு? என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    பழைய அபராத தொகை வசூலிக்கப்பட்டபோது ஒரு மாதத்தில் 94723 ஹெல்மெட் வழக்குகள் போடப்பட்டு உள்ளன. புதிய முறை அமலான பின்னர் இந்த வழக்கின் எண்ணிக்கை 41,790 ஆக குறைந்துள்ளது.

    அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பழைய அபராத தொகையின்போது மாதத்துக்கு சராசரியாக 2461 என்கிற அளவில் இருந்துள்ளது. இது தற்போது 713 ஆக குறைந்துள்ளது.

    சிக்னலை மீறி செல்பவர்கள் மீது போடப்பட்ட வழக்கு முன்னர் 7580 ஆகவும், தற்போது 2356 ஆகவும் உள்ளது. புதிய அபராத தொகை அமலான பின்னர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இந்த விதிமீறல் வழக்கின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது.

    இதற்கு முன்னர் மாதத்துக்கு 11,788 வழக்குகள் போடப்பட்ட நிலையில் தற்போது சுமார் 4 ஆயிரம் வழக்குகளே பதிவாகி வருகின்றன.

    ஓட்டுனர் உரிம வழக்குகளை பொறுத்தவரையில் இதற்கு முன்னர் மாதம் 3500 வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அது 589 ஆக சரிந்துள்ளது.

    இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய அபராத முறை அமலுக்கு வந்த பிறகு போக்குவரத்து விதிகளை மீறினால் அபராத தொகை 5 முதல் 10 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள். இதன் காரணமாகவும், போக்குவரத்து போலீசாரின் தொடர் விழிப்புணர்வு காரணமாகவும் போக்குவரத்து விதிமீறல்கள் சென்னையில் குறைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
    • சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது.

    சென்னை:

    உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு 2023ஐ மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில், சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    • வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக போக்குவரத்து சிக்னல் தெரிவதற்காக 25 புதிய எல்.இ.டி. கம்பங்கள் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.
    • பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 சிக்னல்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறக்கையில் கூறியிருப்பதாவது:-

    * அண்ணா நகரில் முக்கிய 5 சந்திப்புகளில் நிறுவப்பட்ட TROZ ஒரு வெற்றிகரமான திட்டம் ஆகும். ஒரு நாளைக்கு சுமார் 7,000 சலான்களை தானாக உருவாக்குகிறது.

    மேலும் ஸ்பென்சர், ஈகா சந்திப்பு மற்றும் மின்ட் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் TROZ புதிதாக நிறுவ ரூ.10.5 கோடி நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    * போக்குவரத்து விதிமீறல்களைப் பதிவு செய்ய 11 சந்திப்புகளில் 15 கேமராக்கள் நிறுவப்பட்டு ஐ.டி.ஆர்.எஸ் அமைப்பால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனுமதியில்லாத வழியில் செல்பவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டுபவர்களையும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்பவர்களையும் கண்டறிந்து தானாகவே இ-சலான் உருவாக்குகிறது.

    * வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள இ-சலான் பற்றிய தகவல்களைப் பெற 12 அழைப்பு மையங்கள் தொடங்கப்பட்டது இந்த அழைப்பு மையங்கள் மூலம் மொத்தம் ரூ.28,97,46,750/-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக போக்குவரத்து சிக்னல் தெரிவதற்காக 25 புதிய எல்.இ.டி. கம்பங்கள் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.

    பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 சிக்னல்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது

    பொதுமக்களுக்கு அதிக காவலர்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக 186 முக்கிய சந்திப்புகளில் ரிமோட் சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன.

    * பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய 104 சந்திப்புகளில் ஒலிபெருக்கி மற்றும் பாடல்கள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    * சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள 47 ரோந்து வாகனங்கள் மூலம் விபத்து அழைப்புகள், 103 அழைப்புகள், சமூக ஊடக அழைப்புகள் வரும் இடங்களுக்கு விரைந்து சென்றும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளிலும் ரோந்து வாகனங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    * அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களுக்கு விபத்துக்கள் நடைபெறுவதற்கான நேரில் சென்று பார்வையிட்டு, காரணங்களை அறிந்து நெடுஞ்சாலை துறையினர், பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் போக்குவரத்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் அடங்கிய குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொங்கல் பண்டிகை அன்று 190 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும்.

    சென்னை:

    சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி இருக்கிறது.

    மேலும் பல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளதை போலீசார் உணர்ந்தனர். எனவே பொங்கல் பண்டிகை அன்று 190 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 5 ஆயிரத்து 904 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்த சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர்கள், அதிவேகமாக வாகனத்தை சென்றவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 359 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்தனர்.

    சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ×