search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களக்காடு"

    • கணேசன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.
    • பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள உன்னங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 42).

    இவரிடம் கடந்த 1 ஆண்டுக்கு முன் ஏர்வாடி அருகே உள்ள இளைய நயினார்குளத்தை சேர்ந்த தவசிக்கனி (52), நாங்குநேரி சன்னதி தெருவை சேர்ந்த ஜோதிபாஸ் (42) ஆகிய இருவரும் தலையாரி வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    ஆனால் கணேசனுக்கு தலையாரி வேலை கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கணேசன் இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்டார். அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து கணேசன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தவசிக்கனி, ஜோதி பாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணைக்கு பின் இருவரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

    • மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
    • கனமழை பெய்ததால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

    அதன்படி மாஞ்சோலை பகுதியில் சூழல் சுற்றுலா சேவையை நிறுத்தி வைத்துள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும்வரை சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு வர வேண்டாம் எனவும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா அறிவித்துள்ளார்.

    களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியை ஒட்டி கனமழை பெய்ததால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தலையணையிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.
    • மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் தொடர்மழையால் பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 100 அடியை எட்டிய அந்த அணையில் இன்று மேலும் 2 அடி நீர் இருப்பு அதிகரித்து 102 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.

    ஆனாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில், இன்று 2 ஆயிரம் அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 806 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 115.81 அடியாக உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 78.64 அடி தண்ணீர் உள்ளது. திருக்குறுங்குடி அருகே உள்ள 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. அந்த அணையில் இருந்து கார் பருவ சாகுபடி பணிக்காக வருகிற 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே மலைப்பகுதிகளில் மழை குறைந்தாலும், தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால், மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று 4-வது நாளாக தடை நீடிக்கிறது.

    அதே நேரம் களக்காடு மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கடந்த 26-ந்தேதி முதல் தலையணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி மாவட்டத்திலும் மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது. எனினும் அணைகளுக்கு நீர் வரத்து இருப்பதால், அவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 76 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 92 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    • கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது.
    • வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவ மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் இன்று (21-ந்தேதி) தொடங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து செல்போன் மற்றும் உபகரணங்களை கணக்கெடுப்பு குழுவினருக்கு வழங்கினார். அதன் பின் வனத்துறை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனசரகத்திற்கு 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்திற்கு 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்திற்கு 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இவர்கள் வருகிற 26-ந்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

    மேலும் கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரிக்கும் புள்ளி விபரங்களை செல்போன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.

    கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் வன விலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் பிறகு வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
    • கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், அப்பர்குளம், பெருமாள்குளம், தேவநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த கிராமங்களுக்கு அடிக்கடி மலையில் இருந்து வனவிலங்குகள் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்தவதோடு, கிராமங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் அவ்வப்போது புகுந்து விடுகிறது.

    அந்த வகையில் நேற்று களக்காடு அருகே உள்ள தேவநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில், நேற்று தேவநல்லூர் பாறை பகுதியில் சிலர் சென்றபோது, அந்த வழியாக கரடி ஓடியது. உடனே அவர்கள் அந்த கரடியை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தொடர்ந்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில் கடந்த ஆண்டு இதேபோல் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்து சென்றனர். இதேபோல் கடந்த ஆண்டு பெருமாள்குளம் பகுதியில் புதருக்குள் புகுந்த கரடியை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தேவநல்லூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது. இதனால் விவசாயிகள் வயலுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஊருக்குள் புகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வனத்துறையினர் அங்கு சென்று கரடி நடமாட்டம் இருக்கிறதா என்பதை அறிவதற்காக முகாமிட்டுள்ளனர். மேலும் கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர். கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை பிடிக்க கூண்டு வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • புரட்டாசி மாதம் என்பதால் நம்பி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    • நம்பி கோவிலுக்கு செல்லும் பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் திருமலை நம்பி கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக வனத்துறையினர் தெரி வித்துள்ளனர். இதையடுத்து இன்று (செவ்வாய் கிழமை) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் நம்பி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    • முருகனின் மகனுக்கும், சிவா என்ற சிவசுப்பிரமணியனுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
    • ஆத்திரம் அடைந்த சிவா, முருகனை கத்தியால் குத்தினார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது43). விவசாயி. இவரது மகனுக்கும், ஏர்வாடி கோவில் வாசலை சேர்ந்த சிவா என்ற சிவசுப்பிரமணியனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று சிவா, முருகன் வீட்டிற்கு வந்து, அவரது மகனை அவதூறாக பேசினார்.

    இதனை முருகன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, முருகனை கத்தியால் குத்தினார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவாவை தேடி வருகின்றனர்.

    • சங்கரவடிவு களக்காடு அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கினார்.
    • சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பெண்களை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஊச்சிகுளத்தை சேர்ந்தவர் சங்கரவடிவு (வயது 75). இவர் ஊச்சிகுளத்தில் இருந்து களக்காடு வந்த பஸ்சில் ஏறி, களக்காடு அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அவர் அணிந்திருந்த 2½ பவுன் எடையுள்ள தங்க செயினை மர்ம நபர்கள் பறித்தனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். இதைக்கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த மீனாட்சி என்ற பொண்ணுத்தாய் (30), தேவி (21), மீனா (25) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து சங்கர வடிவின் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மேலவடகரை குளத்தில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • மண் திருடிக் கொண்டிருந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டது.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் மேலவடகரை குளத்தில் ரோந்து சென்றனர். அப்போது குளத்தில் ஒரு கும்பல் டிராக்டரில் மண் திருடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் கும்பல் தப்பி ஓடி விட்டது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மண் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • குளத்து மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
    • டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிராக்டரை ஓட்டி வந்த சிறுவனையும் கைது செய்தனர்.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் ஜெ.ஜெ. நகர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த குளத்து மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர்.

    இதில் அரசு அனுமதி இன்றி குளத்து மண்ணை திருடி விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிராக்டரை ஓட்டி வந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளரான கடம்போடுவாழ்வு தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் செண்டு என்பவரை தேடி வருகின்றனர்.

    • பேச்சிமுத்து,செந்தில்குமார் ஆகியோர் பெருமாளை வழிமறித்து செலவுக்கு ரூ.200 தரும்படி கேட்டனர்.
    • ஆத்திரம் அடைந்த இருவரும், கத்தியை காட்டி மிரட்டி பெருமாளிடம் இருந்த ரூ. 100- ஐ பறித்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது40). விவசாயி இவர் நேற்று நாகன்குளம் விலக்கில் வந்து கொண்டிருந்த போது கடம்போடுவாழ்வு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (25), சிங்கிகுளத்தை சேர்ந்த செந்தில்குமார் (44) ஆகியோர் அவரை வழிமறித்து செலவுக்கு ரூ. 200 தரும்படி கேட்டனர். அதற்கு பெருமாள் மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 100- ஐ பறித்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பேச்சிமுத்து, செந்தில் குமாரை கைது செய்தனர்.

    • சம்பவத்தன்று சதிஷ்குமார் திருக்குறுங்குடியில் இருந்து நாங்குநேரிக்கு சவாரி சென்றார்.
    • ஆனந்த் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் சதிஷ்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 500-ஐ பறித்து கொண்டு சென்று விட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது24). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் திருக்குறுங்குடியில் இருந்து நாங்குநேரிக்கு சவாரி சென்றார். பின்னர் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அவர் ஏர்வாடியில் உள்ள டோனாவூர் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது, பெருமளஞ்சியை சேர்ந்த சுடலைமுத்துக்குமார் மகன் அன்பு ஆனந்த் (22) ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் சதிஷ்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 500-ஐ பறித்து கொண்டு சென்று விட்டார்.

    இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பு ஆனந்தை தேடி வருகின்றனர்.

    ×