என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டைடல் பார்க்"

    • மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
    • அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வருகிறார்.

    மதியம் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார்.

    மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    ரூ.32½ கோடி செலவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

    இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் இரவில் தூத்துக்குடி சத்யா ரிசார்ட்சில் முதலமைச்சர் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    ஏற்கனவே அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறுவர்.

    இந்த திட்டம் வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவிகளிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பதாக அமைந்துள்ளது.

    மதியம் நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் பிரதான சாலைகளின் இருபுறமும் தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் காமராஜ் கல்லூரியில் பிரமாண்ட பந்தல் மற்றும் கல்லூரி முன்பாக அலங்கார வளைவு, தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது.

    • வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து காத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி சாலை மற்றும் இ.சி.ஆர். சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் சாதாரண நேரங்களில் 10 நிமிடங்கள் வரை ஆகும். அதே நேரத்தில் பீக் ஹவர்சில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து காத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ராஜீவ்காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்திரா நகர் ரெயில் நிலையம் அருகே யு டர்ன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டைடல் பார்க் அருகில் 2-வது யு டர்ன் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

    தற்போது பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள டைடல் பார்க் மேம்பாலம் 510 மீட்டர் நீளமும், 8.50 மீட்டர் அகலமும் கொண்டது. மேம்பாலத்தின் மையத்தூண் 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


    இந்த மேம்பாலம் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் யு டர்ன் எடுக்க பயன்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் இடது புறம் திரும்பி மேம்பாலத்தில் ஏறி, உயரமான மட்டத்தில் யு டர்ன் எடுத்து, டைடல் பூங்காவிற்கு செல்லும் சாலையில் இறங்கிச் செல்ல முடியும்.

    இந்நிலையில், டைடல் பார்க் யு வடிவ மேம்பாலத்தை இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்துவைத்தனர்.


    • மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைப்பது சரியானது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
    • தி.மு.க.வின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்ததாக தெரிவித்தார்.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2.25 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பேரிடியாக உள்ளது. மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்தது விளம்பர அறிவிப்பு, கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

    மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள 2 தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல, அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் டைடல் பார்க் அறிவி க்கப்பட்டுள்ளது,

    கண்ணின் பார்வையை அழித்து விட்டு ராஜபார்வை என சொல்லவது போல டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது. தி.மு.க.வின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்தது, டைடல் பார்க் கட்டுவது சிறுவர் பூங்கா அமைப்பது போல அல்ல, அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கி டைடல் பார்க் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது.
    • டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.

    அவிநாசி :

    தமிழகத்தில் திருப்பூர், வேலூர், தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ராக்கியபாளையத்தில் 39 கோடி மதிப்பில் 7 அடுக்கில் மினி டைடல் பார்க் கட்ட அரசு புறம்போக்கில் இருந்த 2 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, பணி துவக்க டெண்டரும் விடப்பட்டது.

    தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆண்டுக்கணக்கில் அங்கு தேங்கியுள்ளது. அந்த கழிவுநீரை முற்றிலும் வெளியேற்றினால் தான் கட்டுமானப் பணி துவக்க முடியும் என்ற நிலையில், அதற்கான வழி தெரியாமல் கட்டுமான நிறுவனத்தினர் திணறி வந்தனர்.

    இதனால் டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.அந்த இடத்தை பார்வையிட்ட டைடல் பார்க் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள், மாநிலத்தின் பிற இடங்களில் கட்டுமானப்பணி துவங்கி வேகமாக நடந்து வரும் நிலையில் இங்கு ஆரம்பக்கட்ட பணி கூட துவங்கப்படாமல் இருப்பது சரியல்ல என அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்தநிலையில் தேங்கியிருந்த கழிவுநீர் அங்குள்ள வி.ஜி.வி., கார்டன் குடியிருப்புகளின் இடையே உள்ள வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் கடும் துர்நாற்றம் எழுந்ததால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து கழிவுநீரை வெளியேற்ற ஆட்சேபனை தெரிவித்தனர்.திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், நகராட்சி தலைவர் குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தினர்.

    டைடல் பார்க் கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனத்தினர் கூறுகையில், கட்டுமானப் பணி மேற்கொள்ள உள்ள இடத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றினால் தான் அந்த இடத்தின் வடிவமைப்பை தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். அதன் பின்னரே கட்டுமானப் பணிக்கான வடிமைப்பு இறுதி செய்யப்படும் என்றனர்.

    • திருமுருகன்பூண்டியில் 1.77 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை ஒதுக்கியுள்ளது.
    • டைடல் பார்க் திட்ட செயல் இயக்குனர் குமார் நேரில் வந்து அத்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி சென்றார்.

    திருப்பூர் :

    தமிழக அரசு தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், டைடல் பார்க்உருவாக்கி வருகிறது. சென்னையில் நடந்த விழாவில் திருப்பூரில் டைடல் பார்க் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.இதற்காக அவிநாசி தாலுகா திருமுருகன்பூண்டியில் 1.77 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை ஒதுக்கியுள்ளது.

    டைடல் பார்க் வளாகம், தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைகிறது.அதற்கான ஆயத்த பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. டைடல் பார்க் துவங்கப்பட்டால், அது திருப்பூரின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் என்கின்றனர் தொழில்துறையினர்.

    கலெக்டர் வினீத் கூறுகையில், முதல்வர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் 1.77 ஏக்கர் நிலம் ஒதுக்கியிருந்தது. டைடல் பார்க் திட்ட செயல் இயக்குனர் குமார் நேரில் வந்து அத்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி சென்றார். டைடல் பார்க் அமைவதன் மூலம் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப்பெற முடியும் என்றார்.

    ×