search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கல்வி கொள்கை"

    • தேசிய கல்வி கொள்கையை கட்டாயமாக திணிக்க முயற்சி செய்கிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது.

    மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி தேசிய கல்வி கொள்கையை கட்டாயமாக திணிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் சமத்துவத்தை ஒன்றிய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கல்வி, சமூக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதேவேளையில் குறிக்கோள்களில் வெற்றி அடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது இப்படித்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதா?

    முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும்.
    • புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.

    மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    2021-ம் ஆண்டு நான் கவர்னராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்சனைகளும் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அவைகளின் தரமும் குறைந்து காணப்பட்டது. இதனை சரி செய்து, ஒன்றிணைக்கவே இந்த மாநாடு மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

    புதிய தேசிய கல்வி கொள்கை தான் எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்காக தயாராக உள்ளது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின் தங்கி உள்ளோம். சுதந்திரத்திற்கு பிறகு பொருளாதார நிலையில் 5-ம் இடத்தில் இருந்த நாம் 11-ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டோம். தற்போது 5-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3-ம் இடத்திற்கு முன்னேற உள்ளோம்.

    தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும். நாம் சுதந்திரத்திற்கு முன்பு உலகின் பெரும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம். இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையை, பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு 3-ம் ஆண்டு நிறைவு பெற்றது.
    • ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருதல், சிந்தனையை ஊக்குவித்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் வேண்டும்.

    உடுமலை:

    தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு 3-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதன் பயன்கள் குறித்து விளக்கவும் மாவட்டம் தோறும் ஒரு பிரதிநிதியை மத்திய கல்வி அமைச்சர் அமைச்சகத்தின் உத்தரவின்படி சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்ட பிரதிநிதியாக சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மேகநாதன் நியமிக்க ப்பட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அவர் உடுமலை கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:- தேசிய கல்விக் கொள்கை 21 ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப பரந்த நெகிழ்வான பல்துறை கல்வி வழங்குகிறது.

    இதனால் நமது நாட்டை ஒரு துடிப்பான அறிவு சார்ந்த சமூகமாகவும் உலகளாவிய அறிவு வல்லரசாகவும் மாற்ற முடியும். ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருதல், சிந்தனையை ஊக்குவித்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தேசிய கல்விக்கொள்கையில் உள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இதனை பின்பற்றி வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாரம்பரிய அறிவு அமைப்புகளுக்கும், எதிர்கால தொழில்நுட்பத்திற்கும் சம முக்கியத்துவம் அளித்து உள்ளது.
    • புதிய சாத்தியக்கூறுகளின் வாய்ப்புகளுக்காக இந்தியாவை உலகம் பார்க்கிறது.

    புதுடெல்லி:

    அகில பாரதிய சிக்ஷா சமாஜம் மாநாடு டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:-

    இந்தியாவை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றுவதை தேசிய கல்வி கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. பாரம்பரிய அறிவு அமைப்புகளுக்கும், எதிர்கால தொழில்நுட்பத்திற்கும் சம முக்கியத்துவம் அளித்து உள்ளது. இளைஞர்களின் திறமையை விட அவர்களின் மொழியின் அடிப்படையில் மதிப்பிடுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதியாகும். தேசிய கல்வி கொள்கை, பயிற்சியை வழங்குவதுடன் அனைத்து பகுதிகளிலும் உள்ள இளைஞர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குகிறது.

    புதிய சாத்தியக்கூறுகளின் வாய்ப்புகளுக்காக இந்தியாவை உலகம் பார்க்கிறது. பல நாடுகள், அங்கு ஐ.ஐ.டி. வளாகங்களை திறக்க எங்களை அணுகுகின்றன. நாட்டின் தலைவிதியை மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு. இலக்கை நோக்கி நாடு முன்னேறி செல்வதில் கல்விக்கு முக்கிய பங்கு உண்டு. பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம், சுத்தமான எரிசக்தி ஆகியவை குறித்த விழிப்புணர்வு பாடங்களை மாணவர்களுக்கு பள்ளிகள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகள் என்பதை உள்ளடக்கிய கல்வி அமைப்பை மாற்ற வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரையாகும்.
    • மழலையர் கல்வி, பள்ளிக்கல்வி, ஆசிரியர் கல்வி, இளையோர் கல்வி ஆகியவற்றிற்கான தேசிய பாடத்திட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு நியமித்துள்ள நிபுணர் குழு பள்ளிக்கல்விக்கான தேசிய பாடத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு அறிவுறுத்தியது. பள்ளி கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியை உள்ளடக்கிய இந்திய கல்வி முறையில் முழுமையான மாற்றத்தை உருவாக்குவதே, தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். ஏனெனில் குழந்தைகளின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதே பள்ளிக்கல்வி தான்.

    உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகள் என்பதை உள்ளடக்கிய கல்வி அமைப்பை மாற்ற வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரையாகும். மேலும் அடிப்படை, தொடக்கம், நடுநிலை மற்றும் மேல்நிலை என 4 பிரிவுகளின் கீழ் கல்வி அமைப்பை மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    என்.இ.பி., ஒருங்கிணைந்த கலாச்சார அடித்தளம், சமமான கல்வி, பல மொழிகளை உள்ளடக்கிய கல்வி, ஆராய்ச்சிக் கல்வி, புத்தகச்சுமையைக் குறைத்தல், கலை மற்றும் விளையாட்டுடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அளித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

    மழலையர் கல்வி, பள்ளிக்கல்வி, ஆசிரியர் கல்வி, இளையோர் கல்வி ஆகியவற்றிற்கான தேசிய பாடத்திட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை டாக்டர் கே கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசிய வழிகாட்டும் குழுவின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்த தேசிய பாடத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக பல்வேறு அமைச்சகங்கள் வாயிலாக 500-க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை நேரில் வழங்கினர். செல்போன் செயலி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியியல் நிபுணர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்கள் தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தனர்.

    மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். இவ்வாறாக பெறப்பட்ட கருத்துக்கள் தேசிய பாடத்திட்ட வழிகாட்டு நெறிமுறையில் சேர்க்கப்பட்டு, அதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வழிகாட்டு நெறிமுறை தயாராகி உள்ள நிலையில், மேலும் துறை சார்ந்த நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் பல சுற்று ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தேசிய வழிகாட்டுதல் குழு தெரிவித்துள்ளது.

    இந்த மாற்றங்கள் பள்ளி வாரியங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் கலை, அறிவியல் மற்றும் வணிகம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை சரிசெய்யும்.

    கஸ்தூரிரங்கன் தலைமையிலான 12 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவால் உருவாக்கப்பட்டு வரும் பரிந்துரைகள், 8 பாட தொகுப்புகளுடன், 9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கட்டமைப்பும் கணிசமாக மாறும்.

    தற்போது, 10-ம் வகுப்பு மாணவர்கள் சி.பி.எஸ்.இ. உட்பட பெரும்பாலான வாரியங்களில் குறைந்தது 5 பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான வருடாந்திர முறையை இந்த குழு பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.

    9 முதல் 12-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகளை நடத்துவது, மாணவர்கள் தாங்கள் முடித்த படிப்புகளில் தயாராக இருப்பதாக உணரவும் உதவும் என்கின்றனர் கல்வியாளர்கள். மேலும் 12-ம் மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பாட வடிவமைப்பை தங்களே வடிவமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    உதாரணமாக, ஒரு மாணவர் இயற்பியலைத் தேர்ந்தெடுக்கிறார், அறிவியலின் கீழ் (பாடத்திட்ட பகுதி), ஆனால் அவர் 2-வது பாடத்திட்டப் பகுதியாக கலை பாடத்தை தேர்ந்தெடுக்கலாம். கணிதம் 3-வது பாடத்திட்டப் பகுதியாகவும், 4-வது பகுதியாக அவர் எந்த படிப்புகளின் தொகுப்பில் இருந்து எடுக்கலாம்.

    மாற்றாக, ஒரு மாணவர் சமூக அறிவியலை ஒரு பாடத்திட்ட பகுதியாக தேர்ந்தெடுக்கிறார் மற்றும் வரலாறு இருக்கலாம், 2-வது பாடத்திட்ட பகுதியாக மனிதநேயத்தையும் மற்றும் தத்துவத்தில் 4 படிப்புகள் தேர்வு செய்யலாம். இதில் கணிதமும் இருக்கலாம் நான்கு தத்துவப் படிப்புகளுடன் கணினி அறிவியல் படிப்புகள் அதன் ஒரு பகுதியாகவும், 4-வது எந்த பாடத்திட்ட பகுதியில் இருந்து, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டது அல்லது முற்றிலும் வேறுபட்டது இருக்கலாம்.

    9-ம் மற்றும் 10-ம் வகுப்புகளில், மாணவர்கள் ஒவ்வொன்று பாடத்திட்ட பகுதியில் இருந்து இரண்டு அத்தியாவசியப் படிப்புகளை முடிப்பார்கள் இந்த இரண்டு ஆண்டுகளில் 16 பாடத்திட்ட பகுதிகள் தேர்வு செய்து படிக்கலாம். இவ்வாறு தேசிய கலைவடிவமைப்பு குழு பரிந்துரைத்துள்ளது.

    • மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து மாணவர்களை படிப்பில் இருந்து வெளியேற்றும் நிலை உள்ளது.
    • தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்ப்பு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தேசிய கல்வி கொள்கை என்பது சூழ்ச்சியான ஆவணம். கல்வியை பற்றி எதுவுமே பேசாமல் அதில் கல்விக் கொள்கை என கூறப்படுகிறது. இந்த ஆவணத்தை நிராகரித்து தான் தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களிடம் வாக்குகளை பெற்ற தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.

    மத்திய அரசு தேசியக் கல்வி கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் வேறொரு கல்விக்கொள்கை உருவாக்கி வரும் போது மத்திய அரசு தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது. இன்றைக்கு இருக்கும் கல்விமுறையில் 5 வயதில் ஒரு குழந்தையை சேர்க்கும்போது அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு பாடம் குறித்து தெரிய வேண்டியதில்லை.

    மாணவ, மாணவிகள் விருப்பம் போல் பாடபிரிவுகளை தேர்வு செய்து பிளஸ்-2 முடித்து கல்லூரிக்கு சென்று விடலாம். ஏணி போன்ற அமைப்பு உள்ளது. இந்த ஏணி போன்ற அமைப்பை புதிய கல்வி கொள்கை சிதைத்து பல்வேறு வழிகளில் வடிகட்டும் முறை உள்ளது. மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து மாணவர்களை படிப்பில் இருந்து வெளியேற்றும் நிலை உள்ளது.

    பலவீனமான அரசுப்பள்ளிகளை வலுப்படுத்துவதற்கு பதிலாக மற்ற பள்ளிகளோடு இணைத்துவிட ஏற்பாடு உள்ளது. பிளஸ்-2 படித்து விட்டு கல்லூரிக்கு போக முடியும் என்ற நிலை மாற்றி அந்நிய மொழி தெரியாவிட்டால் உயர்கல்விக்கு செல்ல முடியாது என்ற நிலை புதிய கல்வி கொள்கையில் உள்ளது.

    இதனால் அனைத்து தரப்பினரும் உயர்கல்விக்கு செல்ல முடியாது. ஏற்கனவே உள்ள முன்னேறிய சமுதாயம்தான் செல்ல முடியும். தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×