search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூரி ஜெகந்நாதர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்.
    • சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி சென்று வழிபட்டார்.

    கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஒடிசா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிசா காங்கிரஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    மேலும் அவரது பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.

    இந்நிலையில், பூரி ஜெகன்நாதர் பற்றி பேசிய கருத்துக்கு வருத்தும் தெரிவித்து 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக பூரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா அறிவித்துள்ளார்.

    மோடி பூரி ஜெகன்நாதரின் பக்தர் என சொல்வதற்கு பதிலாக பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர் என தவறுதலாக கூறிவிட்டதாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

    • தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத யாத்திரையின்போது, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    பூரி:

    ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவர்களான ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பர்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். கோவிலில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்திரை ஆகியோர், குண்டிச்சா கோவில் நோக்கி செல்வார்கள். வழியில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். குண்டிச்சா கோவிலில் இருந்து 9-வது நாள் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். 9 நாட்கள் இந்தத் திருவிழா நடக்கும்.

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று தொடங்கியது. தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பாரம்பரிய வழக்கப்படி தேரின் முன்பகுதியில் தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் புரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து பகவானை வழிபட்டார். அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேரும் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகநாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத யாத்திரையின்போது, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால், லட்சக்கணக்கானோர் பூரி நகரில் திரண்டனர். ரத யாத்திரையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்று வரும் ரத யாத்திரை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் யாத்திரையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். 

    • மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
    • ரத யாத்திரையை முன்னிட்டு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த யாத்திரைக்காக ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகிய மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு நேற்று ஸ்ரீமந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டுள்ளன. உரிய சடங்குகளுக்குப் பிறகு யாத்திரை தொடங்குகிறது.

    விழாவையொட்டி, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    ரத யாத்திரையை முன்னிட்டு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர், ரத யாத்திரையின் புனிதமான நாளில் நமது நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடிசாவின் ரத யாத்திரை, பகவான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பகவான் ஜகந்நாதரின் வருடாந்திர பயணத்தை சித்தரிக்கிறது. இறைவனின் கருணை மற்றும் தெய்வீகத்தனமையைக் கொண்டாடும் வகையில் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுசேர்ந்ததைக் காட்டுகிறது.

    ரத யாத்திரையில் சேரும் பக்தர்கள் ஜகந்தாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதுகின்றனர். ரத யாத்திரையின் சிறப்பும் மகத்துவமும் உண்மையிலேயே இணையற்றது. ரத யாத்திரையுடன் தொடர்புடைய புனிதமான மற்றும் உன்னத லட்சியங்கள் நம் வாழ்க்கையை அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வளப்படுத்தட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×