என் மலர்
நீங்கள் தேடியது "சுருளி அருவி"
- சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
- விரைவில் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்தனர்.
உத்தமபாளையம்:
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை, தேவிகுளம் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் அரிசிக்கொம்பன் யானை சுற்றி வந்தது. 108 வீடுகள், 20 ரேசன் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் 11க்கும் மேற்பட்டோரை உயிர் பலி வாங்கியதால் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பனை வனத்துறையினர் பிடித்து குமுளி பகுதியில் கொண்டுவிட்டனர். ஆனால் அதன்பிறகு அரிசிக் கொம்பன் மாவடி, வட்ட தொட்டி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேகதானமெட்டு வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது. அதன்பின் குமுளிரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்தது. ஜி.பி.எஸ்.சிக்னல் மூலம் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டும், வேட்டுகளை வெடிக்கச்செய்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு தேக்கங்காடு வழியாக கம்பம் பகுதிக்குள் புகுந்தது.
நேற்று காலை கம்பம் நகருக்குள் வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரிய வரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் கம்பம் நகரில் பொதுமக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தொடர்ந்து யானை ஊருக்குள் ஆக்ரோசத்துடன் சென்றது. யானை தாக்கி பால்ராஜ் என்பவர் படுகாயமடைந்தார். உடனே வனத்துறையினர் அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் கம்பம் பைபாசில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சுருளிப்பட்டி சாலையில் சென்றது. அங்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தோட்டத்தில் முகாமிட்டு பின்னர் சுருளி அருவி பகுதிக்கு சென்றது. தொடர்ந்து ரேடியோ காலர் மூலம் கண்காணித்த போது அரிசி கொம்பன் யானை மேகமலை ஹைவேவிஸ் பகுதி நோக்கி சென்றது தெரியவந்தது.
அரிசி கொம்பன் யானையை மயக்க மருந்து செலுத்தி பிடித்திட கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதுமலையில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் முத்து என்ற மற்றொரு கும்கி யானையும் வர உள்ளது. யானையை பிடிக்க ஏதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கம்பம் நகரில் இன்று 2-வது நாளாக 144 தடை உத்தரவு தொடர்கிறது. மேலும் சுருளிப்பட்டி, சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. 6 கி.மீ தொலைவுக்கு முன்பே வனத்துறையினர் மற்றும் போலீசார் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

பொதுமக்கள் அரிசி கொம்பன் யானைக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். படம் பிடிப்பது மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கூறுகையில் வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.
யானையை காட்டுக்குள் அனுப்பும் வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார். அரிசி கொம்பன் யானை நடமாட்டம் குறித்து அறிந்ததும் அமைச்சர்கள் இ.பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும். விரைவில் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்தனர். இருந்தபோதும் சுருளி அருவி பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது நேரம் நின்றது.
- மூதாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் நின்றிருந்தார்.
அரிசி கொம்பன் யானை கம்பம் நகரில் புகுந்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இது குறித்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது நேரம் நின்றது. பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பி ஓடியது. அப்போது அங்கு மூதாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் நின்றிருந்தார். அரிசி கொம்பன் யானை அவரை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்ற காட்சி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
- அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
- கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேலும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை சீசனின்போது அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இங்கு புனிதநீராடி செல்கின்றனர். கடந்த மாதம் சுற்றுலா வந்த சென்னை மாணவி மரக்கிளை முறிந்து விழுந்ததில் பலியானார். இதனை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 27ம் தேதி கேரள வனப்பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் அரிசிகொம்பன் யானை புகுந்தது. கம்பம் நகரில் அட்டகாசம் செய்து பின்னர் சுருளிபட்டி பகுதியில் முகாமிட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் அங்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது யானை அச்சம் முழுவதும் விலகியுள்ளதால் சுருளி அருவி மற்றும் மேகமலைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.
- அருவியை யொட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.
- சுருளி அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி மிக சிறந்த சுற்றுலா தலமாக மட்டுமின்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் இருந்து வருகிறது.
கடந்த மாதம் வரை வறண்டு கிடந்த சுருளி அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் அருவியை யொட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.
இதனால் நேற்று பிற்பகல் முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், சுருளி அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.
அமாவாசை நாட்களில் மேலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தந்து இங்குள்ள அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வேலப்பர், நாராயணன் கோவிலில் வழிபாடு செய்து செல்கின்றனர். யானைகள் நடமாட்டம் என்பது அருவியையொட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் விரட்டுவதில் வனத்துறையினர் ஆர்வம் காட்டாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அடிக்கடி தடை விதிக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். வருகிற 17ந் தேதி ஆடி அமாவாசை தினம் என்பதால் அன்று அதிக அளவு பக்தர்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பாக யானைகள், காட்டெருமைகளை விரட்டி பக்தர்கள் நீராட அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- விசித்திரமான மாதத்தை மலை மாதம் என்றும் அழைப்பதுண்டு.
- சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும், சுருளி அருவி விளங்கி வருகிறது.
தை முதல் ஆனி மாதம் வரை உள்ள பொழுது தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவு பொழுதாகவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பகல் காலம் முடிவடைந்து இரவு தொடங்கும் நேரமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இந்த காலத்தை தட்சிணாயண புண்ணிய காலம் என்று அழைப்பார்கள். அதன்படி இந்த வருடம் ஆடி மாதம் முதல் நாளிலும், 31-ம் நாளிலும் 2 அமாவாசை வருகிறது. இது போன்ற விசித்திரமான மாதத்தை மலை மாதம் என்றும் அழைப்பதுண்டு.
வழக்கமாக எல்லா அமாவாசை நாட்களும் தர்ப்பணம் செய்வதற்கு உகந்ததாக இருந்தாலும், ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி ஆடி மாத பிறப்பின் முதல் நாளில் அமாவாசை வருவதால் இன்று பல்வேறு இடங்களில் புண்ணிய நதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும், சுருளி அருவி விளங்கி வருகிறது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்புனித நீராடி தர்ப்பணம் செய்ய பக்தர்கள் கூடுவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் எதிரொலியாக சுருளி அருவியில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முதல் இந்த தடையை வனத்துறையினர் நீக்கினர்.
இதனையடுத்து இன்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சுருளி அருவிக்கு வரத் தொடங்கினர். அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அதில் ஆனந்தமாக நீராடி அதன் பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் இங்குள்ள விஸ்வநாதர், பூதநாராயணன் கோவிலிலும் வழிபாடு செய்தனர். இது மட்டுமின்றி அன்னதானமும் வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக களையிழந்து காணப்பட்ட சுருளி அருவி இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகையால் கூட்டம் அலைமோதியது.
இங்குள்ள கடைகளில் வியாபாரம் அதிகரித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
- அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழக-கேரள எல்லையில் இந்த அருவி அமைந்திருப்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அருவியில் நீராடி செல்வது வழக்கம்.
இது தவிர ஆண்டு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள். தற்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு வனச்சரகர் பிச்சை மணி தெரிவிக்கையில், அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றார். நாளை ஆடி 18-ம் பெருக்கு என்பதால் அருவியில் ஏராளமானோர் நீராட வருகை தருவார்கள். இந்நிலையில் வனத்துறையினரின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நேற்று மீண்டும் யானைகள் கூட்டமாக அருவி பகுதியில் முகாமிட்டது.
- தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு புனித நீராடி செல்கின்றனர் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் அருவி பகுதிக்கு வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. தண்ணீர் தேடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக யானைகள் மங்கலதேவி கண்ணகி கோவில் மற்றும் சுருளி பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைகள் முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி பின்னர் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் யானைகள் கூட்டமாக அருவி பகுதியில் முகாமிட்டது. இன்றும் அதே பகுதியிலேயே யானைகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
யானைகள் இடம் பெயர்ந்த பின்னர் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மழை பெய்வதும், சில நேரங்களில் ஏமாற்றி செல்வதுமாக உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 378 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. 84 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கொடைக்கானல் வட்டக்கானல், வெள்ளக்கவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க, சுற்றி பார்க்க தடை விதிக்கப்படுவதாகவும், நீர்வரத்து சீரான பின்னர் அனுமதிக்கப்படும் என வனச்சரக அலுவலர் டேவி ட்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் காரணமாக கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருந்தபோதும் யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளதால் மறுஉத்தரவு வரும் வரை தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரியாறு 2.8, தேக்கடி 1.4, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, சண்முகநாதி அணை 2, போடி 0.6, வைகை அணை 0.6, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 1.2, வீரபாண்டி 1.2, ஆண்டிபட்டி 6.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது.
- காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானலில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர் வரத்து இருக்கும். தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் நீர்வரத்து சீராகாததால் 6-வது நாளாக தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது. யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னர் 18-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் வெண்ணியாறு பீட் பகுதியில் இருந்து மீண்டும் 3 யானைகள் சுருளி அருவியில் நடமாடியதால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு பலகை சோதனை சாவடியில் வைக்கப்பட்டுள்ளது.
காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 119.40 அடியாக உள்ளது. 406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.59 அடியாக உள்ளது. 194 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.40 அடியாக உள்ளது. 44 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.57 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாரில் மட்டும் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை நீடித்து வருகிறது. போடி, குரங்கணி, கொட்டக்குடி பகுதியில் பெய்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சோத்துப்பாறை, கும்பக்கரை, பெரியகுளத்தில் பெய்த தொடர் மழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் இரு கரையையும் ஒட்டியவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார வராக நதி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி பகுதியில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் தண்ணீர் அதிக அளவு வருகிறது. இதன் காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 2931 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2481 கன அடி நீர் திறக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்ப ட்டுள்ளனர்.
கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அங்கு உற்சாகமாக குளித்து சென்றனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. 820 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.10 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 290.78 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
பெரியாறு 1.4, தேக்கடி 0.4, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 4.8, சண்முகாநதி அணை 15, போடி 11.8, வைகை அணை 24.2, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 15, பெரியகுளம் 31, வீரபாண்டி 19.8, அரண்மனைபுதூர் 20.6, ஆண்டிபட்டி 33.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கூடலூர்:
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.
இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்தும் சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ள நிலையில் வரத்து 2483 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5059 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
கனமழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காரணமாக 2 நாட்கள் தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் புனித நீராட வந்தனர்.
ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாளை ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவி மற்றும் முல்லைப்பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். எனவே நாளை சுருளி அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா? என அவர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.
- கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும்
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் சபரிமலை சீசனின் போது ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி செல்கின்றனர்.
அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் இங்கு குவிவார்கள்.
மேகமலை, தூவானம் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐப்பசி மாத பிறப்பையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் சுருளி அருவிக்கு வந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.