search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்து கழகம்"

    • தமிழகத்தில் தொடா் விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு 350 பஸ்கள் இயக்கம்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தொடா் விடுமுறை நாட்களான நாளை (சனிக்கிழமை), ஞாயிற்றுக்கிழமை (15-ந் தேதி) மற்றும் மீலாது நபி (16-ந் தேதி) ஆகிய தினங்களை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக 955 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக 190 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு 350 பஸ்கள் என மொத்தம் 1,515 கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழா நடைபெற்றது.
    • பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.7.2024) தருமபுரி, பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மகளிர் விடியல் பயணத் திட்டப் பயன்பாட்டிற்காக 20 புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் என்று உயர் நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்ட முறையை அரசு பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது.
    • 12 மணி நேர வேலை விவகாரத்தில் எதிர்கொண்டது போன்ற கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பெறுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

    உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் என்று உயர் நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்ட முறையை அரசு பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது.

    சமூகநீதிக்கும், தொழிலாளர் உரிமைக்கும் எதிரான குத்தகை முறை நியமனத்தை அரசு கைவிடவில்லை என்றால், 12 மணி நேர வேலை விவகாரத்தில் எதிர்கொண்டது போன்ற கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

    எனவே, தமிழக அரசு அதன் தவறுகளைத் திருத்திக் கொண்டு, குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை கைவிட வேண்டும். போக்கு வரத்துத்துறை பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.
    • மாதந்தோறும் 200 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால் தங்கள் பகுதியின் நீர் ஆதாரம் பாதிப்பதாக குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம், சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர். இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவகர் முன்னிலையில் ஆஜராகினர். இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 25-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அளித்த பேட்டியின் விபரம் பின்வருமாறு:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்கக்கூடாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தற்போது 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை வரை வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆம்னி பஸ்கள் இயக்க முடியாது. இதனை மீறி இயக்கினால் அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும்.

    தமிழகத்திற்கு ஏற்கனவே 2000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 850 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மாதந்தோறும் 200 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 2200 புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு புதிதாக 3000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக மொத்தம் தமிழகத்திற்கு புதிதாக 7200 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநகர தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, வக்கில்கள், தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர். 

    • அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன.
    • பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன. ஓட்டுனர்கள் சிறப்பாக செயல்பட்டதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அந்த அரசுப் பேருந்துகளை நம்பி பயணம் செய்த மக்கள், வேறு ஊர்திகளில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய வேண்டிய அவல நிலைக்கு ஆளானார்கள். அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதும், அதை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கண்டிக்கத்தக்கது.

    பழுதடைந்த பேருந்துகளை சரி செய்யவும், அதற்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கவும் போக்குவரத்துக் கழகங்களில் நிதி இல்லை. அதனால் கிட்டத்தட்ட 25 சதவீத பேருந்துகள் இயக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இன்னும் சில பணிமனைகளில் மேலாளர்களே தங்களின் சொந்த செலவில் உதிரி பாகங்களை வாங்கி பழுது நீக்க வேண்டியிருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டு கின்றன. 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது.

    மதுரை:

    மதுரை கோ.புதூர் லூர்து நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 44). கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கொரோனா காலத்தின்போது அவர் பணியில் ஈடுபட்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இழப்பால், போதிய வருமானமின்றி அவரது மனைவி ரம்யா (38) மற்றும் மகள் ராகவி (14) ஆகியோர் செய்வதறியாது திகைத்தனர்.

    அந்த சமயத்தில், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி ரம்யா போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்தார். தன்னுடைய நிலையை விளக்கி கூறி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கருணை அடிப்படையில் பணி வழங்ககோரி விண்ணப்பம் செய்தார். இதனை தொடர்ந்து அவரது மனு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில், அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சரும் பரிந்துரைத்தார். இதனை அடுத்து நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப கண்டக்டர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    கடந்த 14-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார். அதன்பின்னர், மதுரை வந்த ரம்யா, மதுரை உலகனேரில் உள்ள தன் கணவர் பணிபுரிந்த அதேகிளையில் கண்டக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு மதுரை-ராமநாதபுரம் செல்லும் பஸ்சில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணியை அவர் திறம்பட செய்து, மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். அரசு பஸ்சில் பெண் கண்டக்டரா என ஆச்சரியப்படுத்தும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ரம்யா கூறியதாவது:-

    கணவர் இறந்த பிறகு குடும்பம் நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டேன். இதற்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் பணி செய்தேன். இருப்பினும் அந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை. அதனால், வாரிசு வேலை கிடைக்குமா? என முயற்சித்தேன். 11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். மேலும் டிரைவர் வேலையை தவிர எந்த வேலை கொடுத்தாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன்.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது. 10 நாட்கள் பயிற்சியை முடித்து தற்போது பணியை தொடங்கி இருக்கிறேன். பெண் கண்டக்டர் என்பதால் எல்லோரும் என்னை வித்தியாசமாகவும், பெருமையாகவும் பார்க்கிறார்கள்.

    பெண்களால் எல்லா துறையிலும் சாதிக்க முடியும் என நம்புகிறேன். எந்த சிரமங்கள் இருந்தாலும், என் பணியை சிறப்பாக செய்வேன் என்ற மன தைரியம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களும் ஆதரவு தருகிறார்கள் என்றார். 

    • அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    சென்னை:

    காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன.

    இதையடுத்து அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை போக்குவரத்துத்துறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மதியம் 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    • வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
    • தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என தகவல்.

    போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் பிப்ரவரி 7ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வரும் பிப்ரவரி 6ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவுள்ள நிலையில், தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

    தற்போதைய நிலையில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • ஜனவரி 19-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
    • அதன்படி இந்த பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிற்பகல் தொடங்கியது.

    சென்னை:

    போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர்.

    இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கில் பொதுமக்கள் நலன் கருதி நிபந்தனையுடன் ஜனவரி 19-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.


    இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்து இருந்தது.

    அதன்படி இந்த பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிற்பகல் தொடங்கியது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 9-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

    விசாரணையில் பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 11-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.


    வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கோர்ட்டில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளித்து அதன் அடிப்படையில் நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.

    எனவே யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, அவர்கள் ஏற்கனவே செய்த பணியை தொடர்ந்து செய்ய அனுமதிக்க வேண்டும். பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

    மேலும் 19-ந்தேதி நடைபெறும் சமரச பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள நியாயமான கோரிக்கைகளை தீர்த்து தர முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, "இது அரசின் முடிவு. கோர்ட்டு உத்தரவை மதித்து நடவடிக்கை கைவிடப்படும். தற்போது பொங்கல் பஸ்கள் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறோம்"என்றார்.

    • காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
    • விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கி இன்று 2-வது நாளாக நீடித்து வருகின்றது.

    இதனால் தடையின்றி 100 சதவீத பஸ்களை இயக்கும் நோக்கில் போக்குவரத்து துறை, தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கடலூரிலும் நேற்று தற்காலிக ஊழியர்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் தற்காலிக டிரைவர் வெங்கடேசன் என்பவர் கடலூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து அரசு பஸ்சை இயக்கிக் கொண்டு அண்ணா பாலம் வழியாக சென்றார்.

    அப்போது சீமாட்டி சிக்னல் சாலையில் இருந்து ஜவான்பவன் சாலைக்கு திரும்புவதற்காக நின்று கொண்டிருந்த காரின் பின்பகுதியில் வெங்கடேசன் ஓட்டிச்சென்ற பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அரசு பஸ்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.


    இதேபோல கடலூரிலிருந்து விருத்தாச்சலத்திற்கு இன்று காலை தற்காலிக பஸ் டிரைவர் ஒருவர் அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர்-சிதம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எந்தவித அச்சமும் இன்றி, அரசு உத்தரவை கடைபிடிக்காமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்போன் பேசிக்கொண்டு சென்றார். கடுமையான போக்குவரத்து பாதிப்பு உள்ள சாலையில் அரசு பஸ்சை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து பார்த்தனர். மேலும், நிரந்தர போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக டிரைவர்களை கொண்டு அரசு பஸ் இயங்கி வரும் நிலையில், பஸ் இயங்கினால் போதும் என்ற நிலைப்பாட்டில் அதிகாரிகள் இருப்பதால் இதுபோன்ற நிலை உருவாகி உள்ளது. உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
    • காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    விளாத்திகுளம்:

    தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து பேரிலோவன்பட்டி, சிந்தலக்கரை வழியாக கோவில்பட்டி செல்லும் 78ஏ அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் சுப்ரமணியன் இன்று ஓட்டி சென்றார். வழக்கமாக இந்த பேரிலோன்பட்டி பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்து வழக்கம்.

    அதன்படி இன்று 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் சிங்கிலிபட்டி கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் இறங்கி சேற்றில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஆனால் பஸ்சில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன் இருக்கை கம்பி மீது மோதியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று சென்றனர். பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    இந்த பஸ் சாலையோரத்தில் சிக்கி சேற்றில் சிக்கி ஜே.சி.பி. வாகனம் மூலம் மீட்கப்பட்டு விளாத்திகுளம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மீண்டும் மாற்று டிரைவர் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

    ×