என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்பில் மகேஷ்"

    • மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் சேர்ந்துள்ளனர்.
    • ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர்.

    தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2025- 2026-ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

    சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்.

    இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    • தர்மேந்திரா பிரதான் அவர்களே, தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.
    • தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.

    நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

    தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது.

    பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்களே, தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.

    தமிழ்நாடு தொடர்ந்து தேசிய கல்விக்கொள்கை 2020 ஐ எதிர்த்து வருகிறது, ஏனெனில் அது நமது வெற்றிகரமான கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

    எங்களது நிலைப்பாட்டில் எந்த திடீர் மாற்றமும் இல்லை. 15/3/2024 தேதியிட்ட கடிதம் தேசிய கல்விக்கொள்கையை அங்கீகரிப்பதாக கூறவில்லை.

    மாணவர்களுக்கு நன்மை பயக்கும் போது மட்டுமே தமிழ்நாடு மத்திய திட்டங்களில் ஈடுபடுகிறது, ஆனால் அது எந்தவொரு திட்டத்தையும் அல்லது கட்டமைப்பையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் இல்லை. .

    ஒரு குழு அமைக்கப்படும் என்றும், குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படுத்துவது குறித்து நாங்கள் முடிவு செய்வோம் என்றும் அந்தக் கடிதம் தெளிவாகக் கூறுகிறது.

    அது தேசிய கல்விக்கொள்கையை திணித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் கல்வி மாதிரி முன்மாதிரியானது மற்றும் நமது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனை தொடர்ந்து நிரூபித்துள்ளது

    இந்தியாவின் பலமான அதன் பன்முகத்தன்மை பலவீனமானது இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளவேண்டும் என்பதே நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது.

    தமிழ்நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம், நீங்கள் உண்மையில் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த சேவையைச் செய்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

    • லால்குடியில் அமைக்கப்பட்ட மெய்நிகர் நூலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
    • நூலக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    திருவெறும்பூர் அருகே உள்ள பாரத மிகுமின் தொழிற்சாலையில் மையத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் தொழில்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார்.

    அப்போது பேசிய அவர் தொழில் கல்வி என்பது ஒருவரை நாடி நாம் செல்ல தேவையில்லை என்றும், நமக்கு நாமே முதலாளி என்றும் கூறினார். ஆகையால் இந்த தொழில் கல்வியில் கவனம் செலுத்தி ஒவ்வொரு மாணவர்களும் முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக தமிழகத்தில் முதன் முதலாக லால்குடியில் அமைக்கப்பட்ட மெய்நிகர் நூலகம் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்த வைத்தார். அப்போது பேசிய அவர் தமிழகம் முழுவதும் 76 நூலகங்களுக்கு ஒரு நூலகத்திற்கு 2 மெய்நிகர் கருவிகள் விதம் 152 மெய்நிகர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இக்கருவிகளை பயன்படுத்துவது தொடர்பான விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் துறையூர், முசிறி ஆகிய தொகுதிகளில் உள்ள நூலகங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    • மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுடன் இணையவழியில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை.
    • அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து கண்காணிக்க வலியுறுத்தல்.

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுடன் இணையவழியில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், பள்ளிகள் திறப்பு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் பேசினார்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-

    தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகளில் பின்பற்றுகிறார்களா? தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் முழுமையாக குறையவில்லை. தமிழ்நாட்டில் இன்று சென்னை, ஈரோடு, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை உள்பட 14 மாவட்டங்களில் வெளியில் சதம் அடித்தது.

    வானிலை மையத்தின் அறிக்கையின்படி ஜூன் 7ம் தேதிக்கு பிறகே வெயிலின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றுள்ளதால் இதுகுறித்து விரைவில் ஆலோசனை நடத்தியப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும்  தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகள் திறக்கப்படுவது 2-வது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
    • 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

    ஆனால் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே மாதத்தில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மாறாக அதற்கு பிறகுதான் வெயில் அதிகமாக கொளுத்த தொடங்கியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. சென்னையில் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது.

    எனவே பள்ளிகள் திறப்பை ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளி வைப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். ஆனாலும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தது. எனவே பள்ளிகள் திறக்கப்படுவதை மேலும் தள்ளி வைக்குமாறு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகள் திறக்கப்படுவது 2-வது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் 2023-2024-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளையும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (12-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாண வர்களுக்கு பாடநூல்கள், நோட்டு - புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

    பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் ஒரு பாடத்துக்கு 4 மணி நேரம் வரை பற்றாக் குறை ஏற்படும் நிலை உள்ளது. எனவே பாடங் களை நடத்த வசதியாக சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க திட்ட மிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்றல் சுமை இல்லாதவாறும், ஆசிரியர்களின் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதவாறும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாக்குதல் தொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

    சென்னை:

    நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சமூக நீதிக்கான அரசு இது. பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன். நாளைய தமிழ்ச் சமூகத்தைப் படைக்கக் காத்திருக்கும் மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள்... என பதிவிட்டுள்ளார்.

    • பெங்களூருவில் உள்ள நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார்.
    • சிகிச்சையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இதனையடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து பெங்களூருவில் உள்ள நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

    திரவங்கள் மற்றும் வலி நிவாரணிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது.

    இதில் அவர் ஓரளவு குணமடைந்தார். இந்நிலையில் இன்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

    • கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • பள்ளி, கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த நூலகத்தை பார்வையிடுவதற்காக அழைத்து வரப்படுகின்றனர்.

    மதுரை மாநகரில் புது நத்தம் சாலையில் ரூ.218 கோடியில் 8 தளங்களுடன் அதிநவீன வசதிகள் கொண்ட நூலகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து இந்த நூலகம் செயல்பட தொடங்கியுள்ளது. தினமும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த நூலகத்தை பார்வையிடுவதற்காக அழைத்து வரப்படுகின்றனர்.

    இந்நிலையில், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து, "இதுவரை இந்த நூலகத்திற்கு 2 லட்சத்து 41,314 வாககர்கள், மக்கள், மாணவர்கள் வருகை தந்து பயனடைந்துள்ளதாக" பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.

    • அனைவரும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பேரணியாக செல்ல திரளாக திரண்டு உள்ளீர்கள்.
    • 40 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற நீங்கள் உழைக்க வேண்டும்.

    ராயபுரம்:

    சென்னை ராயபுரத்தில் 16 மாணவர் இயக்கங்கள் ஒன்றிணைந்த இந்திய மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பின் சார்பில் பிரமாண்ட மாணவர் பேரணி இன்று காலை நடைபெற்றது.

    அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். ராயபுரம் மேற்கு மாதா கோவில் சந்திப்பில் தொடங்கிய இந்த பேரணியை தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கையில் தேசிய கொடி ஏந்தி தொடங்கி வைத்தார்.

    தி.மு.க. மாணவர் அணி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் அமைப்பினர் அனைவரும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பேரணியாக செல்ல திரளாக திரண்டு உள்ளீர்கள்.

    இந்த பேரணியை தொடங்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பேரணியை தொடங்கி வைத்து உங்களோடு பேரணி முடியு ம் வரை நடந்து வர திட்டமிட்டு இருந்தேன்.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி தினமும் ஒவ்வொரு தொகுதியாக ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடந்து வருவதால் அதில் பங்கேற்க செல்ல வேண்டி உள்ளது. எனவே உங்களை வாழ்த்தி இந்த பேரணியை தொடங்கி வைக்கிறேன்.

    சேலத்தில் நடைபெற்ற தி.மு.க இளைஞரணி மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளது.

    அதனை தூக்கி சாப்பிடும் வகையில் இந்த பேரணியிலும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு உள்ளீர்கள்.

    அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மாநில அரசுகளின் கல்வி உரிமைகளை பறித்து வைத்துள்ளது.


    அதனை மீட்கும் வகையிலும், தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கும் வகையிலும், 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு, நீட்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எதிர்க்கும் வகையில் மாணவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்தியாவை காப்போம் என்ற கோஷமும் இந்த பேரணியில் முன் வைக்கப்பட்டு உள்ளது. பாரதிய ஜனதாவை வீழ்த்தி இந்தியாவை காக்க வேண்டும் என்றால் வருகிற தேர்தலில் இந்தியா கூட்ட ணி வெற்றி பெற வேண்டும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற நீங்கள் உழைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை கால் பதிக்க விடக்கூடாது. அதற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாநில மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி. சேகர், கே.பி. சங்கர், எபிநேசர், தாயகம் கவி, மாவட்ட செயலாளர் இளைய அருணா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன், புழல் நாராயணன் உள் ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    பேரணியில் தி.மு.க. மாணவர் அணி, இந்திய மாணவர் பெருமன்றம், சமூக நீதி மாணவர் இயக்கம், திராவிடர் மாணவர் கழகம், உள்ளிட்ட 16 மாணவர் இயக்கங்களை சேர்ந்த மாணவர் அமைப்பினர் கல்லூரி மாணவ-மாணவி கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.

    பேரணியில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க கொடியுடன் தேசிய கொடியையும் ஏந்தி சென்றனர். நீட்தேர்வு, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பேனர்களை கையில் ஏந்தியபடி சென்றனர். காப்போம், காப்போம், இந்தியாவை காப்போம், பாரதியஜனதா அரசை நீக்குவோம் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணி ராபின்சன் மைதானத்தில் நிறைவு பெற்றது.

    • முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
    • மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கேரள சகோதரர்களுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பேரிடர் தமிழர்களின் மனங்களை உலுக்கியிருக்கிறது. பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேரள மாநில மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தும் "தேசிய பேரிடர்" எனும் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கேரள சகோதரர்களுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

    • பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என மத்திய கல்வித்துறை தெரிவிக்கிறது.
    • மத்திய அரசு நிதி வழங்காததால் தமிழக அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக நிதி வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு பின்னர் இது புதிய கல்விக்கொள்கை என பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு சரியாக நிதி ஒதுக்குவது இல்லை. இதற்கு காரணம், புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு சொல்கிறது.

    புதிய கல்விக் கொள்கையின் மூலம் மத்திய அரசு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக படிக்க வலியுறுத்துகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில் 'கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறது' என திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என மத்திய கல்வித்துறை தெரிவிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் முன்னேறும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தருகிறது. கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு கோரிய நிதியை விட குறைவான நிதியையே மத்திய அரசு கொடுக்கிறது. மத்திய அரசு நிதி வழங்காதது தமிழக அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

    • அரசுப்பள்ளி பெயர் மாற்றத்திற்காக போராடிய கணேசனுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்தார்.
    • பெயர் மாற்றத்திற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் அமைச்சர் வழங்கினார்.

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி, 'அரிசன் காலனி' என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், 'மல்லசமுத்திரம் கிழக்கு' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயர் மாற்றம் செய்தார்

    'கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வரிகளை குறிப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப்பள்ளியின் பெயரை மாற்றம் செய்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' எனும் பெயரினை 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.

    இந்நிலையில் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம்.

    தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று 'அரிசன் காலனி' எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம். இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் திரு.கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.

    ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் திரு.G.அன்பழகன் அவர்களிடம் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×