என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகர பஸ்கள்"

    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர் அன்பு ஆபிரகாம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை 'ஸ்பீக்கர்' மூலம் அறிவிக்கும் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    புவிசார் (ஜி.பி.எஸ்) நவீன தானியங்கி பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு முதற்கட்டமாக 150 பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை பல்லவன் இல்லத்தில் இதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பிராட்வே-தாம்பரம்(21ஜி) பிராட்வே-சைதாப்பேட்டை (E18), பிராட்வே-குன்றத்தூர் (88 கே) ஆகிய பஸ்கள் புறப்பட்டு சென்றன.

    அப்போது உதயநிதி ஸ்டாலின், அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார். அவருடன் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர் அன்பு ஆபிரகாம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தனர்.

    பாரிமுனை வழியாக தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை சாலையில் விவேகானந்தர் இல்லம் வரை பயணம் செய்து அதன்பிறகு இறங்கி கொண்டனர்.

    சென்னையில் மின்சார ரெயில்களில் அறிவிப்பு செய்வது போல் மாநகர பஸ்களிலும் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் வசதிக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பஸ்கள் பச்சை நிறத்தில் மிளிர்ந்தன.
    • அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் வெண்மை நிற பஸ்களின் நிறமும் மாற்றம் செய்யப்படலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் 8 கோட்டங்களில் பஸ்களை இயக்கி வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது நீண்ட தூர பஸ்களை இயக்கி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பஸ்கள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன.

    மேலும், பெண்களுக்கான இலவச பஸ்களுக்கு அடையாளம் தெரியும் வகையில் முன்னும், பின்னும் பிங் நிறம் அடிக்கப்பட்டு இயங்கி வருகிறது. பொதுவாக தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும்போது பஸ்களின் நிறங்களும் மாற்றப்படுவது இயல்பாகவே நடைபெற்று வந்துள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பஸ்கள் பச்சை நிறத்தில் மிளிர்ந்தன. பின்னர் அவை நீலம் மற்றும் சிவப்பு நிறங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு தற்போது அரசு மாநகர பஸ்களின் நிறங்கள் மாற்றுவதற்கான திட்டம் தீட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    அந்தவகையில், தற்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு பிடித்தமான மஞ்சள் நிறத்தில் பஸ்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளதோ என்று நினைக்கத் தோன்றும் வகையில் அரசு பஸ்களுக்கு அடர்த்தியான மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்தில் மெரூன் வண்ணத்தில் பட்டை மற்றும் எழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது தமிழக அரசு போக்குவரத்து துறையானது ஆயிரம் புதிய பஸ்களை வாங்க நிதி ஒதுக்கி உள்ளதுடன், மிகவும் பழமையான பஸ்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பஸ்களுக்கு மஞ்சள் நிற பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 8 கோட்டங்களிலும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் வெண்மை நிற பஸ்களின் நிறமும் மாற்றம் செய்யப்படலாம் என அரசு போக்குவரத்துத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    • இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.
    • பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக அன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றும், அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.

    இதையடுத்து சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் என 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்தனர். இதையடுத்து பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக இன்று மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் பஸ்கள் விடப்பட்டுள்ளன.

    பாரிமுனையில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரம் வரை 60 பஸ்களும், பாரிமுனையில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரம் வரை 20 பஸ்களும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பஸ்களும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை 30 பஸ்களும், பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பஸ்களும், தி.நகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதையடுத்து அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர்.

    மேலும், பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மறு வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    • மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
    • பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமம்.

    சென்னை:

    சென்னையில் பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

    மாநகர பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்துவதால் பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தும் இடத்தை கடந்தோ, அல்லது சாலையின் நடுப்பகுதிகளில் நிறுத்தும் நிலை உள்ளது.

    இதனால் பஸ்சின் பின்னால் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை நகரின் எல்லா பகுதியிலும் ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    இதனால் மாநகர பஸ்கள் சரியான இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் 110 பஸ் நிறுத்தங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் ஆட்டோக்களை அகற்றினர். ஒவ்வொரு இடத்திலும் 6 முதல் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    சென்னை போக்குவரத்து போலீசுக்கு வந்த 2000 புகார்களில் 800 புகார்கள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பானவை. அவற்றில் கணிசமான எண்ணிக்கையில் சட்ட விரோத வாகன நிறுத்தம் சம்பந்தப்பட்டது.

    பரங்கிமலை-பூந்தமல்லி சாலை போன்ற இடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் சாலை குறுகலாக உள்ளது. இந்த பகுதிகளில் ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    ஷேர் ஆட்டோக்களில் ஆட்கள் வரும் வரை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பஸ் டிரைவர்களுக்கும், ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. பொதுமக்கள் புகார் கூறினாலும் சண்டைக்கு வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகர பஸ் டிரைவர் கூறும்போது, `பஸ் நிறுத்தங்களில் ஆட்டோவை நிறுத்துவதால் ஆட்டோ டிரைவர்களுக்கும் எங்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. பஸ் நிறுத்தங்களில் இருந்து 20 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்துகிறோம் என்றனர்.

    இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கூறுகையில், பிரச்சினைக் குரிய இடங்களை கண்ட றிந்து அங்கு நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

    இதில் கோடம்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், நுங்கம் பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களும் அடங்கும். விதிகளை மீறி னால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

    • ‘பஸ் சிக்னல் முன்னுரிமை’ என்ற திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது.
    • ஜனவரி மாத இறுதியில் இந்தத் திட்டத்துக்கான சோதனை முயற்சி தொடங்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள சிக்னல்களில், மாநகர பஸ்கள் அதிக நேரம் நிற்பதை தவிா்க்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி, திருவனந்தபுரத்தைச் சோ்ந்த சி.டி.ஏ.சி. மையம் சாா்பில் 'பஸ் சிக்னல் முன்னுரிமை' என்ற திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் படி, சிக்னல் அருகே மாநகர பஸ்கள் நிற்கும்போது பச்சை விளக்குகள் கூடுதல் நேரம் ஒளிரும் வகையில் சிக்னல்களில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலில் பஸ்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை குறையும். மேலும் எரிபொருள் செலவை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்காக ஜி.எஸ்.டி. சாலையில், ஆலந்தூா் முதல் சென்னை விமான நிலையம் வரையிலான வழித்தடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.


    இந்த வழித்தடத்தில் உள்ள சிக்னல்களிலும், மாநகர பஸ்களிலும் தொழில் நுட்பத்தை செயல்படுத்தும் வகையில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படவுள்ளன. சிவப்பு விளக்கு எரியும் சிக்னலை மாநகர பஸ் அடையும்போது, ஜி.பி.எஸ். சிக்னலை போக்குவரத்து சிக்னல்கள் அடையாளம் கண்டு கொள்ளும். பின்னா் பஸ்சுக்கு வழிவிடும் வகையில் சிக்னலில் தானாகவே பச்சை விளக்கு எரியும். இதன் மூலம் பஸ்கள் தேவையில்லாமல் நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்க தேவையிருக்காது.

    பொதுமக்களும் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் சூழல் ஏற்படும். இதைக் கண்காணிக்க மாநகர போக்குவரத்து கழகம், போக்குவரத்து காவல் துறை சாா்பில் ஆய்வுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக தமிழக அரசு, போக்குவரத்து துறை மற்றும் சென்னை ஐ.ஐ.டி. சாா்பில் ரூ. 82 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் இந்தத் திட்டத்துக்கான சோதனை முயற்சி தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 100 சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
    • போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்னரும் பஸ்களில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை, எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 100 சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    இப்போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துடன் மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயணக்கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்-லைன் டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை கண்டக்டரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் (ஏ.சி. பஸ் நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்னரும் பஸ்களில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் இந்த போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக கடற்கரையிலிருந்து இன்று இரவு 10.40, 11 மணிக்கு வேளச்சேரிக்கும், மறுமார்க்கமாக வேளச்சேரியிலிருந்து இரவு 10.20, 10.40 மணிக்கு கடற்கரைக்கும் சிறப்பு பறக்கும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள் மின்சார ரெயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம். பயணத்தின்போது கிரிக்கெட் போட்டிக்கான அசல் டிக்கெட்டை கையில் வைத்திருப்பது அவசியம். டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையின்போது அதனை காண்பிக்க வேண்டும்.

    • மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • ஊரடங்கின் போது நிறைய பேர் இரு சக்கர வாகனத்துக்கு மாறினர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாநகர பஸ், மின்சார ரெயில் சேவை முக்கிய அங்கம் வகிக்கிறது. மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை மாநகர பஸ்களில் தினமும் 32 லட்சம் பேர் பயணம் செய்தனர். கொரோனா தொற்றால் பயணிகள் எண்ணிக்கை பல லட்சம் குறைந்தது. ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பஸ்சில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் ஊரடங்கின் போது நிறைய பேர் இரு சக்கர வாகனத்துக்கு மாறினர்.

    இயல்பு நிலை திரும்பிய பிறகு பஸ்களில் படிப்படியாக கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும் பழைய நிலையை எட்டவில்லை. பள்ளி, கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள், முழுமையாக செயல்பட தொடங்கிய பிறகும் கூட 27 லட்சம் பேர் வரை மட்டுமே பயணம் செய்தனர்.

    கடந்த மாதம் வரை இந்த நிலையே நீடித்தது. இந்த நிலையில் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. தற்போது 31 லட்சம் பேர் பயணிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொரோனாவுக்கு முந்தைய நிலையை தற்போது தான் எட்டி வருகிறது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 10½ லட்சம் பெண்கள் மட்டும் இலவசமாக பயணம் செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த மாதத்தில் 8 முதல் 9 லட்சமாக இருந்தது.

    தற்போது பெண்கள் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர். 1,559 சாதாராண பஸ்களில் பெண்கள் தினமும் இலவசமாக பயணிக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பயணிகளிடம் டிரைவர்கள், கண்டக்டர்கள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×