search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீரன் சின்னமலை"

    • விடுதலை வீரர்களில் ஒருவர் தீரன் சின்னமலை.
    • வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்.

    தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள் போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். இதில் இந்தியாவை கட்டியாண்ட ஆங்கிலேயரை அதிர செய்த விடுதலை வீரர்களில் ஒருவர் தீரன் சின்னமலை.

    'தீர்த்தகிரி கவுண்டர்' என்றும், 'தீர்த்தகிரி சர்க்கரை' என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை , வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர்.

    பல்வேறு போர்க் கலைகளை கற்று தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளை தனது படைகளுக்கு கற்று தந்து, இந்திய விடுதலைப்போரில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார்.

    ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் 3 முறை வெற்றியும் கண்டார்.

    கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 -ந்தேதி, 1756-ம் ஆண்டில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.

    இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றை கற்று தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார்.

    பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளை தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.

    தீரன் சின்னமலை பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால் அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும்.

    ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற தீரன் சின்னமலை, அவ்வரிப்பணத்தை பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார்.

    இதை தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, "சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல் அவர் 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.

    தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார்.

    அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7-ந் தேதி, 1782ம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் ஆட்சி பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.

    ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையை திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், தீரன் சின்னமலையுடன் கூட்டணி அமைத்தார்.

    அவர்களின் கூட்டணி, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த 3 மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து வெற்றிவாகை சூடியது.

    3 மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளை கையாளத் திட்டம் தீட்டினர். இதனால், திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம் நான்காம் மைசூர் போரில் தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார்.

    என்னதான் நெப்போலியன் உதவிப் புரிந்தாலும், தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். துரதிருஷ்டவசமாக, கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் , நான்காம் மைசூர் போரில் மே மாதம் 4 ந் தேதி, 1799 ம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.

    திப்பு சுல்தான் வீரமரணத்திற்குப் பின்னர், ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் தீரன் சின்னமலை தங்கியிருந்தார். திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை பட்டாலிக்காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார்.

    பின்னர், கி.பி 1799ல் தனது படைகளை பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தனது படையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டைய நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார்.

    லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ம் பட்டாளத்தை அழிக்க எண்ணிய அவர், ஜூன் மாதம் 3 ந் தேதி, 1800 ம் ஆண்டில், கோவை க்கோட்டையைத் தகர்க்க திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

    1801ல் பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ்வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்த சின்னமலை வெற்றிக் கண்டார். அந்த வெற்றியை தொடர்ந்து, 1802ல் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கு மிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறி குண்டுகள் வீசி வெற்றிக்கண்டார்.

    ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனிய செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர்.

    கைது செய்து அவர்களை சங்ககிரிக் கோட்டைக்கு கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள் ஆடி 18-ம் பெருக்கு நாளான 1805ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன் தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.

    அவரது நினைவை போற்றும் வகையில் தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது.ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 'தீரன் சின்னமலை மாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஜூலை மாதம் 31 -ந்தேதி 2005 ம் ஆண்டில், இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 'தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.

    விடுதலை போரில் விடிவெள்ளியாக திகழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளன்று நினைவு நாள் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை தீரன் சின்னமலையின் 219-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புச்செயலாளர் பி. தங்கமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.
    • கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கும், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது உருவப் படத்திற்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புச்செயலாளர் பி. தங்கமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொன்னையன் தலைமையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்றளவும் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் சிறந்து விளங்குகிறது.
    • வேளாண் குடும்பத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து உயர்ந்துள்ளேன்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூரில் கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமண மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை சிலை திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

    தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்க செயலர் எம்.கே.சேகர் வரவேற்றார். தீரன் சின்னமலை முழு திருவுருவ வெண்கல சிலையை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் திறந்து வைத்து அவர் பேசியதாவது:-

    கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்டவர் தீரன் சின்னமலை. தீரன் சின்னமலையின் வரலாற்று குறிப்புகள் வெளிநாட்டினர் பலர் தங்களின் பயண குறிப்புகளில் குறிப்பிட்டு உள்ளனர். கொங்கு நாட்டின் குறுநில மன்னராக இருந்த தீரன் சின்னமலை ஆட்சியில் அமைதியான வாழ்வும், தொழில், மருத்துவம், வேளாண் பணிகளில் சிறந்து விளங்கியுள்ளது. இன்றளவும் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் சிறந்து விளங்குகிறது.

    வட மாநில மக்கள் கூட கொங்கு மண்டலத்தை நோக்கியே வருகை தருகின்றனர்.கொங்கு மண்ணில் ஆதிக்க மனப்பான்மை எப்போதும் இல்லை. உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமும் எப்போதும் இல்லை. வேளாண் குடும்பத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து உயர்ந்துள்ளேன்.

    எனவே, கிராமப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நன்றாக படித்து, வேலை வாய்ப்பு களை பெற்று சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிலை திறப்பு விழா மலரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.சின்ராஜ் வெளியிட முதல் பிரதியை கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் ஆர்.தேவ ராசன் பெற்றுக்கொண்டார்.

    விழா தொகுப்பினை தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவர் வே.சந்திர சேகரன், பொருளர் எஸ்.எம்.தங்கராசு ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த விழாவில் கர்நாடகா மாநில உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை ஆணையர் ஆர். இராமச்சந்திரன், தமிழ்நாடு சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலருமான செ.முத்துசாமி, ஈரோடு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், பெருந்துறை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எல்.சென்னியப்பன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் ஜி.அசோகன், தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, காலை 9.30 மணியவில் முளைப்பாலிகை ஊர்வலத்தை கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் உ.தனியரசு தொடக்கி வைத்தார்.

    இந்த ஊர்வலத்தில் வழக்கறிஞர் ஜீ.வி. பிரகாசம் சர்ச்சில், நாகராசன், திருப்பதி கவுண்டர், பொன்.வெங்கடாசலம்சின்னசாமி, தமிழரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தில் நையாண்டி மேள நிகழ்ச்சியும், கேரளா செண்டை மேள நிகழ்சி நடைபெற்றது.

    சிலை திறப்பு விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலா ளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    • தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி மற்றும் பலர் உள்ளனர்.

    அலங்காநல்லூர்

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதன்படி கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் சங்கத்தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொரு ளாளர் சிதம்பர நாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

    சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத் தலைவர் பாலசுப்பிர மணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பாட்டாளி மக்கள் சார்பில் மாவட்ட தலைவர் செல்லம்பட்டி முருகன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரோஜினி, முன்னாள் மாவட்ட தலைவர் அழகுராஜா, ஒன்றிய செயலாளர்கள் முருகன், ஈஸ்வரன் முன்னிலையில் மாவட்ட துணைத்தலைவர் ராமசந்திரன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி, ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஒன்றிய செயலாளர் சேது சீனிவாசன் தலைமையில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர்கள் ஜோதிமுருகன், முத்து கிருஷ்ணன், சேகர், அவைத்தலைவர் அய்யாவு, ஒன்றிய துணைத்தலைவர் முனியசாமி, வர்த்தகர் பிரிவு பெருமாள், மாவட்ட இலக்கிய அணி சேகர், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாலமேடு அய்யாவு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    • தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
    • தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவுநாள் இன்று. தீரன் சின்னமலை என்றாலே அவரது வீரமும், வெற்றிகளும் தான் நினைவுக்கு வரும்.

    1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று.

    தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஈடு இணையற்ற புரட்சியாளர் தீரன் சின்னமலை எனப்படும் தீர்த்தகிரி கவுண்டர் சூழ்ச்சியாலும், சதியாலும் வீழ்த்தப்பட்டதன் 219-ம் நினைவு நாள் இன்று. ஆங்கிலேயர்களைக் கண்டு பிற மன்னர்கள் அஞ்சிய நிலையில், ஆங்கிலேயர்களை அடுத்தடுத்து மூன்று போர்களில் வீழ்த்தி அஞ்ச வைத்த வரலாறு தீரனுக்கு உண்டு.

    வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த அவர், கொடைகளை வழங்குவதில் கோமானாக திகழ்ந்தார். தன்னிடமிருந்த பணத்தை மக்களுக்கு வாரி வழங்கியவர். கொங்கு நாட்டில் இருந்து மைசூர் மன்னரால் வசூலித்துச் செல்லப்பட்ட வரிப்பணத்தை பறித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியவர் வீரன் சின்னமலை. இளம் வயதிலேயே எண்ணற்ற சாதனைகளை படைத்து, வரலாற்றில் இடம்பெற்ற தீரன் சின்னமலையின் தியாகங்கள் இன்னும் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதும், அவரைப் போலவே அநீதிகளை எதிர்த்து போராட வேண்டியதும் நமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீரவணக்க நாள் மாவட்ட செயலாளர் ஆனந்த குமார் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
    • கட்சி நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி நான்கு ரோட்டில் தீரன் சின்னமலை 218 -ம் ஆண்டு வீரவணக்கம் நாள் மாவட்ட செயலாளர் ஆனந்த குமார் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் காமராஜ், நகர செயலாளர் லோகநாதன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் சம்பத், ஒன்றிய தலைவர் முனிராஜ், ஒன்றிய செயலாளர் இளவரசன், முத்துக்குமார், ஐடிவி செயலாளர் ஈஸ்வரன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் பாலக்கோடு ஒன்றியத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிளைகளில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    • சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை.
    • தீரன் சின்னமலை நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை. அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.
    • திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே தனக்கென ஒரு பாதை அமைத்து, இந்திய விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்தை தடுக்கும் பெருமலையாக விளங்கிய இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு நாளான வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலை மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் சண்முகம், தங்கராஜ் மற்றும் காமராஜ், மாரப்பன், கோவிந்தன், சுப்பிரமணியம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துவார்கள். இதில் திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அலங்காநல்லூர்

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த தினத்தையொட்டி அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர் ஜெயராமன் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    இேதபோன்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநில தலைமை கழக செயலாளர் பெஸ்ட் சந்திரசேகர், மாநில மாணவர் அணி செயலாளர் கேபிள் தங்கராஜ். மாநகர மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுர்த்தி, மாவட்ட பொருளாளர் நாராயணசாமி,மண்டல நிர்வாகிகள் செந்தில் குமார், ராஜமாணிக்கம், குணசேகரன், ஆட்டோ நாகராஜ், மோகன், செல்வக்குமார் மற்றும் மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • வார்டுக்கு 15 லட்சம் ஒதுக்கி, பணியை தேர்வு செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது.
    • 6 பேர் பணி விவரம் வழங்காமல் இருப்பதால் ஒட்டுமொத்த பணியை துவக்க முடியவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் சத்தியபாமா தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது :- மாவட்ட திட்டக்குழு அமைக்க மாவட்ட கவுன்சிலர்கள் 8 பேர் தேர்வு செய்யப்படுவர். தனியாக கூடி விவாதித்து, கவுன்சிலர்களில் இருந்து 8 பேர் உறுப்பினராக தேர்வு செய்யலாம். குறிப்பாக மாவட்ட ஊராட்சி கூட்டங்களில் அதிகம் பங்கேற்ற கவுன்சிலர்களை தேர்வு செய்ய உத்தேசித்துள்ளோம்.

    கடந்த கூட்டத்தில் வார்டுக்கு 15 லட்சம் ஒதுக்கி, பணியை தேர்வு செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதுவரை 6 பேர் பணி விவரம் வழங்காமல் இருப்பதால் ஒட்டுமொத்த பணியை துவக்க முடியவில்லை. விரைவாக பணியை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அடுத்த நிதி வரும் போதும் வார்டுக்கு 15 லட்சம் ரூபாய் அளவுக்கு ஒதுக்கப்படும்.

    கவுன்சிலர்கள் குறித்த அவகாசத்துக்குள் பணி பரிந்துரையை வழங்காவிட்டால் கவுன்சிலர் பணியை வழங்கவில்லை என்று பதிவு செய்துவிட்டு மற்ற வார்டுகளுக்கு ஒதுக்கிய நிதியில் பணியை துவங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டுமென, மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் முன்மொழிந்தார். நம் மாவட்டத்தை சேர்ந்த முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பெயரை புதிய பஸ் நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென மாவட்ட குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கும், மாநகராட்சிக்கும் பரிந்து ரைக்கப்படும் என மாவட்ட ஊராட்சி தலைவர் அறிவித்தார்.

    • கோவை செழியன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

     திருப்பூர் :

    கொங்கு தமிழர் எழுச்சி பேரவையினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை கதிர்வேல் தலைமை தாங்கினார்.மாநகர பொருளாளர் மூர்த்தி, மாநில துணைச் பொதுச்செயலாளர் கே.கே. ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் கொங்கு சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுகோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு திருப்பூர் மாநகரத்தில் சிலை அமைக்க வேண்டும், கோவை செழியன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், சுதந்திர போராட்ட தியாகியும் காந்தியவாதியுமான கோவை கதர் அய்யா முத்து கவுண்டருக்கு திருப்பூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், அதேபோல் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு சுதந்திரத்திற்காக போராடிய தியாகி வீரபாண்டி சுந்தரம்மாளின் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் குணா ,காங்கேயம் ஒன்றிய செயலாளர் சிவநாதன் ,நகர செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×