search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் தற்கொலை"

    • கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது.
    • போலீசார் டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் வாய்க்கால் பட்டறை வாரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியவன் (33). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

    சேலம் அம்மாபேட்டை கடலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேல் மகள் சவுமியா (31). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இனியவன் வீட்டுக்கடன் வாங்குவதற்காக, சவுமியா வேலை செய்த வங்கிக்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. பின்னர் இனியவன்- சவுமியா தம்பதியர் திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடிபெயர்ந்தனர்.

    இந்தநிலையில் இனியவன் மருத்துவ பயிற்சிக்காக 6 மாதங்களுக்கு வெளியூருக்கு செல்ல வேண்டியிருப்பதால் மனைவி சவுமியாவை சேலத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டில் சென்று இருக்குமாறு கூறினார்.

    இதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்து தனது தாயாரின் வீட்டுக்கு சென்று விடுவேன் என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சவுமியா சடலமாக மீட்கப்பட்டார்.

    இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் இருந்த டாக்டர் இனியவன் மருந்து இல்லாத வெற்று ஊசியை தனது உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அம்மாபேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். இந்த நிலையில் இன்று காலை டாக்டர் இனியவன் குளுக்கோஸ் பாட்டிலில் ஊசி மூலம் விஷத்தை கலந்து தனது உடலில் செலுத்தி கொண்டு வீட்டில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மாபேட்டை போலீசார் டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி தற்கொலை செய்த நிலையில் சில நாட்களில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சந்தேகம் அடைந்த தீபா தன்னுடைய தோழியான ஸ்ரீவித்யா என்பவருக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு நேரில் சென்று பார்க்கும்படி கூறினார்.
    • கார்த்தியின் அருகில் அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று இருந்தது.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையை சேர்ந்தவர் கார்த்தி (வயது 42). இவர் அதே பகுதியில் உள்ள அவருடைய தாய்மாமனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இருதய அறுவை சிகிச்சை நிபுணரான இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    இவருடைய தந்தை உலகநாதன். டாக்டரான இவர் புதுச்சேரியில் வசித்து வருகிறார். கார்த்தியின் தாய் கஸ்தூரி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்தியின் தங்கை தீபா திருமணம் முடிந்து அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கார்த்தி கொரோனா பேரிடர் காலத்தில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தார். அப்போது, அவருக்கு 3 முறை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உதவி பேராசிரியராக ராஜீவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையால் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்தார்.

    கார்த்தி தனது தங்கை தீபாவிடம் தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார். கடந்த 19-ந்தேதி தீபா, கார்த்திக்கை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து 2 நாட்களாக தன்னுடைய அண்ணன் கார்த்திக்கை அழைத்துள்ளார். ஆனால், அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை.

    இதனால், சந்தேகம் அடைந்த தீபா தனது தந்தை உலகநாதனிடம் தெரிவித்தார். அதன்பின்னர், உலகநாதன் கார்த்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த தீபா தன்னுடைய தோழியான ஸ்ரீவித்யா என்பவருக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு நேரில் சென்று பார்க்கும்படி கூறினார். இதையடுத்து ஸ்ரீவித்யா, கார்த்தியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை கண்டார். உள்ளே சென்றபோது அதிகமாக துர்நாற்றம் வீசியது.

    இதனால், சந்தேகம் அடைந்து வீட்டின் அறைக்குள் சென்று பார்த்த போது, கார்த்தி நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே கைகளில் ரத்தம் வெளியேறியவாறு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அப்போது, கார்த்தியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    இதுகுறித்து, தேனாம்பேட்டை போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் பிரகாஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், உயிரிழந்த கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    2 கைகளிலும் டிரிப்ஸ் ஏற்றும் ஊசியை கொண்டு உடலில் இருந்து ரத்தத்தை வெளியேற்றி நூதனமுறையில் கார்த்தி இறந்திருப்பதாக போலீசார் கூறினர்.

    மேலும், கார்த்தியின் அருகில் அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று இருந்தது.

    அதில், 'எனது வாழ்க்கை அழகாக முடிவுக்கு வந்தது. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என எழுதியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியின் தாய்மாமன் மற்றும் அவர் வேலை செய்து வந்த இடங்களில் விசாரித்து வருகின்றனர்.

    டாக்டர் ஒருவர் நூதன முறையில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • டாக்டரின் மனைவி, தங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தனது கணவருக்கு சாம்பார் கொஞ்சம் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
    • பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தனது மகனை டாக்டர் சதீஷ்குமார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

    சத்தியமங்கலம்:

    திருப்பூரை சேர்ந்தவர் டாக்டர் சதீஷ்குமார் (32). இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் டாக்டர் சதீஷ்குமார் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு இடமாறுதலாகி வந்தார். பின்னர் இவர் கோணமூலை என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் தங்கி தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் டாக்டர் சதீஷ்குமாரின் மனைவி நேற்று திருப்பூருக்கு சென்று விட்டார். இதையடுத்து டாக்டர் சதீஷ்குமார் மட்டும் வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே டாக்டரின் மனைவி, தங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தனது கணவருக்கு சாம்பார் கொஞ்சம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தனது மகனை டாக்டர் சதீஷ்குமார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

    அப்போது அங்கு சென்று பார்த்த போது கதவு திறந்து கிடந்தது. மேலும் டாக்டர் சதீஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதைபார்த்த சிறுவன் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான். பின்னர் அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து இதுகுறித்து திருப்பூருக்கு சென்ற அவரது மனைவிக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இது குறித்து சத்தியமங்கலம் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்தது.

    • காயத்ரி தங்கி இருந்த அறையில் இருந்து அவர் எழுதி வைத்து இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
    • காயத்ரி கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    திருவாரூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் வேலுசாமி. லாரி டிரைவர். இவருடைய மகள் காயத்ரி (வயது 22). இவர், கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து விட்டு தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார்.

    பயிற்சி டாக்டர்களுக்கான விடுதியில் தங்கி இருந்த காயத்ரி, கடந்த 2 நாட்களாக பணிக்கு செல்லவில்லை.

    இதனால் அவரது தோழி, காயத்ரிக்கு போன் செய்தார். ஆனால் காயத்ரி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காயத்ரியின் தோழி நேற்றுமுன்தினம் இரவு காயத்ரி தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டினார். நீண்ட நேரம் தட்டியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் கல்லூரி பாதுகாவலர் மற்றும் இதர பயிற்சி டாக்டர்கள் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனா். அப்போது அறைக்குள் மின்விசிறியில் நைலான் கயிற்றில் காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் காயத்ரி தங்கி இருந்த அறையில் இருந்து அவர் எழுதி வைத்து இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் காயத்ரி என்ன எழுதி இருந்தார் என தெரியவில்லை.

    காயத்ரி கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×