search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு நாய்கள்"

    • ஆக்ராவில் 24 வயது இளைஞர் ஒருவர் நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்டார்.
    • வாலிபரை புதைத்த 4 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 24 வயது இளைஞர் ஒருவர் நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்டார். அதன்பின் தெரு நாய்களால் தோண்டி எடுக்கப்பட்ட வினோதம் நடைபெற்றுள்ளது.

    ஆக்ராவைச் சேர்ந்த வாலிபர் ரூப் கிஷோர் (24). கடந்த மாதம் 18-ம் தேதி அன்று ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்த தன்னை அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ் என 4 பேர்தாக்கியதாக குற்றம் சாட்டினார்.

    கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துவிட்டார் எனக்கருதி அவர்களது பண்ணையில் கிஷோரை புதைத்தனர். கிஷோர் புதைக்கப்பட்ட இடத்தை அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்கள் கூட்டம் தோண்டத் தொடங்கியது.

    அப்போது கிஷோரின் சதையை நாய்கள் கடித்ததில் அவருக்கு திடீரென சுயநினைவு திரும்பியது. இதனால் அங்கிருந்து எழுந்த அவர், அப்பகுதியில் இருந்து வெளியேறினார். உள்ளூர்வாசிகள் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக கிஷோரின் தாய் கூறுகையில், 4 பேர் தனது மகனை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர் என குற்றம் சாட்டினார்.

    இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது என்றும், தப்பிச்சென்ற 4 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    நிலத்தகராறு காரணமாக புதைக்கப்பட்ட வாலிபர் ஒருவர், தெருநாய்களால் உயிர் பிழைத்த அதிசயம் அப்பகுதியில் ஆச்சரியத்தை

    ஏற்படுத்தியுள்ளது.

    • நாய்களுக்கான உணவை வினியோகிக்கும் எந்திரங்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டு உள்ளது.
    • விலங்கு நல ஆர்வலர் என்ஜின் கிர்கின், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014-ல் இஸ்தான்புல்லில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார்.

    பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால், நாய்களுக்கான உணவு வழங்கும் எந்திரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    பணம் வழங்கும் ஏ.டி.எம். எந்திரங்கள் போல, பல்வேறு பொருட்களை வினியோகிக்கும் வென்டிங் மெஷின் எந்திரங்கள் வெளிநாடுகளில் பிரபலம். அதுபோல நாய்களுக்கான உணவை வினியோகிக்கும் எந்திரங்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டு உள்ளது.


    இந்த எந்திரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களைப் போட்டால் மறுபுறம் நாய்களுக்கான உணவு சிறிதளவு மற்றும் தண்ணீர் வினியோகிக்கப்படும். இதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள கழிவுகள் குறைவதுடன், பசியுடன் உள்ள தெருநாய்களும் பசியாறும்.

    விலங்கு நல ஆர்வலர் என்ஜின் கிர்கின், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014-ல் இஸ்தான்புல்லில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வித்தியாசமான யோசனை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் இதுகுறித்த பதிவில், "மாற்றத்தை உருவாக்கும் இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புகிறேன்" என்று பதிவிட்டார். அவரது ஆதரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்து பதிவிட்டு உள்ளனர்.

    • இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பயத்துடனே நாயை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
    • பல இடங்களில் நாய் தொல்லை அதிகமாக உள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் தெரு நாய்கள் தொல்லை மீண்டும் அதிகரித்து வருகிறது. பல தெருக்களில் அங்கேயும், இங்கேயும், நாய்கள் சுற்றித் திரிவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பயத்துடனே நாயை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

    வாகனங்களில் வேகமாக செல்லும்போது நாய் துரத்துவதால் அச்சத்தில் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி செல்பவர்கள் இரவு நேரம் வேலை முடிந்து விடு திரும்புவோர், ரெயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்பவர்கள், முதியோர் என தெரு நாய்கள் பயமுறுத்தாதவர்கள் யாருமே இல்லை.

    தெருநாய் தொல்லைக்கு புகார் அளிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் 1913 என்ற உதவி எண் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.


    சென்னையில் சூளைமேடு, ராயப்பேட்டை, மடிப்பாக்கம், மேடவாக்கம், குரோம்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, வில்லிவாக்கம், என பல இடங்களில் நாய் தொல்லை அதிகமாக உள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    சட்ட சிக்கல் காரணமாக தெரு நாய்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. நாய்களை கொல்லக் கூடாது. கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

    அதே போல் பிறந்து 7 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள நாயை கருத்தடை செய்யக்கூடாது என்றும் சட்ட விதிகள் உள்ளது.

    நாயை கொன்றால் 5 ஆண்டு சிறை தண்டனை என்றும் சட்டம் சொல்கிறது. சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் நாய்களை பிடித்து கருத்தடை செய்து வைக்கிறோம். இந்த ஆண்டு 10 ஆயிரம் நாய்கள் வரை பிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாய்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. நாய்களை கட்டுப்படுத்த எல்லோரது ஒத்துழைப்பும் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
    • விசாரணையில் மனிஷாவை தாக்கிய சோனு நாய்களைத் தாக்கியதும் தெரிந்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் ரகுபீர் நகரில் தெரு விலங்குகளை பராமரிக்கும் இளம்பெண் மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

    மனிஷா கிட்டத்தட்ட 150 தெருநாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள கடையில் பணிபுரியும் ஒருவர் அவரை தாக்கினார். இச்சம்பவம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

    மனிஷா இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவத்தை விவரித்தார். அதில், பாதுகாப்பற்ற விலங்குகளுக்கு எதிரான கொடுமையை எடுத்துக் காட்டினார். நாய்களைப் பாதுகாக்க முயன்றபோது தன்னைத் தாக்கியதையும் வெளிப்படுத்தினார். நாங்கள் மோசமாக அடிக்கப் பட்டோம். யாரும் எங்களுக்கு உதவவில்லை, எங்களுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக, மனிஷாவின் தாயார் சோனு மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் சோனு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மனிஷாவை தாக்கியது சோனு என்பதும், நாய்களை தாக்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அனைத்து தெருக்களிலும் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன.
    • கொடுங்கையூர் குப்பை கிடங்கு தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் கூடாரமாக உள்ளது.

    ராயபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. நாய்களை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் அவற்றிற்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்தாலும் அதன் எண்ணிக்கை குறையவில்லை. அனைத்து தெருக்களிலும் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன.

    குறிப்பாக ராயபுரம், கொடுங்கையூர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்களை மிரட்டி வருகின்றன. இரவு 7 மணிக்கு மேல் சாலை மற்றும் தெருக்களில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி, விரட்டி கடிக்க பாய்கின்றன.

    கொடுங்கையூர் குப்பை கிடங்கு தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் கூடாரமாக உள்ளது. இதனால் குப்பை கிடங்கை சுற்றி உள்ள இடங்களில் நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளன. கொடுங்கையூர், எழில் நகர், ஆர்.ஆர் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், புளியந்தோப்பு, பெரம்பூர், ஜமாலியா நகர், ஹைதர்கார்டன், எஸ்.பி.ஐ. ஆபிசர் காலனி மற்றும் பட்டாளம் பகுதிகளில் நாய்கள் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு காணப்படுகிறது. இரவு நேரத்தில் செல்பவர்களை குறைந்தது 6 நாய்களுக்கு மேல் கூட்டமாக துரத்துகின்றன. இதனால் இரவு நேரத்தில் வெளியே செல்லவும், பணிமுடிந்து வீட்டிற்கு வரவும் பொது மக்கள் அச்சம் அடையும் நிலை உள்ளது.

    இதேபோல் சூளை, டி.கே.முதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை 10 முதல் 20 நாய்கள் வரை படையெடுத்து வந்து மிரட்டுகின்றன.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ராயபுரம் மண்டலத்தில் 90 சதவீதம் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிந்தது. வழக்கமாக 4 ஆண்டுக்கு ஒரு முறை தெருநாய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த கணக்கெடுப்பு கடந்த 2022-ம் ஆண்டுக்கு பின்னர் நடத்தப்படவில்லை. ஆனால் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு 2100-ஆக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை 2023-ம் அண்டு 3900 ஆக உயர்ந்து உள்ளது.


    இதைத்தொடர்ந்து ராயபுரம் மண்டலத்தில் உள்ள தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து தண்டையார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜ் கூறும்போது, மாநகராட்சியில் தற்போது 80 நாய் பிடிப்பவர்களும், 15 கால்நடை டாக்டர்களும் உள்ளனர். மண்டலம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு செய்து உறுதியான தெருநாய்களின் எண்ணிக்கை பற்றி தெரியாமல் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.

    எனவே தெருநாய்கள் பற்றி விரைவில கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ராயபுரத்தில் மட்டும் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடந்து உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த கணக்கெடுப்பு மற்ற மண்டலங்களில் நடைபெறவில்லை. கொடுங்கையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அங்குள்ள குப்பைக் கிடங்கு தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் இடமாக மாறி உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் தெருக்களில் நடமாடவே அச்சமாக உள்ளது. பெரும்பாலான நாய்கள் தெரு ஓரங்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளில் உணவு தேடுகின்றன. நாய்களை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றார்.

    இது தொடர்பாக மாநகராட்சி வடக்கு மண்டல அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 20-ந் தேதி வரை தெருநாய்கள் தொடர்பாக 5 மண்டலங்களில் மொத்தம் 784 புகார்கள் வந்துள்ளன. 924 நாய்கள் பிடிக்கப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்பட்டு உள்ளன. புயல் மற்றும் அதைத் தொடர்ந்து நிவாரணப் பணிகள் காரணமாக தெரு நாய்கள் பற்றிய கணக்கெடுப்பு தாமதமானது. விரைவில் தெருநாய்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெறும். பொதுமக்கள் தங்கள் புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். புகார்கள் மீது இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றார்.

    • வேலூர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இன்று காலை இவரது 2 வயது மகன் ஹர்ஷன் வீட்டின் முன்பு விளை யாடிக் கொண்டிருந்தான். ரோஜா வீட்டில் உள்ள அறையில் அமர்ந்து அவரது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டி ருந்தார்.

    தெருவில் ஓடி வந்த 4 தெரு நாய்கள் சிறுவன் ஹர்ஷன் மீது பாய்ந்தன. சிறுவனை கடித்து குதறின. மேலும் 4 நாய்களும் சேர்ந்து சிறுவனை இழுத்துச் சென்றன.

    இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுது துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நாய்களிடமிருந்து சிறுவனை மீட்டனர்.

    உடனடியாக சிறுவனை மீட்டு பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டான். தற்போது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டில் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த பகுதியில் கட்டுக்கடங்காமல் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி தற்போது அனைத்து வசதி களுடன் கூடிய மருத்துவ மனையாக உள்ளது.
    • மருத்துவத்திற்கு தனித்தனி டாக்டர்கள் இங்கு உள்ளனர்.இங்கே தினசரி 800-க்கு மேற்பட்ட நோயாளிகள், புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவ மனையாக உள்ளது. இங்கு எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை மற்றும் பொதுநல வைத்தியம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது.

    மருத்துவத்திற்கு தனித்தனி டாக்டர்கள் இங்கு உள்ளனர்.இங்கே தினசரி 800-க்கு மேற்பட்ட நோயாளிகள், புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக திகழ்கிறது. குறிப்பாக மகப்பேறு பிரிவிற்கு கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் வந்து பரிசோதனை செய்தும், பிரசவம் பார்த்தும் செல்கின்றனர்.

    தற்போது கடந்த சில நாட்களாக மருத்துவ மனையில் தெரு நாய்கள் மற்றும் எலிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை சுற்றி உள்ள பகுதிகளில் விற்கப்படும் பழங்கள் மற்றும் ஆஸ்பத்திரி வெளியே சாப்பிட்டு விட்டு சாக்கடையில் போடும் உணவு கழிவுகளுக்கு சாப்பிட எலிகள் வருகின்றனர். உணவு பற்றாக்குறை ஏற்படும்போது எலிகள் அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்து அங்கு வைத்திருக்கும் நோயாளிகளின் உணவுகளை பதம் பார்க்கின்றது.மேலும் அரசு மருத்துவமனை வளாகம் மரங்களால் சூழப்பட்டு இருப்பதால் தெருநாய்கள் அங்கு ஓய்வெடுக்கும் இடமாக மாறியுள்ளது நோயாளிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன.
    • கடந்த ஆண்டு மட்டும் 15,695 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது

    சென்னை:

    சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து சென்று கருத்தடை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் 5 பணியாளர்கள், ஒரு டிரைவர் உள்ளனர். நாய்களை பிடிக்க 64 வலைகள் உள்ளன. சென்னையில் கடந்த 2 வருடங்களில் மொத்தம் 26,671 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 15,695 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 10,976 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • இனப்பெருக்கம் செய்யாத அளவிற்கு கருத்தடை செய்ய வேண்டும்

    வந்தவாசி:

    வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை,பஜார் சாலை,அச்சரப்பாக்கம் சாலை, சன்னதி தெரு, தெற்கு போலீஸ் நிலையம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக 30-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகள் நடந்து செல்லும் போது அவர்களை துரத்துகின்றது. மேலும் இரவு நேரத்தில் பணிகள் முடிந்து வீட்டுக்கு திரும்பும் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் நாய்களை அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் நாய்கள் இனப்பெருக்கம் செய்யாத அளவிற்கு கருத்தடை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பரமக்குடியில் உயிருக்கு போராடிய பெண் மான் மீட்கப்பட்டது.
    • தெரு நாய்கள் கடித்ததால் அந்த மான் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.

    பரமக்குடி

    பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட 1-வது வார்டு மஞ்சள்பட்டிணம் பகுதியில் அதிகாலை வீடுகளின் அருகே உயிருக்கு போராடி கொண்டிருக்கும் பெண் மானை பார்த்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மானை மீட்டனர். உடனடியாக பெண்மானை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு முதலுதவிக்காக பரமக்குடியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து வருகின்றனர்.

    தெரு நாய்கள் கடித்ததால் அந்த மான் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.

    • தெருக்களில் சுற்றித் திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கை விடுத்தது.
    • உணவு பைகளை கீழே போட்டு போட்டுவிட்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.

    கடலூர்:

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவியை நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார்.இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தெருக்களில் சுற்றித் திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கை விடுத்தது.

    ஆனால் இதனை கால்நடை வளர்ப்போர்கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. அதிகாலை நேரத்திலேயே 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் உலா வரத் தொடங்குகிறது .நடைப்பயிற்சி செல்வோர் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பணிகளுக்கு செல்வோர் சாலையில் பயணிக்கும் போது இந்த நாய்கள் அவர்களை சுற்றி குறைப்பதோடு கடிக்கவும் முற்படுகிறது .

    இதனால் அவர்கள் அச்சத்துடன் ஓட வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க நடைப்பயிற்சி மேற்கொள்வோர் கைகளில் தடியுடன் நடக்க வேண்டி உள்ளது. பள்ளி மாணவ -மாணவிகள் தங்களது உணவு பைகளை கீழே போட்டு போட்டுவிட்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் தனியாக தெருக்களில் நடந்து வருவோரை இந்த நாய்களின் கூட்டம் குறைத்துக் கொண்டே துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது இதனால் பலர் அச்சமடைந்து குரல் எழுப்பிய படி அங்கும் எங்கும் ஓடி தங்களை நாய்க்கடிகளில் இருந்து காத்துக் கொள்கின்றனர். இது போன்ற இடையூர்களை போக்க நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஈரடுக்கு பஸ் நிலையம், ேமம்பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், பாதாள சாக்கடை பணிகள் என நாளுக்கு நாள் பல பணிகள் நடைபெற்று வருகிறது.
    • வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளும் அடிக்கடி அரங்கேறுகின்றன. மேலும் 4 சக்கர வாகனங்களையும் சில நாய்கள் ஓட ஓட துரத்துகின்றன.

    சேலம்:

    சேலம் மாநகரில் 60 வார்டுகள் உள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சேலம் மாநகராட்சி நாளுக்குநாள் விரிவடைந்து வருகிறது. ஈரடுக்கு பஸ் நிலையம், ேமம்பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், பாதாள சாக்கடை பணிகள் என நாளுக்கு நாள் பல பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஆனால் சேலம் மாநகரில் சமீப காலமாக நாய்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தனியாக சாலைகள் மற்றும் தெருக்களில் செல்ல முடியாமல் பயத்தில் தவித்து வருகிறார்கள். குறிப்பாக பெரியபுதூர், நகரமலை அடிவாரம், ரெட்டியூர், பள்ளப்பட்டி அம்மாப்பேட்டை, களரம்பட்டி, கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி, பெரமனூர் உள்பட பல பகுதிகளில் சாலையிலேயே நாய்கள் படுத்து கிடக்கின்றன.

    இந்த நாய்கள் சாலைகளிலே படுத்து கிடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடனே அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ- மாணவிகள் சிறுமிகள் இந்த நாய்களால் பெரும் அச்சத்தில் உள்ளனர். சில நாய்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்களையும் விரட்டி விரட்டி விரட்டி கடிக்கிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் ஓட ஓட விரட்டியும் சில நாய்கள் கடிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளும் அடிக்கடி அரங்கேறுகின்றன. மேலும் 4 சக்கர வாகனங்களையும் சில நாய்கள் ஓட ஓட துரத்துகின்றன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் வாய்க்கால்பட்டடறை பகுதியில் 22 பேரை ஒரு நாய் கடித்து குதறியது. அதில் காயம் அடைந்த அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    சேலம் பள்ளப்படடி போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரர் ஒருவர் நாய் வளர்த்து வருகிறார். கடந்த வாரம் போலீஸ் நிலையம் முன்பு சென்ற 7 பேரை அந்த நாய் கடித்து குதறியது. இதேபோல சேலம் மாநகரில் தினம், தினம் பல இடங்களில் பொது மக்களை நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சேலம் மாநகராட்சி சார்பில் கருத்தடை ஊசி போடவும், நாய்களை பிடிக்கவும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதற்கு போதுமான நடவடிக்கைள் சமீப காலமாக மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் நாளுக்கு நாள் நாய்கள் அதிக அளவில் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிகின்றன.

    இதேபோல சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு மற்றும் சுரங்கப்பாதைகளில் அதிக அளவில் நாய் தொல்லை உள்ளது.

    குறிப்பாக அங்குள்ள சுரங்கப்பாதைகளில் நாய்கள் படுத்து தூங்குவதால் பயணிகள் அச்சத்துடன் கடக்கும் நிலை உள்ளது. ஒரு கட்டத்தில் சுரங்கப்பாதைக்குள் நாய்கள் சண்டையிட்டு கொள்வதால் பயணிகள் தங்கள் உடமைகளை விட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடிக்கும் சூழலும் நிலவுகிறது. இதனால் அந்த நாய்களை பிடித்து அகற்ற வேண்டும் என்பது ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    மாநகராட்சியில் நாய்கள் தொல்லை குறித்து புகார் கொடுத்தாலும் நாய்களை பிடிக்க யாரும் வருவதில்லை.இதனால் போன் செய்வதற்கும் பலர் விரும்புவதில்லை.

    எனவே நாளுக்கு நாள் பெருகி மக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பதுடன் அதனை பிடித்து அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×