search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சுகாதார மையம்"

    • நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
    • 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

    ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர் குரங்கம்மை பாதித்து உயிரிழந்தனர். தொடர்ந்து பரவி வருவது மற்றும் உயிரிழப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    இந்நிலையில் பெரியவர்கள் குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இது ஆப்பிரிக்கா மற்றும் இதர நாடுகளில் குரங்கம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கையில் முக்கிய படி என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

    பவேரியன் நார்டிக் ஏ/எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை கவி (GAVI) மற்றும் யுனிசெப் (UNICEF) போன்ற நன்கொடையாளர்கள் மட்டுமே வாங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு உற்பத்தியாளர் மட்டுமே இருப்பதால் தடுப்பூசி இருப்பு குறைவாகவே இருக்கிறது.

    நன்கொடையாளர்கள் தடுப்பூசியை கொள்முதல் செய்து உடனடியாக தேவைப்படும் பகுதியில் விரைவாக விநியோகம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் அதானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கி இருப்பதை அடுத்து, இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம். 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

    எனினும், அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என கணிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆணுறை பயன்படுத்துவது குறைந்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.

    உலக சுகாதார மையம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், ஐரோப்பாவில் கடந்த பத்து ஆண்டு காலக்கட்டத்தில் உடலுறவில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் ஆணுறை பயன்படுத்துவது பெருமளவுக்கு குறைந்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.

    அரசாங்கங்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இந்த நிலை பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுக் குறித்து ஐரோப்பியாவை சுற்றியுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    இந்தக் கருத்துக் கணிப்பில் உடலுறவு நாட்டம் கொண்ட ஆண்களிடையே 2014 ஆம் ஆண்டு 70 சதவீதத்தில் இருந்த ஆணுறை பயன்பாடு 2022 ஆம் ஆண்டு 61 சதவீதமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதேக் காலக்கட்டத்தில் பெண்கள் உடலுறவின் போது பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது 63 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக குறைந்துள்ளது.

    மூன்றில் ஒரு பங்கு இளம் பருவத்தினர் கடைசியாக உடலுறவு கொண்ட போது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் எதையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.

    இந்த ஆய்வைத் தொடர்ந்து அரசுகள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் பாலியல் தொடர்பான கல்வியில் முதலீடுகளை அதிகப்படுத்தவும், பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் 245 பேருக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் அதாவது மூளையழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 82 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது நாடு முழுக்க 43 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் 64 பேருக்கு சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    "சண்டிபுரா வைரஸ் தொற்று இந்தியாவில் அழிந்து போகும் தருவாயில் உள்ளது. எனினும், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது," என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    குஜராத்தில் ஒவ்வொரு நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சண்டிபுரா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கொசுக்கள், பூச்சி வகைகளால் சண்டிபுரா வைரஸ் பரவுகிறது. இந்த நோய் பாதிப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை முறை மற்றும் தடுப்பு மருந்து என எதுவும் இல்லை.

    பாதிப்பு ஏற்பட்டதும் அதனை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அதற்கு ஏற்ப நோய் பாதிப்பை குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, 15 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்களை கண்காணிப்பது அவசியம் ஆகும்.

    • இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம்.
    • இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவது.

    உலகம் முழுக்க இன்று சர்வதேச இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாதுகாப்பான இரத்தம் சேமிக்கப்படுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், கட்டணமின்றி தங்களின் குருதியை தானம் செய்து பலரின் உயிரை காக்கும் பரிசை வழங்குவோருக்கு பாராட்டு தெரிவிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

    மனிதனின் உயிர்நாடியாக காணப்படுகின்ற இரத்தத்தின் முக்கியத்துவத்தை அறிவதும், இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவதும் இந்நாளின் நோக்கமாகும்.

    வலிமையான சுகாதார கட்டமைப்பில் போதுமான அளவுக்கு பாதுகாப்பான இரத்தம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்படும் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை சேமித்து வைப்பதே இரத்த சேவை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரத்த தான நாளுக்கான கருப்பொருள் மாறிக் கொண்டே இருக்கும்.

    கருப்பொருள் எதுவாயினும், மக்களிடம் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நாளின் பிரதான நோக்கங்களில் ஒன்று ஆகும். இந்த ஆண்டு இரத்த தானம் நாளின் 20 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

    சர்வதேச இரத்த தான நாளில் கடந்த ஆண்டுகளில் உலகளவில் இரத்தம் தானம் செய்து வருவோருக்கு நன்றி தெரிவிக்கவும், மருத்துவர்கள் மற்றும் தானம் வழங்குவோரை பெருமைப்படுத்தவும் உலக சுகாதார மையம் திட்டமிட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி இரத்தம் தானம் செய்வதில் உள்ள தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டு, வரும் காலங்களில் இரத்த தானம் செய்வதை மேலும் துரிதப்படுத்தவும் உலக சுகாதார மையம் உறுதியேற்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 69 லட்சம் பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
    • உருமாற்றம் அடைந்து கொண்டு வருவதால் இதுவரை தொற்று முடிவுக்கு வரவில்லை.

    கொரோனா... இந்த வார்த்தையை கேட்டாலே பயப்படாத யாவரும் இல்லை எனலாம்... 21-ம் நூற்றாண்டில் உலகத்தையே புரட்டிப்போட்ட மிகப்பெரிய கொடூர தொற்றாகும்.

    முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு உலகத்தையே அஞ்ச வைத்தது. ஒட்டுமொத்த உலக மக்களையும் வீட்டிற்குள்ளேயே முடக்கியது. உலக பொருளாதாரம் தலைகீழாக சென்றது.

    இதுவரை உலக அளவில் 68,12,24,038 மக்களை கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது. 68,81,401 பேர் உயிரை குடித்துவிட்டது.

    தற்போது உலகம் சகஜ நிலைக்கு வந்துவிட்டாலும், கொரோனா முடிவுக்கு வரவில்லை. உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தியே வருகிறது.

    இந்த நிலையில் மீண்டும் உலகம் ஒரு பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டியது தேவை என உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த பெருந்தோற்றுக்கு தயாராக வேண்டியது தேவை. இது கொரோனா பெருந்தொற்றைவிட கொடியதாக இருக்கும்.

    கொரோனா உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவு என்பது உலகளாவிய கொரோனா சுகாதார அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது என்பதில்லை.

    நோய் மற்றும் மரணத்தின் அளவை அதிக அளவில் ஏற்படுத்தும் மற்றொரு உருமாற்றம் அச்சுறுத்தல் உள்ளது. அடுத்த தொற்று நம் கதவை தட்டும்போது ஒன்றாக இணைந்து அதை எதிர்கொள்வதற்கு நாம் தயராக இருக்க வேண்டும்.

    76-வது உலக சுகாதார மாநாட்டில் டெட்ரோஸ் அதனோம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    • இந்தோனேசியாவில் திரவ மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • இதன் எதிரொலியாக திரவ மருந்துகளுக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளது.

    ஜகார்த்தா:

    ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியானது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

    இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், இந்தோனேசிய நாட்டில் அனைத்து விதமான திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி இந்தோனேசியா கூறுகையில், "திரவ வடிவிலான சில மருந்துகளில் கடுமையான சிறுநீரக காயத்தை ஏற்படுத்துகிற (நச்சு) பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டில் 99 இளம் குழந்தைகள் இறந்துள்ளன" என தெரிவித்தது.

    மேலும், இந்தோனேசிய சுகாதார மந்திரி புதி குணாதி சாதிகின் கூறுகையில், " 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சிறுநீரக காயம் ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு தரப்பட்ட மருந்துகளில (நச்சுத்தன்மை கொண்ட) டைதிலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது" என தெரிவித்தார்.

    இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையா என்பது குறித்து தகவல் இல்லை. 

    • குழந்தைகள் இறந்ததற்கு இந்திய நிறுவன தயாரிப்பான இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
    • 4 மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் அந்த குழந்தைகள் உட்கொண்ட இருமல் மருந்து தான் இந்த உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக இதன் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறும் போது, "குழந்தைகள் இறப்புக்கு இந்தியாவில் தயாரான நச்சுத்தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என அறியப்படுகிறது. இந்த குறிப்பிட்ட 4 மருந்துகளால் அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்" என கருதப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்.

    அரியானாவை சேர்ந்த மெய்டன் என்ற மருந்து நிறுவனம் சளி மற்றும் இருமலுக்காக புரோ மெத்சைன், முகா பெல்ஸ்மாலின் மகாப் மேக்தின் என்ற 4 மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது.

    இந்த மருந்தில் டயத்லைன் கிளை கோசில் மற்றும் எதிலன் கிளைகோசில் மூலப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருப்பது குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது காம்பியாவை போல வேறு சில நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    குழந்தைகள் இறந்ததற்கு இந்திய நிறுவன தயாரிப்பான இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளதை தொடர்ந்து மத்திய அரசு இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதற்கான விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த மருந்துகளை தயாரித்த மெய்டன் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் உண்மைகள் மற்றும் விவரங்களை கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. முதல்கட்ட விசாரணையில் அந்த மருந்து நிறுவனம் குறிப்பிட்ட மருந்து தயாரிப்புகளுக்கு உரிமம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த நிறுவனம் இதுவரை காம்பியாவுக்கு மட்டுமே தயாரித்து ஏற்றுமதி செய்துள்ள விவரமும் தெரியவந்துள்ளது. விசாரணை முடிவில் தான் இதன் முழு விவரமும் தெரியவரும்.

    இந்தநிலையில் 4 மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ×