search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரத்து குறைவு"

    • கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் கரைதிரும்பின.
    • காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    ராயபுரம்:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று காலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் கரைதிரும்பின. இதனால் மீன்கள்வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக குவிந்து விற்பனை செய்யப்பட்டது. இறால், கடமா, நண்டுகள் வரத்து சற்று குறைவாகவே இருந்தது.

    மேலும் கொடுவா மீன்கள் வரத்து இல்லை. தற்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமானோர் அம்மனுக்கு கூழ் ஊற்றுவார்கள். இதனால் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மீன்வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடந்த வாரத்தை விட சங்கரா மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால் ரூ.200-க்கு விற்கப்பட்டது. இதேபோல் வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலையும் குறைந்து விற்கப்பட்டதால் மீன் பிரியர்கள் போட்டி போட்டு மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கி சென்றனர்.

    காசிமேட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.900

    வவ்வால் மீன் - ரூ.500

    சைனீஸ் வவ்வால் - ரூ.1300

    சங்கரா - ரூ.200

    ஷீலா - ரூ.200

    இறால் - ரூ.400

    கடமா - ரூ.400

    நண்டு - ரூ.300

    சிறிய மீன்கள் - ரூ.50 முதல் 100 வரை.

    • கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
    • ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. பரவலாக பெய்து வரும் கோடை மழையால் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக 55 முதல் 60 லாரிகளில் தக்காளி குவிந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக 45 லாரிகளாக குறைந்ததால் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது.

    கடந்த 10நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.45-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக தக்காளியின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரையிலும் விற்கப்படுகிறது.

    இதேபோல் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பீன்ஸ் விலை சற்று குறைந்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கும், அவரைக்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்ந்து உள்ளதால் அதன்பயன்பாட்டை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.

    • கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
    • பிற வியாபாரிகளும் தக்காளி வாங்க வருவதால் விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே 2-வது வாரம் வரை கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதன்பின் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது. மழை சற்று இடைவெளி விட்ட நிலையில் தக்காளி விலை கிலோ ரூ.27 ஆக குறைந்திருந்தது.

    கடந்த ஒரு வாரமாக தமி ழகம் மற்றும் அதை ஒட்டிய கர்நாடகா, ஆந்திரா எல்லையோர பகுதிகளில் தொடர் மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதனால் மீண்டும் தக்காளி விலை நேற்று கிலோ ரூ.50 ஆக உயர்ந்து உள்ளது. கேரட்டும் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே இறுதி வாரத்தில் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டு வந்த பீன்ஸ், நேற்று கிலோ ரூ.70 ஆக குறைந்துள்ளது.

    மற்ற காய்கறிகளான பச்சை மிளகாய் ரூ.65, நூக்கல் ரூ.50, சாம்பார் வெங்காயம் ரூ.60, பாகற்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, முள்ளங்கி, பீட்ரூட் தலா ரூ.25, பெரிய வெங்காயம் ரூ.28, முருங்கைக்காய், வெண்டைக்காய் தலா ரூ.20, புடலங்காய் ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.12, கத்தரிக்காய் ரூ.10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த சில தினங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது.

    தமிழகத்தில் உள் மவாட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி அனுப்பும் ஆந்திரா மற்றும் கர்காடகா மாநில எல்லையோர பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பிற வியாபாரிகளும் தக்காளி வாங்க வருவதால் விலை உயர்ந்துள்ளது. இம்மாதம் முழுவதும் தக்காளி விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும்" என்றனர்.

    • அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.
    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆனாலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 முதல் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூண்டு பதுக்கப்பட்டுள்ளதா? இதனால் விலை உயர்ந்துள்ளதா? என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்தும் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த பூண்டு வியாபாரி ஒருவர் கூறுகையில், வட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பூண்டு பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடவில்லை. இதனால் பூண்டு விளைச்சல் 4-ல் ஒரு மடங்காக குறைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்கெட்களுக்கு பூண்டு வரத்து தற்போது வரை அதிகரிக்கவில்லை.

    சென்னை கோயம்போடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 லாரிகளில் கொண்ட வரப்படும் பூண்டு தற்போது 9 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. இதே போல சேலம் மார்க்கெட்டுகளுக்கும் 4-ல் ஒரு பங்காக பூண்டு வரத்து குறைந்துள்ளது. தற்போது பூண்டு அறுவடை காலம் தொடங்கி உள்ளதால் இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலை குறையும். பூண்டுகளை பதுக்கினால் அழுகிவிடும், இதனால் பதுக்கவும் வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • வரத்து குறைவால் சங்கு தொழில் நலிந்து போனது.
    • ஆன்மிக வழிபாடுகளிலும் முக்கிய பங்காற்றும் சங்கு தொழில் நலிந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் களை கட்டி வந்த சங்கு விற்பனை தற்போது வரத்து குறைந்த தால் மந்த நிலையில் நடந்து வருகிறது.

    கடலுக்கு செல்லும் மீன வர்கள் வலைகளில் மீன்கள் மட்டுமில்லாமல் அரிய வகை சங்கு வகைகளும் அகப்படும். வலம்புரி சங்கு, பால் சங்குகளை பூஜை அறையில் வைத்து வழிபடு வதற்காக மக்கள் விரும்பி வாங்கு கின்றனர். இதன் காரணமாக இந்த சங்குகளுக்கு வியாபாரிகள் மத்தியில் எப்போதும் கிராக்கி இருந்து வருகிறது.சிலந்தி சங்கு, கூம்பு சங்கு, குதிரை முள்ளி சங்கு போன்ற அபூர்வ வகை சங்குகளை பிடிக்க தடை உள்ளதால் வலையில் அகப்பட்டாலும் கடலோ ரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

    இது நாளடைவில் மக்கி உடைந்து விடுகிறது. சங்கு குளிக்கும் தொழிலில் உழைப்பு அதிகமாகவும், ஊதியம் குறைவாகவும் உள்ளது. சங்குகள் வரத்து குறைவால் சங்கு தொழில் நலிவடைந்து வருகிறது.

    இந்த தொழிலில் ஈடுபட்ட பலர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். அலங்கார கைவினைப் பொருட்களி லும், ஆன்மிக வழிபாடு களிலும் முக்கிய பங்காற்றும் சங்கு தொழில் நலிந்து வருகிறது.

    • கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
    • 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. அவை மளமளவென்று விற்று தீர்ந்தன.

    மூலனூர்:

    கடந்த 2 மாதங்களாக மழை பெய்துள்ளதன் காரணமாக ஆடுகளுக்கு தீவனம் கிடைத்ததால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வரவில்லை. இதனால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ரூ.6500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரத்தில் ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தைக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. அவை மளமளவென்று விற்று தீர்ந்தன.

    இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்போது "தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது .கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது என்றார்.

    • ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
    • இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.

    மூலனூர்:

    தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

    அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு நல்ல தீனி இருப்பதால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை. எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த 3 வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.

    இவ்வாறு கூறினார்.

    இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.

    ×