என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகிழக்கு பருவ மழை"

    • மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மழையென விவசாயிகள் மகிழ்ச்சி.
    • கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த இரண்டு வாரமாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது.

    பின்னர் மீண்டும் நள்ளிரவில் மழை பெய்ய தொடங்கியது. இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து மழை கொட்டியது.

    இதே போல் வல்லம் ,திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடைமருதூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தன.

    தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கின.

    தொடர் மழையால் இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் பிரியங்காபங்கஜம் உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு விவரம் தாலுகா வாரியாக வருமாறு :-

    பேராவூரணி-39, பட்டுக்கோட்டை-24, திருவிடைமருதூர்-12.80, பாபநாசம்-10.40, ஒரத்தநாடு-10.30, கும்பகோணம்-6.80, திருவையாறு-4.80, தஞ்சாவூர்-2.50 மி.மீ.

    இதைப்போல் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சூரப்பள்ளம், ஆத்திக்கோட்டை, பொன்னவராயன் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் மழை விட்டு விட்டு பெய்தது. இந்த மழையினால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    இந்த மழையால் பட்டுக்கோட்டை மணிகூண்டு, தலைமை தபால் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பேருந்து நிலையத்தில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இன்று காலையிலும் பட்டுக்கோட்டை பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதைப்போல் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், மாங்குடி, வடகரை, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், மன்னார்குடி, வலங்கைமான், கொரடாச்சேரி, சேந்தமங்கலம், வண்டாம் பாலை, தண்டலை, புலிவலம், வாழவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று காலை முதல் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை தொடர்ந்து பெய்து வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 31.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் மட்டும் 9.9 சென்டிமீட்டரும், குறைந்தபட்சமாக குடவாசலில் 1 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

    இதே போன்று திருவாரூரில் 3.9, நன்னிலத்தில் 3.1, வலங்கைமானில் 3, நீடாமங்கலத்தில் 2.4 சென்டிமீட்டர் என மழை அளவு பதிவாகியுள்ளது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை வாய்மேடு, ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. மேலும் மழைநீர் தேங்கிய இடங்களில் கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


    இந்த கன மழையால் வேதாரண்யம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 10,000 ஹெக்டர் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மழையென விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • தேங்கி கிடக்கும் திடக்கழிவுகள் மழை நீர் செல்வதில் பெரும் தடையாக உள்ளது.
    • டெங்கு பாதிக்கும் நபர் வசிக்கும் வீடுகளை சுற்றி, கொசு மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியிலுள்ள 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், ஆயிரக்கணக்கான வர்த்தக, தொழிற்சாலை கட்டடங்கள் உள்ளன. பெரும்பாலான முக்கிய ரோடுகளில் பிரதான கழிவு நீர் கால்வாய்களும் மற்ற பகுதிகளில் கிளை கால்வாய்களும் அமைந்துள்ளன.இவற்றில் சேகரமாகும் திடக்கழிவுகள் நீண்ட காலமாக தேங்கி, கழிவு நீர் செல்ல வழியின்றி மழை நாட்களில் பெருக்கெடுத்தும், தாழ்வான பகுதியில் தேங்கியும் அவதியை ஏற்படுத்துகிறது.

    நகரில் மையப்பகுதியில் கடந்து செல்லும் நொய்யல் ஆறும், அத்துடன் சென்று சேரும் ஜம்மனை ஓடை, மந்திரி வாய்க்கால், சபரி ஓடை, சங்கிலி பள்ளம் ஆகிய முக்கியமான நீர் வழிப்பாதைகளாக உள்ளன.

    இவற்றில் கழிவுநீர் செல்ல தடையாக இருந்த நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு வீடுகள் கடந்த சில மாதங்களில் அகற்றப்பட்டன. மேலும் ஓடைக்கரைகள் மற்றும் மையங்களில் வளர்ந்து பரவிக்கிடக்கும் புதர்கள், தேங்கி கிடக்கும் திடக்கழிவுகள் மழை நீர் செல்வதில் பெரும் தடையாக உள்ளது.

    தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதற்காக பகுதிவாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு எந்திரங்கள், வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவ்வகையில், மண்டல வாரியாக தலா 8 ஜே.சி.பி., தலா 2 டிராக்டர் மற்றும் டிப்பர் மற்றும் ஒரு ரோலர் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    இது தவிர 6 செயின் டோசர் வாகனங்கள், குறுகலான பகுதிகளில் தூர்வாரும் வகையில் பாப் கேட் எந்திரங்கள், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் நொய்யல் ஆறு மற்றும் ஓடைகளில் துார் வாரும் பணியை மேற்கொண்டுள்ளன.

    இந்நிலையில் குடியிருப்பு மற்றும் வர்த்தக பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யும் வகையில் எந்திரம் பொருத்திய இரு புதிய வாகனங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.இவற்றை மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் கமிஷனர் கிராந்திகுமார் துவக்கி வைத்தனர்.

    இதுதவிர புனேவிலிருந்து அதிக திறன் கொண்ட ஸ்லிட்டிங் எந்திரம் பொருத்திய வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான எந்திரங்கள் மூலம், பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு நீக்கம் செய்து, தூர்வாரவும் முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் மற்றும் அவிநாசியில் சில நாட்களாக இரவில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியிருக்கிறது.

    இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி தங்கராஜ் கூறுகையில்,கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று, கொசுப்புழு உருவாகாத வகையில், 'அபேட்' மருந்து தெளித்து வருகின்றனர். மழைநீர் தேங்கி நிற்காதவாறு, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

    ×