என் மலர்
நீங்கள் தேடியது "கோவை கார் வெடிப்பு"
- வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது.
- கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.
சென்னை:
கோவை கார் வெடிப்பு குறித்து 18-ம் தேதி அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவையில் கார் வெடிப்பு நிகழப்போவதாக மத்திய உள்துறை முன்பே எச்சரித்ததாக அண்ணாமலை கூறியது அபத்தமானது. அண்ணாமலை குறிப்பிடுவது உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம். வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது.
உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுப்பப்பட்டது பொதுவான சுற்றறிக்கையே. குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரை பற்றி எந்த தகவலும் இல்லை.
வழக்கு விசாரணையில் எந்தவித தாமதமும் ஏற்படவில்லை, சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை போலீசார் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்தனர்.
- கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.
கோவை:
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான்.
போலீசார் நடத்திய விசாரணையில் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த முபின் மற்றும் கைதானவர்கள் 3 கோவில்களை தகர்க்க ஒத்திகை பார்த்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.
இதுவரை இந்த வழக்கினை கோவை மாநகர போலீசாரால் அமைக்கப்பட்ட 7 தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர்.
தற்போது இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தென் மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி.வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு போலீசாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை போலீசார் தாங்கள் சேகரித்த ஆவணங்களை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தனர்.
கார் வெடிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்கள், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அறிக்கைகள், கைப்பற்றப்பட்ட பொருட்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றையும் ஒப்படைத்தனர்.
கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.
போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்கினர்.
இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து காரில், கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு செல்கின்றனர்.
அங்கு கார் வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.
தொடர்ந்து கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, கூடுதல் தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
தொடர்ந்து கார் வந்த இடமான உக்கடத்தில் இருந்து கோட்டைமேடு பகுதி வரையிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரின் வீடுகளுக்கும் சென்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதான 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுதவிர இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரோஸ், இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருந்த ரசித் அலி, முகமது அசாருதீனை சந்தித்துள்ளார். இது தொடர்பாக இவர்களை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி உள்ளதால் இந்த வழக்கில் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.
- வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர்.
- வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வீடுகளில் தமிழக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசல் அலி, மஞ்சகொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது. இந்த சோதனையை முன்னிட்டு அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அசன் அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகமை பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரது வீடு மற்றும் அவர்களது உறவினர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
- கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் கைதான ஒருவருடன் அப்துல்ரசாக் ஒரு முறை பேசியதாக கூறப்படுகிறது.
- அப்துல்ரசாக்கிடம் விசாரணை நடத்துமாறு திருப்பூர் மாநகர போலீசாருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
திருப்பூர்:
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பலியான ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தல்கா, அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 32) என்பவரிடம் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு விடுவித்தனர்.
தற்போது கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் கைதான ஒருவருடன் அப்துல்ரசாக் ஒரு முறை பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்துல்ரசாக்கிடம் விசாரணை நடத்துமாறு திருப்பூர் மாநகர போலீசாருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீசார் இன்று காலை வீட்டில் இருந்த அப்துல்ரசாக்கை விசாரணைக்காக அழைத்து சென்றனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் அப்துல் ரசாக்கிற்கு கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூர் வாலிபரிடம் விசாரணை நடத்தப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கார் வெடிப்பு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவை மாவட்ட பா.ஜ.க அறிவித்திருந்தது.
- வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.கவினர் தங்களது கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
கோவை:
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
கோவைக்கு வர இருந்த பெரிய ஆபத்தை கோட்டை ஈஸ்வரன் தடுத்து நிறுத்தி விட்டதாகவும், இதற்கு நன்றி கூறும் வகையில் கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க கோவை வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இன்று காலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவைக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்றனர். கோவிலில் அண்ணாமலை கோட்டை ஈஸ்வர சுவாமியை பயபக்தியுடன் வழிபட்டார். தொடர்ந்து மக்கள் நலம் பெற வேண்டி நடந்த கூட்டு பிரார்த்தனையிலும் பங்கேற்றார்.
தொடர்ந்து கோவிலை சுற்றி வந்து அண்ணாமலை பார்வையிட்டார். அப்போது கோவிலின் தல வரலாறு உள்ளிட்ட தகவல்களை பூசாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்னர் வெளியில் வந்த அவர் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டார். சம்பவம் குறித்து கோவில் பூசாரிகளிடம் கேட்டறிந்தார்.
அண்ணாமலை வருகையை முன்னிட்டு அந்த பகுதிக்கு செல்லும் வழிகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிமாவட்ட போலீசார் என 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வழியாக வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை கேட்டு பெற்று ஆராய்ந்து விசாரித்த பின்னரே அந்த பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.
இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கார் வெடிப்பு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவை மாவட்ட பா.ஜ.க அறிவித்திருந்தது. பின்னர் வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.கவினர் தங்களது கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
ஏற்கனவே மாவட்ட பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.கவினர் மற்றும் இந்து அமைப்பினர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- கோட்டைமேடு பகுதியில் உள்ள அனைத்து செல்போன் கோபுரங்களிலும் கார் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக பதிவான செல்போன் எண்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.
- செல்போன் எண்களின் உரிமையாளர்கள் விபரம், அவர்கள் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது.
கோவை:
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின்(29) என்பவர் உயிரிழந்தார்.
விசாரணையில், முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து முபினுடன் தொடர்பில் இருந்த அவரது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது என்.ஐ.ஏ. போலீசார் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இறந்த முபின் வசித்த கோட்டைமேடு, கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இறந்த முபின் கோட்டைமேடு பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அவர் வசித்த வீடு, கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்து 350 மீட்டர் தொலைவில் உள்ளது.
கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு முபின் பல முறை அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபினின் வீட்டில் இருந்து கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதி வரை உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் இறந்த முபினின் நடமாட்டம் குறித்தும், முபின் காரில் எத்தனை முறை அவரது வீட்டில் இருந்து கோவில் வரை சுற்றி திரிந்துள்ளார். காரில் அவர் மட்டும் சுற்றி திரிந்தாரா? அல்லது அவருடன் வேறு யாராவது இருந்தார்களா? என்பதையும் கண்காணிப்பு கேமிராவை பார்த்து போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த வீடியோ ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர். மேலும் ஹார்டு டிஸ்க்குகளையும் என்.ஐ.ஏ. போலீசார் கைப்பற்றி சென்றனர்.
இறந்த முபினின் செல்போனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தற்போது அந்த செல்போனில் முபின் பதிந்து வைத்திருந்த செல்போன் நம்பர்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் அவர் யார்-யாரிடம் அடிக்கடி போன் பேசியுள்ளார்? என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர். அவருடன் செல்போனில் தொடர்பில் இருந்த அனைவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவர்களிடம் முபின் குறித்தும், கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியுமா? அது தொடர்பாக ஏதாவது உங்களிடம் முபின் பேசினாரா? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
அவர்கள் கூறிய தகவல்களை போலீசார் வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவும் செய்து கொண்டனர். தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர கோட்டைமேடு பகுதியில் உள்ள அனைத்து செல்போன் கோபுரங்களிலும் கார் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக பதிவான செல்போன் எண்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்களின் உரிமையாளர்கள் விபரம், அவர்கள் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது.
கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு தேவையான வெட பொருட்களை வாங்குவதற்கு முபினுக்கு ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து போலீசார் ஜமேஷா முபின் மற்றும் கைதான 6 பேரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.
அவர்களுக்கு யார்-யார் பணம் அனுப்பி உள்ளனர். எந்த வங்கி கிளையில் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது. பணம் அனுப்பியவர்களின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது உறவினர்களின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஏதாவது பணபரிமாற்றம் நடந்துள்ளதா? என்பது குறித்து என்.ஐ.ஏ. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்தும் இவர்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
- கோவை நகரில் உள்ள சில அமைப்புகளின் தரவுகளை சேகரிக்கும் பணியில் மாநகர போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- 25 கேள்விகள் அடங்கிய கேள்விதாள் தயாரிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் கொடுக்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டு வருகிறது.
கோவை:
கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றதில் இருந்து தற்போது வரை தமிழகம் முழுவதும் 137 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கோவையில் நேற்று மட்டும் எஸ்.டி.பி.ஐ. மற்றும் த.மு.மு.க. பிரமுகர்கள் வீடு உள்ள 18 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் அனுதாபிகள், ஆதரவாளர்கள், சந்தேகத்திற்கு இடமானவர்கள் என 900 பேரை போலீசார் கண்டறிந்துள்ளனர். அது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியையும் போலீசார் தொடங்கி உள்ளனர்.
இந்த பட்டியல் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்துவதற்கு தேவையான அனைத்து பணிகளும் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே கோவை நகரில் உள்ள சில அமைப்புகளின் தரவுகளை சேகரிக்கும் பணியில் மாநகர போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 25 கேள்விகள் அடங்கிய கேள்விதாள் தயாரிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் கொடுக்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டு வருகிறது.
அதில் பெயர், முகவரி, கல்வி தகுதி, சமூக வலைதள கணக்குகள், வங்கி கணக்குகள் என பல விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதேபோன்று கோவை புறநகர் பகுதிகளிலும் தரவுகள் தயாரிக்கப்பட இருக்கின்றன.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் கே.சுவாமி என்பவர் இரு தரப்பினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையிலான கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
- கோவை சைபர் கிரைம் போலீசார் கிஷோர் கே.சுவாமி என்பவர் மீது 153 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை:
கோவையில் கடந்த 23-ந்தேதி உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அளவில் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் கே.சுவாமி என்பவர் இரு தரப்பினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையிலான கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இதுபற்றி கண்காணித்து வந்த கோவை சைபர் கிரைம் போலீசார் கிஷோர் கே.சுவாமி என்பவர் மீது 153 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த முபின் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
- முபினுக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை.
கோவை:
கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் சிலிண்டருடன் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தினமும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய துணி என கூறி ஏமாற்றிய தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.
அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை(23) முபின் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை.
இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.
அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார்.
ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார்.
அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.
மேலும் முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது.
பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர். முபினும் அது போன்று செய்துள்ளது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
இந்த நிலையில் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து 'சிலேட்' ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன.
மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், 'அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்' என்று கூறி இருந்தார். மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
அதில் ஒரு தாளில், 'ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு' என்று எழுதி இருந்தார். மேலும் 'புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை' என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே கோவையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படும் 900 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பெயர் விவரங்கள் கொண்ட பட்டியலையும் சேகரித்துள்ளனர். அந்த பட்டியலை வைத்து அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கார் வெடிப்பு சம்பவத்தின் போது முபின் வைத்திருந்த ஒரு செல்போன் உடைந்து நொறுங்கி விட்டது.
- முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் போலீசாருக்கு கிடைத்தது. இதேபோல் கைதான மற்றவர்களின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை:
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.
போலீஸ் விசாரணையில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இறந்த முபினின் கூட்டாளிகளான 6 பேரை கைது செய்தனர்.
முபின் வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயனங்கள், ஐ.எஸ். ஆதரவு வாசகங்கள் அடங்கிய பொருட்கள், செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கார் வெடிப்பு வழக்கினை தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த முபின் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கோவில்கள் மற்றும் அங்கு நடக்கும் உருவ வழிபாடுகள் மீது முபினுக்கு வெறுப்புணர்வு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக திட்டமிட்டு வந்த தகவலையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
2019-ம் ஆண்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபின் வீட்டில் சோதனை நடத்தினர். அதன்பின்னர் அவரை தொடர்ந்து கண்காணிக்க உளவுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. உளவுத்துறையினரும் அவரை கண்காணித்து வந்தனர்.
ஆனால் அவர்களின் கண்காணிப்பையும் மீறி அடுத்தடுத்து முபின் 3 வீடுகளுக்கு மாறியதும், இதை மத்திய, மாநில உளவுத்துறையினர் கண்காணிக்க தவறியதும் தெரியவந்தது.
இந்த நிலையில் போலீசாரின் தொடர் விசாரணையில், முபின் தனது கூட்டாளிகளுடன் பேசுவதற்கு பிரத்யேகமாக செயலி ஒன்றை பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.
கார் வெடிப்பு சம்பவத்தின் போது முபின் வைத்திருந்த ஒரு செல்போன் உடைந்து நொறுங்கி விட்டது.
தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் போலீசாருக்கு கிடைத்தது. இதேபோல் கைதான மற்றவர்களின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்த செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போது, முபின் தனது கூட்டாளிகளுடன் பேசுவதற்காக ஐ.எம்.ஓ. என்ற பிரத்யேக செயலியை பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த செயலியை பயன்படுத்தி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ளவர்களுடனும் பேசலாம். மேலும் செல்போனில் சிம்கார்டுகளை பயன்படுத்தி பேசினால் ஏதாவது ஒரு வகையில் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதை அறிந்து ஐ.எம்.ஓ. எனப்படும் பிரத்யேக செயலியை பயன்படுத்திருக்கலாம்.
இந்த செயலியில் வீடியோ அழைப்பு, வாய்ஸ் கால் எனப்படும் குரல்பதிவு அழைப்பு, சாட் எனப்படும் எழுத்து பரிமாற்றம் மூலமாகவும் பேச முடியும்.
இதில் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் சாட்களை பயன்படுத்தாமல் வீடியோ, வாய்ஸ் கால் அழைப்புகள் மூலம் பேசி வந்துள்ளனர். இவற்றை ரெக்கார்டு செய்ய முடியாது. மேலும் பேசியவுடன் அந்த தகவல்களை உடனுக்குடன் அழித்தும் உள்ளனர்.
மேலும் முபின் ஐ.எ.ம்.ஓ. செயலி மூலம் வெளிநாட்டு நபர்களுடன் பேசியிருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் முபினை மூளைச்சலவை செய்தததுடன், அவருக்கு வெடிபொருட்கள் வாங்க பணம் உதவி செய்திருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, வாட்ஸ்அப் அழைப்பு, ஐ.எம்.ஓ. போன்ற செயலிகளில் இருதரப்பினரின் ரகசியம் காக்கப்படும் என்பதாலும், போலீசாரால் கண்காணிக்க முடியாது என்பதாலும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்ற செயலிகளின் தலைமையை தொடர்பு கொண்டு கேட்டாலும் தகவல்கள் எளிதாக கிடைப்பதில்லை. சட்டவிரோத செயல்களை தடுக்க இதுபோன்ற செயலிகளின் பயன்பாட்டை கண்காணிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பது ஒன்றே தீர்வாகும் என்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் யாரெல்லாம் இதுவரை ஆன்லைனில் வெடி பொருட்கள் வாங்கி உள்ளனர் என்ற பட்டியலை தயாரிக்கும் பணியில் போலீசார் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கைதான 6 பேரும் நாளை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதற்காக இன்று 6 பேரும் கோவை மத்திய ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். நாளை காலை என்.ஐ.ஏ. கோர்ட்டில் 6 பேரும் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
அதன்பின்னர் அவர்கள் 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.
இதையடுத்து என்.ஐ.ஏ. கோர்ட்டில் அனுமதி பெற்று கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
- சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மாநகர போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
கோவை:
கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்ட ஜமேஷா முபின் என்ற வாலிபர் கார் வெடித்து சிதறி பலியானார்.
காரில் வெடி பொருட்களை நிரப்பி கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் நெருக்கம் நிறைந்த இடத்தில் அதனை வெடிக்கச் செய்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த முபின் திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் முபின் திட்டம் பலிக்காமல் அவரது சதித்திட்டத்தில் அவரே சிக்கி உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து 75 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக போலீசார் அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
முதற்கட்டமாக கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடமான கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், கோவில் பூசாரியிடமும் விசாரித்தனர்.
வழக்கில் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரையும் நேற்றுமுன்தினம் சென்னை அழைத்து சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கார் வெடிப்பு தொடர்பாக விசாரித்த போது தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100-க்கும் அதிகமானோர் செயல்படுவது தெரிய வந்தது. இதனால் அவர்களை கண்காணிப்பதுடன் அவர்களின் வீடுகளில் சோதனையிடவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இந்த நிலையில் சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது.
கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த ஆதரவாளர்களின் பட்டியல்களை தயாரித்து உளவுத்துறை, என்.ஐ.ஏ.விடம் அளித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே தமிழகம் முழுவதும் இன்று இந்த சோதனை நடந்தது.
கோவையில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், புல்லுக்காடு, ரத்தின புரி, ஜி.எம்.நகர் உள்பட 33 இடங்களில் சோதனை நடந்தது.
பலியான முபின் மற்றும் கைதான 6 பேரின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் என 33 இடங்களில் அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மாநகர போலீசாருடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீடுகளில் உள்ள அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சல்லடை போட்டு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வீடுகளில் இருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஏதாவது தகவல்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர்.
சோதனை நடந்த சில இடங்களில் இருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது மாலை வரை நீடிக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் இந்த சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் சோதனை முடிவிலேயே என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.
என்.ஐ.ஏ. சோதனை நடந்த இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க அந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, பெரம்பூர், ஜமாலியா உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லையில் 2 இடங்களிலும், திருப்பூரில் ஒரு இடத்திலும், மதுரையில் 2 இடத்திலும், கயல்பட்டினத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திரு முல்லைவாசல் சொக்கலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த அல்பாஷித் (22) என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. காலை 5 மணிக்கு 6 பேர் கொண்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அல்பாஷித் வீட்டில் தான் இருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவாக பணியாற்றும் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.
கார் வெடிப்பு தொடர்பாக கோவையில் கைதானவர்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். தற்போது 2-வது முறையாக என்.ஐ.ஏ. சோதனை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை உள்பட தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- கோயம்புத்தூர் மக்கள் கடவுளின் கருணையால் காப்பாற்றப்பட்டதாக அண்ணாமலை தகவல்
சென்னை:
கோவையில் கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, 6 பேர் உபா சட்டத்தின்கீழ் (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும், அவர்களது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக பாஜக கடந்த 2 வாரங்களாக கூறுவதை தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) செய்திக்குறிப்பு இன்று மீண்டும் உறுதிப்படுத்தியது. எனவே, திமுக அரசு இனியும் இதை சிலிண்டர் வெடிப்பு என்று சொல்ல முடியாது. பயங்கரவாதி மரணமடைந்த இந்த விபத்து ஒரு தெளிவான 'தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம்'. இந்த சம்பவத்தை "வெடிகுண்டு வெடிப்பு வழக்கு" என்று என்ஐஏ கூறியுள்ளது.
சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட குற்றஞ்சாட்டக்கூடிய ஆதாரங்களைத் தவிர, கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜமேஷா முபினுடன் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக வாகனங்களில் கொண்டு செல்லும் வெடிகுண்டுகளை தயாரிக்க சதி செய்ததாக என்ஐஏ இன்று உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 8 மாவட்டங்களில் 43 இடங்களில் என்ஐஏ நடத்திய இன்றைய சோதனைகள், நெட்வொர்க் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இயங்கியது என்பதை காட்டுகிறது. கோயம்புத்தூர் மக்கள் கடவுளின் கருணையால் காப்பாற்றப்பட்டனர்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.