என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்த ஊழியர்கள்"

    • புதுச்சேரியில் அரசின் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை.
    • புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான சாலை போக்குவரத்து கழகத்தின் (பி.ஆர்.டி.சி.) சார்பில் நகரம், கிராமம், வெளிமாநில பகுதிகளான சென்னை, பெங்களூரு, குமுளி, கடலூர், நாகர்கோவில், மாகி, திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 40 ஊழியர்கள் மட்டும்தான் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். டிரைவர், கண்டக்டர், பணிமனை ஊழியர்கள் என சுமார் 130-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். இவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து பல ஆண்டாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    அவ்வப்போது பணி நிரந்தரம் கோரி போராட்டமும் நடத்திவந்தனர். அரசு சார்பில் உறுதிமொழி அளித்தவுடன் போராட்டம் கைவிடப்படும்.

    இந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த நோட்டீசை நிர்வாகத்திடம் வழங்கியிருந்தனர்.

    இதன்படி இன்று காலை ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் புதுச்சேரியில் அரசின் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. புதுச்சேரி நகரம், கிராமப்புறங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. காலை நேரத்தில் சென்னைக்கு மட்டும் நிரந்தர பணியாளர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டது.

    நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், ஷிப்ட் முறையில் பணியாற்றுவதாலும் அனைத்து பஸ்களையும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம். தமிழக அரசின் பஸ்கள் புதுவையில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி வழியாக இயக்கப்படுகிறது.

    இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகவில்லை. இருப்பினும் புதுச்சேரியின் கிராமப்புற பகுதிகளில் தனியார் பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் இயங்காததால் உட்புற கிராமப்புற மக்கள் புதுச்சேரிக்கு வந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்கள் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணி மனை முன்பு திரண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 2-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரம் உள்பட பல்வேறு பணிகளில் ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து ஊழியர்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.

    காலையில் தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. இதில் மேயர் நாகரத்தினம், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். இதில் எந்த ஒரு சுமூக முடிவும் ஏற்படவில்லை.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு பணி புறக்கணித்து போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து தூய்மை பணியாளர் ஒருவர் கூறியதாவது:

    நான் கடந்த 15 வருடத்திற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறேன். தினக்கூலி அடிப்படையில் ரூ.700 சம்பளம் வாங்கி வந்தேன். தற்போது தனியாருக்கு கொடுக்கும் முடிவால் தங்களது சம்பளம் பாதியாக குறைந்து ரூ.350 மட்டுமே வர வாய்ப்புள்ளது.

    இதனால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே தனியாரிடம் ஒப்படைக்கும் 152 அரசாணையை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும்.

    தூய்மை பணியாளர், துப்புரவு மேற்பரையாளர், ஓட்டுநர், கணினி இயக்குனர், தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். தின கூலி தொழிலாளர்களுக்கு 1.4.2021 முதல் உயர்த்த ப்பட்டதன் அடிப்படையில் நிலுவை ஊதியத்தை கணக்கிட்டு அனைத்து தின ஊதிய தொழிலா ளர்க ளுக்கும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெண் தூய்மை பணியாளர் ஒருவர் கூறியதாவது:

    நான் கடந்த 10 வருடமாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு படிப்பறிவு கிடையாது. தனியாரிடம் கொடுக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை யென்றால் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    நாங்கள் எங்கள் குழந்தை குடும்ப த்தினருடன் போராடும் சூழ்நிலை உருவாகலாம். தொடர்ந்து எங்களது கோரிக்கை நிராகரிக்க ப்பட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. தூய்மை பணியா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    முதல் - அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. டவுன் டி.எஸ்பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகர் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

    ஈரோடு மாநகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 70 டன் வரை குப்பைகள் சேரும். அதனை அந்தந்த மண்டல த்துக்கு ஒதுக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து எடுத்து செல்வார்கள்.

    ஆனால் இந்த பணி 2 நாட்களாக நடைபெ றாததால் குப்பைகள் குவிந்துள்ளன. கிட்டத்தட்ட 140 டன் குப்பைகள் வரை குவிந்து ள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    • ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்கு திரும்பினர்.
    • இன்று வழக்கம் போல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதம் ரூ.21,260 வழங்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமனையில் உடை மாற்ற, ஓய்வெடுக்க, உணவு சாப்பிட ஓய்வறை ஒதுக்கிட வேண்டும். ஒப்பந்த முறைப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும். வேலை நேர பணி அட்டை வழங்க வேண்டும். மாத ஊதிய சீட்டு வழங்க வேண்டும்.

    வார விடுமுறை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். இலவச சீருடை, பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 23-ந் தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஒப்பந்த பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பணியை புறக்கணித்து கடந்த மாதம் 29-ந் தேதி இரவு முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 4 நாட்களாக பகல், இரவு என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கடந்த 1-ந் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் அவர்களது கோரிக்கையை ஏற்று அடுத்த 15 நாட்களில் அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார். இதன்பேரில் நேற்று இரவு ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்கு திரும்பினர்.

    இன்று வழக்கம் போல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×