search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசிப்பு பழக்கம்"

    • வாசிப்பு பழக்கத்தை வழக்கமாக்கும்போது புதிய புதிய சொற்கள், வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
    • புத்தகம் வாசிப்பது மனதளவில் நெருக்கமாக உணர வைக்கும்.

    இன்றைய டிஜிட்டல் யுகம் பொழுதுபோக்குக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பதால் பலரும் அதிலேயே மூழ்கி நேரத்தை பாழ்படுத்திக்கொள்கிறார்கள். அதனால் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வாசிப்பு பழக்கத்தை வாழ்வின் ஒரு அங்கமாக பின்பற்ற வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்காக காரணங்கள் குறித்தும், வாசிப்பு பழக்கம் ஏன் அவசியமானது என்பது குறித்தும் பார்ப்போம்.

    அறிவை அளிக்கும்

    ஒவ்வொரு புத்தகங்களில் இடம் பெறும் தலைப்பும் ஏதோ ஒரு வகையில் கற்பனை செய்து பார்க்கக்கூடிய பரந்த அளவிலான அறிவை வழங்குகின்றன. அறிவியல், வரலாறு, தத்துவம் பற்றிய புத்தகங்களை படிக்கும்போது அவை சார்ந்த விஷயங்களை ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும். அது சார்ந்த தேடலில் மனதை ஈடுபட வைக்கும்.

    சொற்களஞ்சியம்

    வாசிப்பு பழக்கத்தை வழக்கமாக்கும்போது புதிய புதிய சொற்கள், வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தகவல் தொடர்பு திறனையும், புரிதலையும் மேம்படுத்தும்.

    அழுத்தம்

    புத்தகம் வாசிப்பது மனதளவில் நெருக்கமாக உணர வைக்கும். நாவல், கதை போன்றவற்றை வாசிக்கும்போது அதில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் மனதோடு பேசும் உணர்வை ஏற்படுத்திக்கொடுக்கும். மனக்கவலைகளில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க வைக்கும். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் தராமல் மனதை இலகுவாக்கும். மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிடுக்கும். வாசித்து முடித்த பிறகு மனத்தெளிவை ஏற்படுத்திக்கொடுக்கும். மனம் ஓய்வெடுக்கவும் வழிவகை செய்யும்.

    கவனிக்கும் திறன்

    இன்றைய அவசர உலகில் கவனச்சிதறல் காரணமாக சின்ன சின்ன வேலைகளை கூட சரியாக முடிக்க முடியாமல் பலரும் தடுமாறுகிறார்கள். வாசிப்பு மீது கவனத்தை பதிக்கும்போது தேவையற்ற கவனச்சிதறல்களை தடுக்க முடியும். கவனத்தை ஒரு இடத்தில் குவிக்கும் திறன் மேம்படும்.

    நினைவாற்றல்

    நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை கூர்மைப்படுத்தவும் வாசிப்பு பழக்கம் உதவும். மனதை சுறுசுறுப்பாகவும், ஈடுபாட்டுடனும் வைத்திருக்க உதவும் என்று ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

    படைப்பாற்றல்

    வாசிப்பு பழக்கம் புதிய யோசனைகள் மற்றும் சிந்தனைகளை மெருகேற்ற வழிவகை செய்யும். படைப்பாற்றல் திறனையும் அதிகரிக்க செய்யும். எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சிக்கலை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்பட ஊக்கப்படுத்தும்.

    எழுத்தார்வம்

    புத்தகம் வாசிக்கும்போது அதில் இடம்பெறும் எழுத்து நடை, வாக்கிய அமைப்பு போன்றவற்றை படிக்கும்போது அதுபோன்று எழுதும் ஆர்வம் மேலோங்கும். ஒட்டுமொத்த தகவல்தொடர்பு திறனையும் மேம்படுத்தும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான ஆவலை தூண்டும்.

    தூக்கம்

    தூங்குவதற்கு முன்பு செல்போன் திரையில் பொழுதை போக்குவதற்கு பதிலாக சில நிமிடங்கள் புத்தகம் வாசிப்பது மனதை அமைதிபடுத்தும். உடலையும், உள்ளத்தையும் ஓய்வெடுப்பதற்கு தயார்படுத்தும். அதில் இடம்பெற்றிருக்கும் நல்ல கருத்துக்களை படிக்கும்போது மனம் ஆனந்தம் கொள்ளும். நன்றாக தூங்குவதற்கான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

    புதிய உலகம்

    புத்தகத்தில் இடம் பெற்ற சம்பவங்கள், கதாபாத்திரங்களுடன் நம்மையும் பயணிக்க வைத்து வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லும். புதிய உலகத்திற்குள்ளும் நுழைய வைக்கும். சிலிர்ப்பூட்டும் சாகச இடங்கள், வரலாற்று நிகழ்வுகள், பயணங்களுக்குள் நம்மையும் பயணிக்க வைத்துவிடும்.

    கற்றல்

    வாசிப்பு என்பது தொடர்ச்சியான கற்றல் அனுபவத்தை கொடுக்கும். வயது, ஆர்வத்தை பொருட்படுத்தாமல், எப்போதும் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள தூண்டிக்கொண்டே இருக்கும். மற்றவர்களுடன் எந்தவொரு தலைப்பிலும் துணிச்சலாக கலந்துரையாடுவதற்கான தகுதியை வளர்த்தெடுக்கும்.

    • புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி ஏதும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள்.
    • படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள்.

    குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.

    படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது. மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தையும் தருவது புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வது புத்தகங்கள். ஒரு குழந்தையை நேரிய வழியில் நடக்க வைப்பதற்கும் சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் பங்கு வகிப்பது புத்தகங்களே.


    புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி ஏதும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள். நம்சிந்தனையைத் தூண்டவும், சிந்தனையைப் புதுப்பிக்கவும் உதவுவது புத்தகங்கள். நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்கள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும். புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.

    படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அவற்றை கூறச் செய்யலாம். கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன.

    முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும். தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். புத்தகங்களைப் படிக்கும் போது அவை நம்மை அந்த காலத்திற்கே கடத்திச் செல்லும். இயற்கை காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். வரலாற்றுக் காலத்தின் சுவடுகளில் அவர்களை பதிய விடும்.

    • விருதுநகரில் புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் வாசிப்பு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என விழாவில் அமைச்சர்கள் பேசினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதா னத்தில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது.

    இந்த புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. முதலாவது விருதுநகர் புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் புத்தக கண்காட்சியை தெடாங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.

    புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திரு விழாக்கள் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகள், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளையா டுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர்கள் பேசினர்.

    ×