என் மலர்
நீங்கள் தேடியது "கடன் செயலி"
- ஒரு கட்டிடத்தில் கால்சென்டர் அமைத்து கடன் செயலி மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
- கடன் பெற்றவர்கள் கடனை 2 வாரத்தில் செலுத்தியும், அனுப்பிய பணம் எங்களது வங்கி கணக்கிற்கு வரவில்லை.
திருப்பூர்:
ஆன்லைன் கடன் செயலி மூலம் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் கும்பல், பின்னர் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஏராளமானோர் போலீசில் புகார் செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கடன் செயலியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,சசாங் சாயிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்களை ஏமாற்றி பணமோசடி மற்றும் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டுகும்பலை பிடிக்க சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மோசடி கும்பல் யாரென்று விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது அந்த கும்பல் திருப்பூர் காதர்பேட்டையில் இருந்து பொதுமக்களை தொடர்பு கொண்டு பேசி வருவது செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் காதர்பேட்டை சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் கால்சென்டர் அமைத்து கடன் செயலி மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்த 5பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரள மாநில கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முகமது அஸ்கர் (வயது24) முகமது ஷாபி (36), முகமது சலீம், (37)அனிஸ்மோன் (33), அஷ்ரப் (46) என்பது தெரியவந்தது. 5பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க பயன்படுத்திய 6 இணையதள மோடம், 3 லேப்டாப்கள், 11 சிம் பாக்ஸ்(ஒரு பாக்சில் 100 சிம்கார்டுகள்), மற்றும் 500 சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் காதர்பேட்டையில் கால்சென்டர் அமைத்திருந்த அவர்கள் ஒரு நாளைக்கு 3500 பேரை தொடர்பு கொண்டு கடன் செயலி மூலம் ரூ.3000 முதல் ரூ.15000 வரை கடன் வழங்குவதாக கூறியுள்ளதுடன், இதற்காக இ.மெயில் முகவரி, ஆதார் கார்டு எண், புகைப்படம் ஆகியவற்றை வாங்கியுள்ளனர். பணம் தேவைப்பட்டவர்கள் மோசடி கும்பல் என்பது தெரியாமல் தங்களது ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றுள்ளனர்.
அப்படி கடன் பெற்றவர்கள் கடனை 2 வாரத்தில் செலுத்தியும், அனுப்பிய பணம் எங்களது வங்கி கணக்கிற்கு வரவில்லை. எனவே பணத்தை திரும்ப அனுப்புங்கள். இல்லையென்றால் உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து உங்களது உறவினர்கள், நண்பர்களின் வாட்ஸ்அப் மற்றும் இணையதளங்களில் பதிவேற்றி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் பலர் மோசடி கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். தொடர்ந்து மிரட்டல் விடுக்கவே பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் எஸ்.பி.யிடம் புகார் செய்துள்ளனர். எஸ்.பி. அமைத்த தனிப்படை போலீசாரின் பிடியில் தற்போது 5பேரும் சிக்கிக்கொண்டனர். இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பலரிடம் பேசி பணம் பறித்து ஏமாற்றியுள்ளனர். அவர்கள் புகார்கள் கொடுக்கும் பட்சத்தில் 5 பேர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கடன் செயலி மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 5பேரை கைது செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம். இந்த சம்பவம் சங்கிலி தொடர்போல் நீள்கிறது. மோசடி கும்பலின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம். அப்படி யாராவது போன் செய்தால் 1930 என்ற போன் நம்பரை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். கைதானவர்கள் 2 மாதமாக திருப்பூர் காதர்பேட்டையில் தங்கியிருந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடன் செயலி மூலம் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் கும்பல் ஈடுபட்டுள்ளது.
- கேரள கும்பலிடம் கிடைத்த சில தகவல்களின் படி கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பொங்குபாளையத்தை சேர்ந்த 32 வயது பெண் கடந்த டிசம்பர் மாதம் 15ந் தேதி 'பைசா ஹோம்' என்ற கடன் செயலியை பதிவிறக்கம் செய்து 3 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். அந்த பணத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அப்பெண் செலுத்தினார். தொடர்ந்து கடன் பெற தகுதியுடையவர் என்று எஸ்.எம்.எஸ்., வந்தது. இதையடுத்து கடன் செயலி மூலம் 15 ஆயிரம் ரூபாயை கடன் பெற்றார்.
இந்தநிலையில் தவணை காலம் முடியும் முன்னரே பணத்தை திருப்பி செலுத்த கூறி எஸ்.எம்.எஸ்., வந்தது. பணத்தை செலுத்தாவிட்டால் சமூகவலைதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவோம் என்று அந்த பெண்ணை மிரட்டியதுடன் அந்த பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாசமான பதிவுகளை அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக அந்த பெண் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சஷாங் சாயிடம் புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காதர்பேட்டை மற்றும் பி.என்., ரோடு புஷ்பா சந்திப்பு அருகே அறை எடுத்து கால் சென்டர் அமைத்து ஒரு கும்பல் குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரிந்தது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த முகமது அஸ்கர், (வயது 24), முகமது ஷாபி(36), முகமது சலீம்(37), அனீஷ் மோன் (33) மற்றும் அஸ்ரப்( 46) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் வெளிநாட்டு கடன் செயலி மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு கடன் வழங்குவதாகவும், புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியும் பணம் பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய ஹைடெக்கான 11 சிம் பாக்ஸ், 500 சிம் கார்டுகள், 6 மோடம், 3 லேப்டாப், யு.பி.எஸ்., மற்றும் பேட்டரி, 20 ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகள், யூரோ டாலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைதான 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இக்கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்ட புதிய தகவல் தெரியவந்துள்ளது.
கடன் செயலி மூலம் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளது. கேரள கும்பலிடம் கிடைத்த சில தகவல்களின் படி இக்கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 200 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.
இதில் ஏராளமான மோசடி நபர்கள் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் எண், ஐ.எம்.இ., உள்ளிட்ட விபரங்களை டெல்லியில் உள்ள தேசிய சைபர் கிரைமிடம் ஒப்படைக்கப்பட்டு முதல்கட்டமாக விசாரிக்கப்பட்டது.
அதில் மேற்கொண்ட விபரங்கள் 200 மோசடி புகார்களில் பொருந்துவது தெரிய வந்துள்ளது. 200 பேரின் ஆபாச படங்களை வெளியிட்டு பணம் பறித்துள்ளனர். தற்போது இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த எஸ்.டி.பி. என்ற பெயரை கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரின் உண்மையான பெயர், முகவரி உள்ளிட்டவை குறித்து விசாரணை நடக்கிறது.
இதுதவிர இந்த நபர் மூலமாகவே திருப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிம் பாக்ஸ், சிம் கார்டு மாற்றுவது உட்பட அனைத்து உத்தரவுகளையும் இக்கும்பல் பெற்று செயல்படுத்தி வந்துள்ளனர். கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த எஸ்.டி.பி. என்ற பெயரை கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- மேலும் 61 கடன் செயலிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதை ‘சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்து உள்ளனர்.
- தற்போது ‘ஸ்மார்ட்' செல்போன்களில் கடன் செயலிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
சென்னை :
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை 'சைபர் கிரைம்' போலீசார் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரையில் 'பேஸ்புக்', 'இன்ஸ்ட்ராகிராம்', 'டுவிட்டர்', 'யூடியூப்' போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து 40 சட்டவிரோத பதிவு கள், கருத்துகள் 'சைபர் கிரைம்' போலீசார் நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் முக்கிய பிரமுகர்கள் பற்றி 386 அவதூறு 'வீடியோ' பதிவுகள் இருப்பதை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த 'வீடியோ' பதிவுகளை முடக்க வேண்டும் என்று 'யூடியூப்' நிறுவனத்துக்கு 'சைபர் கிரைம்' போலீசார் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பி உள்ளனர்.
தற்போது 'ஸ்மார்ட்' செல்போன்களில் கடன் செயலிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த செயலி மூலம் கடன் வாங்கி கூடுதல் வட்டியை கட்ட முடியாமல் பலர் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே 'சைபர் கிரைம்' போலீசார் நடவடிக்கையால் 221 சட்டவிரோத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் மேலும் 61 கடன் செயலிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்து உள்ளனர். அந்த செயலிகளையும் முடக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் தேவரானி, ஸ்டாலின், அசோக்குமார் ஆகிய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- நேரில் சென்றும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் பலமுறை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
- தேஜஸ் திருப்பி செலுத்த வேண்டிய தொகை சுமார் ரூ.46000 என தெரிகிறது.
சீனாவை மையமாக கொண்டு செயல்படும் கடன் செயலிகளின் மூலம் கடன் பெறுவதும், அவற்றை திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த நிறுவன முகவர்களால் மிரட்டலுக்கு ஆளாவதும், அதனால் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவின் எலஹங்காவில் உள்ள நிட்டே மீனாட்சி கல்லூரியில் பொறியியல் படிப்பில் 6-வது செமஸ்டர் படித்து வந்த தேஜஸ் (22) எனும் பொறியியல் மாணவர், இரு தினங்களுக்கு முன்பு ஜலஹள்ளியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
'ஸ்லைஸ் அண்ட் கிஸ்' (Slice and Kiss) எனப்படும் ஒரு சீன செயலி மூலம் மாணவர் தேஜஸ் கடனாக பணம் பெற்றிருக்கிறார். ஆனால் அந்த தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் விவரத்தை அறிந்த தேஜஸின் தந்தை கோபிநாத், மகன் சார்பில் தொகையை தவணை முறையில் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனாலும் கடன் வழங்கிய முகவர்கள் தேஜஸின் வீட்டிற்கு நேரில் சென்றும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் பலமுறை மிரட்டல் விடுத்திருக்கின்றனர். அவர் பெற்ற கடனை உடனே திருப்பி செலுத்தத் தவறினால், அவரது செல்போனில் உள்ள அந்தரங்கப் புகைப்படங்களை அம்பலப்படுத்துவதாக அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேஜஸ் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருக்கிறது.
"நான் என்ன செய்தாலும் அம்மாவும் அப்பாவும் என்னை மன்னிக்கவும். இதை தவிர எனக்கு வேறு வழியில்லை. என் பெயரில் உள்ள மற்ற கடன்களை என்னால் செலுத்த முடியவில்லை. இது எனது இறுதி முடிவு. குட்பை." என்று தேஜஸ் தற்கொலைக்கு முன் எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு, கோபிநாத் நிலுவையில் உள்ள கடனை அடைக்க கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். ஆனால் கடன் வழங்கியவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
தேஜஸ் திருப்பி செலுத்த வேண்டிய தொகை சுமார் ரூ.46000 என தெரிகிறது.
- பொருளாதார நெருக்கடியால் 2 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
- கடன் பெற்ற ஒரு வாரத்தில் திருப்பி செலுத்த வற்புறுத்தல்.
ஆந்திர மாநிலத்தில் கடன் வழங்கும் செயலி (Loan App) ஏஜெண்ட்டின் மோசமான செயலால் திருமணம் முடிந்த இரண்டு மாதத்திற்குள் வாலிபர் ஒருவர் உயிரிழந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் வழங்கும் செயலிகள் சிலரின் பொருளாதார நிலையை பயன்படுத்தி அவர்களை கடன் பெற தூண்டுகின்றன. கடன் வழங்கும்போது நல்ல விதமாக பேசும் ஏஜெண்ட்-கள் கடன் வழங்கிய பின்னர் அதை வசூலிக்கும்போது மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வதுண்டு. இதுபோன்ற சம்பவத்தால்தான் வாலிபர் உயிர் பறிபோகியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நரேந்திரா. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 25 வயதாகும் நரேந்திரா கடந்த அக்டோபர் மாதம் அகிலா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
இந்த ஜோடி விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தது. பருவமழை மற்றும் வானிலை காரணமாக கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இதனால் அவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் கடன் வழங்கும் செயலியை நாடியுள்ளார். அந்த செயலியில் 2 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
கடன் பெற்ற நிலையில் பணத்தை உடனடியாக செலுத்தும்படி செயலி ஏஜெண்ட் துன்புறுத்தியுள்ளார். மோசமான வார்த்தைகளால் திட்டி தகவல் அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து நரேந்திரா கடனை முழுமையாக அடைக்க முடிவு செய்தார். அதற்கு பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து தகவல் அனுப்பப்பட்டு வந்தது.
அந்த ஏஜெண்டிடம் நரேந்திரா மனைவி மற்றும் உறவினர்கள் செல்போன் நம்பர் இருந்துள்ளது. ஒரு வாரமாக மோசமான வார்த்தைகளால் மெசேஜ் அனுப்பி வந்த நிலையில், நரேந்திராவின் மனைவி அகிலா படத்தை ஆபாசமாக சித்தரித்து, அகிலா மற்றும் நரேந்திரா உறவினர்களுக்கு அந்த ஏஜெண்ட் அனுப்பியுள்ளார். இந்த படத்துடன் விலை நிர்ணயித்துள்ளார்.
தன்னுடைய ஆபாச படம் தனது செல்போனுக்கு வந்தது குறித்து நரேந்திராவிடம் அகிலா விசாரிக்க, அப்போதுதான் கடன் வழங்கும் செயலயில் கடன் பெற்றதாகவும், கடன் பெற்ற ஒரு வாரத்தில் இருந்து தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அவர்களது உறவினர்கள் பலர் இந்த படம் தொடர்பாக நரேந்திராவிடம் விசாரித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த நரேந்திரா தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
காதல் திருமணம் செய்த மூன்று மாதத்திற்குள் 2 ஆயிரம் கடனுக்கான நரேந்திரா தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செயலி ஏஜெண்ட் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மாநில மற்றும் மத்திய அரசுகள் இதுபோன்ற கடன் வழங்கும் செயலிகளை நம்பி, கடன் பெற்று சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இருந்தாலும் பொருளாதார சூழ்நிலையில் சிக்குபவர்கள் இதுபோன்ற செயலிகளில் கடன் பெற்று தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற செயலிகளை கண்டறிந்து அரசுகள் நிரந்தரமாக தடை செய்தால்தான் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
- 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது.
- 14 பேர் தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு கடன் பெற செல்போனில் உடனடி கடன் ஆப்பை டவுன்லோடு செய்து அதன்மூலம் ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார்.
அவர் வாங்கிய ரூ.10 ஆயிரம் கடனுக்கு, வட்டி மேல் வட்டி சேர்த்து, அவரி டமிருந்து ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர்.
இருப்பினும், அவரை விடாமல் அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து, அவருடைய செல்போன் தொடர்பு எண்ணிலுள்ள அனைவருக்கும் அனுப்பி மிரட்டி பணம் பறித்துக் கொண்டே இருந்தனர்.
இதுபற்றி அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக 2023-ம் ஆண்டு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது. மேலும் வங்கி விவரங்கள், செல்போன் விவரங்கள், வாட்ஸ்-அப் விவரங்கள் டெலிகிராம் பற்றிய தகவல்கள் மற்றும் செல்போன்கள் யார்-யார் பெயரில் வாங்கப்பட்டது, எந்தெந்த ஊரில் இருந்து குற்றவாளிகள் செயல்படுகின்றனர், பணம் முதலில் எங்கு செல்கிறது என்பது போன்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் இந்தியா முழுவதும் 14 பேர் இந்த தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிபடையினர் விசா ரணையில், முதலாவது குற்றவாளியாக முகமது ஷபி (வயது 37) என்பவர் கேரளாவில் உள்ள எர்ணா குளத்தில் கைது செய்யப் பட்டார். லாரி டிரைவரான முகமது ஷபி சைபர் கும்பலுடன் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது அவருடைய 3 வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.10 கோடியே 65 லட்சம் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், அவரிடம் வங்கி கணக்கை வாங்கிய நபர்க ளின் விவரங்கள் சேகரிக்கப் பட்டது. மொத்தமாக இந்த 14 பேரின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் சேர்த்து ரூ. 300 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இந்த பணம் அனைத்தும் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட குஜராத்தை சேர்ந்த சித்தன் முகேஷா என்பவரை அமலாக்கத்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அவரின் ரூ.321 கோடி பணத்தை அமலாக்கதுறை முடக்கி வைத்துள்ளது.
மேலும் இந்த மோசடியில் தமிழகத்தை சேர்ந்த முஜிப் என்பவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார். மொத்தம் 14 பேரில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 11 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அடுத்தடுத்து குற்றவாளிகளை கைது செய்யப்படும் போது அந்த கிரிப்டோ கரன்சிகள் யாருக்கு சென்றது என்ற விவரங்கள் தெரிய வரும். கடன் வாங்கியோரை கம்போடியாவிலிருந்து தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
தற்போது புதுச்சேரி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்ட முகமது ஷபியிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.