என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான பயணம்"

    • இந்த சண்டையால் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.
    • சண்டையிட்ட அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.

    பிரேசிலின் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகரத்திற்கு கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானம் டேக் ஆப் ஆவதற்கு சில நிமிடங்களே இருந்தது. அப்போது விமானத்தில் சில பெண் பயணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 15 பெண் பயணிகள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். முடியைப் பிடித்து இழுத்தும், ஆடைகளை பிடித்து இழுத்தும் சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை விலக்கி விடுவதற்கு விமான பணிப்பெண்களும் படாத பாடு பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்து விமான பணிப்பெண் ஒருவர் கூறுகையில்,  "விமானத்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு பெண் பயணியிடம் சக பெண் பயணி ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகளுக்காக ஜன்னல் ஓர இருக்கையை விட்டு தருமாறு கேட்டு உள்ளார். ஆனால், ஜன்னல் ஓரத்தில் இருந்த அந்த பெண் பயணி இருக்கையை மாற்றிக் கொடுக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இரு பெண்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் சண்டையிட தொடங்கினர். இதனால், நாங்கள் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார்.

    விமானத்தில் ஜன்னல் ஓர இருக்காகாக தொடங்கிய இந்த சண்டையால் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. இதனால், பிற பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் கூறுகையில், "2-ம் தேதி இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது. சண்டையிட்ட அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. விமானத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். பயணிகளின் பாதுகாப்பு கருதியே நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

    • வரும் நாட்களிலும் விமான கட்டணம் ரூ.1,700 முதல் ரூ. 2 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • சென்னை-பெங்களூர் பயணத்துக்கு பொதுமக்கள் சாலை அல்லது ரெயில் வழி பயணத்தை பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மற்றும் பெங்களூர் முக்கிய தொழில் நகரங்களாக உள்ளன. இதனால் இந்த 2 நகரங்களுக்கு இடையேயான பஸ், ரெயில், விமான போக்குவரத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் முழு அளவில் இருக்கும்.

    இந்த நிலையில் சென்னை-பெங்களூர் ஒரு வழி விமானக் கட்டணம் ரூ.2 ஆயிரமாக குறைந்து உள்ளது. இது கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டணத்தை விட மிகக்குறைவு ஆகும்.

    விமான நிறுவனங்கள் விடுமுறை காலத்தில் அதிக பயணிகளை ஈர்க்க இந்த கட்டண குறைப்பு செய்ததாக தெரிகிறது.

    வரும் நாட்களிலும் விமான கட்டணம் ரூ.1,700 முதல் ரூ. 2 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற திங்கட்கிழமை இந்த கட்டணம் ரூ.900 மாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே சென்னை -பெங்களூர்- மைசூரு வழித்தடத்தில் வந்தேபாரத் ரெயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சென்னையில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.

    காட்பாடி மற்றும் பெங்களூரில் மட்டுமே நிற்கும். தற்போது புதன்கிழமையை தவிர்த்து இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரெயிலில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கட்டணம் ரூ.995 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக விமான டிக்கெட் ஏஜென்சி ஊழியர் ஒருவர் கூறும்போது, சென்னை-பெங்களூர் பயணத்துக்கு பொதுமக்கள் சாலை அல்லது ரெயில் வழி பயணத்தை பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள்.

    இது விமானப் பயணத்துடன் ஒப்பிடும்போது மிகவும் வசதியானதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் பெங்களூர் விமான நிலையம் நகரத்தின் மையத்தில் இல்லை.தற்போது பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடப்பதால் இது சீசன் இல்லாத நேரம் ஆகும்.

    எனவே விமான நிறுவனங்கள் பெங்களூர் வழியாக ஐதராபாத் மற்றும் பிற இடங்களுக்குச் சென்று சென்னை-பெங்களூரு இடையேயான பயணிகளை ஈர்க்க விரும்புகிறது. விமானம் காலியாகச் செல்வதைத் தடுக்க இந்த கட்டண குறைப்பு ஆகும். தற்போது பெரும்பாலான குடும்பத்தினர் விமான பயணத்தை விருப்பமாக தேர்வு செய்கிறார்கள் என்றார்.

    இதுகுறித்து பெங்களூரை சேர்ந்த பயணி ஒருவர் கூறும்போது, நான் வாரத்திற்கு ஒருமுறை பெங்களூர் செல்வேன். தற்போது விமான கட்டணம் குறைந்து இருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் நான் ரெயில் பணத்தை தவிர்த்து விமானத்தில் பயணம் செய்து வருகிறேன். ரெயில் பயணம் சோர்வாக இருக்கும்" என்றார்.

    • விமான பயணம் மேற்கொண்ட 2 இளம்பெண்கள் தங்கள் பயணத்தின் போது வடதுருவ ஒளிகளை பார்த்ததாக சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டனர்.
    • ஒளி தோற்றத்தை கண்ட இன்ப அதிர்ச்சியில் அந்த 2 இளம்பெண்களும் துள்ளி குதிப்பது போன்ற வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பூமியில் நிகழும் சில அதிசய இயற்கை தோற்றங்களில் ஒன்றுதான் துருவ ஒளிகள். வானில் வண்ணங்களில் நடனமாடும் இந்த அதிசய நிகழ்வு பார்ப்பவர்களின் கண்களுக்கு ஒளி விருந்தாக அமையும். துருவ ஒளி அல்லது ஆரோரா என்பது வட, தென்துருவ பகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளி தோற்றம். இந்த ஒளி தோற்றம் பொதுவாக ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் மாலை நேரங்களில் எளிதாக காணமுடியும் என்கிறார்கள்.

    இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளில் விமான பயணம் மேற்கொண்ட 2 இளம்பெண்கள் தங்கள் பயணத்தின் போது வடதுருவ ஒளிகளை பார்த்ததாக சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டனர். மேலும் ஒளி தோற்றத்தை கண்ட இன்ப அதிர்ச்சியில் அந்த 2 இளம்பெண்களும் துள்ளி குதிப்பது போன்ற வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அஸ்மிதா என்ற அந்த பெண் ஊழியரின் பெற்றோர் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறுகின்றனர்.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    ஸ்பைஸ் ஜெட் விமான பணிப்பெண்ணின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில், அஸ்மிதா என்ற அந்த பெண் ஊழியரின் பெற்றோர் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறுகின்றனர்.

    அவர்களின் டிக்கெட்டுகளை அவர்களது மகள் அஸ்மிதா புன்னகையுடன் சரிபார்த்து அவர்களை இருக்கைக்கு அழைத்து செல்வது போல் வீடியோ தொடங்குகிறது. பின்னர் பெற்றோரை முன்வரிசையில் அமர வைத்து பேசும் காட்சிகள் காண்போர்கள் மனதை கவரும் வகையில் உள்ளது. உணர்ச்சிகரமான இந்த வீடியோ 1.6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரின் கண்களிலும் மகிழ்ச்சியை காண முடிகிறது என குறிப்பிட்டுள்ளார். இதுபோல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 5 மணி நேர பயணம் என்பதால் பலர் உறங்கி விட்டனர்
    • தற்போது வரை அப்பெண்ணால் சரி வர பயமின்றி உறங்க முடியவில்லை

    கடந்த 2020 பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் ஓஹியோ (Ohio) மாநில க்ளீவ்லேண்டு (Cleveland) நகரிலிருந்து கலிபோர்னியா (California) மாநில லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகருக்கு ஒரு பெண் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    மூவர் அடுத்தடுத்து அமரும் இருக்கைகளில் நடுவில் உள்ள இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டதால், அதில் அமர்ந்து வந்த அவர் பயணத்திற்கு இடையே உறங்கி விட்டார். சுமார் 5 மணி நேர பயணம் என்பதால் பல பயணிகள் உறங்கி கொண்டிருந்தனர். மேலும், விமானத்தில் இருக்கைகளின் முதுகுப்பகுதி உயரமாக வடிவமைக்கப்படுவதால் முன் வரிசையிலோ பின் வரிசையிலோ என்ன நடக்கிறது என்பது சக பயணிகளுக்கு தெரிவதில்லை.

    அப்பெண்ணிற்கு அடுத்த இருக்கையில், 50 வயதான மொஹம்மத் ஜாவத் அன்சாரி என்பவர் அமர்ந்திருந்தார். அப்பெண் ஆழ்ந்து உறங்குவதை கண்ட அன்சாரி, அப்பெண்ணின் ஆடைகளின் வழியாக அவரது கால்களின் மேற்பகுதியை தொட்டு தகாத செயல்களில் ஈடுபட்டார்.

    உடனடியாக விழித்து கொண்ட அப்பெண் ஆடைகளை சரி செய்து கொண்டு, அன்சாரியின் கையை தள்ளி விட்டு, அந்த இருக்கையில் இருந்து வேறு இடத்திற்கு மாறி சென்றார். மேலும், இது குறித்து உடனே விமான ஊழியர்களிடம் புகாரளித்தார்.

    விமானம் தரையிறங்கியதும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    இந்த அத்துமீறலால் அப்பெண் அதிர்ச்சியடைந்து பயந்து விட்டார். அந்த விமான பயணம் முழுவதும் அவர் அழுது கொண்டே வந்தார். இதனை பயணத்தில் இருந்த பல பயணிகள் நேரில் கண்டு சாட்சியமும் அளித்தனர். அன்சாரியின் இந்த செயலால் தற்போது வரை அந்த பெண்ணிற்கு சரிவர உறங்க முடியவில்லை.

    ஆனால், அன்சாரி, இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்சாரிக்கு சுமார் ரூ. 35 லட்சம் ($40,000) அபராதமும், 21 மாத சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

    • பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை ஒதுக்க வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
    • தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    புதுடெல்லி:

    விமானப் பயணத்தின் போது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாமல் போனது குறித்து பயணிகள் பலர் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், விமானப் பயணத்தின்போது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்கவேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    விமானப் பயணத்தின்போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதிசெய்யவும் இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.

    தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    • கொரோனா நோயிலிருந்து மீண்ட உடனேயே விமானம் பயணத்தை தொடங்கியது தவறு.
    • நீங்கள் இதைப் பார்க்கும் விமானியாக இருந்தால், எனது கதை ஒரு எச்சரிக்கைக் கதையாக இருக்கும்.

    டச்சு விமானியான நரைன் மெல்கும்ஜான், தனது விமான பயணத்தை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விமானம் ஓட்டும் போது ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் குறித்து மற்ற விமானிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அந்த பயணத்தின் போது விமானத்தின் விதானம் (கதவு) பாதி வழியில் திறந்து கொண்டது. இதனால் பதட்டமடைந்த மெல்கும்ஜான் விமானத்தை கட்டுப்படுத்த முயற்சித்தார். கதவை மூட மூடியாததால் விமானத்தை எப்படி தரையிறக்க போகிறோம் என்று யோசித்தவர், துரிதமாக செயல்பட்டார். கதவு திறந்து கொண்டதால், அவரால் கண்களை திறந்து பார்க்க முடியாத அளவுக்கு காற்று பலமாக வீசியது வீடியோவில் தெரிகிறது.

    சில நிமிட போராட்டத்திற்கு பின் அவர் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கினார். மேலும் விமான பயணத்திற்கு முன்பு நடத்த வேண்டிய சோதனைகளை சரியாக செய்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கொரோனா நோயிலிருந்து மீண்ட உடனேயே விமானம் பயணத்தை தொடங்கியது தவறு என்பதை இந்த பயணத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். அந்த பதட்டத்திற்கு மத்தியில், சத்தம் காரணமாக பயிற்சியாளரை தொடர்புகொள்ளும் போது என்னால் எதையும் சரியாக கேட்க முடியவில்லை. இருந்தாலும் பறந்து கொண்டே இருங்கள் என்று அவர் கூறியது மட்டும் தெளிவாக நினைவில் வைத்திருந்தேன்.

    நீங்கள் இதைப் பார்க்கும் விமானியாக இருந்தால், எனது கதை ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும், என் தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன், என்று தெரிவித்தார்.

    • விமானத்தில் முதன் முதலாக பயணம் மேற்கொள்ள இருந்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
    • 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் மறக்க முடியாத ஒரு வித்தியாசமான அனுபவத்தையும், புதிய உயரத்தையும் அளிக்கும்.

    மதுரை:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 95 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் 20 மாணவர்களும், 5 ஆசிரியர்களும் 2 நாள் கல்வி சுற்றுலாவாக மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்தனர்.

    பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு "ரைட் பிரதர்ஸ்" பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, விமானத்தில் போக ஆசையாக இருப்பதாக தலைமை ஆசிரியரிடம் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் விமானத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டார். இதற்காக அவரது துபாய் நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் உதவியுடன் நிதி திரட்டினார்.

    இதைத்தொடர்ந்து 20 மாணவ-மாணவிகள், 5 ஆசிரியர்களுடன் இன்று காலை அவர்கள் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டனர். விமானத்தில் முதன் முதலாக பயணம் மேற்கொள்ள இருந்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

    சென்னைக்கு செல்லும் அவர்கள் அங்கு பிர்லா கோளரங்கம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், எழும்பூர் அருங்காட்சியகம், சட்டமன்றம், தலைமைச் செயலகம், சென்னை உயர்நீதிமன்றம், வள்ளுவர் கோட்டம், தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நாளை (19-ந் தேதி) ஞாயிறு இரவு பொதிகை ரெயிலில் தென்காசிக்கு திரும்புகிறார்கள்.

    இதுகுறித்து கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் கூறும்போது, இந்த விமானப் பயண வாய்ப்பு கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு அதுவும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் மறக்க முடியாத ஒரு வித்தியாசமான அனுபவத்தையும், புதிய உயரத்தையும் அளிக்கும்.

    இம்மாதிரியான விமான பயணத்திற்கு அரசு பள்ளி மாணவர்களையும் அழைத்துச் செல்ல முடியும் என்பதற்கு உதாரணமாக அமைகிறது. இதற்காக ஒரு நபருக்கு ரூ.7 ஆயிரம் விமான டிக்கெட், 2 நாள் ரெயில் பயண டிக்கெட் மற்றும் இதர செலவுகள் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 91 ஆயிரம் செலவு செய்து உள்ளோம் என்றார்.

    இதுகுறித்து 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் கூறுகையில், விளையாட்டாக தலைமை ஆசிரியரிடம் கூறினோம். உண்மையிலேயே அழைத்துச் செல்வதாக கூறியவுடன் ரொம்ப சந்தோசமாக இருந்தது. முதல் முறையாக விமானத்தில் பயணித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றனர்.

    ×