என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யா வைகுண்டர் அவதார தினம்"

    • விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 11-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது.

    நெல்லை:

    அய்யா வைகுண்டர் அவதார தின விழா வருகிற மார்ச் மாதம் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

    மார்ச் 4-ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 11-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
    • திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பவனி.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய நாள் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி 2-ந்தேதி திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி தொடங்குகிறது. இந்த வாகன பேரணிக்கு வழக்கறிஞர் ஆனந்த் தலை மை தாங்குகிறார். பூஜிதகுரு தங்கபாண்டியன் முன்னி லை வகிக்கிறார்.

    இந்த வாகன பேரணி திருவனந்தபுரம் பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா திடல் வந்தடைகிறது.

     அதேபோல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனிக்கு என்ஜினீயர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். பூஜிதகுரு சாமி முன்னிலை வகிக்கிறார்.

    இந்த வாகன பவனி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

    இதற்கிடையே 2-ந்தேதி மாலை ஆதலவிளை வைகுண்ட மாமலையில், சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாமி தோப்பு பதியில் இருந்து பூஜிதகுரு ராஜசேகர் தீபம் ஏற்றி கொடுக்கிறார். ஆதல விளை மாமலையில் வழக்கறிஞர் அஜித் தீபம் ஏற்று கிறார்.

    திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பேரணி 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடை பயணமாக வரும் பக்தர்கள் வருகிற 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகின்றனர்.

    பின்னர் நாகராஜா கோவில் மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு பூஜிதகுரு ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா ஊர்வ லம் 3-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது.

    ஊர்வலத்திற்கு பூஜிதகுரு. சாமி தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நாகராஜா திடலில் இருந்து தொடங்கும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம் பாறை, ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலை மைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி 2-ந்தேதி மதியம் முதலே சாமிதோப்பு பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அய்யா வைகுண்டர் அவதார தின மான 3-ந்தேதி காலையில் சாமிதோப்பு முழுவதும் அய்யாவழி பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். எனவே பதி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப் படை வசதிகள் செய்யப் பட்டு வருகிறது.

    • நாளை அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம்
    • ஏற்றத் தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சமூகத்தில், ஏற்றத் தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்பதை போதித்த அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம், நாளை (4-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.

    அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்காக, ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுடன், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டு மென்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், அன்பையும், ஆன்மீகத்தையும், வலி யுறுத்திய அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று, மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் சார்பாக, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உலகத்தில் உள்ள அத்தனையையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு
    • அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது.

    அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் மாசி 19-ந்தேதி அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள பதியில் இருந்தும், சிறையில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்தும் வாகன பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஊர்வலம் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.

    ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அய்யாவின் தாரக மந்திரமான `அய்யா சிவ சிவ சிவசிவ அரகரா அரகரா' என்ற மந்திரத்தை சொல்லியவரே வருவார்கள்.

    அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும். அதுதான் உனக்கு தெய்வம் என்கின்ற அய்யாவின் சீரிய கோட்பாட்டின்படி தலைமை பதி உள்ளிட்ட அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களிலும் நிலைக்கண்ணாடி நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.

    அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யா வைகுண்டரின் அருள் நூல்களில் ஒன்றாகும். அகிலம் என்றால் உலகம். உலகத்தில் உள்ள அத்தனையையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.

    அய்யா வைகுண்டருக்கு 22 வயதாக இருக்கும் போது திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. எந்த வைத்தியராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அய்யா வைகுண்டரின் பெற்றோர் கனவில் 'விஷ்ணு' தோன்றினார். மகனை திருச்செந்தூருக்கு அழைத்து வருமாறு கூறி மறைந்தார்.

    இதையடுத்து அய்யா வைகுண்டரை திருச்செந்தூருக்கு அழைத்து சென்றனர். 1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் ஆண்டு 18 மாசி மாதம்) அப்படியே கடலுக்குள் சென்று மாயமாக மறைந்து போனார். பெற்றோர் மகனை தேடி கரையில் காத்திருந்தனர்.

    3-வது நாள் திடீரென கடலின் ஒரு பகுதி இரண்டாக பிரிந்து வழிவிட உள்ளிருந்து மகாவிஷ்ணுவின் 10-வது அவதாரமாக அய்யா வைகுண்டர் வெளிப்பட்டார்.

    • ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று போதிக்கிறது.
    • மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ ரகசிய நூல்.

    ''ஒப்பரொருவர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே

    அப்பாநாதன் எழுதி வைத்த அகிலத்திரட்டம் மானையிதே''

    அய்யா வைகுண்டசாமியின் தனது 5-வது சீடராகிய சகாதேவன் சீடர் என்றழைக்கப்படும் அரிகோபால சீடர் மூலமாக அருளப்பட்டது தான் அய்யா வழி மக்களால் தங்களுடைய வேத ஆகமம் என்று போற்றப்படும் அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.

    இதற்கு முந்தைய 6 யுகங்களில் நடந்தது என்ன? தற்போதைய கலியுகத்தில் என்னென்ன நடக்கும்? அடுத்து வருகின்ற தர்மயுகத்தில் நல்வாழ்வு எப்படி இருக்கும் என்று 3 காலங்களையும் கூறுவதால் உலக ஜாதகம் என்றும் போற்றப்படுகிறது.

    அகிலத்திரட்டு அம்மானையானது சமயங்களையும், மொழிகளையும், இனங்களையும், கலாச்சாரங்களையும் கடந்து உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று மனுதர்மத்தை போதிக்கின்றது.

    நீ பெரிது, நான் பெரிது என்று தலைகணம் பிடித்து ஆடுகின்ற உலகிலே உனக்கும் மேலே பெரியவன் நான் (இறைசக்தி) இருக்கிறேன் என்று கூறுவது மட்டுமல்லாமல் மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ (தெய்வ) ரகசிய நூலாக கருதப்படுகிறது.

    படித்தால் வாசிக்க கேட்டால், மனிதனுடைய பூர்வஜென்ம கர்மவினைகளையும் தீர்க்கக்கூடிய இம்மையிலும், மறுமையிலும் எண்ணங்களற்ற (கவலையற்ற) நல்வாழ்வு அருளக்கூடிய புனித நூலாக கருதப்படுகிறது.

    கொல்லம் ஆண்டு 1016, கார்த்திகை மாதம் 27-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு தென்தாமரைக்குளத்தில் அரிக்கோபாலன் சீடர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அய்யா வைகுண்டர் அவர் அருகிலே சென்று எழுப்பி (பெரியபுராணத்தை எழுதுவதற்கு சேக்கிழாருக்கு சிவபெருமான் அடியெடுத்து கொடுத்தது போல) ஏரனியும் என்கின்ற முதல் வார்த்தையை அடியெடுத்து கொடுத்து, அகிலத்திரட்டம்மானை எழுத அருள்பாலித்தார்.

    எழுத படிக்க தெரியாத அகிகோபால சீடரால் பின்னை கட்டி ஓலைச்சுவடியில் 14 நாட்களுக்குள் எழுதி முடிக்கப்பட்டது. தினமும் இரவு தென்தாமரைக்குளத்தில் அரிகோபால சீடரால் எழுதப்படும் ஏடு, மறுநாள் மாலை பொழுதில் சாமிதோப்பு திருத்தலத்தின் (தற்போது வடக்கு வாசல் எனப்படும்) தவத்தலத்தில் அய்யாவின் முன்பு அரிக்கோபால சீடரால் வாசிக்கப்பட்டது.

    இவ்வாறாக தினமும் வாசிக்கப்பட்டபோது, ஒருநாள் அரிக்கோல சீடரால் வாசிக்க இயலாமல் தேம்பி அழ ஆரம்பித்தார். இதனை பார்த்த மற்ற சீடர்கள் அரிகோபால சீடர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தார்கள்.

    அப்போது அரிகோபாலன் சீடர் அய்யா நம்மை விட்டு வைகுண்டம் சென்று விடுவாராம் என்று கூறினார். அதை கேட்ட மற்ற சீடர்கள் அய்யாவிடம் என்னய்யா இது நீங்கள் எங்களை விட்டுவிட்டு வைகுண்டம் செல்வீர்களா? என்று வேதனையுடன் கேட்டார்கள்.

    அப்போது அய்யா அரிக்கோபாலனை பார்த்து கோபமுற்று பிரம்பால் அடித்து உன்னை ஏட்டினை வாசிக்கத்தானே சொன்னேன். உன்னை யார் பொருள் கூற கொன்னது என்றார்.

    இதனால் மிகவும் மனது நொந்த அரிக்கோபாலன் சீடர் உள்ளதை சொன்னால் ஊருக்கு ஆகாது என்று புலம்பியபடி எங்கே செல்வது என்று தெரியாமல் அய்யாவால் அவருடைய தாயார் என்று அடையாளம் காட்டப்பட்ட ஸப்த மாதர்களில் ஒருவரான அரிமடவை பிறந்த ஊராகிய பாஞ்சாலங்குறிச்சி அருகில் உள்ள கச்சேரி தளவாய்புரத்துக்கு கால்நடையாகவே வந்து சேர்ந்து ஒரு வீட்டின் திண்ணையிலே அமர்ந்திருந்தார்.

    அதிகாலை பொழுதிலே காட்டுக்கு வெளிப்புறம் செல்வதற்காக சென்ற 2 பேர் இவரை பார்த்து யாரப்பா இங்கே முக்காடு போட்டு அமர்ந்திருப்பது? என்று வினவினார்.

    இவருடைய முகத்தை பார்த்ததும் அளவற்ற ஆனந்தம் கொண்டு சாமிதோப்பிலே இருந்து சீடர் அய்யா வந்திருக்கிறார்கள் என்று அவரை உபசரித்து தற்போது கச்சேரி தளவாய்புரம் பாஞ்சாலங்குறிச்சி பதி அமைந்திருக்கின்ற இடத்திலே அந்த காலத்தில் மாட்டு தொழுவம் இருந்தது.

    அதற்கு அருகிலே சீடர் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் அவ்வூர் மக்கள். அங்கே இருந்த போது அரிகோபாலன் சீடர் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தார்.

    அவ்வாறு எழுதியதை பாஞ்சாலங்குறிச்சி அரசவையில் கச்சேரி செய்பவர்களிடம் வாசித்து காண்பித்தார். அவர்கள் ஒன்றுமே புரியவில்லை என்றதால் அய்யாவின் அருளால் மீண்டும் ஓலைச்சுவடியில் முதலில் இருந்து அகிலத்திரட்டு அம்மானையை எழுதினார்.

    (இதில் திரேதாயுகம், கிரேதாயும் யுகம், பத்திரமாகாளி சான்றோர்களை வளர்ப்பது ஆகியவை விரிவாக கூறப்பட்டுள்ளது.) இதன் பிரதியே சாமிதோப்பில் 1965-ம்ஆண்டு பூஜிதகுரு சென்திசை வென்ற பெருமாளால் வெளியிடப்பட்டது.

    இதன் பிரதியே 2010-ம்ஆண்டு கொட்டங்காடு ஏடு என்று வெளியிடப்பட்டது. இவ்வாறாக அய்யா தந்த ஏடு இரண்டு, ஒன்று தென்தாமரைகுளம் ஏடு இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சி ஏடு ஆகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும்.
    • கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும்

    அகிலத்திரட்டில் 16-வது நாள் திரு ஏடு வாசிப்பில், பகவதி திருக்கல்யாணம் பாகத்தில் கலி அழிவது எப்போது என்பதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.


    அதன்படி, கலியன் யாராலும் வெல்லக் கூடாத வரம் பெற்று, அவன் தன் பெண்ணோடு (கலிச்சி) உகத்திற்கு செல்லும்போது, ரோம ரிஷி என்பவன், சிவனிடம் கேட்டான். "ஈஸ்வரரே, இந்த கலியன் இத்தனை வரம் பெற்று செல்கிறானே, எப்போது இவன் முடிவாகுவான்" என்று, அதற்கு சிவன் அளித்த பதிலை, மஹா விஷ்ணு, பகவதி திருக்கல்யாண பகுதியில், பகவதி அம்மையை சாந்தப் படுத்துவதற்கு சொல்லுவது போல அய்யா, நமக்குதெளிவாக தெரியப்படுத்துகிறார்.

    அதில், கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும், சிவ நினைவு இந்த தேசத்திலே செல்லாது, கொலை, களவு , கோள்கள் மிகுந்திருக்கும், தலைஞான வேதத்தை மக்கள் கைவிடுவர், நேர்மைக்கு காலம் நெகிழ்ந்துதான் இருக்கும், போருக்குத்தான் எல்லோரும் கருத்தாய் இருப்பார்.

    அதாவது நிதானம் இருக்காது, கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும், மழை மறையும், காற்றானது நோய் காற்றாக வீசும், கீழ் எண்ணம் கொண்டவர்கள் மேல் நோக்க எண்ணம் கொண்டவர்களை வேலை கொள்வர், மனு நீதம் குன்றும், நியம் தப்பி நாட்டை அரசாள்வார்கள், பிராயம் வரும் முன்னே பெண்கள் தன் நிலை அழிவார்கள். அப்போது தெய்வ மடவார்கள் எல்லாம் தேசத்திலே வருவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று.
    • ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பதியில் இருந்து வாகன பேரணி நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. இந்த பேரணியானது நேற்று இரவு நாகராஜா திடலை வந்தடைந்தது.

    இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட வாகன பேரணியும் நேற்று இரவு நாகராஜா திடலை வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து இன்று காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.

    ஊர்வலத்திற்கு ராஜ வேல், பாலஜனாதிபதி, பையன் கிருஷ்ண நாம் மணி, பையன் அம்ரிஷ் செல்லா, பையன் கவுதம் ராஜா, பையன் கிருஷ்ண ராஜ், பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஷ் செல்லா, விஸ்வநாத் பையன், பால. கிருஷ், வைபவ், யுகஜன நேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றார்கள்.

    அப்போது காவி உடை அணிந்தும், கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் சுமந்து சென்றனர்.

    ஊர்வலத்தில் ராபர்ட்புரூஸ் எம்.பி. மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் மணிமேடை சந்திப்பு வழியாக சவேரியார் கோவில் சந்திப்பு பகுதிக்கு வந்தது. அங்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரி கிணற்றங்கரையை சுற்றி வந்த ஊர்வலம் மதியம் தலைமை பதியை வந்தடைந்தது.


    ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானகாரம் தர்மங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அவதார தினத்தை யொட்டி சாமிதோப்பு தலைமை பதிக்கு நேற்று இரவு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. சாமிதோப்பு ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முத்திரி கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்தோடு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். சாமிதோப்பு பதியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அய்யாவை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் அய்யாவிற்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றை சுருளாக வைத்தனர்.

    அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலத்தையொட்டி சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அய்யா வைகுண்டர் பதியை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளையும், இரு சக்கர வாகனங்களும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நுழைய தடை செய்யப்பட்டது.

    இதையடுத்து ஆங்காங்கே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டனர். இதனால் சாலையோரங்களிலும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளிலும் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் பொதுமக்கள் நிறுத்தி சென்று இருந்தனர். 

    ×