என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்"

    • நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
    • 108 மகாதேவர் முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாரா தனையும், 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.அங்கிருந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி பந்தல் மண்டபம் முகப்பிற்கு வந்து அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்நதுனர். இரவு 10 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    திருக்கல்யாணத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் கோவிலுக்கு வந்து காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • கோவிலில் இருந்து வாகனங்கள் பஸ் நிலையம் கடந்து வெளியே வரமுடியாமல் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.

    தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும், மேலும் பள்ளி, கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டியும் விடுமுறை தினமான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் ரூ.100 தரிசன கட்டண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    மேலும் இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் திருச்செந்தூர் முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கோவிலில் இருந்து வாகனங்கள் பஸ் நிலையம் கடந்து வெளியே வரமுடியாமல் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஏராளமான பக்தர்கள் கூடியதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர்.
    • கோவிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரத நாட்களாகும். இந்நாட்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும்.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கால சந்தி பூஜையாகி தீர்த்தவாரி நடைபெற்றது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு, அதிகாலையில் இருந்து ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர். இதனால் கோவிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    • கொடி மரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    • ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இத்திருவிழா அடுத்த மாதம் 4-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

    அதிகாலை 3 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு மேளதாளங்கள் முழங்க அதிகாலை 5.15 மணிக்கு கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய ஹரிஹரசுப்பிரமணிய பட்டர் கொடியை ஏற்றினார்.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பி ரான் சுவாமிகள், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, கோவில் அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், இணை ஆணையர் ஞானசேகரன், கோவில் பணியாளர்கள், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தர் கருத்தப்பாண்டி நாடார், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், திரிசுதந்திரப்பெருமக்கள், செந்தில்முருகன், கவுன்சிலர் ரேவதி கோமதி நாயகம், தேவார சபையினர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    கொடியேற்றத்தையொட்டி பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, கனகராஜ் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருநாளான வருகிற 28-ந் தேதி மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனையும், பின்னர் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    7-ம் திருவிழா அன்று அதிகாலை 5 மணிக்கு உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் 8.45 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின்னர் பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    8-ம் திருநாளான 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன் யானை செல்ல பஞ்சவாத்தியங்கள் வாசிக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    12 நாட்கள் நடைபெறும் விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 7-ம் நாளான கடந்த 30-ந்தேதி சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    8-ம் நாள் திருவிழாவான 31-ந்தேதி காலையில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் காட்சியளித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதைமுன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து 7.05 மணிக்கு நிலையம் சேர்ந்தது.

    அதனைத்தொடர்ந்து 7.10 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தேரோட்டத்தை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன்பு யானை செல்ல பஞ்சவாத்தியங்கள் வாசிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து வள்ளியம்மன் எழுந்தருளிய தேரானது, நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தில் கோவில் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், அஜித், முத்துமாரி, ஒய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குநர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், ராதாகிருஷ்ண ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அறங்காவலர் குழு உறுப்பினர் ராம்தாஸ், குமார் ராமசாமி ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், வைத்தீஸ்வரன் ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், முரளி காந்த ஆதித்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது.
    • பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிவதும், சில நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதும் வழக்கம்.

    இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) மாலையில் அமாவாசை தொடங்குகிறது. இதனால் வழக்கம் போல் நேற்று திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது.

    2-வது நாளாக இன்றும் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாசிகள் படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. ஆனாலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர். 

    • வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பு.
    • திருச்செந்தூர் தலத்தில் 2 மூலவர்கள் உள்ளனர்.

    சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் திருச்செந்தூர் தலத்துக்கு புறப்பட்டு வந்தார். முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார்.

    அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்னர் வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார்.


    முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்ட தால் இவர், "ஜெயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார்.

    பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திரு ஜெயந்திபுரம்' என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

    கோவில் அமைப்பு

    முருகனுக்குரிய ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாகவும் அமைந்துள்ளன.

    முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

    தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.

    சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

    இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. 130 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

    முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். எனவே பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும்.

    ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

    முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.

    கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    சூரனை வதம் செய்த பிறகு படையினர் தாகம் தீர்க்க கடலோரத்தில் முருகன் வேலால் குத்தி தண்ணீர் வரவழைத்தார். இன்றும் தண்ணீர் வரும் அது, நாழிக்கிணறு எனப்படுகிறது.

    கடலோரத்தில் உள்ள அந்த நாழிக்கிணறு கொஞ்சமும் உப்பாக இல்லாமல் நல்ல தண்ணீராக இருப்பது குறிப்படத்தக்கது. இத்தலத்தில் மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன.

    திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


    திருச்செந்தூரில் சண்முகருக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

    தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர்.

    திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின் போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

    விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிப்பார்.

    பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள், நடராஜர் என ஐந்து உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

    முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக் கோவிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோவிலே ஆகும்.

    இக்கோவில் கடற்கரையில் இருக்கும் "சந்தன மலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது.

    தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

    திருச்செந்தூரில் முருகன் "ஞான குரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது.

    சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.

    இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் இவருக்கு செய்யப்படுகிறது எனவே திருச்செந்தூர் தலத்தில் 2 மூலவர்கள் உள்ளனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள் பிரகாரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் கையில் சக்கராயுதம் இல்லை. அதனை முருகனுக்கு சூரசம்காரம் செய்ய வழங்கி விட்டதாக கூறுகிறார்கள்.

    திருச்செந்தூர் கோவிலில் இலை விபூதி பிரசாதம் மிக விசேஷமானது. பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்பில் பூசிக் கொள்ள சந்தனத்துடன் பிரசாதமாக விபூதியை தருவார்கள். பன்னீர் இலையில் வைத்துத் தொடாமல் போடுவார்கள்.

    விசுவாமித்திர மகரிஷி இங்கு வந்து தரிசித்தார். இலை விபூதி பிரசாதம் பெற்றார். அதைத் தரித்துக் கொண்டார். அவருடைய குன்ம நோய் நீங்கிற்று என்பது புராணம்.

    திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். இதையடுத்து முருகன் அருள் வேண்டி பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்குவார்கள்.

    • இறங்கும் இடத்தில் தடுப்புவேலிகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது.
    • கடல் உள்வாங்குவதும், கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அமாவாசையாக இருந்ததினால் நேற்று காலையில் இருந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

    கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கோவில் முன்புள்ள கடலில் இறங்க அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் பகுதியில் இந்த கடல் அரிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இன்று அதிக அளவு கடல் அலைகளின் சீற்றத்தின் காரணமாக 2-வது நாளாக அதிக அளவில் இந்த அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக இறங்கும் இடத்தில் தகரத்தை வைத்தும், தடுப்புவேலிகள் அமைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் இதே போல் பக்தர்கள் கடற்கரையில் இறங்கும் இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மணலை கொட்டி கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை சீர் செய்தனர். ஆனால் மீண்டும் தற்போது அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒருபுறம் கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக கடல் அரிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அதே கடற்கரையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் கடல் உள்வாங்கிய நிலையில் காணப்படுகிறது.

    சுமார் 50 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாறைகளும், மணல் திட்டுகளும் அதிகமாக தென்படுகிறது. கோவில் கடற்கரை பணியாளர்கள், காவல்துறையினர் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.



    • சண்முகர் ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
    • சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்செந்தூர் கோவில் உற்சவரான சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம்,மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    வருகிற 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.

    10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சண்முகர் ஆண்டு விழா நாளை நடக்கிறது.
    • பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதா லும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தைப்பூசம் என்பதாலும், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்தவாறு உள்ளனர்.

    மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.

    10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் மருத்துவ வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பக்தர்கள் வரும் வாகனங்கள் ஊருக்கு வெளியே பல்வேறு இடங்களில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×