search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுரையீரல் பாதிப்பு"

    • நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு.
    • மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.

    நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.

    நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு. காற்றில் உள்ள பிராண வாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாய்வை பிரித்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கியப்பணி.

    மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். நுரையீரல் பகுதிகளில் பல நுண்கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்று பைகள் அமைந்துள்ளன. அவை மென்மையான தசைகளை கொண்டவை.

    இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால் நுரையீரல் தமனி மூலமாக வந்த ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி புதிய பிராண வாயுவை ஏற்றுக்கொண்டு சிறைகள் மூலமாக இதயத்துக்கு செல்கிறது. இந்த நுண்ணிய பைகளில் தான் காற்று பரிமாற்றம் நிகழ்கிறது.

    இந்தியாவில் ஒரு கோடி மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை கிட்டத்தட்ட 40 லட்சம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு வருகிறது. இதில் சிறு வயதில் இருந்து பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்படலாம்.

    ஆனால் 30 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் தான் அதிகமாக நுரையீரல் பாதிப்பினால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு 3 காரணங்கள் உண்டு.

    ஒன்று மரபணுக்கள் மூலமாகவோ அல்லது சுற்றுச்சூழல் காரணங்களாகவோ அதாவது காற்று மாசுபாடு, விறகு அடுப்பு பயன்படுத்துவது, கொசுவர்த்தி பயன்படுத்துதல். வெல்டிங் கியாஸ் போன்ற பல காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதினாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

    அதுமட்டுமில்லாமல் உணவுமுறைகளினாலோ அல்லது சூரிய வெளிச்சம் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கூட நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    தற்போது உள்ள காலங்களில் நிறைய பேருக்கு குறைப் பிரசவம் ஏற்படுகிறது இதனால் கூட நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். ஏனென்றால் நுரையீரல் வளர்ச்சி என்பது 36 வாரங்கள் கழித்து பிறக்கும் குழந்தைகளுக்கு நன்றாக இருக்கும். ஆனால் அதேநேரத்தில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி என்பது மாறுபடும். இதனால் அந்த குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்.

    இந்த நுரையீரல் பாதிப்பு சமீப காலமாக கொரோனா தொற்றுக்கு பிறகு அதிகம் ஏற்பட்டு வருகிறது என்று ஆய்வறிக்கைகள் நமக்கு தெரிவிக்கின்றன. 

    நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள்:

    நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக புகைப்பிடிப்பதினால் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் கொசுவர்த்தியில் இருந்து ஏற்படும் புகையின் மூலமும் நுரையீரல் பாதிக்கப்படும்.

    ஏனென்றால் கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு நாம் வீட்டின் கதவை அடைத்துவிடுகிறோம். அந்த புகை இரவு முழுவதும் அறையை சுற்றியே இருக்கும் அந்த காற்றை தான் நாம் சுவாசிப்போம். கொசுவர்த்தி புகையினால் நுரையீரல் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். இதுவும் கிட்டத்தட்ட புகைப்பிடிப்பதற்கு சமமாகவே கருதப்படுகிறது.

    புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    வாய், உதடு, தொண்டை, குரல் வளையம், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புகளையும் இது பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

    சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்துவிடுவதால், நாளடைவில் உணவின் மீது விருப்பம் குறையத்தொடங்கும்.

    புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. புகையிலை நச்சு யாரையும் விட்டு வைப்பதில்லை, மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளிவரும் புகைகூட நச்சு தன்மையுடையது. உயிருக்கு ஊறு விளைவிக்கும். 

    • நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
    • அதிகப்படியான சளியின் காரணமாகவே பல பிரச்சினைகள் நேர்கின்றன.

    நுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உள்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களில் இருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது.

    சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கிக்கொள்ளும்.இதனால் நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது. அதிகப்படியான சளியின் காரணமாகவே பல பிரச்சனைகள் நேர்கின்றன.

    ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும், இதனை தினமும் குடித்து வந்தால் சளி கரைந்து வெளியேறும். நன்கு இழுத்து மூச்சு விடுதல் பயிற்சி அல்லது உடற்பயிற்சி எதுவானாலும் நன்கு மூச்சை இழுத்து விடும்போது நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.

    கொதிக்கும் நீரில் அடிக்கடி ஆவி பிடித்தாலும் சளி கரைந்து வெளியேறும். தண்ணீரில் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள். வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க சளி குறைந்து நுரையீரல் ஆரோக்கியமாக வாய்ப்பு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலவசமாக மத்திய அரசு வழங்கிய தடுப்பூசியால் நிலைமை கட்டுக்குள் வர தொடங்கியது
    • பலருக்கு நுரையீரல் திறன் பாதிப்பு நிரந்தரமானதாக இருக்கும் என ஆய்வில் தெரிகிறது

    கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றி உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதல் 2020 மார்ச் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பரவியது.

    கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க அரசு கொண்டு வந்த நாடு தழுவிய பொது முடக்கத்தினால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்தனர். ஆனாலும், அடுத்தடுத்த மாதங்களில் இந்தியாவில் வெகுவேகமாக லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.

    2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய மருந்து நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக அனைவருக்கும் வழங்க தொடங்கியது.

    மக்கள் முன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டதால் சிறிது சிறிதாக நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இந்நிலையில், வேலூரில் உள்ள கிறித்துவ மருத்துவ கல்லூரி (Christian Medical College) கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான இந்தியர்களின் நுரையீரல் திறன் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது.


    அந்த ஆய்வு, "ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்கள் ஆகியோருடன் ஒப்பிட்டால், கொரோனா தாக்குதலுக்கு உள்ளான இந்தியர்களின் நுரையீரல் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சிலருக்கு காலப்போக்கில் இந்த பாதிப்பு சரியாகலாம்; ஆனால், பலருக்கு அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் தொடரும் ஒரு நிரந்தர பாதிப்பாகத்தான் இது இருக்கும்" என தெரிவிக்கிறது.

    "பப்ளிக் லைப்ரரி ஆஃப் சைன்ஸ்" (PLOS) எனும் லாப நோக்கற்ற அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வு கட்டுரைக்காக பங்கேற்ற நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பலவித பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

    "அனைத்து விதமான பரிசோதனைகளிலும், அயல்நாட்டினருடன் ஒப்பிட்டால் இந்தியர்களின் நுரையீரல் திறன் மிக குறைவாக இருந்தது" என கிறித்துவ மருத்துவ கல்லூரியின் நுரையீரல் மருத்துவ துறையின் பேராசிரியர் டி. ஜே. கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

    • டவுண் சிண்ட்ரோம் எனும் மரபணுக் குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
    • உலகில் ஆயிரத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது.

    மரபணுக் குறைபாட்டுடன் குழந்தை பிறப்பது என்பது மிக அரிதான ஒன்று. `லட்சத்தில் ஒருவருக்கு வரும் மரபணு வியாதியைப் பற்றி நமக்கு என்ன கவலை? நமக்கு வரக்கூடிய தலைவலி முதல் நெஞ்சுவலி வரையிலான நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவே நேரம் இல்லை' என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், மரபணுக் குறைபாடு எங்கேயோ யாரோ ஒருவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு வருவது அல்ல.

    அதிகரிக்கும் வாகன மற்றும் தொழிற்சாலை மாசு, புகை, மாறிவரும் உணவுப்பழக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தூக்கமின்மை, மதுப்பழக்கம் போன்ற நம்முடைய வாழ்க்கைமுறைத் தவறுகள் காரணமாக, இன்று டவுண் சிண்ட்ரோம் எனும் மரபணுக் குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

    நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் (23 ஜோடிகள்) இருக்க வேண்டும். சிலருக்கு, 21-வது ஜோடி குரோமோசோமில், கூடுதலாக ஒரு குரோமோசோம் சேர்த்துவிடுவதால், அவர்களுக்கு 46-க்கு பதில் 47 குரோமோசோம்கள் இருக்கும்.

    இதனால், இந்த குழந்தைகள் மரபணுக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். உலகில் ஆயிரத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது. இந்த குறைபாட்டை முற்றிலும் குணமாக்க முடியாவிட்டாலும் முறையான சிகிச்சை மூலம் எதிர்கால பாதிப்பைக் குறைக்கலாம்.

     பிறவிக்குறைபாடு

    கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்திலேயே குழந்தை டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்க இயலும். சில பெற்றோர் டவுண் சிண்ட்ரோம் கருவைக் கலைத்துவிடுகின்றனர். ஆனால், இன்றைய சூழலில் கல்வியறிவு மற்றும் மருத்துவ விழிப்புணர்வு ஓரளவு வளர்ந்துள்ளதால், பல பெற்றோர்கள் டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர் என்பது ஆரோக்கியமான விஷயம்.

     ஐ.க்யூ அளவு

    சராசரி மனிதர்களின் ஐ.க்யூ அளவானது 70 முதல் 130 ஆகும். டவுண் சிண்ட்ரோம் குறைபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து குழந்தைகளின் ஐ.க்யூ அளவு 50 முதல் 70 வரை இருக்கும். மிக தீவிரமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சராசரி ஐ.க்யூ 50 ஆக இருக்கும். வாழ்நாள் முழுதும் எட்டு வயது குழந்தைக்குரிய அறிவே இவர்களுக்கு இருக்கும். ஐ.க்யூ அளவு 70 உள்ளவர்கள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் எல்லா வகையிலும் சராசரியாக இருப்பார்கள்.

    ஆனால், இவர்களுக்கு டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளுக்கான தோற்றம், உடல்நலக் குறைபாடுகள் இருக்கும். இவர்களுக்கு, தங்களுக்குள் இப்படி ஒரு குறைபாடு இருப்பதும், மற்றவர்களிடம் இருந்து தாங்கள் வேறுபடுகிறோம் என்பதும் தெரியும்.

    முன்பு, ஐ.க்யூ அளவு மிகக்குறைவாக உள்ள டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் ஏழு வயது வரை சாதாரணப் பள்ளியில் பயின்று, அதற்குப் பின்னர் அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இப்போது, இந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு சமமாக நடத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    அறிகுறிகள் பெரும்பாலும் டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளை பிறக்கும்போதே அடையாளம் காண இயலும். பெரிய கண்கள் அல்லது மாறுகண், அகலமான முன்நெற்றி, வாய் பாதி மூடியதுபோல இருக்கும். சிறிய தாடை, கண் இமைகள், ஒழுங்கற்ற பல் வரிசை ஆகியவை மற்ற குழந்தைகளிடம் இருந்து இவர்களை வேறுபடுத்திக்காட்டும் அம்சங்கள். பெரும்பாலானோர், ஐந்து அடிக்கு மேல் வளர மாட்டார்கள். கண் பார்வை மற்றும் செவித்திறன் கோளாறுகள் வர வாய்ப்புகள் அதிகம்.

     குணாதிசயங்கள்

    டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரியான குணாதிசயங்களோடு இருக்க மாட்டார்கள். சிலர் மிகவும் சுறுசுறுப்பாகவும், சிலர் மந்தமாகவும் இருப்பார்கள். வாலிபப் பருவத்தில் தங்களுக்கு இதுபோன்ற ஒரு குறை இருப்பது தெரிந்ததும், சிலர் மூர்க்கமாக மாறுவர். அதேசமயம் அனைவரிடமும் இன்முகத்துடனும் புன்சிரிப்புடனும் நட்பாகப் பழகுபவர்களும் உள்ளனர்.

    டவுண் சிண்ட்ரோம் குழந்தைகளைத் தாக்கும் நோய்கள்

    இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால், பலவகையான நோய்களும் குறைபாடுகளும் தாக்க வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, தைராய்டு சுரப்பி பாதிக்கப்படுவதால், மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான தைராக்ஸின் ஹார்மோன் தடைப்படுகிறது. இதனால், இதயக்குழாய் அடைப்பு, இதயச் சுவரில் துளை, நுரையீரல் பாதிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள்

    இந்தக் குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை, வருடத்துக்கு ஒருமுறை கண் பார்வை மற்றும் செவித்திறன் பரிசோதனை மிகவும் அவசியம். மேலும், குழந்தைகளின் தனித்திறமைகளைக் கண்டுபிடித்து, ஊக்கப்படுத்தவேண்டியது அவசியம்.

    பாலுணர்வு

    மிதமான டவுண் சிண்ட்ரோம் குறைபாடு உள்ள டீன்ஏஜ் வயதினருக்கு பாலுணர்வு சராசரி மனிதர்களுடன் ஒப்பிடும்போது இயல்பாகவே உள்ளது. அமெரிக்க இளைஞர்கள் டவுண் சிண்ட்ரோம் பாதிப்புள்ள பெண்ணைக் காதலித்து மணந்துகொள்கின்றனர். டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் மணம் புரிந்து இயல்பான தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும். டவுண் சிண்ட்ரோம் பரம்பரை வியாதி கிடையாது என்பதால், டவுண்ட் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு, இந்த குறைபாடு இருக்க வாய்ப்பு இல்லை.

    மேலைநாடுகளில் டவுண் சிண்ட்ரோம் தம்பதிகளின் விவாகரத்து எண்ணிக்கை, சராசரி தம்பதிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிகவும் குறைவு. இந்த தம்பதிகள் அனைவரும் தங்களுடைய குறையை நன்கு அறிந்தவர்களாக உள்ளதால், இவர்களுக்குள் நல்ல பிணைப்பும் பந்தமும் ஏற்படுகிறது.

    • தொழிற்சாலைகள் மக்கள் உயிரை அலட்சியப்படுத்தி லாபத்தைத் தான் பார்க்கின்றனர்.
    • ஏராளமானோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி மற்றும் தோல் வியாதி உள்ளது.

    திருவொற்றியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்த பாக்கியம் கூறியதாவது:-

    எண்ணூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவு மற்றும் அமோனியா வாயுவால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை போராட்டங்கள் நடத்தும் அவர்கள் அதற்கு நிரந்தர தீர்வு காணாமல் அடுத்தடுத்து மறந்து சென்று விடுகின்றனர். நாட்டின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது தான். குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை இருப்பதையும் தடுக்க முடியாது. ஆனால் தொழிற்சாலைகள் மக்கள் உயிரை அலட்சியப்படுத்தி லாபத்தைத் தான் பார்க்கின்றனர். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் ஏராளமானோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி மற்றும் தோல் வியாதி உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புறாக்களின் எச்சங்களால் 60-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
    • உணவளிக்கும் போதும், எச்சங்களை அகற்றும் போதும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    புறா வளர்ப்பதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் அதிகம் உண்டு. ஆனால் அதில் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். புறா எச்சம் காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், கொரோனா பாதிப்பு அவரது நுரையீரலை மேலும் பலவீனப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

    கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததன் பின்னணியில் புறாக்களின் எச்சம் காரணமாக இருந்தது அந்நாட்டு மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புறாக்களுக்கு உணவளிப்பதையும், அதன் எச்சத்தை சுத்தம் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சில வருடங்களில் அவர் மூச்சு விட முடியாமல் தவித்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர் பிழைத்து இருக்கிறார். மருத்துவ செலவுக்காக அவர் ரூ.35 லட்சம் செலவழித்து உள்ளார்.

    புறாக்களின் எச்சங்களை சுவாசிப்பது மிகப்பெரிய தீங்கை விளைவித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    புறாக்களின் இறக்கையில் இருக்கும் செல் பூச்சிகள், எச்சங்களில் இருந்து வெளி வரும் பூஞ்சைகள் ஆகியவற்றை சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் செல்கிறது. இது நாளடைவில் நோய் எதிர்ப்பு திறனை குறைக்கிறது. நுரையீரலில் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டறிவது கடினம் என்பதால் தொற்றுகள் நுரையீரல் திசுக்களை செயலற்றதாக்கி விடுகிறது. இது போன்ற பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

    புறாக்களின் எச்சங்களால் 60-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. எனவே புறாக்களை கையாளும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    புறாக்களுக்கு உணவளிக்கும் போதும், எச்சங்களை அகற்றும் போதும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தில் கை வைக்கவோ, உணவு சாப்பிடவோ கூடாது. புறாக்களின் எச்சங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×